Dec 29, 2010

2010ன் எனது தெரிவுகள்!


எம்மைக் கடந்து போகிறது இன்னொரு வருடம்! 2010 தனிப்பட்ட வகையில் எனக்கு பாரிய மாற்றத்தை, ஏமாற்றத்தை தந்த வருடம் ஆனால் அதுவும் கடந்து போகிறது. இந்த வருடத்திலிருந்து எனது தெரிவுகள் -

********************************************************

வருடத்தின் சோகம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாரிய பாராளுமன்றத் தேர்தல் வெற்றிதான் என்னைப் பொருத்தவரை இந்த வருடத்தின் சோகம். இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளும், எடுத்துக்கொண்டிருக்கும் நடவடிக்கைகளும் இந்த அழகிய தேசத்தை சீரழித்துக்கொண்டிருக்கிறது என்பதில் ஐயமேயில்லை. பொருளாதார ரீதியில் அதளபாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மத்திய வங்கி வீதங்களில் வளர்ச்சியைக்காட்டலாம் ஆனால் பணவீக்கத்தின் விளைவுகளைச் சாதாரண பொதுமக்களே வெளிப்படையாக உணரும் நிலை வந்துவிட்டது. தேங்காயை இறக்குமதிசெய்யுமளவுக்கு பயிர்ச்செய்கை பின்னிலையடைந்துவிட்டது. முட்டைகளும், கோழிக்குஞ்சுகளும் இறக்குமதி செய்யவேண்டிய அளவுக்கு கால்நடை வளர்ப்பு பின்னிலையடைந்துவிட்டது. வெளிநாட்டு உறவுகளில் பாரிய விரிசல்களும், தொய்வும், தோல்வியும் ஏற்பட்டிருக்கிறது. 

மொத்தத்தில் இந்த அரசாங்கம் தேசத்தை வீழ்ச்சிப்பாதையில் இட்டுச்செல்கிறது என்பதில் ஐயமில்லை. பணவீக்கத்தினையும், உற்பத்தி வீழ்ச்சியினையும், துறைமுகம், பாதைகள் அமைத்து சரிப்படுத்திவிடலாம் என்று யாராவது நினைத்தால், அவர்களது அறியாமைக்காக நான் வருத்தப்படப் போவதில்லை. மேலும் ஐஃபா போன்ற தனியார் நிகழ்வகளுக்காக அரச பணத்தை வீணடித்தமை, அதற்கு சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்று சப்பைக்கட்டு கட்டியமை, கடைசியல் நிகழ்வு படு தோல்வியடைய ஜனாதிபதி கூட நிகழ்வில் கலந்துகொள்ளாமல் விட்டமை. இனங்களுக்கிடையில் சமரசம், ஒற்றுமை ஏற்படுத்த வேண்டிய காலகட்டத்தில் தேசிய கீதத்தின் தமிழ்ப்பதிப்பை நீக்க முயன்றமை, யாழில் மாணவர்களைக் கட்டாயப்படுத்திச் சிங்களத்தில் தேசிய கீதத்தைப் பாடச்செய்தமை என்று இந்த அரசு ஆடும் தகிடுதத்தங்கள் தேசத்தை முன்னேற்றப்பாதையிலா இட்டுச் செல்கிறது?

********************************************************

வருடத்தின் மகிழ்ச்சி



தனியார் பல்கலைக்கழகங்களை இலங்கையில் ஆரம்பிக்க உயர்கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கதும் மகிழ்ச்சிகரமானதுமாகும். உயர்தரம் சித்தியடையும் ஏறத்தாழ 200 000 பேரில் வெறும் 20 000 பேருக்கே அரச பல்கலைக்கழகங்களில் இடம் இருக்கிறது மீதியுள்ள 90 வீத மாணவர்களின் நிலை என்ன என்பது பற்றிப் பலர் சிந்திப்பதில்லை. எல்லா மாணவர்களுக்கும் இலவச உயர் கல்வியளிக்க அரசாங்கத்தால் இயலாது என்பது யதார்த்தமானது ஆகையில் தனியார் பல்கலைக்கழகங்களின் தேவை என்பது மறுக்கப்பட முடியாது. நீண்ட காலமாக இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் பலவித போராட்டங்களால் அவை தடுக்கப்பட்டது, இம்முறை இவற்றையெல்லாம் தாண்டி இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது பாராட்டுக்குரியது. கோடிக்கணக்கான பணத்தை கல்விக்காக நாம் வருடாவருடம் ஐக்கிய ராஜ்ஜியம், இந்தியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு வழங்கி வருகிறோம் ஆக இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டால் அது பொருளாதார ரீதியிலும் பண வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் என்பதுடன் அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல இயலாத பெரும்பான்மையளவு மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பையும் இலகுப்படுத்தும். இந்த விடயம் தொடர்பில் உறுதியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பாராட்டுக்குரியவர்.

********************************************************

வருடத்தின் அதிர்ச்சி



சந்தேகமேயில்லாமல் விக்கி லீக்ஸின் கேபிள்கேட்! விக்கி லீக்ஸ் தொடர்பில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு. அதைப் பதிவு செய்வதற்கான களம் இதுவல்ல ஆனால் நிச்சயமாக உலகையும், உலக நாடுகளின் அரசியலையும், அரசியல்வாதிகளையும் கேபிள் கேட் ஆட்டிய ஆட்டம் பயங்கரமானது என்பதில் ஐயமில்லை.


********************************************************

வருடத்தின் சிறந்த விளையாட்டுப் போட்டித் தருணம்


என்னைப் பொருத்த வரையில் 2010ன் சிறந்த விளையாட்டுப் போட்டித் தருணம் மார்ச் மாதத்தில் செல்ஸி காற்பந்தாட்டக் கழகம் 3 வருடங்களின் பின் பெற்ற இங்லிஷ் ப்ரீமியர் லீக் வெற்றியும், கழகத்தின் 105 வருட வரலாற்றில் பெற்ற முதல் ப்ரீமியர் லீக் மற்றும் எஃப்.ஏ.கோப்பை டபிள் வெற்றியும் ஆகும்! செல்ஸி கழக ஆதரவாளனான எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்த தருணம் இது! 


********************************************************

வருடத்தின் சோகமான விளையாட்டுப் போட்டித் தருணம்


என்னைப் பொருத்தவரை கடந்த ஆண்டின் சோகமான விளையாட்டுப் போட்டித் தருணம் காற்பந்து உலகக்கிண்ணப் போட்டியிலிருந்து இங்கிலாந்து வெளியேறிய தருணம். இங்கிலாந்து தேசிய காற்பந்தாட்ட அணியின் உலகக்கோப்பை வரலாற்றில் மிக மோசமான தோல்வியை (4-1) பலமான ஜேர்மனிக்கெதிராக அடைந்து மோசமான முறையில் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது இங்கிலாந்து அணி. உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றக்கூடிய அணிகளுள் ஒன்றாக போட்டிகள் ஆரம்பமாக முன் கணிக்கப்பட்ட அணி பரிதாபமாக வெளியேறியது ஒவ்வொரு இங்கிலாந்துக் காற்பந்தாட்ட ரசிகனுக்கும் பாரிய சோகத்தை ஏற்படுத்திய தருணமாகும்.


********************************************************

வருடத்தின் சிறந்த திரைப்படம்




என்னைப் பொருத்தவரையில் 2010ன் சிறந்த திரைப்படமாக 2 படங்களைக் குறிப்பிடுவேன். முதலாவது, விண்ணைத் தாண்டி வருவாயா?. இரண்டாவது, அங்காடித் தெரு. பொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்னை உணர்வு ரீதியாகப் பாதிப்பது மிகக் குறைவு ஆனால் இந்த இரண்டு படங்களும் என்னை உணர்வு ரீதியாக மிகப் பாதித்தது. இந்த வருடத்தில் நான் பார்த்த திரைப்படங்களுள் இந்த இரண்டு படங்களும் சிறப்பானவை. 


