Showing posts with label Grievance. Show all posts
Showing posts with label Grievance. Show all posts

Jun 16, 2011

இனி இலங்கைக்கு என்ன நடக்கும்? (சனல் 4 அண்மையில் வெளியிட்ட யுத்தக்குற்ற ஆதாரங்களின் தொகுப்புக் காணொளியின் பின்...)

உலகே அதிர்ந்து போனது.... காணொளியைப் பார்க்க முடியாது வேதனையில் எழுந்து சென்று விட்டவர்கள் பலர், காணொளியைக் கண்டபின்னர் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் பலர்,காணொளியைக் காணும் போதே தம்மையறியாமலேயே கண்ணீர் சிந்தியவர்கள் பலர். இது போலெல்லாம் உலகில் நடக்குமா? என்று யோசித்திருந்தவர்கள், இலங்கையிலே அதுவும் நமது இனமக்களுக்கு நடந்த இந்தக் கொடூரத்தைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். பல காணொளிகள் முன்பே வெளிவந்திருந்தாலும், இந்த தொகுப்பைக் காணும் போது நெஞ்சு கனக்கிறது... மனது “நீதி வேண்டும்” என்று கொதிக்கிறது. 

செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில் பிரித்தானியாவின் சனல் 4 ஒளிபரப்பிய “இலங்கை - கொலைக்களம்” எனத் தலைப்பிடப்பட்ட காணொளி இலங்கை யுத்தத்தின் இறுதி நாட்களின் மறுபக்கத்தை, பொதுமக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டதை, சரணடைந்த போராளிகள் சர்வதேச சட்டத்திற்கெதிராக கொல்லப்பட்டதை, பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதை, காணொளி மூலமும், நேரச் சாட்சிகளின் வாக்குமூலமாகவும் உலகத்திற்கு முன்னர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ( காணொளியை இங்கு காணலாம் - http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od ) 

உலகமே அதிர்ந்து போயுள்ள நிலையில் இன்று உலக நாடுகள் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றிற்காக இலங்கையை வலியுறுத்தி வருகிறது - இலங்கை அரசாங்கமும் வழமைபோல குற்றச்சாட்டுக்களை மறுத்தும், பரிசீலிப்போம் என்று சாக்குப் போக்குச் சொல்லி காலதாமதப்படுத்தியவண்ணம் இருக்கிறது. காணொளியைக் கண்டு அதிர்ச்சியுற்ற பிரித்தானிய வெளிவிவாகர அமைச்சர் அலிஸ்ரெயார் பேட் பின்வருமாறு தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். 

‎'“I was shocked by the horrific scenes I saw in the documentary that was broadcast on 14 June. ..... The recent UN Panel of Experts’ report, this documentary and previously authenticated Channel 4 footage, constitutes convincing evidence of violations of international humanitarian and human rights law. The whole of the international community will expect the Sri Lankans to give a serious and full response to this evidence.' - British Foreign Minister Alistair Burt. 

(முழுமையான அறிக்கையை இங்கு காண்க - http://ukinsudan.fco.gov.uk/en/news/?view=News&id=615115382 )

இதனைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் மீதான சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு நடவடிக்கையொன்றை எடுக்காததன் காரணமாக இந்தியா வெளிப்படையான ஆதரவை இலங்கைக்கு வழங்காது மௌனம் சாதிக்கிறது, மேலும் தமிழக சட்ட மன்றத்தில் இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம், நடைமுறையில் பயனேதுமில்லாவிட்டாலும், அரசியல் ரீதியில் ஒரு அழுத்தமாகவே காணப்படுகிறது. இவற்றைவிட ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு ஐரோப்பிய பாராளுமன்றம் தெரிவித்திருந்த ஆதரவும், அமெரிக்கா தெரிவித்த ஆதரவும் இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. சனல் 4ன் காணொளி ஒளிபரப்பானது இன்னும் இந்த அழுத்தத்தை அதிகரிக்கும். 

இவ்வேளையில் சனல் 4ன் காணொளி தொடர்பான இலங்கை அரசின் பதிலளிப்புக்களில் பல முரண்பாடுகளைக் காணலாம். இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலங்கை அரசாங்கமானது தனது தடவியல் நிபுணர்களைக் கொண்டு குறித்த காணொளியை மீண்டும் பரீசீலிக்கும் என்று கூறியிருந்தார். 

பின்னர் அல்-ஜஸீராவில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் ஆலோசகரும், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவ விஜேசிங்ஹ, யுத்தக் குற்றம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்காது, இக்காணொளிகள் போலியென்றும், இவை புலிகளினால் நடிக்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று முழு யானையை மண்பானைக்குள் மறைக்க முயற்சிக்கும் தனது படித்த முட்டாள்தனத்தை உலகிற்கு மீண்டுமொருமுறை பறைசாற்றியிருந்தார். (குறித்த காணொளியை இங்கு காண்க - http://www.youtube.com/watch?v=sdrCR-X4iH0 )

இது தவிர இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், மஹிந்த ராஜபக்ஷவின் தம்பியுமான கோட்டாபய, சனல் 4 தொலைக்காட்சிக்கு புலி ஆதரவு சக்திகள் இலஞ்சம் ஊட்டி இலங்கையினது, இலங்கையினது இராணுவத்தினதும் பெயரைக் கெடுக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினார். 

இவர்கள் எல்லோருடைய பதில்களிலுமிருந்து நாம் அறிய முடிவுது, இலங்கை அரசாங்கம் அதிர்ந்து போய் இருக்கிறது, செய்வதறியாது திகைத்துப் போயிருக்கிறது. அநேகமான காணொளி ஆதாரங்கள் இராணுவ வீரர்களினால் அவர்களது கைத்தொலைபேசியின் மூலம் எடுக்கப்பட்டவையே என சனல் 4 தெரிவிக்கிறது. ஆகவே யுத்தத்தை வென்றபோது (?! - முடிவுக்குக் கொண்டுவந்தபோது!) இலங்கை அரசாங்கமோ, ராஜபக்ஷவோ இப்பொழுது எழுந்திருக்கும் இந்த நிலையைப் பற்றி யோசித்தே இருக்க மாட்டார்கள், யுத்தக்குற்றம் பற்றி கொஞ்சமேனும் தெளிவிருந்திருந்தால் ஒருவேளை கைத்தொலைபேசிக் கமராக்கள் கடைசெய்யப்பட்டிருந்திருக்கும். 

குறித்த காணொளி போலியானது. இது இலங்கையின் பெயரைக் கெடுக்கும் நடவடிக்கை என மீண்டும் மீண்டும் புலம்பும் அரசாங்கம், நீங்கள் அவ்வளவு சுத்தமானவர்கள் என்றால் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு முன்வராதது ஏன் என்ற கேள்விக்குப் பதிலில்லை. சில மேதாவித்தனமான அரசியல்வாதிகள் சர்வதேச விசாரணை என்பது இலங்கையின் இறைமைக்கு எதிரானது என விதண்டாவாதம் புரிவார்கள். இறைமை என்பதே மக்களுடையது, அந்த மக்களே அநியாயமாக, அநீதியான முறையில் கொல்லப்பட்ட, சித்திரவதைசெய்யப்பட்ட, கற்பழிக்கப்பட்ட போது இறைமை என்பது யாரைப் பாதுகாக்கத் தேவைப்படுகிறது?

இன்னும் சில அதிமேதாவிகள், 30 ஆண்டு யுத்தத்தில் நடக்காத யுத்தக்குற்றமா இப்போது நடந்து விட்டது என வியாக்கியானம் பேசுகிறார்கள். இவர்களது முட்டாள்தனத்தக்கு விளக்கமளிப்பது வீண்வேலை. அவர்களிடம் ஒரே கேள்வி, சித்திரவதைசெய்யப்பட்டது, கற்பழிக்கப்பட்டது, கொல்லப்பட்டது உங்கள் சகோதரன் என்றால்? உங்கள் தாயார் என்றால்? உங்கள் சகோதரி என்றால்? உங்கள் மனைவி என்றால்? உங்கள் பிள்ளைகள் என்றால்? இவ்வளவு ஏன் உங்கள் இனம் என்றால் - இதே போன்ற அலட்சியமான கேள்விகளை எழுப்பவீர்களா?



இன்னும் சிலர் புலிகளை (தீவிரவாதிகளைக்) கொன்றது ஒரு குற்றமா என்று கேட்கிறார்கள். இங்கே பிரச்சினை தீவிரவாதிகளைக் கொன்றதல்ல. சர்வதேசச் சட்டங்களுக்கும், மனிதஉரிமைச் சாசனங்களுக்கும் எதிராக நடந்து கொண்டது தான். சிவிலியன்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது, வைத்தியசாலைகள் அறிந்தே தாக்கப்பட்டது, மனித உரிமைகளை மதிக்காது அரசாங்கம் செயற்பட்டது, சரணடைந்த போராளிகள் நீதிமுன் நிறுத்தப்படாது கற்பழிக்கப்பட்டது, கொல்லப்பட்டது ஆகிய குற்றச்சாட்டுக்களை சனல் 4 காணொளியும், ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையும் முன்வைக்கின்றன - இவை தான் பிரச்சினை. இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய காடியன் பத்திரிகையின் ஆசிரியம் எழுதியிருந்த ஒரு விடயம் முக்கியம் பெறுகிறது - 

That the LTTE assassinated presidents and invented the suicide belt, that the Tigers used civilians as human shields, is no defence from the charge that Sri Lankan soldiers summarily executed prisoners in their custody. Sri Lanka is trying to pretend these events are history, as the economy and tourism pick up. They are not. This evidence has to be faced. - The Guardian Editorial. 

(காடியன் ஆசிரியம் முழுமையான வடிவத்தை இங்கு காண்க - http://www.guardian.co.uk/commentisfree/2011/jun/15/sri-lanka-evidence-that-wont-be-buried ) 


இவை இவ்வாறு இருக்க பலபேர் இன்று கேட்கும் கேள்வி “இனி இலங்கைக்கு என்ன நடக்கும்?” இது தொடர்பில் ஐ.நா. சபையின் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசேர்க்கி இலங்கைவிவகாரம் தொடர்பிலான நடவடிக்கை பற்றி ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் கூறிய விடயம் முக்கியமானது. “இலங்கை அரசாங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அல்லது பாதுகாப்புச் சபை அல்லது மனித உரிமைகள் சபை அல்லது பொதுச்சபை ஆணையிடும் பட்டசத்தில் மட்டுமே பான் கீ மூனினால் நிபுணர் குழுவின் சிபாரிசின் படி சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றினை முன்னெடுக்க முடியும்” என அவர் தெரிவித்திருந்தார்.

இது தான் நிதர்சனம். இலங்கை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தைத் தோற்றுவித்த ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை ஆகவே நேரடியாக இலங்கையை யுத்தக்குற்றம் தொடர்பில் விசாரிக்கும் அதிகாரம் ஹேக்கிற்குக் கிடையாது. (இது பற்றி என்னுடைய முந்திய பதிவில் குறிப்பிட்டிருந்தேன் - http://nkashokbharan.blogspot.com/2010/12/blog-post.html ) ஆகவே ஐ.நா.வின் பாதுகாப்புச்சபை அல்லது மனித உரிமைகள் சபை அல்லது பொதுச்சபை ஆணையிடும் பட்சத்தில் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் இங்கு தான் சிக்கலே. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன ஆதரவளித்தாலும், இவ்வளவு ஏன் பெரும்பான்மை எண்ணிக்கையிலான நாடுகள் ஆதரவளித்தாலும் சீனா, ரஷ்யா என்ற 2 நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு இருப்பது இலங்கை அரசாங்கத்திற்குச் சாதகமானது. வீட்டோ அதிகாரம் உடைய இந்த 2 நாடுகளும் இலங்கைக்கு ஆதரவளிப்பதால் குறித்த சபைகளில் இலங்கைக்கெதிராக பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும் அவற்றை வீட்டோ செய்யும் அதிகாரம் இவற்றிடம் உண்டு. இதுதான் இலங்கையரசாங்கத்திற்கிருக்கும் ஒரேயொரு நம்பிக்கை. தற்போது மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருக்கிறார். அங்கு நடைபெறும் சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்குபெறச் சென்றிருக்கும் அவர் அங்கு ரஷ்ய மற்றும் சீனத் தேசத் தலைவர்களைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது, நிச்சயமாக யுத்தக் குற்றம் தொடர்பிலான ஆதரவு தேடலாகவே இந்தச் சந்திப்பு இருக்கும் என்பது வெள்ளிடைமலை. 

