Sep 25, 2009

பதிவு எழுத வந்த கதை...

பதிவு எழுத வந்த கதை என்ற இந்தத் சங்கிலித் தொடர்ப் பதிவிற்கு என்னை “காலப்பெருங்களம்” புகழ் வி.விமலாதித்தன் அழைத்திருந்தார். நான் பதிவு எழுத வந்த கதை இது தான்....

தரம் 5-6 படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே (1999-2000) இணைய உலகு பற்றிய எனது சிற்றறிவை விரிவாக்க விஷப்பரீட்சைகளையெல்லாம் கணணியில் செய்து வருவேன் அந்த வகையில் அந்தக் காலம் முதலே “வெப் டிசைனிங்” இணையத்தள வடிவமைப்பில் எனக்கு ஈடுபாடு அதிகம். யாஹீவின் ஜியோசிட்டீஸில் தொடங்கிய பரீட்சார்த்த முயற்சிகள் படிப்படியாக வளர்ந்து ஃப்ரீசேவர்ஸ் தளத்தில் மைக்ரோசொஃப்ட் ஃப்ரண்டபேஜைப் பயன்படுத்தி தளம் வடிவமைத்து மேலேற்றியது எனத் தொடர்ந்தது. 2003-2004ம் ஆண்டு காலப்பகுதிகளில் எனது வேலையே இணையத்தில் இலவச ஹோஸ்டிங் மற்றும் வெப் மாஸ்டர் டூள்ஸ் தேடுதல் போன்றவைதான். இப்படியாக இணையத்தள வடிவமைப்பைச் சொந்தமாகவே கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டேன். 2004ம் ஆண்டு எனது தளவடிவமைப்புப் பற்றிய சிற்றறிவைக் கொண்டு ஹரி பொட்டர் இரசிகனான நான் ஹொக்வார்ட்ஸ் மாயாஜாலக் கல்லூரி போன்ற இணையத்தளம் ஒன்றை அமைத்தேன். அது இன்று வரை ஏஞ்ஜல் ஃபயர் ஹொஸ்ரிங் தளத்தில் தொடர்ந்திருப்பதை அண்மையில் தான் கண்டறிந்தேன் - http://www.angelfire.com/ultra2/hogwarts/.

இப்படியாக இணையத்திலே பல பரீட்சார்த்த முயற்சிகளின் படியாகவே எனது வலைப்பதிவுப் பிரவேசமும் இருந்தது. 2007ம் ஆண்டு ஜீன் மாதம் ப்ளொக்கர் தளத்தில் கணக்கொன்றை ஆரம்பித்து “புதிய காளமேகம்” என்ற தலைப்பில் சமுதாயத் தவறுகளைச் சுட்டிக்காட்டி வசைக்கவி பாடும் கவிதைப் பதிவாக எனது பதிவுலக ஆரம்பம் இருந்தது. 15ற்கும் மேற்பட்ட கவிதைகளை அதிலே எழுதியிருந்தேன். பலபேர் வலைப்பதிவில் வாசகர்களாகித்தான் பின் எழுதத் தொடங்கியிருப்பார்கள். நான் எழுதத் தொடங்கிய பின் தான் ஏனைய பதிவுகளை வாசிக்கவே தொடங்கினேன். எனது புதிய காளமேகம் தளத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்கெட்டுக்கள், அட்சென்ஸ் எனச் சேர்த்து பார்த்துப் பார்த்து எனது பரீட்சார்த்த முயற்சிகளைத் தொடர்ந்த வண்ணம் தான் இருந்தேன். அப்போதே http://nkashokbharan.blogspot.com என்ற வலைப்பதிவையும் பதிவு செய்து வைத்திருந்தேன் ஆனால் பயன்படுத்தத் தொடங்கவில்லை. http://puthiya-kalamegam.blogspot.com தான் எனது அப்போதைய பதிவிடும் வலைப்பதிவாக இருந்தது - இன்றும் அன்றிட்ட அந்தப் பதிவுகளுடன் அந்தத் தளம் தொடர்ந்து இருக்கிறது. 2008 ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர்தான் உயர்தரப் பரீட்சையெல்லாம் முடித்துவிட்டு எனது கருத்துக்களுக்குக் களமமைக்க http://nkashokbharan.blogspot.com என்ற தமிழ் வலைப்பதிவையும், http://nkashokbharan.wordpress.com என்ற ஆங்கில வலைப்பதிவையும் தொடர ஆரம்பித்தேன் - இவை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு கிடப்பில் கிடந்தவை. இப்படியாகத் தான் நான் பதிவெழுதத் தொடங்கினேன். இவற்றை விட றோயல் கல்லூரித் தமிழ் விவாதக் கழகத்தின் மின்னிதழாக “விவாதி” என்ற வலைத்தளத்தையும் ஆரம்பித்தேன். இன்னும் எனது பரீட்சார்த்த முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அடுத்த கட்டம் “ஜீம்லா”-வைப் பயன்படுத்தி செய்தியேடு ஒன்றை உருவாக்குதல்...

இந்த இடத்தில் சிலருக்கு நன்றிகளைப் பகிர வேண்டும். முதலாவதாக எனது எண்ணங்களையெல்லாம் வாசித்துப் பாராட்டும்/விமர்சிக்கும் நல்லுள்ளங்களுக்கு எனது நன்றிகள். அடுத்ததாக என்னை ஊக்குவிக்கும் எனது குடும்பத்தாருக்கும் குறிப்பாக நண்பர்களுக்கும் எனது நன்றிகள். மேலும் அவ்வப்போது எனக்கு ஏற்படும் தொழில்நுட்பச் சந்தேகங்களுக்கு விடையளித்து உதவிய திரு.நிமலப்பிரகாசன் அவர்களுக்கும் இங்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். மேலும் திரட்டிகளுக்கும் ஏனைய பெயர் குறிப்பிட மறந்த ஆனாலும் பல்வகையிலும் எனக்கு உதவியவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.