********************************************************

வருடத்தின் இனிய பாடல்





நிறைய பாடல்களை இந்த 2010ல் கேட்டுவிட்டேன். ஆங்கிலத்தில் புதிதாக முளைத்திருக்கும் இளம் பாடகனான ஜஸ்டின் பீபரின் பாடல்கள் என்னைக் கவர்ந்து வருகிறது இதை விட ஜி.வி.பிரகாஷ் குமாரின் பூக்கள் பூக்கும் தருணம், கதைகள் பேசும் விழியருகே, உன் பேரைச் சொல்லும் போதே ஆகிய பாடல்களும், விஜய் அண்டனியின் அவள் அப்படியொன்றும் அழகில்லை பாடலும், ஏ.ஆர்.ரஹ்மானின், ஹோசனா, மன்னிப்பாயா, அன்பில் அவன், ஆரோமலே, உசிரே போகுதே, கள்வரே கள்வரே, வீரா வீரா, இரும்பிலே ஒரு இதயம் முளைக்கிதோ, காதல் அணுக்கள், கிளிமஞ்சாரோ ஆகிய பாடல்கள் இந்த வருடத்தில் நான் கேட்டவற்றுள் எனக்குப் பிடித்தவை. இவற்றுள் இந்த வருடத்தின் இனிய பாடலாக “மன்னிப்பாயா...” பாடலைச் சொல்வேன், அந்த இசையும், ஷ்ரேயா கோஷல் மற்றும் ரஹ்மானின் குரலும் அது தரும் உணர்வும் அலாதியானது!


********************************************************

வருடத்தின் சிறந்த பத்திரிகை

சந்தேகமில்லாமல் த சண்டே லீடரைச் சொல்வேன். இலங்கையிலுள்ள ஏனைய பத்திரிகைகள் ஏறெடுத்துப் பார்க்கக்கூடப் பயப்படும் உண்மைகளை துகிலுரித்துக் காட்டுவதில் லீடர் சிறப்பாகச் செயற்படுகிறது. லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட முன் இருந்த லீடருக்கும் இப்போது இருக்கும் லீடருக்கும் தரத்தில் வேறுபாடிருந்தாலும், இலங்கையிலுள்ள பத்திரிகைகள் மத்தியில் தைரியமாகச் செயற்படும் பத்திரிகையாக லீடரைச் சொல்லலாம். பல ஊழல்களை, முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவதில் சன்டே லீடரின் பங்கு சிறப்பாக இருந்திருக்கிறது.


********************************************************

வருடத்தின் கேவலம்



ஒரு ஜனநாயக தேசத்தில், தனது பிள்ளைக்கு சுகயீனம் என்பதால் விடுப்பு எடுத்த சமுர்த்தி அதிகாரி ஒருவரை அமைச்சர் ஒருவர் மரத்தில் கட்டித் தண்டித்த கேவலம் இலங்கையில் மட்டும் தான் நடக்கும். மேர்வின் சில்வா இது ஜனநாயக தேசம் என்பதை மறந்து தன்னை மன்னராட்சியின் மந்திரி என்று நினைத்து(?!) ஒரு அரச ஊழியரை மரத்தில் கட்டி தண்டித்தானது அந்த ஊழியரின் தனிமனித உரிமையை மீறிய செயல் மட்டுமல்ல ஜனநாயகம், நீதித்துறை, சுதந்திரம் போன்றவற்றிற்கெதிரான சவாலும் கூட. இது போன்ற எத்தனை கேவலங்களை இலங்கை சந்திக்கப் போகிறதோ? இதற்குப் பிறகும் மக்கள் விவகார மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் - கொடுமை!


********************************************************

வருடத்தின் சிறந்த நாடகம்




விமல் வீரவன்சவின் ஐ.நா.வுக்கெதிரான உண்ணாவிரதமும், விமலின் மகள் தந்தை வீட்டுக்கு வராவிட்டால் சாப்பிடமாட்டேன் என்று அடம்பிடித்ததால் ஜனாதிபதி விமலை நேரில் உண்ணாவிரதம் இடம்பெற்ற ஸ்தலத்திற்குச் சென்று நீர் அருந்தச் செய்து உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்தது தான் இந்த ஆண்டின் மிகச் சிறந்த (கேவலமான) நாடகம்! இவ்வளவற்றுக்கும் விமல் சேலைன் ஏற்றியபடி தான் உண்ணாவிரதமிருந்தார். நான் விடுதலைப் புலிகளையோ ஆயுதப் போராட்டத்தையோ என்றும் ஆதரித்ததில்லை ஆனால் விமல் போன்றவர்களெல்லாம் உண்ணாவிரதம் என்றால் என்ன என்பதை திலீபனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆயுதம் ஏந்திப் போராடுவதை விட உண்ணாவிரதமிருந்து போராடத் தான் அதிக மனஉறுதியும், பலமும் தேவை, விமலின் சேலைன் ஏற்றிய உண்ணாவிரதமெல்லாம் படிப்பறிவில்லாத மக்களை ஏமாற்றும் செயலே தவிர வேறொன்றுமில்லை.


********************************************************

வருடத்தின் சிறந்த மனிதன்



சி.என்.என். இன் வருடத்தின் முதற் பத்து ஹீரோக்களுள் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்ட நாராயணன் கிருஷ்ணன் தான் என்னைப் பொருத்தவரை இந்த ஆண்டின் சிறந்த மனிதன். மனநிலைகுன்றியவர்களுக்கும், வீடில்லாதவர்களுக்கும் கிருஷ்ணன் செய்யும் உதவி அளப்பரியது. தினமும் அவர்களுக்கு அன்னமிட்டு, அவர்களைச் சுத்தம் செய்து அவர்களை வாழவைக்கும் புனித செயலை கிருஷ்ணனும் அவரது நண்பர்களும் செய்கிறார்கள். கிருஷ்ணனுக்கும் அவரது குழுவுக்கும் தலைவணங்குகிறேன்!

********************************************************

Dec 11, 2010

நீக்கப்படவிருக்கும் இலங்கையின் தமிழ்த்தேசிய கீதமும், அமைச்சரவையின் அப்பட்டமான பொய்களும்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள தேசிய கீதத்தின் தமிழ்ப் பதிப்பை நீக்குவதற்கு அமைச்சரவை முடிவெடுத்திருப்பதாக Sunday Times செய்தி வெளியிட்டிருக்கிறது. 


மேற்படி செய்தியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேறு ஒரு தேசத்திலும் 2 மொழிகளில் தேசிய கீதம் இல்லை என்று அமைச்சரவையில் தெரிவித்ததாகவும், அதனை ஆதரித்த விமல் வீரவன்ச, 300ற்கும் மேற்பட்ட மொழிகளுடைய இந்தியாவில் கூட ஹிந்தியில்தான் தேசிய கீதம் இருப்பதாகக் கூறியதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது. அமைச்சரவையில் வாசுதேவ நாணயக்கார, றாஜித சேனாரத்ன ஆகிய அமைச்சர்கள் இருவர் மட்டுமே தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை நீக்கும் முன்மொழிவுக்கு மறுப்பாகக் கருத்துத் தெரிவித்ததாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது.

இந்தப் பதிவை நான் எழுதக்காரணம் அமைச்சரவையின் முடிவைக்கண்டிப்பதற்கு மட்டுமல்ல மாறாக, பொய்யான கருத்துக்களைக்கூறி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், விமல் வீரசின்ஹவும் மக்களை ஏமாற்ற விளைந்ததைச் சுட்டிக்காட்டவுமேயாகும்.

முதலாவதாக ஜனாதிபதி, உலகில் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் வேறு தேசமெதிலும் இல்லை என்று கூறிய கருத்து, அப்பட்டமான பொய். கனடாவின் தேசிய கீதம் 3 மொழிகளில் காணப்படுகிறது. ஆங்கிலம், ஃபிரெஞ்ச் மற்றும் இனுக்டிடுட் ஆகிய மொழிகளில் கனேடிய தேசிய கீதம் பாடப்படுகிறது. சுவிற்சலாந்துத் தேசிய கீதம் சுவிற்சலாந்தின் நான்கு உத்தியோகபூர்வமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜேர்மன் மொழியில் முதலில் எழுதப்பட்டிருந்தாலும், சுவிஸ்ஸின் ஏனைய உத்தியோகபூர்வ மொழிகளான ஃபிரெஞ்ச், இத்தாலியன் மற்றும் றொமான்ஷ் ஆகிய மொழிகளில் சுவிஸ் தேசிய கீதம் மொழிபெயர்க்கப்பட்டு பாடப்படுகிறது. இதை விட தென்னாபிரிக்க தேசிய கீதத்தில் ஒரே கீதமாக இருப்பினும் அது தென்னாபிரிக்காவில் பேசப்படும் 5 மொழிகளை கொண்டு எழுதப்பட்டுள்ளது. தென்னாபரிக்கத் தேசிய கீதம் ஸோசா (முதற் பந்தியின் முதலிரு வரிகள்), செசோதோ (முதற்பந்தியின் கடைசி இரண்டு வரிகள்), சுலு(இரண்டாம் பந்தி), அஃப்ரிகான்ஸ் (மூன்றாம் பந்தி) மற்றும் ஆங்கிலம் (நான்காம் பந்தி) ஆகிய ஐந்து மொழிகள் சேர்த்து எழுதப்பட்டது.