இஸ்ரேல் இலங்கைக்குக் ஆதரவு தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. உண்மையிலேயே அதை இலங்கைக்கான ஆதரவாக என்னால் பார்க்கமுடியவில்லை. பலஸ்தீன விடுதலையை உலகறிய ஆதரித்த, இஸ்ரேலை எதிர்த்த மஹிந்த ராஜபக்ஷவினுடைய அரசாங்கத்திற்கு அவர்கள் ஆதரவளித்தார்கள் என்பது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. உண்மையிலேயே இலங்கை மீதான நிபுணர் குழு அறிக்கையை ஆதரிப்பது பின்னர் தனக்கே ஆபத்தாக முடியும் என்ற இஸ்ரேலின் பயம்தான் இஸ்ரேலின் இந்த நிலைப்பாட்டிற்குக்காரணம் என்பது எனது கணிப்பு.

அநியாயத்திற்கு தலைவர்கள் துணைபோகலாம், நாடுகள் துணைபோகலாம், ஏன் வீட்டோ அதிகாரம் கூட துணைபோகலாம் ஆனால் அவற்றால் நியாயத்தையும், நீதியையும், சத்தியத்தையும் மறைக்கவோ, அழிக்கவோ முடியாது. அவை நியாயத்தை, நீதியை, சத்தியத்தைத் தோற்கடிப்பது தற்காலிகமானதே நிரந்தரமல்ல. 

ஒருவேளை இலங்கையில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டால், புதிய அரசாங்கம் யுத்தக் குற்றம் தொடர்பான சுதந்திர சர்வதேச விசாரணைக்கு அனுமதியளித்தால் நிச்சயம் நீதி பிறக்கும். இந்த நிலை வரவேண்டுமென்றால் இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுப்பது அவசியம், அந்த அழுத்தம் தொடரவேண்டும். குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் முகங்கொடுத்தே ஆகவேண்டும், பதிலளிக்கும் கடப்பாடுடைய ஒரு ஜனநாயக அரசாங்கம் அதிலிருந்து மாறுபட்டு பின்வாசலால் தப்பிக்கும் முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஜனநாயக தேசம் - தன்னுடைய நாட்டு மக்களின் பாதுகாப்பையே சவாலுக்குட்படுத்தும் ஒரு தேசத்திற்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுப்பதில் தவறேதுமில்லை. 

உங்கள் கை சுத்தமானது என்றால் அதை நிரூபிக்க நீங்கள் தயங்குவது ஏன்?


“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்”

Dec 29, 2010

2010ன் எனது தெரிவுகள்!


எம்மைக் கடந்து போகிறது இன்னொரு வருடம்! 2010 தனிப்பட்ட வகையில் எனக்கு பாரிய மாற்றத்தை, ஏமாற்றத்தை தந்த வருடம் ஆனால் அதுவும் கடந்து போகிறது. இந்த வருடத்திலிருந்து எனது தெரிவுகள் -

********************************************************

வருடத்தின் சோகம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாரிய பாராளுமன்றத் தேர்தல் வெற்றிதான் என்னைப் பொருத்தவரை இந்த வருடத்தின் சோகம். இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளும், எடுத்துக்கொண்டிருக்கும் நடவடிக்கைகளும் இந்த அழகிய தேசத்தை சீரழித்துக்கொண்டிருக்கிறது என்பதில் ஐயமேயில்லை. பொருளாதார ரீதியில் அதளபாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மத்திய வங்கி வீதங்களில் வளர்ச்சியைக்காட்டலாம் ஆனால் பணவீக்கத்தின் விளைவுகளைச் சாதாரண பொதுமக்களே வெளிப்படையாக உணரும் நிலை வந்துவிட்டது. தேங்காயை இறக்குமதிசெய்யுமளவுக்கு பயிர்ச்செய்கை பின்னிலையடைந்துவிட்டது. முட்டைகளும், கோழிக்குஞ்சுகளும் இறக்குமதி செய்யவேண்டிய அளவுக்கு கால்நடை வளர்ப்பு பின்னிலையடைந்துவிட்டது. வெளிநாட்டு உறவுகளில் பாரிய விரிசல்களும், தொய்வும், தோல்வியும் ஏற்பட்டிருக்கிறது. 

மொத்தத்தில் இந்த அரசாங்கம் தேசத்தை வீழ்ச்சிப்பாதையில் இட்டுச்செல்கிறது என்பதில் ஐயமில்லை. பணவீக்கத்தினையும், உற்பத்தி வீழ்ச்சியினையும், துறைமுகம், பாதைகள் அமைத்து சரிப்படுத்திவிடலாம் என்று யாராவது நினைத்தால், அவர்களது அறியாமைக்காக நான் வருத்தப்படப் போவதில்லை. மேலும் ஐஃபா போன்ற தனியார் நிகழ்வகளுக்காக அரச பணத்தை வீணடித்தமை, அதற்கு சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்று சப்பைக்கட்டு கட்டியமை, கடைசியல் நிகழ்வு படு தோல்வியடைய ஜனாதிபதி கூட நிகழ்வில் கலந்துகொள்ளாமல் விட்டமை. இனங்களுக்கிடையில் சமரசம், ஒற்றுமை ஏற்படுத்த வேண்டிய காலகட்டத்தில் தேசிய கீதத்தின் தமிழ்ப்பதிப்பை நீக்க முயன்றமை, யாழில் மாணவர்களைக் கட்டாயப்படுத்திச் சிங்களத்தில் தேசிய கீதத்தைப் பாடச்செய்தமை என்று இந்த அரசு ஆடும் தகிடுதத்தங்கள் தேசத்தை முன்னேற்றப்பாதையிலா இட்டுச் செல்கிறது?

********************************************************

வருடத்தின் மகிழ்ச்சி



தனியார் பல்கலைக்கழகங்களை இலங்கையில் ஆரம்பிக்க உயர்கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கதும் மகிழ்ச்சிகரமானதுமாகும். உயர்தரம் சித்தியடையும் ஏறத்தாழ 200 000 பேரில் வெறும் 20 000 பேருக்கே அரச பல்கலைக்கழகங்களில் இடம் இருக்கிறது மீதியுள்ள 90 வீத மாணவர்களின் நிலை என்ன என்பது பற்றிப் பலர் சிந்திப்பதில்லை. எல்லா மாணவர்களுக்கும் இலவச உயர் கல்வியளிக்க அரசாங்கத்தால் இயலாது என்பது யதார்த்தமானது ஆகையில் தனியார் பல்கலைக்கழகங்களின் தேவை என்பது மறுக்கப்பட முடியாது. நீண்ட காலமாக இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் பலவித போராட்டங்களால் அவை தடுக்கப்பட்டது, இம்முறை இவற்றையெல்லாம் தாண்டி இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது பாராட்டுக்குரியது. கோடிக்கணக்கான பணத்தை கல்விக்காக நாம் வருடாவருடம் ஐக்கிய ராஜ்ஜியம், இந்தியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு வழங்கி வருகிறோம் ஆக இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டால் அது பொருளாதார ரீதியிலும் பண வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் என்பதுடன் அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல இயலாத பெரும்பான்மையளவு மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பையும் இலகுப்படுத்தும். இந்த விடயம் தொடர்பில் உறுதியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பாராட்டுக்குரியவர்.

********************************************************

வருடத்தின் அதிர்ச்சி



சந்தேகமேயில்லாமல் விக்கி லீக்ஸின் கேபிள்கேட்! விக்கி லீக்ஸ் தொடர்பில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு. அதைப் பதிவு செய்வதற்கான களம் இதுவல்ல ஆனால் நிச்சயமாக உலகையும், உலக நாடுகளின் அரசியலையும், அரசியல்வாதிகளையும் கேபிள் கேட் ஆட்டிய ஆட்டம் பயங்கரமானது என்பதில் ஐயமில்லை.


********************************************************

வருடத்தின் சிறந்த விளையாட்டுப் போட்டித் தருணம்


என்னைப் பொருத்த வரையில் 2010ன் சிறந்த விளையாட்டுப் போட்டித் தருணம் மார்ச் மாதத்தில் செல்ஸி காற்பந்தாட்டக் கழகம் 3 வருடங்களின் பின் பெற்ற இங்லிஷ் ப்ரீமியர் லீக் வெற்றியும், கழகத்தின் 105 வருட வரலாற்றில் பெற்ற முதல் ப்ரீமியர் லீக் மற்றும் எஃப்.ஏ.கோப்பை டபிள் வெற்றியும் ஆகும்! செல்ஸி கழக ஆதரவாளனான எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்த தருணம் இது! 


********************************************************

வருடத்தின் சோகமான விளையாட்டுப் போட்டித் தருணம்


என்னைப் பொருத்தவரை கடந்த ஆண்டின் சோகமான விளையாட்டுப் போட்டித் தருணம் காற்பந்து உலகக்கிண்ணப் போட்டியிலிருந்து இங்கிலாந்து வெளியேறிய தருணம். இங்கிலாந்து தேசிய காற்பந்தாட்ட அணியின் உலகக்கோப்பை வரலாற்றில் மிக மோசமான தோல்வியை (4-1) பலமான ஜேர்மனிக்கெதிராக அடைந்து மோசமான முறையில் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது இங்கிலாந்து அணி. உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றக்கூடிய அணிகளுள் ஒன்றாக போட்டிகள் ஆரம்பமாக முன் கணிக்கப்பட்ட அணி பரிதாபமாக வெளியேறியது ஒவ்வொரு இங்கிலாந்துக் காற்பந்தாட்ட ரசிகனுக்கும் பாரிய சோகத்தை ஏற்படுத்திய தருணமாகும்.


********************************************************

வருடத்தின் சிறந்த திரைப்படம்




என்னைப் பொருத்தவரையில் 2010ன் சிறந்த திரைப்படமாக 2 படங்களைக் குறிப்பிடுவேன். முதலாவது, விண்ணைத் தாண்டி வருவாயா?. இரண்டாவது, அங்காடித் தெரு. பொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்னை உணர்வு ரீதியாகப் பாதிப்பது மிகக் குறைவு ஆனால் இந்த இரண்டு படங்களும் என்னை உணர்வு ரீதியாக மிகப் பாதித்தது. இந்த வருடத்தில் நான் பார்த்த திரைப்படங்களுள் இந்த இரண்டு படங்களும் சிறப்பானவை. 


********************************************************

வருடத்தின் இனிய பாடல்





நிறைய பாடல்களை இந்த 2010ல் கேட்டுவிட்டேன். ஆங்கிலத்தில் புதிதாக முளைத்திருக்கும் இளம் பாடகனான ஜஸ்டின் பீபரின் பாடல்கள் என்னைக் கவர்ந்து வருகிறது இதை விட ஜி.வி.பிரகாஷ் குமாரின் பூக்கள் பூக்கும் தருணம், கதைகள் பேசும் விழியருகே, உன் பேரைச் சொல்லும் போதே ஆகிய பாடல்களும், விஜய் அண்டனியின் அவள் அப்படியொன்றும் அழகில்லை பாடலும், ஏ.ஆர்.ரஹ்மானின், ஹோசனா, மன்னிப்பாயா, அன்பில் அவன், ஆரோமலே, உசிரே போகுதே, கள்வரே கள்வரே, வீரா வீரா, இரும்பிலே ஒரு இதயம் முளைக்கிதோ, காதல் அணுக்கள், கிளிமஞ்சாரோ ஆகிய பாடல்கள் இந்த வருடத்தில் நான் கேட்டவற்றுள் எனக்குப் பிடித்தவை. இவற்றுள் இந்த வருடத்தின் இனிய பாடலாக “மன்னிப்பாயா...” பாடலைச் சொல்வேன், அந்த இசையும், ஷ்ரேயா கோஷல் மற்றும் ரஹ்மானின் குரலும் அது தரும் உணர்வும் அலாதியானது!


********************************************************

வருடத்தின் சிறந்த பத்திரிகை

சந்தேகமில்லாமல் த சண்டே லீடரைச் சொல்வேன். இலங்கையிலுள்ள ஏனைய பத்திரிகைகள் ஏறெடுத்துப் பார்க்கக்கூடப் பயப்படும் உண்மைகளை துகிலுரித்துக் காட்டுவதில் லீடர் சிறப்பாகச் செயற்படுகிறது. லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட முன் இருந்த லீடருக்கும் இப்போது இருக்கும் லீடருக்கும் தரத்தில் வேறுபாடிருந்தாலும், இலங்கையிலுள்ள பத்திரிகைகள் மத்தியில் தைரியமாகச் செயற்படும் பத்திரிகையாக லீடரைச் சொல்லலாம். பல ஊழல்களை, முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவதில் சன்டே லீடரின் பங்கு சிறப்பாக இருந்திருக்கிறது.


********************************************************

வருடத்தின் கேவலம்



ஒரு ஜனநாயக தேசத்தில், தனது பிள்ளைக்கு சுகயீனம் என்பதால் விடுப்பு எடுத்த சமுர்த்தி அதிகாரி ஒருவரை அமைச்சர் ஒருவர் மரத்தில் கட்டித் தண்டித்த கேவலம் இலங்கையில் மட்டும் தான் நடக்கும். மேர்வின் சில்வா இது ஜனநாயக தேசம் என்பதை மறந்து தன்னை மன்னராட்சியின் மந்திரி என்று நினைத்து(?!) ஒரு அரச ஊழியரை மரத்தில் கட்டி தண்டித்தானது அந்த ஊழியரின் தனிமனித உரிமையை மீறிய செயல் மட்டுமல்ல ஜனநாயகம், நீதித்துறை, சுதந்திரம் போன்றவற்றிற்கெதிரான சவாலும் கூட. இது போன்ற எத்தனை கேவலங்களை இலங்கை சந்திக்கப் போகிறதோ? இதற்குப் பிறகும் மக்கள் விவகார மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் - கொடுமை!


********************************************************

வருடத்தின் சிறந்த நாடகம்




விமல் வீரவன்சவின் ஐ.நா.வுக்கெதிரான உண்ணாவிரதமும், விமலின் மகள் தந்தை வீட்டுக்கு வராவிட்டால் சாப்பிடமாட்டேன் என்று அடம்பிடித்ததால் ஜனாதிபதி விமலை நேரில் உண்ணாவிரதம் இடம்பெற்ற ஸ்தலத்திற்குச் சென்று நீர் அருந்தச் செய்து உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்தது தான் இந்த ஆண்டின் மிகச் சிறந்த (கேவலமான) நாடகம்! இவ்வளவற்றுக்கும் விமல் சேலைன் ஏற்றியபடி தான் உண்ணாவிரதமிருந்தார். நான் விடுதலைப் புலிகளையோ ஆயுதப் போராட்டத்தையோ என்றும் ஆதரித்ததில்லை ஆனால் விமல் போன்றவர்களெல்லாம் உண்ணாவிரதம் என்றால் என்ன என்பதை திலீபனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆயுதம் ஏந்திப் போராடுவதை விட உண்ணாவிரதமிருந்து போராடத் தான் அதிக மனஉறுதியும், பலமும் தேவை, விமலின் சேலைன் ஏற்றிய உண்ணாவிரதமெல்லாம் படிப்பறிவில்லாத மக்களை ஏமாற்றும் செயலே தவிர வேறொன்றுமில்லை.


********************************************************

வருடத்தின் சிறந்த மனிதன்



சி.என்.என். இன் வருடத்தின் முதற் பத்து ஹீரோக்களுள் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்ட நாராயணன் கிருஷ்ணன் தான் என்னைப் பொருத்தவரை இந்த ஆண்டின் சிறந்த மனிதன். மனநிலைகுன்றியவர்களுக்கும், வீடில்லாதவர்களுக்கும் கிருஷ்ணன் செய்யும் உதவி அளப்பரியது. தினமும் அவர்களுக்கு அன்னமிட்டு, அவர்களைச் சுத்தம் செய்து அவர்களை வாழவைக்கும் புனித செயலை கிருஷ்ணனும் அவரது நண்பர்களும் செய்கிறார்கள். கிருஷ்ணனுக்கும் அவரது குழுவுக்கும் தலைவணங்குகிறேன்!

********************************************************

Dec 11, 2010

நீக்கப்படவிருக்கும் இலங்கையின் தமிழ்த்தேசிய கீதமும், அமைச்சரவையின் அப்பட்டமான பொய்களும்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள தேசிய கீதத்தின் தமிழ்ப் பதிப்பை நீக்குவதற்கு அமைச்சரவை முடிவெடுத்திருப்பதாக Sunday Times செய்தி வெளியிட்டிருக்கிறது. 


மேற்படி செய்தியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேறு ஒரு தேசத்திலும் 2 மொழிகளில் தேசிய கீதம் இல்லை என்று அமைச்சரவையில் தெரிவித்ததாகவும், அதனை ஆதரித்த விமல் வீரவன்ச, 300ற்கும் மேற்பட்ட மொழிகளுடைய இந்தியாவில் கூட ஹிந்தியில்தான் தேசிய கீதம் இருப்பதாகக் கூறியதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது. அமைச்சரவையில் வாசுதேவ நாணயக்கார, றாஜித சேனாரத்ன ஆகிய அமைச்சர்கள் இருவர் மட்டுமே தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை நீக்கும் முன்மொழிவுக்கு மறுப்பாகக் கருத்துத் தெரிவித்ததாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது.

இந்தப் பதிவை நான் எழுதக்காரணம் அமைச்சரவையின் முடிவைக்கண்டிப்பதற்கு மட்டுமல்ல மாறாக, பொய்யான கருத்துக்களைக்கூறி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், விமல் வீரசின்ஹவும் மக்களை ஏமாற்ற விளைந்ததைச் சுட்டிக்காட்டவுமேயாகும்.

முதலாவதாக ஜனாதிபதி, உலகில் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் வேறு தேசமெதிலும் இல்லை என்று கூறிய கருத்து, அப்பட்டமான பொய். கனடாவின் தேசிய கீதம் 3 மொழிகளில் காணப்படுகிறது. ஆங்கிலம், ஃபிரெஞ்ச் மற்றும் இனுக்டிடுட் ஆகிய மொழிகளில் கனேடிய தேசிய கீதம் பாடப்படுகிறது. சுவிற்சலாந்துத் தேசிய கீதம் சுவிற்சலாந்தின் நான்கு உத்தியோகபூர்வமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜேர்மன் மொழியில் முதலில் எழுதப்பட்டிருந்தாலும், சுவிஸ்ஸின் ஏனைய உத்தியோகபூர்வ மொழிகளான ஃபிரெஞ்ச், இத்தாலியன் மற்றும் றொமான்ஷ் ஆகிய மொழிகளில் சுவிஸ் தேசிய கீதம் மொழிபெயர்க்கப்பட்டு பாடப்படுகிறது. இதை விட தென்னாபிரிக்க தேசிய கீதத்தில் ஒரே கீதமாக இருப்பினும் அது தென்னாபிரிக்காவில் பேசப்படும் 5 மொழிகளை கொண்டு எழுதப்பட்டுள்ளது. தென்னாபரிக்கத் தேசிய கீதம் ஸோசா (முதற் பந்தியின் முதலிரு வரிகள்), செசோதோ (முதற்பந்தியின் கடைசி இரண்டு வரிகள்), சுலு(இரண்டாம் பந்தி), அஃப்ரிகான்ஸ் (மூன்றாம் பந்தி) மற்றும் ஆங்கிலம் (நான்காம் பந்தி) ஆகிய ஐந்து மொழிகள் சேர்த்து எழுதப்பட்டது.

அடுத்ததாக விமல் வீரவன்ச சொன்ன கருத்து - “இந்தியத் தேசிய கீதம் ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது” - அடுத்த அப்பட்டமான பொய், இதை இவர் சொன்னதற்குக் காரணம், இந்தியாவில் பெரும்பான்மையானோரின் மொழி ஹிந்தி, ஆகவே பெரும்பான்மையானோரின் மொழியிலேயே தேசியகீதம் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட இந்தியாவின் தேசிய கீதம் ஹிந்தியில் தான் இருக்கிறது என்ற அப்பட்டமான பொய்யைச் சொல்லியிருக்கிறார். இந்தியத் தேசிய கீதம் பெங்காலியில் (சமஸ்கிருதப்படுத்தப்பட்ட பெங்காலி) நோபெல் பரிசு பெற்ற கவிஞர் ரபீந்திரநாத் தாகூரினால் எழுதப்பட்டது. ஆக பெரும்பான்மை இந்தியர் பேசும் மொழியில் அல்ல இந்தியாவின் தேசிய கீதம் பாடப்படுகிறது. இவ்வளவு ஏன், சீனர்கள் பெரும்பான்மையாகவுள்ள சிங்கப்பூர் தேசிய கீதம் மலேயிலேயே எழுதப்பட்டது, அதற்கு சீன, தமிழ் மற்றும் ஆங்கில உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்புக்கள் உண்டு எனினும் அது மலேயிலேயே பாடப்படுகிறது. ஆகவே பெரும்பான்மையோரின் மொழியிலேயே தேசிய கீதம் அமையவேண்டும் என்ற அவசியம் இல்லை.

அமைச்சர்களாக இருப்பவர்கள் மக்களை முட்டாள்கள் என்று நினைத்தக்கொண்டிருக்கக்கூடாது. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்ற நம்ப நாங்கள் படிப்பறிவில்லாதவர்கள் அல்ல.

இலங்கைத் தேசிய கீதத்தின் தமிழ்ப்பதிப்பை நீக்கியதன் மூலம், அரசாங்கம் தனது தமிழின விரோத நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிக்காட்டியுள்ளது. யுத்தத்தின் பின்னரான மீளிணக்கப்பாட்டுச் செயற்பாடுகளில் இது பாரிய பின்னடைவாகும், அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கிச் செயற்படச்சம்மதித்து ஒரு நாள் கூட ஆகமுன் இத்தகைய முடிவானது தமிழ் மக்களை அதிருப்திக்குள்ளாக்கும் என்பதை அரசாங்கம் மறந்துவிட்டது போலும்.

இனவாத அரசியலை இலங்கைத் தலைவர்கள் கைவிடும் வரை இலங்கையின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.

"Racism is man's gravest threat to man - the maximum of hatred for a minimum of reason."  ~Abraham Joshua Heschel

**************************************************************************

அமைச்சரவை நீக்குவதற்கு முடிவெடுத்த இலங்கைத் தேசிய கீததத்தின் தமிழ்ப்பதிப்பு (இனி சுவடியாகப் பாதுகாக்கப்படவேண்டியதுதானா?!)

ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்காநமோ நமோ நமோ நமோ தாயே

நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே



Jun 22, 2010

இலங்கைத் தமிழரிடையே பிரதேசவாதம் மீண்டும் தலைதூக்குகிறதா?