அடுத்ததாக விமல் வீரவன்ச சொன்ன கருத்து - “இந்தியத் தேசிய கீதம் ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது” - அடுத்த அப்பட்டமான பொய், இதை இவர் சொன்னதற்குக் காரணம், இந்தியாவில் பெரும்பான்மையானோரின் மொழி ஹிந்தி, ஆகவே பெரும்பான்மையானோரின் மொழியிலேயே தேசியகீதம் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட இந்தியாவின் தேசிய கீதம் ஹிந்தியில் தான் இருக்கிறது என்ற அப்பட்டமான பொய்யைச் சொல்லியிருக்கிறார். இந்தியத் தேசிய கீதம் பெங்காலியில் (சமஸ்கிருதப்படுத்தப்பட்ட பெங்காலி) நோபெல் பரிசு பெற்ற கவிஞர் ரபீந்திரநாத் தாகூரினால் எழுதப்பட்டது. ஆக பெரும்பான்மை இந்தியர் பேசும் மொழியில் அல்ல இந்தியாவின் தேசிய கீதம் பாடப்படுகிறது. இவ்வளவு ஏன், சீனர்கள் பெரும்பான்மையாகவுள்ள சிங்கப்பூர் தேசிய கீதம் மலேயிலேயே எழுதப்பட்டது, அதற்கு சீன, தமிழ் மற்றும் ஆங்கில உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்புக்கள் உண்டு எனினும் அது மலேயிலேயே பாடப்படுகிறது. ஆகவே பெரும்பான்மையோரின் மொழியிலேயே தேசிய கீதம் அமையவேண்டும் என்ற அவசியம் இல்லை.

அமைச்சர்களாக இருப்பவர்கள் மக்களை முட்டாள்கள் என்று நினைத்தக்கொண்டிருக்கக்கூடாது. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்ற நம்ப நாங்கள் படிப்பறிவில்லாதவர்கள் அல்ல.

இலங்கைத் தேசிய கீதத்தின் தமிழ்ப்பதிப்பை நீக்கியதன் மூலம், அரசாங்கம் தனது தமிழின விரோத நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிக்காட்டியுள்ளது. யுத்தத்தின் பின்னரான மீளிணக்கப்பாட்டுச் செயற்பாடுகளில் இது பாரிய பின்னடைவாகும், அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கிச் செயற்படச்சம்மதித்து ஒரு நாள் கூட ஆகமுன் இத்தகைய முடிவானது தமிழ் மக்களை அதிருப்திக்குள்ளாக்கும் என்பதை அரசாங்கம் மறந்துவிட்டது போலும்.

இனவாத அரசியலை இலங்கைத் தலைவர்கள் கைவிடும் வரை இலங்கையின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.

"Racism is man's gravest threat to man - the maximum of hatred for a minimum of reason."  ~Abraham Joshua Heschel

**************************************************************************

அமைச்சரவை நீக்குவதற்கு முடிவெடுத்த இலங்கைத் தேசிய கீததத்தின் தமிழ்ப்பதிப்பு (இனி சுவடியாகப் பாதுகாக்கப்படவேண்டியதுதானா?!)

ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்காநமோ நமோ நமோ நமோ தாயே

நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே



Dec 5, 2010

யுத்தக் குற்றம் என்றால் என்ன?





அண்மைக்காலங்களாக தமிழர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் சொற்களில் /  விடயங்களில் ஒன்று யுத்தக் குற்றம் (war crime). இது யுத்தக் குற்றம் என்றால் என்ன என்பது பற்றிய ஒரு சுருக்கமான பார்வை.


யுத்தக் குற்றம் என்பதை சுருக்கமாக பின்வருமாறு வரையறுக்கலாம் :

யுத்தக் குற்றம் என்பது யுத்தவிதிகளை மீறும் தனிநபர்கள், ராணுவம், சிவிலியன்கள் என்பவருக்குரிய சர்வதேசச் சட்டங்களின் கீழான தண்டனைக்குரிய குற்றமாகும்.

யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு 20ம் நூற்றாண்டிலேயே தொடங்கியது அதிலும் குறிப்பாக 2ம் உலக யுத்தத்தின் பின்னரே யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு வலுப்பெறத்தொடங்கியது எனலாம். 2ம் உலப் போரின் போது நாட்ஸிப் படைகள் யூதர்களை (பொதுமக்களை) கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தது (இன அழிப்பு), ஜப்பானியப் படைகள் சிவிலியன்களையும், அரசியற்கைதிகளையும் இழிவான விதத்தில் நடத்தின, கொன்று குவித்தன. 2ம் உலக யுத்தம் நேசநாடுகளால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் நேச நாடுகள் மேற்கூறிய யுத்தக் குற்றங்களை இழைத்ததாக நம்பப்படும் ஜேர்மனியப் படைத்தளபதிகளையும், ஜப்பானியப் படைத்தளபதிகளையும் கைது செய்து, சட்டப்படி மரண தண்டனை நிறைவேற்றின. 1945 மற்றும் 1946ல் இடம்பெற்ற “நுரெம்பேர்க் விசாரணைகளின்” பின்னர் 12 நாட்ஸித் தளபதிகளுக்கு யுத்தக் குற்றம் இழைத்தமைக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதே போன்று 1948 ஜப்பானின் டோக்கியோவில் யுத்தக் குற்றம் இழைத்த 7 தளபதிகளுக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது (நேச நாடுகள் ஜப்பானின் சக்கரவர்த்தி ஹிரோஹிட்டோவுக்கெதிராக எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை). இவை தான் யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு வலுப்பெற்றதற்கான முன்னோடிகளாகும்.

இதை விட தனியாக அரசாங்கங்களும் யுத்தக்குற்றம் இழைத்தவர்களைத் தண்டித்திருக்கிறது. உதாரணமாக 1960ல் ஆர்ஜன்ரீனாவில் வைத்து இஸ்ரேலிய முகவர்களால் பிடிக்கப்பட்டு இஸ்ரேலுக்குக் கடத்தப்பட்டு அங்கு சட்டப்படி மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ஜெர்மனிய நாட்ஸிப் படையைச் சேர்ந்த, “த ஹொலொகோஸ்ட்” (பேரழிவு) இல் பங்குபற்றி ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்த அடல்ஃப் எய்ஷ்மன்-ஐக் குறிப்பிடலாம். இதே போல 1987ல் க்ளோஸ் பார்பி என்ற நாட்ஸிப் படை முக்கியஸ்தர் பொலிவியாவில் கைது செய்யப்பட்டு ஃபிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டு அங்கு யுத்தக் குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கருவானது, குறித்த தேசம் அல்லது அதன் .இராணுவ வீரர்கள் இழைத்த குற்றங்களுக்கு (யுத்த விதி/தர்ம மீறல்களுக்கு) தனி நபர் ஒருவரைப் பொறுப்பாளியாக்க முடியும் என்கிறது. அதாவது இராணுவ வீரர்கள் இழைத்த குற்றத்திற்கு அவர்களுக்கு மேலான தளபதிகள், தலைமைத் தளபதிகளைப் பொறுப்பாக்க முடியும்.

இன அழிப்பு, சிவிலியன்களை இழிவான / முறையற்ற விதத்தில் நடத்துதல், போர்க்கைதிகளை முறையற்ற விதத்தில் நடத்துதல் போன்றன் குறிப்பிடத்தக்க யுத்தக் குற்றங்களாகும். அதிலும் இன அழிப்பு என்பது பாரிய யுத்தக் குற்றமாகக் கருதப்படுகிறது.