இலங்கை உள்நாட்டு யுத்தம் அரச படைகளால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு வருடகாலம் ஆயிட்டு. இன்னும் அகதி முகாம்களில் மக்கள் அல்லற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள், மீள்குடியேற்றப்பட்டோர் என்பவர்கள் எல்லாம் வெற்றுக் குடில் அமைத்து உயிருடன் இருந்துகொண்டிருக்கிறார்கள், வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியவில்லை, வாழ்வாங்கு வாழ்ந்த மக்கள், இன்று உயிரோடு அலைந்துகொண்டிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் என்ற பதமே ஒரு காலத்தில் பிரச்சினைக்குரிய பதமாகவே இருந்தது. இலங்கைத் தமிழர்கள் என்றால் யார்? ஒவ்வொருவரும் தங்களைச் சார்ந்து வரைவிலக்கணப் படுத்திக்கொண்டாலும், அரசின் உத்தியோகபூர்வ பிரிப்பின் படி இந்தியத் தமிழர், முஸ்லிம் அல்லாத தமிழர்களே இலங்கைத் தமிழர்களாகக் கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பிரிப்பினைக்கும் காரணம் இலங்கைத் தமிழர்கள் அக்காலத்தில் தம்மை இந்தியாவிலிருந்து தோட்ட வேலைகளுக்காக இங்கு வந்த இந்தியத் தமிழர்களிடமிருந்து வேறுபடுத்தி இம்மண்ணின் வம்சாவழிக்குடிகளாக அடையாளப்படுத்த எண்ணியதும், இஸ்லாம் மார்க்கத்தையுடைய தமிழ் பேசுவோர் தங்களை தமிழர்களாக அன்றி முஸ்லிம்களாகவே அடையாளப்படுத்தியதும் ஆகும். பிற்காலத்தில் தமிழ்-முஸ்லிம் இனத்தவர் இணைந்து சிலவேளைகளில் தமிழ்பேசும் இனத்தவர் என்றும் அடையாளப்படுத்தியதைக் காணலாம்.

ஒவ்வொரு பிரிவினைக்கும் ஏதோ ஒரு சுயநலமே காரணமாக இருக்கிறது. நான், எனது குடும்பம், எனது உறவுகள், எனது நண்பர்கள், எனது சுற்றும், எனது இனம், எனது கிராமம், எனது பிரதேசம், எனது மாவட்டம், எனது மாகாணம், எனது தேசம் என்று ஒரு படிமுறை உலகில் அனைத்து மனிதர்களிடமும் உண்டு. இதில் சிலது மற்றையதை விட முக்கியம் பெறுகிறது. இந்த முக்கியத்துவம் மனிதனிலிருந்து மனிதனுக்கு வேறுபடும். ஜின்னா எனது இனம் என்று சிந்தித்தார், கஸ்ட்ரோ எனது நாடு என்று சிந்தித்தார், திரு.எக்ஸ் எனது குடும்பம் என்று சிந்திக்கலாம்! இவ்வாறாக இலங்கையிலுள்ள தமிழ்பேசும் மக்கள், இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவழித் தமிழர், முஸ்லிம்கள் எனப்பிரிவடைந்தனர். இலங்கைத் தமிழரிடையே யாழ்ப்பாணத் தமிழர், வன்னித் தமிழர், கொழும்புத் தமிழர், மட்டக்களப்புத்தமிழர், திருகோணமலைத் தமிழர், மன்னார்த் தமிழர், தீவுத் தமிழர் என்று பல பிரிவினைகளைக் காணலாம். இவற்றைச் சுருக்கி மேலோட்டமாக வடக்குத் தமிழர், கிழக்குத் தமிழர், கொழும்புத் தமிழர் எனப்பிரிக்கலாம். இதைவிட அந்தந்தத் தமிழரிடையே சாதிப்பிரிவினைகளையும் காணலாம். யாழ்ப்பாணத்திலுள்ள சாதிப்பிரிவுகளைப் பார்த்தோமேயானால், கலாநிதி.எச்.டபிள்யு. தம்பையாவின் 'The Laws and Customs of The Tamils of Jaffna' என்ற நூலின் படி பிராமணர், வேளாளர் (வெள்ளாளர்), மடைப்பள்ளி, கரையார், சிவியார், குசவர், வண்ணார், அம்பட்டர், கோவியர், தனகாரர், நளவர், பள்ளர், பறையர், துரும்பர் என வகைப்படுத்தப்படுகிறது, இவை செய்தொழில் வேற்றுமையால் ஏற்படுத்தப்பட்ட பிரிவினைகள் பின்பு வம்சாவழி ரீதியாகக் கருதப்பட்டன. இது போன்ற சாதிப்பிரிவினைகளை ஏனைய தமிழர்களிடமும் காணலாம். இப்படியாக இலங்கைத் தமிழர்கள் பிரதேச ரீதியாக, சாதி ரீதியாக பெருமளவு பிரிந்தேயிருந்தனர். இலங்கையில் காணப்படும் பாரம்பரியச் சட்டங்களிலில் யாழ்ப்பாணத்தமிழரின் தேசவழமைச் சட்டமும், மட்டக்களப்புத்தமிழரின் முக்குவச் சட்டமும் குறிப்பிடத்தக்கது, இதில் முக்குவர்ச் சட்டம் காலப்போக்கில் வழக்கிழந்துவிட இன்று வரை எழுதப்பட்ட சட்டமாகிய தேசவழமை தொடர்கிறது. இலங்கைத் தமிழர்களது அரசியலைப் பார்த்தோமேயானால் யாழ்ப்பாண, வன்னி இராச்சியங்களின் பின் ஐரோப்பிய ஆதிக்க காலத்தில் எல்லாம் வேளாளர் (வெள்ளாளர்) இனத்தவரின் ஆதிக்கத்தைக் காணலாம். பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அவர்கள் எழுதிய “இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல்” என்ற ஆய்வில் அவர் கூறுவதாவது -

........இலங்கைத் தமிழர்களின் அரசியல் யாழ்ப்பாண இராச்சியக் காலத்திலிருந்து குறிப்பிட்ட குழுவினரால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்துள்ளதெனக் காண்கிறோம். அதாவது சாதியில் உயர்ந்த வேளாளர்களே அரசியல் ரீதியில் பிரதானமான பதவிகளை வகித்து வந்துள்ளார்கள். இந்நிலை போர்த்துக்கேயர், டச்சுக்காரர் ஆட்சிக்காலப் பகுதிகளிலும் தொடர்ந்தது. பிரித்தானியர் ஆட்சியின்போது இது மிகவும் தெளிவாகியது. இலங்கைத் தமிழர்களுக்குள்ளேயும் யாழ்ப்பாணத் தமிழர்களும் அவர்களிலும் வேளாளர் சாதியமைப்பை சேர்ந்த, நிலவுடைமை, ஆங்கிலக் கல்வி என்பவற்றைப் பெற்றுக்கொண்டவர்களே அரசியலிலும் ஆக்கிரமிப்புச் செலுத்த முடிந்தது........ மிகவும் அண்மைக்காலம் வரை அதாவது தமிழ்த் தீவிரவாதக் குழுக்கள் இலங்கைத் தமிழர் அரசியலைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும்வரை வேளாள உயர்ந்தோர் குழாமே இலங்கைத் தமிழர்களின், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின் அரசியலை ஆக்கிரமித்து வந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால், கிழக்கு மாகாணத் தமிழர்களின் அரசியலை முக்குவர் ஆக்கிரமித்ததற்கான சான்றுகள் இல்லை.

ஆகவே இலங்கைத் தமிழர் அரசியலை யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தியதைக் காணலாம். இந்நிலை ஆயுதக்குழுக்களின் வருகை வரை தொடர்ந்தது. ஆயுதக் குழுக்களின் வருகையின் பின் சாதி, பிரதேசவாதப் பிரிவுகளில் நிறைய மாற்றம் வந்தது. எல்லாப் பிரதேசத்தைச் சேர்ந்து, எல்லாச்சாதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் ஆயுதம் தூக்கியதன் விளைவு இலங்கைத் தமிழரிடையே இருந்த பிரிவினைகள் மறக்கப்பட்டு தனித் தமிழீழக் கொள்கை உருவானது. வடக்கு - கிழக்குப் பிரிவினைகள் மூட்டை கட்டப்பட்டு இணைந்த வடகிழக்கையுடைய தமிழீழக் கனவினை இவ்வாயுதக்குழுக்கள், அதிலும் குறிப்பாக பிற்காலத்தில் பலம்பொருந்திய தனி அமைப்பாக விளங்கிய விடுதலைப்புலிகள் அறிமுகஞ்செய்தனர். வடக்குக் கிழக்கில் ஆயுதக்குழுக்களின் அரசியல் ஆக்கிரமிப்பால் ஏனைய கட்சிகள் பலம் இழந்தன, அழிந்தன அல்லது ஆயுதக்குழுவின் கொள்கையை ஆதரித்தன. ஆயுதக் குழுக்கள் பலம்பெற்றிருந்த காலகட்டத்தில் இலங்கைத் தமிழர்களிடையே கொள்கையளவிலாவது பிரிவினை இல்லாதிருந்தது. இலங்கைத் தமிழரை ஒன்றுபடுத்தி அவர்களின் ஒருமித்த கருத்தாக தமிழீழக் கோரிக்கையைக் காட்டவே ஆயுதக்குழுக்களும் அவை சார்ந்த அரசியல் கட்சிகளும் முயன்றன. 2002-2004 காலப்பகுதியில் மலையத் தலைமைகளையும் அதே குடையின் கீழ் இணைக்கவே முயற்சித்தன. கொள்கையளவிலாவது ஒன்றுபட்டிருந்தது இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு பலமாகவே இருந்தது. இதற்கு பெருஞ்சூத்திரமெல்லாம் அவசிமில்லை நாம் சிறுவயதில் படித்த ஒற்றுமையே பலம் கதையே போதும், இது மனிதவளம், எண்ணிக்கை சார்ந்த பலமாக இருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணாவின் பிரிவினை வரை இந்த கொள்கையளவு ஒற்றுமை ஆயுதக்குழுக்களினால் காப்பாற்றப்பட்டே வந்தது, கருணாவின் வெளியேற்றமும், அதனைத் தொடர்ந்து கருணாவின் கிழக்குத் தமிழர் மைய அரசியலும் மீண்டும் ஒரு வடக்குக்-கிழக்குத் தமிழர் பிரிவினையை உண்டாக்க வித்திட்டது, அதன் தொடர்ச்சிதான் இன்று பிள்ளையானின் கிழக்குமாகாண அரசியல். ஆனால் அவர்களுக்கு மக்கள் கொடுத்ததோ பேரதிர்ச்சி. அண்மையில் நடந்த பொதுத்தேர்தலில் வடக்கு-கிழக்கு இரண்டிலுமே பிள்ளையானின் படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

இன்று யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பிரதேசவாத விஷமப் பிரச்சாரங்கள் சுயநல-அரசியல் தரப்புக்களால் கட்டவிழ்த்து விடப்படுகிறது. மீண்டும் தமிழர்களிடையே பிரதேச வாதப் பிரிவினைகளை உருவாக்கி அதில் தமது சொந்த இலாபங்களைச் சேர்த்துக்கொள்ள சில அரசியல் விஷமிகள் இந்தப் பிரிவனையைத் தூண்டுகின்றன. பழைய அரசியல் கதைகளை மீண்டும் எழுதி குழம்பித் தெளிந்த குட்டையை மீண்டும் குழப்ப விளைகிறார்கள். இவர்களிடம் சில கேள்வி கேட்க என் மனம் விளைகிறது. நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும் (ஒரு பேச்சுக்கு!) இதைச் சொல்வதன் மூலம் நீங்கள் அடைய நினைப்பது என்ன? மீண்டும் பிரதேச வாதப் பிரிவினையால் தமிழர்கள் சாதிக்கப்போவது என்ன? தமிழர்கள் ஒரு குடையின் கீழ் ஒன்று பட முடியாதா? பழையன கழிதலும், புதியன புகுதலும் வேண்டும். பழைய கதைகளை மீண்டும் ஓதி, குரோதத்தை வளர்த்து, பேராதிக்க சக்திகளின் பிரித்தாழும் தந்திரத்திற்கு இரையாகலாமா? 

இன்று பிரதேசரீதியாகப் பிரிவோம், மீண்டும் சாதிகள் ரீதியாகப் பிரிவோம், ஏற்கனவே சிறு பான்மையினம், இனிக் குறுஞ் சிறு பான்மை இனங்களாகப் பிரிந்துபோவோமா? இலங்கைத் தமிழ்மக்கள் பிரிவினைகளைக் களைந்து இன்னும் உறுதியாக ஒன்றுபட வேண்டிய காலம் இது.