யுத்தக் குற்றங்களை வரையறுக்கும் சட்ட அதிகாரங்களாக ஜெனீவா மரபுகள் (Geneva Conventions) மற்றும் பழமையான யுத்த தர்மச் சட்டங்களும் காணப்படுகிறது. 4வது ஜெனீவா மரபின் 147வது சரத்து பின்வருமாறு யுத்தக்குற்றத்தை வரையறுக்கிறது :

"Wilful killing, torture or inhuman treatment, including... wilfully causing great suffering or serious injury to body or health, unlawful deportation or transfer or unlawful confinement of a protected person, compelling a protected person to serve in the forces of a hostile power, or wilfully depriving a protected person of the rights of fair and regular trial, ...taking of hostages and extensive destruction and appropriation of property, not justified by military necessity and carried out unlawfully and wantonly." 

அதாவது மனவுறுதியுடன் உடல்ரீதியான அல்லது ஆரோக்கிய ரீதியான தீவிரமான காயங்களை அல்லது துன்பங்களை விளைத்தல், சட்டத்திற்குப் புறம்பான வலுக்கட்டாயமான நாடுகடத்தல் (இடம் பெயர்த்தல்) அல்லது சட்டத்துக்கெதிரான வகையில் நபரொருவரை தடுத்துவைத்தல் அல்லது சிறைப்படுத்தல், நபரொருவரை வலுக்கட்டாயமாக எதிர்ப்புணர்வுமிக்க படைகளில் சேவையாற்றச் செய்தல், மனவுறுதியுடன் நபரொருவரது நியாயமான விசாரணைக்கான உரிமையை இல்லாது செய்தல், பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்திருத்தல், பாரிய அழிப்புக்கள் மற்றும் சொத்துக்களை சட்டவிரோதகமாக அபகரித்தல் உள்ளிட்ட சட்டவிரோதமானதும், நியாயமான இராணுவத் தேவை என நிரூபிக்கமுடியாததுமான கொலை, சித்திரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற நடத்துமுறைகள் யுத்தக்குற்றமாகும் என்று 4வது ஜெனீவா மரபின் 147வது சரத்துக் கூறுகிறது.

இதைத் தாண்டியும் யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு கூர்ப்படைந்து வருகிறது. யுகோஸ்லாவியா தொடர்பான சர்வதேச ஹேக் ட்ரபியுனல் யுத்தக்குற்றங்களை வரையறுப்பதில் முக்கியம் பெறுகிறது. ஆயுதப் போராட்டங்களின் போது மக்களுக்கு (சிவிலியன்களுக்கு) எதிராக நடத்தப்படும் சட்டவிரோதமான கொலை, குழுரீதியான அழிப்பு, அடிமைப்படுத்தல், வலுக்கட்டாயமான நாடுகடத்தல், இடப்பெயர்த்தல், கைதுகள், சித்திரவதை, கற்பழிப்பு, இன, மத, அரசியல் காரணங்களுக்கான கொலைகள் என்பன பிரதான யுத்தக்குற்றங்கள் என்கிறது. இங்கும் பிரதான குற்றமான இன அழிப்பு கருதப்படுகிறது.

2002ல் உரோம சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றச் சட்டம் என்ற சர்வதேச ஒப்பந்தத்தின் படி சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ஹேக் ட்ரிபியுனல்) அதன் அங்கத்தவ நாடுகளின் யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. ஒப்டோபர் 2010 வரை 114 நாடுகள் இதில் இணைந்துள்ளன. 114வதாக இணைந்த நாடு மோல்டோவா. அமெரிக்காவும், ரஷ்யாவும் உரோம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள போதும் அதை நிறைவேற்றவில்லை. அமெரிக்கா இன்னும் பார்வையாராகவே கலந்து கொள்கிறது. சீனாவும், இந்தியாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இலங்கையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் தொடர்பிலேயே சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகள் மேற்கொள்ள முடியும் ஆனால் ஐ.நா. உறுப்பு நாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபை பரிந்துரைக்கும் சந்தர்ப்பத்திலும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணை நடத்தும் நீதியதிகாரமுண்டு.

பேரிழிவிற்குரிய யுத்தமானாலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியம் பெறுகிறது இந்த யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு, ஆனால் மனித உரிமைகள், ஜனநாயம் பற்றிய விழிப்புணர்வு, அறிவு இல்லாதவர்களுக்கு யுத்தக் குற்றத்தின் தார்ப்பரியத்தை புரிய வைப்பது இயலாது.

**********************************************************************
இந்தக் கட்டுரை 12-12-2010 ஞாயிறு தினக்குரலில் 11ம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. (நன்றி - யாழ்தேவி மற்றும் தினக்குரல்)

Nov 29, 2010

றோயல் - தோமியத் தமிழ் விவாதச் சமர் - ஒரு பார்வை

‘எந்தையர் எம்முன் தம்வழியைக் கற்ற கல்லூரி! 
ஏட்டையும் கற்று, மானுடரையும் கற்றனரே – 
அவர்வழியே நாமும் அதைனையே செய்திடுவோம்!’


175 வருடங்கள் நிறைவு செய்யும் றோயல் கல்லூரியின் பாரம்பரிய வைரிகள் கல்கிசைப் பரி தோமாவின் கல்லூரியாகும். அந்தப் பாரம்பரியத்தில் றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணியைப் பொருத்த வரையில் எங்களது பாரம்பரிய வைரிகள் பரி தோமாவின் கல்லூரி அணிதான். நூறாண்டுகள் கடந்த றோயல்-தோமியப் பாரம்பரியம் இங்கும் தமிழ் விவாதத்திலும் தொடர்கிவது வேத்தியர்களும், தோமியர்களும், தமிழர்களும் பெருமைப்ப்பட வேண்டியவிடயம். கடந்த 16 வருடங்களாக தொடர்ந்து றோயல் தோமிய தமிழ் விவாதச் சமர் வருடாவருடம் நடைபெற்று வருகிறது. 1994ம் ஆண்டு றோயல் கல்லூரி விவாத அணித் தலைவனாக நிலக்‘ன் சுவர்ணராஜா அவர்கள் இருந்த போது முதன்முறையாக றோயல்-தோமிய விவாதம் ஆரம்பிக்கப்பட்டது. 56 ஆண்டுகால பாரம்பரியமுடைய றோயல் கல்லூரி தமிழ் விவாத அணியின் மறுமலர்ச்சி இந்தக் காலகட்டத்தில் தான் துளிர்விடத் தொடங்கி அதன் பின் இலங்கையில் தலைசிறந்த விவாத அணிகளுள் ஒன்றாக வேத்திய அணி உயரக் காரணமானது.



றோயல் தோமியத் தமிழ் விவாதப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்குக் குலசேகரம் ஞாபகார்த்தக் கேடயம் வழங்கப்படுகிறது, இது றோயல் கல்லூரியின் முன்னாள் உப அதிபரும், பதில் அதிபருமான திரு.எம்.எம்.குலசேகரம் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகிறது. திரு.எம்.எம்.குலசேகரம் அவர்கள் 1922ம் ஆண்டு றோயல் கல்லூரியில் கணித மற்றும் பௌதீகவியல் ஆசிரியராக இணைந்தார். 1946ம் ஆண்டு றோயல் கல்லூரியின் உப-அதிபராக நியமிக்கப்பட்டார். 1953ம் ஆண்டு பதில் அதிபராகக் கடமையேற்று 1954ம் ஆண்டு ஓய்வுபெறும் வரை மிகச் சிறப்பான கடமையாற்றினார். றோயல் கல்லூரியின் விளையாட்டுத்துறைக்கு குறிப்பாக றக்பி விளையாட்டுத் துறைக்கு பெரும் பணி ஆற்றிய ஆசான் அவர். அவரது நினைவாக றோயல்-தோமிய தமிழ் விவாதக் கேடயம் வழங்கப்படுகிறது. அத்துடன் றோயல் தோமிய விவாதப் போட்டியில் வருடாவருடம் சிறப்பாக வாதிக்கும் வாதி ஒருவருக்கு அல்லது இருவருக்கு ‘சிறந்த விவாதிக்கான விருதும்’ வழங்கப்பட்டு வருகிறது.
எந்தவொரு வேத்தியனுக்கும், தோமியனுக்கும் இந்தப் போட்டியில் பங்கெடுப்பது என்பது மிகவும் மதிப்பான, பெருமையான ஒரு விடயம். காரணம் மிகப்பழமையான றோயல்-தோமிய பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது சாதாரணமான ஒரு விடயமல்ல. தேசியளவிலான விவாதப் போட்டிகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விட றோயல்-தோமிய விவாதத்திற்கு இரு பாடசாலைகளிலும் சிறப்பான இடம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

  நான் 3 முறை இப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றியும் பெற்றிருக்கிறேன். அதில் 2 முறை அணியின் தலைவனாக வெற்றிபெற்ற மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. றோயல்-தோமிய விவாதங்களில் கடைசியாக பரி. தோமாவின் கல்லூரி அணி வெற்றி பெற்றது 2002ம் ஆண்டில் அதன் பின் தொடர்ந்து 7 வருடங்கள் எமது அணியே வெற்றிபெற்று வருகிறது. தொடர் ஆரம்பிக்கப்பட்ட முதல் இரண்டு வருடங்கள் உட்பட ஆரம்பகாலங்களில் பரி தோமாவின் கல்லூரி வெற்றிபெற்றிருந்தாலும் கடந்த சில வருடங்களாக பரி தோமாவின் கல்லூரி அணி சிறப்பான நிலைமையில் இல்லை என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் கடைசியாக நடைபெற்ற 16வது றோயல்-தோமிய தமிழ் விவாதச்சமாரில் தோமிய அணி கடுமையான சவால் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது, கிட்டத்தட்ட 5 வருடங்களின் பின் மிகச்சிறப்பான தோமிய அணியாக அது காணப்பட்டது, ஆக வருங்காலங்களில் தோமிய அணி இன்னும் வலுவானதாக வரும் என்று எதிர்பார்க்கலாம். இதை விசேடகமாகக் குறிப்பிடுவதற்குப் பிரதான காரணம் கடந்த 7 வருடங்களில் தொடர்ந்து றோயல் கல்லூரி வெற்றிபெற்ற போது அநேகமான வெற்றிகள் 5-0 என்ற பெரும் வெற்றிகளாகவே இருந்தன ஆனால் கடந்த வருடம் இடம்பெற்ற 16வது தொடரில் றோயல் கல்லூரி 3-2 என்றளவிலேயே வெற்றி பெற்றது, தோமிய அணி மிகச் சவாலாக வாதிட்டது என்பதை மறுக்கமுடியாது, முதல் சில வருடங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தோமிய விவாத அணி தற்போது பலமடைந்திருப்பதை அனைவராலும் காணக்கூடியதாக இருக்கிறது ஆகவே மீண்டும் மிகச் சவாலான தொடராக இது உருப் பெற்று வருகிறது என்பதையும் இதன் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

றோயல் தோமிய விவாதத் தொடரின் சிறப்புக்கள் பலவுள. தமிழ் மொழியில் தொடர்ந்து ஒன்றரைத் தசாப்தத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் ஒரே தமிழ் விவாதத் தொடராக றோயல் தோமிய தமிழ் விவாதச்சமரே காணப்படுகிறது. மேலும் மிகச் சவாலான தலைப்புக்கள் அலசப்படும் விவாதப் போட்டியாகவும் இதுவே காணப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் முதல் அரசியலில் மதங்களின் தலையீடு, 13வது அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் எனச் சாதாரணமாக பாடசாலை மட்டத்தில் விவாதிக்கத் தயங்கும் தலைப்புக்கள் தான் றோயல் தோமிய விவாதப் போட்டிகளில் வாதிக்கப்படுகிறது. சமூகம், அரசியல் சார்ந்த மாணவர்களின் விழிப்புணர்வு, சிந்திக்கும், ஆராயும் தன்மைகள் என்பவற்றைப் பெரிதும் ஊக்கப்படுத்துவதாக றோயல்-தோமிய விவாதங்கள் அமைகிறது என்பதிலும் ஐயமில்லை. அதிலும் குறிப்பாக கடந்த வருடம் நடத்தப்பட்ட 13வது அரசியலமைப்புத் சீர்திருத்தம் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாகும் - தீர்வாகாது என்ற தலைப்பிலான விவாதம் பல தரப்பிலும் வரவேற்பைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. அன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல சட்டத்தரணியும், முன்னாள் றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணித் தலைவருமான திரு.எம்.சுமந்திரன் அவர்கள் இந்தத் தலைப்பினை எடுத்து வாதிட்டதற்காகவே இரு அணிகளுக்கும் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்திருந்தார். நடுவர் குழாமிலிடம்பெற்றிருந்த கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீடப் பீடாதிபதி கலாநிதி.கீதபொன்கலனும் இந்தத் தலைப்பை ஆழமாக அலசியதற்காக இரண்டு அணிகளையும் பாராட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆக ஒரு சாதாரண விவாதப் போட்டி என்றில்லாமால், வெற்றி தோல்விகளுக்கப்பால், றோயல்-தோமிய விவாதம் ஒவ்வொராண்டும் ஏதோ ஒரு செய்தியை விவாதத்தினூடாக இந்தச் சமூகத்திற்குச் சொல்கிறது. அமெரிக்காவின் முக்கிய சிவில் செயற்றிட்டவாதியான ஜெசி ஜக்ஸன் கூறிய கருத்திலொன்று இங்கு குறிப்பிடத்தக்கது. ‘கலந்துரையாடலும் விவாதமுமே, ஜனநாயகத்தின் ஆன்மாவைத் தூண்டிவிடுவதற்கான வழிகளாகும்’ என்கிறார் அவர். – கற்பிற்; சிறந்தவள் கண்ணகியா? சீதையா?, பாசத்தில் சிறந்தவர்கள் இராம லக்குமணரா? பஞ்சபாண்டவரா? என்ற வழமையான, அடையாளமான தமிழ் விவாதப் பாரம்பரியத்தை மாற்றியதும் றோயல் தோமிய விவாதத்தின் பெருமை. இதன் மூலம் இலக்கிய வாதங்களைப் புறக்கணிப்பதாக அர்த்தமில்லை, ஆனால் அவற்றைத்தாண்டி சமூகம், அரசியல், கொள்கைகள் என்ற பரந்துவிரிந்த பயன் நிறைந்த வாதத்தைச் செய்வதே றோயல் தோமிய பாரம்பரியத்தின் அடையாளமாகிறது. இதுவரை பரி தோமாவின் கல்லூரி 5 முறையும், றோயல் கல்லூரி 9 முறையும் குலசேகரம் நினைவுக் கேடயத்தை சுவீகரித்திருக்கிறது. றோயல் தோமியப் பாரம்பரியமும், தமிழின் பெருமையும் சங்கமிக்கும் இத்தொடர் இன்னும் சிறப்பாகத் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதே பழைய மாணவராகிய எம் அனைவரதும் அவாவாகும்.

‘எனது வாழ்க்கையில் என்றுமே என்னுடைய கருத்துடன் உடன்பட்டவர்களிடமிருந்து நான் எதையுமே கற்றுக்கொண்டதேயில்லை’ – டட்லி ஃபீலட் மலோன் (அமெரிக்க சட்ட வல்லுனர்).

ஆரோக்கியமான விவாதங்கள் எமது அறிவுக் கண்களைத் திறக்கின்றன, ஃபெரஞ்ச்சுத் தார்மீகவாதியான ஜோசஃப் ஜோபேர்ட் சொல்கிறார், ‘ஒரு வினாவினை விவாதித்துப் பின் முடிவுகாணாது விடுவது என்பது, அவ்வினாவினை வாதிக்காமலேயே முடிவு ஒன்றை எடுப்பதை விடச் சிறந்தது’ என்கிறார். ஆகவே மாணவர்களின் திறனுக்கும், அறிவுக்கும் மட்டுமல்ல சமூகத்திற்கும் பயனளிக்கும் வேத்திய-தோமிய தமிழ் விவாதப் பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

‘அது மலரட்டுமாக!’ [Floreat] ‘அது என்றும் நிலைத்திருக்கட்டுமாக’ [Esto Perpetua]


**************************************************************************
இந்தக் கட்டுரை றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றத்தின் “தமிழ்நயம் 2010” இதழில் இடம்பெற்றது.