****************************************************
References / உசாத்துணை

Tambiah H.W. Dr. 'The Laws and Customs of The Tamils of Jaffna', Women's Education & Research Center Publication 2004.

அம்பலவாணர் சிவராஜா, 'இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல் ', கொழும்புத் தமிழ்ச் சங்கம், 2003.

Nov 3, 2009

இலங்கையில் தமிழ் சினிமா இல்லாதது கவலைக்குரியது...

இலங்கையின் திரைப்படத்துறை வரலாற்றில் இதுவரை ஏறத்தாழ 50 தமிழ்த் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் பின்னர் தமிழ்த்திரைப்படத்துறை முடங்கிவிட்டது. ஆயினும் திரைப்படங்கள் எடுக்கப்பட்ட காலத்தில் மிகத் தரமான திரைப்படங்கள் எம்மவர்களால் படைக்கப்பட்டிருக்கிறது. வாடைக்காற்று, குத்துவிளக்கு போன்ற கதையம்சம் பொருந்திய படங்களும், நான் உங்கள் தோழன் போன்ற எம்.ஜி.ஆர் படங்களை ஒத்த திரைப்படங்களும், கோமாளிகள் - நகைச்சுவைத் திரைப்படமும் என வகை வகையான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன - பல வெற்றியும் பெற்றன.

இலங்கையில் தமிழ் சினிமாவின் அவசியம் என்ன என்று பலர் வினவலாம். இன்று தமிழர்களுடைய அடையாளமாகவே தமிழக சினிமா மாறிவிட்டது. எந்த விசேஷமானாலும் சினிமாவும் அதில் ஒரு அங்கமாக மாறிவிட்டது - நவீன இலக்கிய வடிவமாக சினிமாவைக் கொள்ளமுடியும் - அந்தளவுக்கு சினிமாவின் ஆதிக்கம் தமிழரிடையே ஊறிவிட்டது. இன்று தமிழ்ப் பாடல் ஒன்று பாடும் படித் தமிழ்ச் சிறுவனிடமோ, இளைஞனிடமோ கேட்டால் நிச்சயமாக அவன் பாடுவது சினிமாப்பாடலாகவே இருக்கும். இவ்வளவு ஏன் இன்று தமிழ் ஊடகங்களின் உயிர்நாடியே சினிமாதான். இப்படியாக தென்னிந்திய சினிமாவே உலகத் தமிழரின் அடையாளமாக மாறிவிட்டது.

சங்ககாலம் முதல் 18ம், 19ம் நூற்றாண்டு காலம் வரை நாங்கள் இலக்கிய வரலாற்றை உற்றுநோக்கினால் - தென்னிந்தியாவில் தமிழ் இலக்கியம் வளர்ச்சிபெற்ற அளவுக்கு இலங்கையிலும் தனித்துவத்துடன் தமிழ் இலக்கியம் வளர்ந்திருக்கிறது. பிற்பட்ட காலங்களில் தமிழக இலக்கியங்கள் அழகியல் ரீதியானவற்றில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த போது ஈழத் தமிழ் இலக்கியங்கள் வைத்தியம், சோதிடம் போன்ற விஞ்ஞானபூர்வமான இலக்கியப்படைப்பிலும் ஈடுபட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழருக்கென தனித்துவமான இலக்கியப் படைப்புக்களும், பண்புகளும் காணப்பட்டன. காலப்போக்கில் இனப்பிரச்சினையும், புலம்பெயர்வுகளும், இவற்றைவிட இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சியும் இலங்கைத் தமிழரது தனித்துவமான இலக்கியப் படைப்புக்களுக்கு சிறுது சிறிதாய் முற்றுப்புள்ளி வைக்கத்தொடங்கின. சினிமா எனும் நவீன இலக்கிய வடிவத்தைக் கைக்கொண்டு இலங்கையில் தமிழ்த் திரைப்படங்கள் வந்திருந்தாலும் பிற்பாடு அவற்றின் தயாரிப்பு நின்ற பிறகு நாமும் எனது ஊடகங்களும் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கி இன்று அதிலேயே ஊறிவிட்டோம். விளைவு எனது தனித்துவமான மொழி, கலாசாரம், பண்பாடுகள் எம் கண் முன்னேயே கொஞ்சம் கொஞ்சமாக அருகி வருவதை கண்டும் காணாதது போல இருந்துகொண்டிருக்கின்றோம்.

அப்படி என்னடா பெரிய கலாசார பேதம் என நீங்கள் வினவலாம். நான் நேரிடையாகக் கண்ட ஒரு சின்ன உதாரணம் சொல்கின்றேன். எமது இலங்கைத் தமிழர் கலாசாரத்தில் தாய் தந்தையரை, பெரியோர்களை “நீ” என விளிக்கும் பண்பாடு இல்லை மாறாக மரியாதை நிமித்தம் நாம் “நீங்கள்” என்று தான் விளிப்போம் ஆனால் தென்னிந்திய முறையில் “நீ” என்று விளிப்பது அவர்கள் அளவில் தவறல்ல. இதனால் என்ன என்று கேட்பவர்களுக்கு ஒன்று - கலாசார, பண்பாடு பேதங்களில் ஒன்றைச் சரி அல்லது தவறு என கூறமுடியாது ஆனால் எமது கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டிய தார்மீகக் கடமை எம்மிடம் இருக்கிறது - இந்தியத் தமிழோ அவர்களது கலாசாரமோ தவறல்ல ஆனால் எமது கலாசாரத்தை நாமே கெடுக்கக்கூடாது அல்லது கைவிடக்கூடாது ஏனென்றால் அது தான் எமது தனித்துவத்தின் அடையாளம் - நாம் யார் என்பதன் அடையாளம் அதுதான்.

எனக்கேற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்று உண்டு. இத்தாலியில் உலகப் பாடசாலைகள் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்தேன். மூன்றாம் நாள் நிகழ்வாக அவரவர் தமது கலாசார நிகழ்வொன்றை நடத்த வேண்டும். இலங்கையிலிருந்து நானும் 2 சிங்களத் தம்பிமார்களும் சென்றிருந்தோம் - நாம் மூவரும் ஒரு கலாசார நடனமும், பாடலும் பாடுவதாக இருந்தது. நாட்டியத்தில் அவர்கள் சிங்கள முறை நாட்டியத்தை ஆட நான் காவடியை வைத்துக்கொண்டு கால்களை அங்குமிங்கும் அசைத்துக்கொண்டிருந்தேன் (அட நடனமாடியதாக எடுத்துக் கொண்டால் சரி) அடுத்து பாடல் பாடப் புறப்பட்ட போது தான் எனக்குப் பொறி தட்டியது. தம்பிமார் ஒரு சிங்களப் பாடலும் நான் ஒரு தமிழ்ப் பாடலும் பாடுவதாக இருந்தது. ஆனால் நான் தயாராகிக்கொண்டு போனது “ஒவ்வொரு பூக்களுமே” பாடல் - ஆனால் எதிரே இந்தியாவில் இருந்து வருகை தந்த பாடசாலை தென்னிந்தியாவின் பிரபல பாடசாலை- வந்திருந்தவர்கள் அனைவரும் தமிழர்கள். நான் இந்தப்பாடலைப் பாட இது உங்களுடைய பாடல் அல்ல இந்தியாவின் பாடல் என உரிமை கொண்டாடிவிட்டால் அது அவமானமாயிற்றே என்று எண்ணி சுதாகரித்துக்கொண்டு பெரியதம்பிப் புலவரின் கவிதை ஒன்றை கவிதைத் தொனியில் கூறி அதன் ஆங்கில அர்த்தத்தையும் கூறி கைதட்டு வாங்கி விட்டு மேடையிலிருந்து இறங்கினேன் - ஆனால் அந்த சில நிமிடங்கள் என் மனத்தில் ஆறாத வடுவாகப் படிந்துவிட்டது - இலங்கைத் தமிழருக்கென ஏன் தரமான பாடல்களோ, இலக்கியங்களோ இன்றில்லை அல்லது இருந்தும் ஊடகங்களின் அலட்சியப்போக்கால் அவை உயர்வடையவில்லையோ என்ற ஏக்கம் என்னிடம் இன்றுவரை இருக்கிறது.

இலங்கையில் எமக்கென ஒருவேளை தமிழ் சினிமாத் துறை இருந்திருந்தால் அந்த வலிமையான ஊடகம் எமது தனித்துவ அடையாளத்தைக் காக்கவும் எம்முடையது என உரிமையுடன் சொல்லக்கூடிய படைப்புக்களைத் தந்திருக்கும் ஆனால் எமது துரதிர்ஷ்டம் இலங்கையில் தமிழ் சினிமாத்துறை இல்லை என்பது அதனால் இன்றும் எமது ஊடகங்கள் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களிலும் பாடல்களிலும், நாடகங்களிலும், நிகழ்ச்சிகளிலுமே தங்கியிருக்கிறது.

நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது....

Aug 25, 2009

முட்டையிலிருந்து கோழி வந்ததா? இல்லை.....

இன்று வரை எம்மைத் திகைக்க வைத்துக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி “கோழியிலிருந்து முட்டை வந்ததா? இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா?” என்ற கேள்விதான். கோழியிலிருந்துதான் முட்டை வருகிறது ஆகவே கோழியில்லாமால் கோழி முட்டை வரச்சாத்தியமில்லை ஆனால் அந்தக் கோழியே முட்டையிலிருந்துதானே வருகிறது. ஆப்படிப்பார்த்தால் முட்டையில்லாமல் கோழி வந்திருக்கச் சாத்தியமில்லை. இப்படி குழப்பத்திலேயெ இவை இருக்க கோழியும் முட்டையும் எங்கிருந்து வந்தது? என்ற கேள்வி மனிதர்களிடம் எப்போதுமே இருந்தவண்ணம் தான் இருந்தது. 
இதை மனிதர்கள் இரண்டு வகையில் அணுகினார்கள் முதலாவது மெஞ்ஙான ரீதியில் அணுகியவர்கள் கடவுள் என்ற “எடுகோட் பொருளை” மையப்படுத்தி கடவுளின் படைப்பாகவே உலகம் உருவானது, எல்லா உயிர்களையும் கடவுளே படைத்தார் என்று கூறினார்கள். இதைப் பகுத்தறிவு வாதிகள் மறுத்தார்கள். யதார்த்தத்தில் காணமுடியாத அல்லது நிரூபிக்கமுடியாத கடவுள் என்பதை ஏற்றுக்கொளவதை அவர்கள் விரும்பவில்லை மாறாக விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்க கூடிய காரணங்களை அவர்கள் தேடினார்கள். காலங்காலமாக மெஞ்ஞான, விஞ்ஞான வாதிகளிடையே இந்த முரண்பாடு இருந்த வண்ணம் தான் இருந்தது. ஆனால் பலகாலம் யாராலும் உறுதியாக விளக்கமொன்றைத் தரமுடியாதிருந்தது. இப்படியான காலகட்டத்தில் தனது கூர்ப்புக் கொள்கை பற்றி சார்ள்ஸ் டார்வின் கருத்துக்களை வெளியிட்டார். உலகிலுள்ள உயிர்கள் அத்தனையும் கூர்ப்படைந்து உருவாகியது, அதாவது உயிரினம் ஒன்று தனது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு வாழ்ந்து வருகையில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப மாற்றம் அடைந்து வந்தது என்பதே அவரது கருத்தின் சுரக்கமாகும். இதற்கு அவர் பல காரணங்களையும் சுட்டிக்காட்டுகிறார்.

உலகின் முதலாவது உயிரினமாக ஒரு பக்டீரியாவை விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். அது கோடான கோடி ஆண்டுகளாக கூர்ப்படைந்து இன்றைய உயிரினங்கள் உருவானதாகக் கொள்கிறார்கள். இதை விளங்குவதற்குக் கொஞசம் சிக்கலான விஞ்ஙான முறைகள் மூலம் விளக்குகிறார்கள். எல்லாம் சரி ஆனால் இங்கும் ஒரு கேள்வி தொக்கு நிற்கிறது. அந்த முதலாவது உயிரிலிருந்து ஏனையவை தோன்றியது என்கிறீர்கள் அப்படியானால் அந்த முதலாவது உயிர் எங்கேயிருந்து தேன்றியது? அது அதுவாகவே தோன்றியதா? இங்கு தான் மீண்டும் மெஞ்ஞானவாதிகளின் கடவுட்கோட்பாடு முக்கியம் பெறுகிறது. அதைக் கடவுள் தானே படைத்திருக்க வேண்டும்?!

உண்மையிலேயே எம்மால் விளங்கப்படுத்த முடியாத விஷயங்களுக்கு அல்லது தெரியாத பொருளுக்கு கணிதத்தில் “தீட்டா” போடுவது போல அல்லது “X” “Y” எனப்போடுவது போலத்தான் கடவுள் என்பதும் தோன்றியது. எமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது. நாம் இன்னும் விளக்கமுடியாத மர்மங்கள் இருக்கிறது அவற்றை “கடவுள்” என்று அடையாளப்படுத்தத் தொடங்கியது தான் இன்று கூர்ப்படைந்து மதம் என்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது. “கடவுள்” தொடர்பில் வளர்ந்த நம்பிக்கைகள் சமூகக் கூட்டத்திற்குக் கூட்டம் மாறுபட்டு அவற்றிலிருந்து வேர்விட்ட பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுந்த விருட்சமே மதங்கள். இன்று அவை வாழ்க்கை நெறியாக இன்று மாறிவிட்டது. இதுவும் ஒரு விதத்தில் பெரிய கூர்ப்புத்தான்.

இதை நான் சொல்ல வந்ததற்குக் காரணம் உண்டு. கடவுள் இருக்கிறாரா... இல்லையா... போன்ற கேள்விகள் எம்மிடையே எழுவதுண்டு. விஞஞான ரீதியாக நிறுவி்காட்ட முடியாத விடயங்களை நாம் நம்பினாலும் ஏதோ ஒரு சந்தேகம் நம்மிடையே நிலவிக்கொண்டுதான் இருக்கும். விஞ்ஞானமோ மெஞ்ஞானமோ எல்லாமே வாழ்க்கையைப் பூரணப் படுத்தும் முயற்சிதான் ஆக பூரணமான ஒரு வாழ்க்கையை அனுபவிப்பதற்காக நாம் முயற்சிக்கையில் அதில் மதவெறி தலையிட்டு அதைச் சீரழித்து விடக் கூடாது. மதம் என்பது காலத்தின் வளர்ச்சியால் ஏற்பட்ட நம்பிக்கைகளின் தொகுப்பு அது வாழ்வை வளப்படுத்த மட்டுமேயன்றி அதனைச் சீரழிக்க அல்ல. சத்தியமாகச் சொல்கிறேன் மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களைக் காணும் போதெல்லாம் எனக்கு சிரிப்பும், கவலையும் தான் வருகிறது. மதம் ஒரு நம்பிக்கை மட்டுந்தான் அதுவே வாழ்க்கையல்ல.

Aug 13, 2009

இளைஞர்களை கட்டிவைக்காதீர்கள்....


இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றிலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். உலகைப் பரந்த நோக்கில் பார்க்கிறார்கள், வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த முயற்சிக்கின்றார்கள் ஆனால் சமூகம் தொடர்பான அவர்களது சிந்தனை இலங்கை இளைஞர்களிடையே வெகுவாகக் குறைந்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தாம், தமது வாழ்க்கை என ஒரே நேர்கோட்டில் சிந்திக்கின்றார்கள். சமூகத்தைப் பற்றியோ அதன் தேவைகள், மாற்றங்கள் பற்றியோ சிந்திக்கும் நிலையில் அவர்கள் இல்லை என்பது கவலைக்குரியது.

சில தினம் முன்பு எனது நெருங்கிய நண்பன் ஒருவனிடம் ஒரு சமூக ஆர்வத்தொண்டு பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன் அவனும் கேட்டுக்கொண்டி
ருந்தான், உதவிக்கு ஆட்கள் தேடித்தருவதாக வாக்களித்தான் ஆனால் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விருப்பமில்லை அவனுக்கு, கேட்டேன் “இல்லடா.... வேலை நிறைய இருக்கு... படிக்கவும் வேண்டும்” எனச் சமாளித்துவிட்டான் ஆனால் எனக்குத்தான் தெரியுமே உண்மையான காரணம்... அவன் இப்படி சமூக அக்கறை இல்லாமல் இருந்தவன் இல்லை ஆனால் அவனது சமூக ஆர்வத்தால் வீட்டில் பிரச்சினை, ஒவ்வொருநாளும் வீட்டில் திட்டு வாங்கினான் “படிச்சு வேலைவட்டியைப் பாக்கிறத விட்டுட்டு உது என்னத்துக்கு வேண்டாத வேலை” எனத் திட்டித்திட்டி அவனட மனதில் அது ஆறாத வடுவாகி இன்று சமூகப் பொறுப்பையே அவன் மறந்துவிடும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டார்கள். இதில் அவன் மேல் பிழையில்லை அவன் பெற்றோர் மீதும் பெரிதும் பழி சுமத்த வழியில்லை ஏனென்றால் சமூகப் பொறுப்பை மறந்து வாழ்க்கையை நடத்த நாம் கற்றுக்கொண்டுவிட்டோம் - உண்மையில் நாம் வாழ்கிறோமா இல்லைத் தப்பிப் பிழைக்கிறோமா என எனக்
கு ஐயம் எழுவது கூட உண்டு.

இன்றைய இளைஞர்கள் சமூக சேவையென்றாலே வரத் தயங்குகிறார்கள் - இதற்கு ஆர்வமின்மை காரணமல்ல, அவர்களுக்கு மிகுந்த ஈடுபாடும் விருப்பமும் உண்டு ஆனால் உற்றோரும் சுற்றோரும் இது ஏன் வீண்வேலை என அவர்களுக்குத் தடைபோடுவதால் அதனை இடித்தெறியும் வன்மை இலாது அவர்கள் காட்டும் நேர்கோட்டிலேயே பயணிக்கின்றார்கள். சமூகப் பொறுப்புணர்வின் நிலைமையே இப்படியென்றால் அரசியல் பக்கம் இளைஞர்கள் வருகிறார்களா எனப் பார்த்தால், அரசியல் வாரிசுகளும் மற்றும் மிகச் சொற்ப இளைஞர்களும் போக மீதம் பேர் அரசியல் என்றாலே விலகித்தான் நிற்கின்றார்கள். அதுவும் கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்ததமிழ் பேசும் எம்மவர் அரசியலைச் சாக்கடை சாக்கடை என்று கூறியே இளைஞர் மனதிலிருந்து அதனை விலக்கி வைத்துவிட்டார்கள். விளைவு இன்று இன்னும் அந்தச் சாக்கடை சாக்கடையாகவே இருக்கிறது. அரசியலைச் சாக்கடை சாக்கடை என்று சொல்பவர்களை ஒன்று கேட்கின்றேன் உங்கள் வீட்டில் குப்பையிருந்தால் அதை நீங்களோ, உங்கள் பிள்ளையைக்கொண்டோ அப்புறப்படுத்துவீர்களா இல்லை குப்பை குப்பை எனச் சொல்
லிக்கொண்டு அந்தப் பக்கம் போகாமலே குப்பபையைப் பெருகவிட்டு வீட்டை நாறவிடுவீர்களா? நாறவிடுவோம் எனச்சொலபவர் பற்றி எனக்குக் கவலையில்லை அவர்கள் பற்றிக் கவலைப்படவேண்டியது மனநல மருத்துவர்தான் ஆனால் இல்லை எனச் சொல்பவர்கள் வீடு அழுக்கானால் சுத்தம் செய்கிறீர்களே ஆனால் நாடு அமுக்கானால் மட்டும் ஏன் பார்க்காமல் கண்ணை மூடிக்கொள்கிறீர்கள்??? க்ணணை மூடிக்கொண்டு எவ்வளவு காலம் வாழ்ந்துவிட முடியும்??? யோசியுங்கள் தப்பிப்பிழைப்பது வாழ்க்கையல்ல - அப்படியிருப்பதிலும் செத்துமடிவது மேல்.

அரசியல் என்பதே இன்று தலைகீழ் ஆகிவட்டது. அது ஒரு கலை என்பதிலிருந்து இறங்கி வியாபாரம் ஆனதன் விளைவே இன்று நீங்கள் அதனைச் சாக்கடை சாக்கடை என வையும் அளவுக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. இந்தச் சாக்கடையினுள் ஊறியவர்களுக்கு அதனைச் சுத்தம் செய்ய வேண்டிய தேவை இருக்காது ஆக அவர்கள் சாக்கடையைச் சாக்கடையாகவே இருக்கவிட்டுவிடுவார்களேயன்றி அதனைச் சுத்தம் செய்து மாற்
றம் கொண்டுவர எத்தனிக்கமாட்டார்கள். ஏனென்றால் சாக்கடையில் வாழும் தன்மை அவனுக்கேயுண்டு வேற்றோர் அதனுள் வாழமுடியாது அதனால் தனியுடைமையாக அதனைப் பரம்பரை பரம்பரையாக அனுபவிக்கின்றான். நீங்களும் அப்படியே விட்டுவிட்டீர்கள் - ஆனால் இது உங்கள் கழிவுகள் போகும் சாக்கடையல்ல உங்களுக்கு குடிக்க நீர் தரும் சாக்கடை உங்களை ஆளும் சாக்கடை அது எப்படியோ அப்படியே உங்கள் வாழ்கையும் அமையும். ஆனால் நீங்கள் பாராட்டப்படவேண்டியவர்கள் எத்தனை துன்பத்தை இந்த அரசியல்வாதிகள் தந்தாலும் தாங்கிக்கொண்டு மாற்றம் எதனையும் வேண்டாது அவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாக்களிக்கிறீர்களே - சாதனைதான்.

சிந்தியுங்கள்.... இளைஞர்களால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்...
ஏனென்றால் எதற்கும் வளைந்துகொடுக்காத மனோதைரியம் இளைஞர்களுக்குத் தான் உண்டு. எத்தனை காலம் தான் இந்தத் தப்பியொட்டி வாழும் வாழ்ககை... ஆர்வத்துடன் இருக்கும் இளைஞர்களை தடுக்காதீர்கள் அவனது உறுதியான மனதிலே அடித்து அடித்து அதை வளைத்துவிடாதீர்கள்.... நீங்கள் அறிந்த பெரியோரெல்லாம் வியந்து பாராட்டியது இளைஞனைத்தான். பாரதி தேச விடுதலைக்காக துணைக்கழைத்தது இளைஞர்களைத்தான்.... விவேகானந்தர் நாடடைக் கட்டியெழுப்பக் கேட்டது 100 இளைஞர்களைத்தான்... சேகு
வேரா தூயமையான விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டதும் இந்த இளைஞர்களோடுதான்... அவர்கள் ஏற்படுத்திய மாற்றம் அளப்பரியது. அவர்களை அவர்களாகக் கனவு காணவிடுங்கள் - அவர்களது கனவினைக்கூட நீங்களே தீர்மானிக்க எத்தனிக்காதீர்கள். மீண்டும் சொல்கிறேன் அரசியல் உங்கள் பார்வையில் சாக்கடையாகவே இருக்கட்டும், அதை சுத்தம் செய்யும் பலமோ திறனோ உங்களுக்கில்லை ஆனால் இன்றைய இளைஞர்கள் எங்களுக்கு அந்தப பலமும் திறமும் உண்டு - அதனைச் செய்யவிடாது தடுக்காதீர்கள்.