படங்கள் - நன்றி திரு.நிமலபிரகாசன் (www.nimal.info)

Jul 5, 2010

ஒரு அருமையான இசை அனுபவம்!

இசை காதுகளினூடு பயணித்து இந்த உடலையும், மனத்தையும் தன்வசப்படுத்திய ஒரு இனிய அனுபவம் இது. 

பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்! என்னை மயக்கும் இசை அவருடையது. அண்மையில் அவர் இசையில் வந்த ஒரு பாடலை, வித்தியாசமான முறையில் அனுபவிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது, அந்த அனுபவம் அமைதியையும், மனத்திற்குப் புத்துணர்ச்சியையும் தருவதாக இருந்தது. இசை மூலம் ஒரு தவம் என்றும் இதைச் சொல்லலாம், அந்த சில நிமிடங்கள், அந்த மயக்கும் இசையில் மூழ்கி எழுகையில் மனம் தெளிவுபெறும் விந்தையை நான் உணர்ந்தேன்.

ஒரு மாலைப்பொழுது - இல்லை - அந்தி சாய்ந்து இருள் கவ்வத்தொடங்கும் வேளை.... அமைதியான தனி அறை... குறைவான வெளிச்சத்தில், குளிர்மையான தென்றல் யன்னலூடு பயணித்து உடலை வருடிச்செல்லும் பொழுது... எனது “சோனி - வோக்மன் எம்பி3 ப்ளெயரில்” முழுமையான சப்தத்தில் ஒலிக்கிறது அந்தப் பாடல்.... கண்ணை மூடி, ஒரு தவம் போல என்னை மறக்கிறேன்.... காற்றில் பறப்பது போல ஒரு அனுபவம்.... இதுதான் முதல்முறை!

அந்தப் பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜோதா-அக்பர் திரைப்படத்தில் இடம்பெற்ற “க்வாஜா எந்தன் க்வாஜா” என்ற பாடல். அந்த அனுபவத்திற்குப் பிறகு அந்தப் பாடலின் இசை பற்றித் தேடியறிந்தேன். அந்தப் பாடல் சூஃபி இசை வடிவத்தினடிப்படையில் உருவானது, படத்தில் பாடல் இடம்பெறும் சந்தர்ப்பமும் அதையொத்ததுதான். நான் கேட்ட முதலாவது சூஃபி இசைப் பாடலும் இதுதான் என்று நினைக்கிறேன்... இந்தப் பாடலை இதற்கு முதல் பலமுறை கேட்டிருக்கின்றேன், என்னைக் கவர்ந்தும் இருக்கிறது, ஆனால் தனியாக, அமைதியான நிலையில், கண்ணைமூடி இரசிக்கும் போது மெய்சிலிர்க்கும் அனுபவத்தை இது தந்தது! 


இதை நீங்களும் அமைதியான சூழலில் நீங்களும் கேட்டுப்பாருங்கள், உங்கள் அனுபவத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். வரிகள் உங்கள் கவனத்தைச் சிதைக்கிறது என உணர்ந்தால், இதே பாடலின் ஹிந்திப் பதிப்பைக் கேளுங்கள்! வரிகளை விட, இங்கு இசையின் அனுபவம் தான் இனிமையானது!



Jun 29, 2010

சொற்சமர்க் கால ஞாபகங்கள்! - (03) எதிரிகளும், வைரிகளும்...

இது ஒரு தொடர்ப்பதிவு
இதன் முன்னை அங்கத்தைப் படிக்க : சொற்சமர்க் கால ஞாபகங்கள்! - (02) கூர் தீட்டப்படுகிறோம்...


சமர் என்று வந்துவிட்டால் எதிரிகள் இல்லாமல் முடியுமா? சொற்சமரான விவாதத்தைப் பொருத்த வரையில் எதிரணிகள் தான் எங்கள் எதிரிகள். ஆம் விவாதம் தொடங்கி முடியும் வரை அந்த உணர்வோடுதான் வாதிடுவோம், வெற்றிக்கனி பறிக்கும் வரை அந்தச்சூடு உடலில் தணியாது. விவாதத்திற்கு முன்னும், பின்னும் நண்பர்களாக இருப்போம், விவாதச் சமரின் போது எங்கள் எதிரிகளாகவே பாவிப்போம், காரணம் அப்போதுதான் அந்த உணர்வு விவாதத்திற்கு இன்னும் உயிரூட்டுவதாக இருக்கும். 

எதிரிகள் என்றால் அதில் நிறைய வகையுண்டு. றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணியைப் பொருத்த வரையில் எங்களது பாரம்பரிய வைரிகள் பரி தோமாவின் கல்லூரி அணிதான். றோயல்-தோமிய பாரம்பரியம் இங்கும் தொடர்கிறது. கடந்த 16வருடங்களாக தொடர்ந்த றோயல் தோமிய தமிழ் விவாதச் சமர் வருடாவருடம் நடைபெற்று வருகிறது, எந்தவொரு வேத்தியனுக்கும் இந்தப் போட்டியில் பங்கெடுப்பது என்பது மிகவும் மதிப்பான, பெருமையான ஒரு விடயம், நான் 3 முறை இப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றியும் பெற்றிருக்கிறேன். அதில் 2 முறை அணியின் தலைவனாக வெற்றிபெற்ற மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. றோயல்-தோமிய விவாதங்களில் கடைசியான பரி தோமாவின் கல்லூரி அணி வெற்றி பெற்றது 2002ம் ஆண்டில் அதன் பின் தொடர்ந்து 7 வருடங்கள் எமது அணியே வெற்றிபெற்று வருகிறது. பரி தோமாவின் கல்லூரி அணி கடந்த சில வருடங்களாக சிறப்பான நிலைமையில் இல்லை என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும் ஆனால் கடைசியாக நடைபெற்ற 16வது றோயல்-தோமிய தமிழ் விவாதச்சமாரில் தோமிய அணி கடுமையான சவால் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது, கிட்டத்தட்ட 5 வருடங்களின் பின் மிகச்சிறப்பான தோமிய அணியாக அது காணப்பட்டது, ஆக வருங்காலங்களில் தோமிய அணி இன்னும் வலுவானதாக வரும் என்று எதிர்பார்க்கலாம். றோயல்-தோமிய பாரம்பரிய தமிழ் விவாதச் சமர் பற்றி மேலுமறிய இங்கே சொடுக்கவும்.

றோயல்-தோமிய விவாதத்திற்கு அடுத்தபடியாக நாங்கள் சவாலான போட்டியாகக் கருதுவது றோயல்-பம்பலப்பிட்டி இந்து விவாதப் போட்டிகளைத்தான். றோயல்-தோமிய பாரம்பரியம் போல ஏதுமில்லாவிட்டாலும், தமிழ் விவாதத்தைப் பொருத்தவரை பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி எங்களுக்குச் சவாலான ஒரு அணிதான். அண்மைக்கால (கடந்த 5 வருடங்கள்) தமிழ் விவாதப் போட்டிகளின் முடிவுகளை பார்த்தீர்களேயானால் பெரும்பான்மையான விவாதச் சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் றோயல்-பம்பலப்பிட்டி இந்து போட்டிகளாகவே அமைந்திருக்கிறது. சில வருடங்களில் நாமும், சில வருடங்களில் அவர்களும் வென்றிருக்கிறார்கள். பருவகாலத்திற்கும், அணிகளின் நிலைக்கும் ஏற்ப இது மாறுபடும். நாங்கள் முக்கியமாக மோதும் போட்டிகளில் முதன்மையானது கல்வி அமைச்சு நடத்தும் தமிழ்த்தினப்போட்டிகள் 2006ம் ஆண்டு றோயல் கல்லூரி அணி முதலாம் சுற்றுடன் வெளியேறிவிட, வலைய மட்டத்தில் பம்பலப்பிட்டி இந்து வெற்றிபெற்றது. 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் தொடர்ந்து இரு முறையும் றோயல் கல்லூரியே வலையமட்டத்தில் வெற்றிபெற்று பின்னர் அகில இலங்கை மட்டம் வரை சென்றது, இதில் 2008ல் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது, அந்த இரண்டு ஆண்டுகளும் அணியைத் தலைமைதாங்கியவன் என்ற விதத்தில் எனக்கு மகிழ்ச்சியான தருணங்கள் அவை. (இதற்கு முன்னர் 2004ல் நிஷாந்தன் அண்ணாவின் தலைமையில் றோயல் கல்லூரி அணி தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது)! இதோ 2009ம் ஆண்டுப் போட்டியில் சில பம்பலப்பிட்டி இந்து வென்றிருக்கிறது. பம்பலப்பிட்டி இந்து அணி சவாலான அணி, அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப்பொருத்துத்தான் விவாதத்தில் வெற்றி தோல்வி நிர்ணயமாகிறது. என்து கணிப்பின்படி அவர்களது பலம் பெரும்பாலும் மொழியாற்றலும், உறுதியான கருத்துரைப்பும் எமது பலம் பயிற்சி அனுபவமும், சமயோசிதமும், இது இரண்டிற்குமிடையேயான யுத்தத்தை நீங்கள் காண விரும்பினால் கட்டாயம் ஒரு றோயல்-பம்பலப்பிட்டி இந்து விவாதப் போட்டியைப் பாருங்கள்! 

இதைவிட குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எதிர் அணிகள் இன்னும் ஒன்றிரண்டுண்டு. வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரி (சைவ மங்கையர் கழகம்) அணி, பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி அணி என்பன குறிப்பிடத்தக்கது. 2007ம் ஆண்டு என்று நினைக்கிறேன், கொழும்பு மகளிர் கல்லூரியினால் நடத்தப்பட்ட தமிழ் விவாதப் போட்டிகளின் அரை இறுதிச்சுற்றில் பலமான இந்து மகளிர் கல்லூரி அணியைச் சந்திக்க நேர்ந்தது. தலைப்பு - சகோதர பாசத்தில் சிறந்தவர்கள் இராம இலக்குமணரே என்று நாங்களும் பஞ்ச பாண்டவரே என்று அவர்களும். விவாதம் நடந்தது - மிக்க சூடாகவும் கொதிப்புடனும். அவர்கள் அணியில் எல்லோரும் எம்மை விட வயதில் மூத்தவர்கள் ஆக எம்மிடம் தோற்கக்கூடாது என்று வைராக்கியத்துடன் சூடாகவே வாதிட்டனர். எனது விவாதப் பயணத்தில் நான் கண்ட மிகச் சூடான வாதங்களுள் இதுவும் ஒன்று. விவாதத்தின் சூட்டில் விவாதம் மிகப்பெரும் எல்லைகளையெல்லாம் தொட்டது, கடைசியில் நாம் வெற்றி பெற்றோம், அந்த விவாதம் பற்றி எழுதவேண்டுமானால் தனிப்பதிவு ஒன்றே எழுதலாம். விவாதத்தில் நாம் வென்று இறுதிப் போட்டிக்குச் சென்று இந்துவை வீழ்த்தி வெற்றிகண்டோம், அந்தப் போட்டித் தொடரை அடுத்த வருடமும் வெற்றிகொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்த 2007 மற்றும் 2008 இரு பருவகாலங்களிலும் நாம் இந்துவிடம் தோற்றது 4 முறைதான், 2 முறை பெனடிக்ட் கல்லூரி அணி நடத்திய போட்டிகளில்  மற்ற ஒன்று இரத்மலானை இந்துக் கல்லூரி நடத்திய போட்டியிலும், அடுத்தது உவெஸ்லிக் கல்லூரி அணி நடத்திய போட்டியிலுமாகும். இரத்மலானை இந்து போட்டியில் நாம் இந்துவிடம் தோற்றது கற்பு பற்றிய சர்ச்சையிலாகும், கற்பிற் சிறந்தவள் கண்ணகி என்று நாங்களும், சீதை என்று அவர்களும் வாதிட்டார்கள் - கற்பு என்ற சர்சையில் தோல்வி. அடுத்தது உவெஸ்லிக் கல்லூரி போட்டியில் தோற்றமைக்கு அலட்சிம் தான் முக்கிய காரணம், நான் அதை மமதை, அதீத நம்பிக்கை என்று கூடச்சொல்வேன். வாழ்க்கை எமக்கு சில நல்ல படிப்பினைகளை சில கசப்பான அனுபவங்கள் ஊடாகத் தருவதுண்டு, அது போன்றவொரு நிகழ்வுதான் இது. அது வரை பெற்ற வெற்றிகள் கொடுத்த போதை அலட்சியமான வாதத்திற்கு வழிகாட்டியது, ஆனால் அந்தத் தோல்வி எம்மைத் தட்டியெழுப்பி, மீண்டும் கால்களை நிலத்திற் படச்செய்தது என்று சொன்னால் மிகையில்லை. அதன் பின்தான் சந்தித்த இடத்திலெல்லாம் வெற்றிகளை தக்கவைக்கத் தொடங்கினோம் தொடங்கினோம். இந்து ஒன்றும் சளைத்த அணி என்று எண்ணிவிட வேண்டாம், அருமையான விவாதிகளைக் கொண்ட பலமான அணியாகவே இருந்தது. இதன் பின்பே கொழும்புப் பல்கலைக்கழக சட்டபீடம் நடாத்திய பாராளுமன்ற முறையிலான தமிழ் விவாதப் போட்டிகளில் 2008. 2009ல் நாம் வெற்றி பெற்றோம். 

என்னதான் விவாதம் சார்ந்த விடயங்களில் நாம் வைரிகளாக இருந்தாலும், அதற்கு வெளியில் நட்புணர்வுடன் தான் பழகினோம். என்னுடைய காலத்தில் விவாதித்த வைரி அணி விவாதிகளுள் என்னைக் கவர்ந்த விவாதிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்துக் கல்லூரி அணியின் தலைவராக இருந்த விதூஷன் ஒரு மிகத்தரமான விவாதி, கருத்துக்களை உணர்ச்சியுடன் கூறுவதில் சிறந்தவர், அனல் பறக்க விவாதிப்பது அவர் பாணி. இந்துக் கல்லூரியின் 4ம் விவாதியாக இருந்த சஞ்சீவனையும் குறிப்பிட வேண்டும், நக்கல் விவாதத்திற்கும், நகைச்சுவைக் கருத்துகளுக்கும் ஆள் பெயர்போனவர். இதைவிட இந்துக் கல்லூரிக்கு பின்னர் தலைமைதாங்கிய சிவாம்சன், தற்போது தலைமைதாங்கும் கஜானன் ஆகியோர் சிறப்பான தமிழ் பேசும் நல்ல விவாதிகள். அந்த 2007 மகளிர் கல்லூரி அணியில் பங்குபற்றிய இந்து மகளிர் கல்லூரி அணி நான் பார்த்த மிகச் சிறந்த அணிகளில் ஒன்று, அண்மையில் கொழும்பச் சட்ட பீட பாராளுமன்ற விவாதப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்ற அழைக்கப்பட்டிருந்தேன், அதன் போது வந்த இந்து மகளிர் அணியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன், அவ்வளவு தமிழ்க்கொலை, எப்படியிருந்த அணி இப்படி ஆயிட்டே என்று வருத்தம் தான். விவாதத்தில் எந்த முரண்பட்ட கருத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால் தமிழ்க்கொலையை ஏற்றுக்கொள்ளவே முடியாது, தமிழைச் சரியாகப் பேச முடியாதவர்கள், அதைப் பயின்றபின் மேடையேறவேண்டும் என்பது எனது அபிப்ராயம். அண்மையில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி, சிறப்படைந்து வரும் தோமிய விவாத அணியின் விஜய் அபிநந்தன் சிறப்பாக வாதிக்கிறார், கடந்த றோயல்-தோமிய விவாதத்தில் சிறப்புமிக்க சிறந்தவிவாதிக்கான விருதையும் வென்றவர் இவர்.