நான் இதை உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்ளும் இந்த தினம் உலகின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு சாதனை இளைஞனாக இருந்து கொடுமைகள் நிறைந்த தனது தேசத்திற்கு விடுதலை ஒளியுட்டிய இளைஞன் ஃபிடல் கஸ்ட்ரோ பிறந்த தினம்.... அந்த இளைஞன் அன்று ஏற்படுத்திய அந்த மாற்றம் தான் அத்தனை இலட்சம் மக்களின் வாழ்க்கைக்கு ஒளிகொடுத்தது... இப்படி எங்களுக்குள் ஒளிந்திருக்கும் கோடிக்கணக்கான கஸ்ட்ரோக்களை வேரோடு அறுத்துவிடாதீர்கள்.....

Aug 10, 2009

சுயமிழந்து போகும் இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள்

தலைப்பைப் படித்ததுமே சிலர் வாதாடத் தயார் ஆகலாம் - ஆனால் உண்மையைப் புரிந்து கொண்டால் எந்த விவாதத்திற்குமான தேவை இருக்காது. முதலில் இலங்கைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் எத்தனை வீதம் சொந்தத்தயாரிப்பிலானது என்று பாருங்கள் - என் கணிப்புச் சரியென்றால் 40 விழுக்காடுக்கும் குறைவு. அதில் எத்தனை சுய அடையாம் தாங்கியவை - அதாவது சுயமான ஆக்கமாகவும், இலங்கையின் அடையாளத்தையுடையதும் எனப்பார்த்தால் அது மிகச்சொற்பமே, ஏற்கனவே அவ்வாறு சுய அடையாளத்துடன் இருந்த நிகழ்ச்சிகள் கூட ஓரங்கட்டப்பட்டு இந்திய பாதிப்பிலான நிகழ்ச்சிகளையே தயாரிக்கிறார்கள். இதற்கு கூறப்படும் நியாயம் “மக்கள் இரசனை”. மக்கள் இந்தியத் தன்மையான நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கிறார்கள் என்று நேரடியாக இந்தியத் தமிழ் அலைவரிசைகளிலிருந்து நிகழ்ச்சிகளை இறக்குமதி செய்வதும் அல்லது அதுபோன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக பிரதி பண்ணுவதும் சர்வசாதாரணமாகிவிட்டது - விளைவு இலங்கை நிகழ்ச்சிகளினது தனி அடையாளம் அழிக்கப்பட்டு, இந்தியத் தன்மை அதிகரித்துவிட்டது.

சில பேர் நினைக்கலாம் இது இலங்கைத் தமிழ் - இந்தியத் தமிழ் என நான் பிரிவினை பேசுவதாக - நிச்சயமாக இல்லை. ஒரு மொழியின் அழகு அதுதனிலிருக்கும் வெவ்வேறு பாணிகளிலும் தங்கியுள்ளது. ஒரே மொழியைப் பேசினாலும் ஒவ்வொரு பிரதேசமும் தங்களுக்கேயுரிய பாணியையும் நடையையும் கையாள்வதுதான் அந்த மொழியின் அழகை மட்டுமல்ல தனித்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்கர்களும், இங்கிலாந்தவர்களும் பேசுவது ஆங்கிலம் தான் ஆனால் அவரவர்க்கென பாணியிலும், நடையிலும், சொற்பிரயோகத்திலும் உரிய வேறுபாடுண்டு அது அந்த மொழிக்கு மேலும் அழகைச் சேர்க்கிறது. தமிழ்நாட்டை எடுத்துப்பாருங்கள் மதுரைத்தமிழ் வித்தியாசம், சென்னைத்தமிழ் வித்தியாசம், கொங்குநாட்டுத் தமிழ் வேறு - அவை தனித் தன்மையும் அழகும் உடையவை. மதுரைக்காரர்கள் யாருமே சென்னைத் தமிழ் பேச எத்தனிப்தில்லை, கொங்குதமிழ் பேசுபவர்கள் சென்னைத் தமிழ் பேச எத்தனிப்பதில்லை - தத்தமது தனித்துவத்தை நிலைநாட்டும் வல்லமையுடையவர்களாக அவர்கள் இருப்பதனால் இன்னும் அந்தத் தமிழ் நடைகள் வாழ்கின்றன. ஆனால் எங்கே போயிட்டு எங்கள் யாழ்ப்பாணத் தமிழ்? எங்கு மறைந்நது எங்கள் மட்டக்களப்புத் தமிழ்? இலங்கை வானொலிக்கே உரிய செந்தமிழ் உச்சரிப்பு எங்கு போய்விட்டது?

இன்று இலங்கை தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் தங்கள் சுய அடையாளத்தை மறந்து, மறைத்து கஷ்டப்பட்டு இந்தியத் தொலைக்காட்சிப் பாணியிலான தமிழ் பேசுவதைக் காணக் கவலையாக இருக்கிறது. காலப்போக்கிலே இவர்களைப் பார்த்துப் பார்த்து, கேட்டுக் கேட்டு இலங்கைத் தமிழர்களின் தமிழே அழிந்துவிடும், இது இலங்கைத் தமிழர்களுக்கான பாதிப்பு மட்டுமல்ல தமிழ் மொழிக்கான பாதிப்பும் கூட. இவர்கள் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு தங்கள் மொழிநடையை மாற்றி, வேறு மொழி நடையைப் பயன்படுத்துகிறார்கள் என எனக்கும் புரியவேயில்லை, இதன் மூலம் தங்கள் மொழிநடையை மறப்பதுடன் அவர்கள் திக்குமுக்காடிப் பேசும் அந்த புதிய மொழிநடையையும் சரியாகப் பேசமால் அதையும் இம்சிக்கின்றார்கள்.

ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள் - நீங்கள் என்னதான் இந்தியப்பாணியிலான தமிழ் பேசி, அந்த நிகழ்ச்சிகளைப் பிரதி பண்ணினாலும் அது ஒரு போதும் பெருமையைத் தரப்போவதில்லை மாறாக அது நகைப்புக்குரிய ஒன்றாகவே அமையும். எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதற்காக நான் பிரித்தானியப் பாணியில் திக்குமுக்காடிப் பேசுவதால் என்ன பயன்? எனக்குத் தெரிந்த பாணியில் ஆங்கிலத்தைப் பேசுவது தான் சிறப்பு.

இது போல போலியாக, சுயத்தை மறைத்து இன்னொன்றைப் பிரதி பண்ணி வாழ்பவர்களைக் கண்டால் எனக்கு இந்தப் பாடல் தான் ஞாபகம் வந்தது -

“கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி -
தானும் அதுவாகப் பாவித்துத் - தன்
பொல்லாச்சிறகை விரித்தாடினாற்போலுமே
கல்லாதான் கற்ற கவி”

இவர்களோடெல்லாம் ஒப்பிடுகையில் இந்தியத்தொலைக்காட்சியிலும் செந்தமிழ் பேசும் “அப்துல் ஹமீத்” எவ்வளவு சிறப்பான, மேன்மையான தொகுப்பாளர்.

Jul 31, 2009

ஒரு மாணவி தற்கொலை - விழித்தது இலங்கை அரசாங்கம்


யுத்தம் ஓய்ந்த நிலையில் இலங்கையில் சூடான செய்திகள் பெரிதாக இக்காலகட்டத்தில் வருவதில்லை - புளித்துப் போன ஒரே முகங்களைப் பத்திரிகையிலும் ஏனைய ஊடகங்களிலும் மட்டுமல்ல பாதையோரமெல்லாம் கண்டு கண்டு எரிச்சல்தான் அதிகரிக்கிறது. இது இவ்வாறு இருக்க இலங்கையை ஒரு ஆட்டு ஆட்டி இருக்கிறது இந்தப்பா
டசாலை மாணவியின் தற்கொலை முயற்சி.

இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் 14 வயதேயான மாணவி ஜீலை மாதம் 22ம் திகதி
பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டுவந்ததற்காக பாடசாலை மாணவ தலைவிகளால் கண்டிக்கப்பட்டு அதிபர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வேளை அம் மாணவி மலசலகூடத்திறகுச் சென்றுவருவதாகக் கூறிச் சென்றிருக்கிறார். 15-20 நிமிடமாகியும் அவர் திரும்பாதது கண்டு மாணவதலைவிகளும் ஆசிரியர்களும் மலசலகூட்த்திற்குச் சென்று
பார்த்தபோது அங்கு அம்மாணவி தனது கழுத்துப்பட்டியைப் பயன்படுத்தித் தூக்கிட்டுத் தொங்கியபடி காணப்பட்டார். உடனே அம்மாணவி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டி போதும் உடற்பாகங்கள் செயலிழந்ததன் காரணமாக உயிரிழந்தார். இநதத் துயர சம்பவம் இலங்கை மாணவர்களை மட்டுமல்ல அரசாங்கத்தையும் கொஞ்சம் தடுமாறச் செய்திருக்கிறது.

மேலே நான் தந்தது பத்திரிகையிலும் வேறு ஊடகங்களிலும் வந்த செய்தியின் தொகுப்பு. இது தொடர்பிலான இன்னும் சில பல விஷயங்களை பாடசாலை மட்டத்தில் இருப்பதால் வதந்திகளாகவும், கதைகளாகவும் நாம் அறிந்து கொண்டோம் - ஆனால் அவையெல்லாம் இங்கு பகிர்வது நியாமல்ல முறையுமல்ல - ஆயினும் இது நடந்த பின்பு இலங்கை அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தனியார் பாடசாலைகளில் மாணவர்கள் கைத்தொலைபேசி பயன்படுத்துவதையும் கொண்டுவருவதையும் தடை செய்தது (அரசாங்க பாடசாலைகளில் முன்னமிருந்தே இவ்விதியுண்டு). அதோடு மட்டும் நின்று விடாமல் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு இலங்கையிலிருந்து இயங்கும் “வயது வந்தோருக்கான” தளங்களைத் தடைசெய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த
இரண்டு நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு ஒருங்கிணைத்துப் பார்க்கையிலே அச்சம்பவத்தை உங்களால் முழுமையாக ஊகிக்க முடியும் எனக் கருதுகிறேன்.

இலங்கை அரசாங்கம் எடுத்த உருப்படியான முடிவுகளில் ஒன்று இலங்கையிலிருந்தான “நீலத் தளங்களை” தடைசெய்தது. இதற்குப் பிரதான காரணம் வெளிநாட்டுத் தளங்களைப் போல இத்தளங்களில் “தொழில் ரீதியாக” நடிக்கப்பட்டு வெளியடப்படும் படங்கள் இருப்பதில்
லை மாறாக திருட்டுத்தனமாகவும், முறைகேடாகவும் எடுக்கப்படும் பட்ங்களும் வீடியோக்களுமே அதிகமுண்டு - இதனால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பெண்களும், சிறுவர்களும் எக்கச்சக்கம். அத்தகைய ஈனத்தனமான தளங்களைத் தடைசெய்தது மிகச் சிறந்த முடிவு.

ஆனால் கைத்தொலைபேசிப் பாவனையைத் தடைசெய்தது சளிப்பிடித்ததற்கு மூக்கை வெட்டிய கதைதான். கைத்தொலைபேசி தடைக்கு மூல காரணமே அதன் மூலம் அநாவசிய விடயங்கள் பரப்பப்படுவதும், தேவையில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமாகும் இதற்காக பல வகைகளில் பயனுள்ள அந்தச் சாதனத்தைத் தடை செய்வதில் அர்த்தமில்லை மாறாக அநாவசிய விடங்களுக்கு அது பயன்படுத்தப்படாமிலிருக்கும் படி சட்ட ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சில பலமான நடவடிக்கைகளை எடுக்கலாம். உதாரணமாக இலங்கையிலிருந்து மட்டும் இயங்கும் “நீலத் தளங்களைத்” தடைசெய்தது போல (அல்லது வெளிறாட்டிலிருந்து இயங்கும் “தமிழ் நெட்டைத்” தடைசெய்தது போல) சகல “நீலத்தளங்களையும்” தடைசெய்யலாம். மேலும் உள்நாட்டில் அநாவசியச் செயல்களிலும் முறைகேடுகளிலும் ஈடுபடுபவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கலாம் இவற்றின் மூலம் இதைத் தடுப்பதை விட்டு விட்டு கைத்தொலைபேசிப் பாவனையைத் தடுப்பதில் பயனில்லை.

இன்னும் ஒரு விடயத்தை இந்தச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய பாலியல் ரீதியான முறைகேடுகளுக்குக் காரணம் பாலியல் தொடர்பான முறையான புரிந்துணர்வின்மையே, ஆகவே அரசாங்கம் பாலியல் கல்வி தொடர்பான அறிவை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்படையச் செய்து இத்தகைய முறைகேடுகளிலிருந்து பெருமளவுக்கு நாளைய சமுதாயத்தைப் பாதுகாக்கலாம். மாறாக இன்னும் ஜே.வி.பி (ஜனதா விமுக்தி பெரமுண) அல்லது ஹெல உறுமய போல பிற்போக்கு வாதம் பேசிக் கொண்டிருந்தால் இது போன்ற சம்பவங்களை இன்னும் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கும்.

மாணவர்களுக்கு ஒரு கருத்து - தவறு என்பது தவறிச் செய்வது, அல்லது அறியாமையினால் விளைவது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டுதான் இருக்கிறான், அந்தக்கற்றல் அதிகமாக தவறுவிடுவதன் மூலமே கிடைக்கிறது. ஆக உங்கள் அறியாமையால் செய்யும் தவறுக்காக வருந்துங்கள் அதோடு திருந்துங்கள் - தயவு செய்து தண்டனையை நீங்களே உங்களுக்குக் கொடுத்துக் கொள்ளாதீர்கள், ஏனெனில் நீங்கள் தண்டிக்கப்பட வேண்டியவரே அல்ல. தப்பு என்பது தான் தெரிந்தே செய்வது - ஆனால் எனக்குத் தெரியும் மாணவர்கள் (நாங்கள்) எதையுமு் அதிகம் தெரிந்து செய்வதில்லை - அடிப்படையில் அதற்கான பக்குவம் எமக்கில்லை ஆக நாம் விடுகிற சின்னச் சின்னத் தவறுக்ளுக்காக எம்மை மாய்த்துக்கொள்ளக் கூடாது. மாணவப் பருவம் என்பது எல்லாவிதமான அனுபவங்களையும் உங்களுக்குத் தரக்கூடியது. இனிப்பானவற்றைச் சுவையுங்கள் கசப்பானவற்றை வாயில் போட்டுக்கொண்டுவிட்டால் கூடப் பயப்படாமல் துப்பிவிடுங்கள் - இதற்காக எல்லாம் வருத்தப்படத்தேவையில்லை. மனித வாழ்வின் சுவைகளை உணரும் பருவம் இது - சுவைத்துப்பாருங்கள்...

இறுதியாக இந்த அருமையான வரிகள் உங்களுக்காக -
“தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் -
தப்பு செய்தவன் வருந்தியாகணும்”

மேலேயுள்ள வண்ணந்தீட்டப்பட்ட பெண் மாணவியின் படத்திற்கும் செய்தியில் குறிப்பிட்ட எந்நபருக்கும் சம்பந்தமேதும் இல்லை. அது இணையித்திலிருற்து பெறுப்பட்டவெறும் வண்ணப் படம் மட்டுந்தான்.

Jul 26, 2009

கேவலமாகிக்கொண்டிருக்கும் டாக்டர் பட்டம்.


டாக்டர்.அவர் - டாக்டர் இவர் என கண்டவன் போனவனெல்லாம் இப்போது பெயருக்கு முன்னால் டாக்டர் பட்டம் போட்டுக்கொண்டு அலைகிறார்கள். அப்பிடியென்றால் டாக்டர் பட்டம் பெறுவது அவ்வளவு இலகுவானதா என்று நாம் நினைக்கலாம் - உண்மையான கலாநிதிப்பட்டம் பெறுவது மெத்தக் கடினம் ஆனால் கௌரவ டாக்டர் பட்டம் பெறுவது தள்ளுவண்டிக்கடையில் கச்சான் வாங்கிச் சாப்பிடுவது போல மிக இலகுவானது.

உலகத்திலேயே டாக்டர் பட்டம் போட்டுக்கொள்பவர்கள் ஒன்றில் வைத்தியர்களாக இருத்தல் வேண்டும் அல்லது தத்தம் துறையில் படித்து ஆராய்ச்சி செய்து கலாநிதிப்பட்டம் (PhD) பெற்றவர்களாக இருக்க வேண்டும் - இது தான் நியதி ஆனால் சில “படிக்காத மேதைகளை” கெளரவிக்க அவ்வப்போது பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கி வந்தன - வருகின்றன ஆனால் இன்றைய கேவலமான நிலை என்ன தெரியுமா கண்டவன் போனவனெல்லாம் இப்படி கௌரவ டாக்டர் பட்டங்களைப் போட்டுக்கொண்டு அந்தப் பட்டத்தின் மதிப்பையே கெடுத்துவிட்டார்கள்.

இந்தியாவின் நிலை வேறு - அங்கே நடிகர்களும் அரசியல்வாதிகளும் பல்கலைக்கழங்களுடாக கௌரவ டாக்டர்கள் ஆகின்றனர். எமது இலங்கையின் நிலையைப் பார்ப்போம். இலங்கையில் பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்குவது மிக அரிது (அண்மையில் ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது). அப்படியானால் இலங்கையில் இத்தனை தொகைப்பேர் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி? - கொஞ்சம் ஆழமாய் அலசிப் பார்த்தேன் இலங்கையில் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்குவதில் முன்னணியில் நிற்பது ஒரு கராத்தேச் சங்கம். சர்வதேச போர்க்லைப் பல்லைக்கழகம் என ஜப்பானில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு அமைப்பின் மூலம் இலங்கையில் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்குகிறர்கள். இதனால் இவர்கள் கராத்தே துறையில் சிறந்தவர்களுக்குத்தான் வழங்குகிறார்கள் என நீங்கள் எண்ணிவிட வேண்டாம், இதன் மூலம் டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கும் கராத்தேக் கலைக்கும் அல்லது எந்தவொரு போர்க்கலைக்கும் எது வித சம்பந்தமுமில்லை. இன்னும் கொஞ்சம் ஆழமாக தேடிப்பார்த்ததில் ஒரு டாக்டர் பட்டத்திற்கு ரூபாய்.20000 முதல் அவரவர் தகுதிக்கேற்ப வசூலிக்கிறார்கள். காசு கொடுத்தால் டாக்டர் பட்டம் தயார் - வருடத்திற்கொருமுறை ஜப்பானிலிருந்தொருவரை அழைத்து இங்கே பட்டமளிப்பு விழா வேறு நடாத்துகிறார்கள், அதைப் பத்திரிகைகளில் வேறு வெளியிடுகிறார்கள். சரி இதெல்லாம் உண்மையில் படித்தவர்களுக்குத் தெரியாதா? என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் இதிலுள்ள பிரச்சினை யாதெனில் இவர்கள் சில முக்கிய பதவிகளில், இருப்பிடங்களில் உள்ளவர்களுக்கும் பட்டங்களை வழங்கி வைத்திருக்கிறார்கள் ஆக இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை, மேலும் சட்ட ரீதியாகவும் இதனை அணுகுவது கடினம் காரணம் ஒரு ஜப்பானியப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதாகவே அது அமையும் அதில் சட்டரீதியாகப் பிழை காண முடியாது. அது சரி, இவர்கள் டாக்டர் பட்டம் மட்டுமா வழங்குகிறார்கள்? பேராசிரியர் பட்டமும், கௌரவ தூதர் பட்டமும் (அதாவது தமது பெயருக்கு மன்னால் Hon. என இட்டுக்கொளள முடியும்) வழங்குகிறார்கள். பொதுவாகப் பாராளுமன்ற உறுப்பினர்களும் மிக உயர் பதவியிலுள்ளவர்களும் பாவிக்க வேண்டிய கௌரவ. எனும் பதத்தை இவர்கள் தமக்குதட தாமே சூட்டிக்கொள்ளும் கேவலமும் நடக்கிறது. இதைவிட மோசம் பேராசிரியர் பட்டம் வழங்குவது. கௌரவ பேராசிரியர் எனச் சான்றிதழ் வேறு அளிக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட பட்டமது அதை ஆரம்பப்பாடசாலை ஆசிரியர்கள் கூட இங்பே போட்டுக்கொள்கிறார்கள்.

அடுத்த எனது தேடல் இந்தப் பட்டம் பெற்றுக்கொண்டவர்கள் பக்கம் போனது, கொஞ்சம் அலசிப் பார்த்தேன் - முதலாவதாக எனது தேடலில் நான் கண்டத ஒரு இரண்டாம் நிலைப் பள்ளி ஆசிரியரை. அவர் ஒரு பட்டதாரி கூட இல்லை மாறாக பயிற்றப்பட்ட ஆசிரியர் அவர் டாக்டர்.பேராசிரியர் மற்றும் கௌரவ எனும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். அடுத்ததாக நான் கண்டது ஒரு தனியார் கல்வி நிலையத்தில் ஆங்கிலம் மற்றும் கணணி கற்பிக்கும் ஒருவரை. அவரது விளம்பரம் பத்திரிகையில் வந்திருந்தது அதில் அவரது பெயருக்கு முன்னால் கௌரவ. டாக்டர் எனப் போடப்பட்டிருந்தது, உடனே அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொஞ்சம் கடினமான ஆங்கிலத்தில் பேசிப்பார்த்தேன், தடுமாறிவிட்டார் - உடனே நான் தாங்கள் எந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றீர்கள் எனக் கேட்ட போது பதிலேதும் இல்லை தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது - பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து அலசியதில் அவர் உயர்தரம் கூட சித்தியடையவில்லை என்பது அதிர்ச்சித் தகவலாக வந்தது. அடுத்ததாக இந்த டாக்டர் பட்டத்தை அதிகமாகப் பெற்றிருப்பவர்கள் யார் தெரியுமா? பல முதலாளிகள் - குறிப்பாக பெரியளவில் பலசரக்கு, அரிசி, மீன் என வியாபாரம் செய்யும் முதலாளிகள். அதைவிட சில அரசியல்வாதிகளும் இந்த டாக்டர் பட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

இதெல்லாம் சரி - இதை நான் எழுதவும் இது தொடர்பில் தேடவும் என்னைத் தூண்டிய சம்பவம் என்ன தெரியுமா? எனக்கு நண்பர் ஒருவரின் உறவினா ஒருவரை அண்மையில் சந்தித்தேன் அவர் இங்கிலாந்தில் மனோ த்துவத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர் அதைவிட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொ்டர்பிலும் கலாநிதிப் பட்டம் பெற்றவர் - அவரோடு பலதரப்பட்ட விடயங்களைப் பேசி விவாதித்து விட்டு விரடைபெறும் வேளை அவரது தொடர்பு அட்டையை என்னிடம் தந்தார் அதில் அவரது பெயரும் அதன் பின்னால் 5-6 பட்டங்களும் இடம்பெற்றிருந்தன அதில் 2 கலாநிதிப் பட்டங்களும் உள்ளடக்கம். அதைப் பார்த்துவிட்டு நீங்கள் ஏன் டாக்டர் எனப் போட்டுக் கொள்ளவில்லை எனக் கேட்டேன் அதற்கு அவர் பிறகு எனக்கும் உங்கள் அமைச்சருக்கும் (இவ்வமைச்சரது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை) என்ன வித்தியாசம்? நான் டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளப் படிக்கவில்லை, எனது திறனை மெருகேற்றப் படித்தேன் என்றார். அவர் அன்று சொன்ன விடயம் என்னை மிகவும் உறுத்திற்று - அடடா உண்மையாப் படித்து பட்டம் பெற்றவனே இன்று அந்தப் பட்டத்தைப் போட்டுக்கொள்ள வெட்கப்படுகிற அளவுக்கு இந்த போலி (அதாவது கௌரவ) டாக்டர்கள் செய்து விட்டார்களே என எண்ணி வருத்தம் கொண்டேன் அதன் பின்பு தேடிய தகவல்கள் தாம் இவை.

“என்று தணியும் இந்த மடமையின் மோகம்?”