ஒவ்வொரு விவாத அணிக்கும் ஒரு பலம் இருக்கிறது, பலவீனமும் இருக்கிறது. நான் அறிந்த பல அணிகள் எமது வேத்திய அணியுடன் இலக்கிய விவாதங்களில் ஈடுபடுவதை விரும்புவதில்லை, அது போலவே ஒவ்வொரு அணிக்கும் பலம், பலவீனம் இருக்கிறது, இவற்றைச் சரியாகக் கணித்தால் வெற்றியை அதன் பாதையில் செப்பனிட முடியும். இந்த வருடத்தில் நடைபெற்ற சில போட்டிகளில் பம்பலப்பிட்டி இந்து பெற்ற வெற்றிகளுக்குக் காரணம் அவை வேத்திய அணியில் காணப்பட்ட சில தொய்வு நிலைகளை அடையாளங் கண்டுகொண்டதாக இருக்கலாம் என்பது எனது கணிப்பு.


இது தொடர்பிலான சில வெற்றியின் இரகசியங்கள், சாதித்தவர்கள், அனுபவஸ்தர் கூற்றுக்களாக -

உன் எதிரி உன்னை அச்சம் கொள்ளச் செய்யும் முயற்சிகளை அவதானிப்பதன் மூலம் அவன் எதற்கெல்லாம் அச்சப்படுகிறான் என்று அறிந்திட முடியும் - எரிக் ஹொஃபர்.

உன் எதிரி பிழைவிட்டுக்கொண்டிருக்கும் போது இடையூறு செய்யாதே - நெப்போலியன் போனபார்ட்

எங்கள் எதிரிகளிடமிருந்தும் நாங்கள் நிறையக் கற்றுக்கொள்ளலாம் - ஓவிட்

பாம்பைப் பிடிப்பதற்கு உன்எதிரியின் கரத்தைப் பயன்படுத்து - பாரசீகப் பழமொழி

இவையெல்லாம் விவாதத்தில் பயன்படுத்தக்கூடிய உத்திகள்! பலமான எதிரணிகள் இருந்தால் தான் விவாதம் சூடுபிடிக்கும், அந்த வகையில் நான் எங்களைச் சவாலுக்குட்படுத்திய இந்த அணிகளை பெருமிதத்துடன்தான் பார்க்கிறேன்! எனது விவாதப் பயணத்தில் மறக்கமுடியாத தருணங்களைத்தந்ததற்கு அவர்களுக்கு நன்றி.... மறக்கமுடியாத மட்டுமல்ல மறக்க நினைக்கும் சில தருணங்களும் உண்டு... அவை பற்றி அடுத்த பதிவில்....


(தொடரும்)

Jun 28, 2010

இலங்கை அரசியல் யாப்பும், பௌத்த மதமும்.

உலகிலுள்ள பௌத்த நாடுகளுள் முதன்மையாகக் கருதக்கூடிய தேசமாக இலங்கை காணப்படுகிறது. இலங்கையில் 70 சதவீதமளவிற்கு தேரவாத பௌத்தமே பின்பற்றப்படுகிறது. மேலும் இலங்கையில் நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின் பிரகாரம், பௌத்த மதத்திற்கு முதன்மை இடமும், புத்தசாசனத்தைக் காப்பதும், வளர்ப்பதும் அரசின் கடமையாக்கப்பட்டிருக்கிறது. பௌத்தம் என்ற தலைப்பிலேயே இலங்கை அரசியல் யாப்பின் இரண்டாவது அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

1978ம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 1978ம் ஆண்டு யாப்பின், இரண்டாம் அத்தியாயம் (9வது சரத்து) பின்வருமாறு குறிப்பிடுகிறது.


Buddhism.
9. The Republic of Sri Lanka shall give to Buddhism the foremost place and accordingly it shall be the duty of the State to protect and foster the Buddha Sasana, while assuring to all religions the rights granted by Articles 10 and 14(1)(e).


அதாவது, இலங்கைக் குடியரசானது, பௌத்தத்திற்கு முதன்மை இடத்தை வழங்குவதுடன்,  புத்தசாசனத்தைக் காப்பதும், வளர்ப்பதும் அதன் கடைமையாகும் அதேவேளை ஏனைய 10 மற்றும் 14(1)(e) சரத்துக்கள் மூலம் ஏனைய மதங்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தல் வேண்டும் என இலங்கை அரசியல் யாப்பின் 2ம் அத்தியாயம் (9வது சரத்து) குறிப்பிடுகிறது.

10ம் சரத்தானது, மூன்றாவது அத்தியாயமான அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் இடம்பெறுகிறது, அது பின்வருமாறு குறிப்பிடுகிறது,


Freedom of thought, conscience and religion.
10. Every person is entitled to freedom of thought, conscience and religion, including the freedom to have or to adopt a religion or belief of his choice.


அதாவது, சிந்திப்பதற்கான சுதந்திரம், மனச்சாட்சி சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தச் சரத்தானது, ஒவ்வொரு மனிதனுக்கும், சிந்தனை, மனச்சாட்சி, மதச் சுதந்திரத்தை வழங்குவதுடன், அவரது தெரிவான நம்பிக்கையை, மதத்தைச் சார்ந்திருக்கும், பின்பற்றும் சுதந்திரத்தை வழங்குகிறது.

14ம் சரத்தும் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திலேயே இடம்பெறுகிறது. பேச்சு, ஒன்றுகூடல், கூட்டம் நடத்தல் போன்ற சுதந்திரங்களை உறுதிப்படுத்தும் அச்சரத்தின் 1ம் உபசரத்தின் e பிரிவு பின்வருமாறு குறிப்பிடுகிறது.

14. (1) Every citizen is entitled to -
(e) the freedom, either by himself or in association with others, and either in public or in private, to manifest his religion or belief in worship, observance, practice or teaching;

அதாவது, ஒவ்வொரு குடிமகனும், தான் அல்லது தன்னுடன் இணைந்துகொண்ட மற்றவர்களுடன் கூடி, பொதுவாக அல்லது தனியாக தனது மதத்தைப் அல்லது தனது வழிபடும் நம்பிக்கையைப் பிரகடனம் செய்யவும், அதைப் பின்பற்றவும், அதை நடைமுறைப்படுத்தவும், அதைப் போதிக்கவும்  உரித்துடையவராகிறான்.

இந்த அடிப்படையில் வைத்து நோக்கும் போது, இலங்கையில் அரச மதமாக பௌத்தம் ஆகிறது, ஏனைய மதங்களைப் பின்பற்றும் உரிமை வழங்கப்பட்டாலும், அரசியல் அமைப்பின் படி அவை தொடர்பில் அரசிற்கேதும் கடப்பாடோ, கடமையோ நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் பௌத்தமதத்தைப் (புத்த சாசனத்தைப்) பாதுகாப்பதும், வளர்ப்பதும் அரசின் கடமையாகிறது.

இந்தச் சரத்தை இலகுவாக நீக்கவோ திருத்தவோ முடியாத படி அரசியலமைப்பு பாதுகாப்பையும் வழங்குகிறது. அதாவது இந்த 9வது சரத்தை மாற்ற, நீக்க வேண்டுமென்றால் வெறுமனே பாராளுமன்றில் 3ல் 2 பெரும்பான்மை மட்டும் போதாது, அத்துடன் சர்வசன வாக்களிப்பு ஒன்றின் மூலம் பெரும்பான்மை பெறப்பட்டு அதைச் சனாதிபதி 80ம் சரத்தின் படி சான்றளிக்கும் பட்சத்திலேயே இச்சரத்தை மாற்றவோ, நீக்கவோ முடியும்.

இது இவ்வாறாக இருக்க, பலபேருக்கு இலங்கையில் பௌத்தத்தின் நிலை பற்றி பல சந்தேகங்களுண்டு அதில் குறிப்பாக பலருக்கு எழும் சந்தேகம் இலங்கையில் பௌத்தரல்லாதவர் சனாதிபதியாக முடியுமா என்பதாகும். நிச்சயமாக பௌத்தரல்லாத ஒருவர் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் சனாதிபதியாக முடியும், அது தொடர்பில் எந்தக் கட்டுப்பாடுமில்லை. இதுவரை நடந்த சனாதிபதித் தேர்தல்களில் திரு.குமார் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம் ஆகிய தமிழர்கள் போட்டியிட்டிருக்கிறார்கள், இதில் குமார் பொன்னம்பலம் கணிசமானளவு வாக்குகள் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதைவிட முஸ்லிம்களும் போட்டியிட்டிருக்கிறார்கள், ஆக அரசியலமைப்பில் நீங்கள் எண்ணுவதுபோன்ற ஒரு தடையிருந்தால் எவ்வாறு இவர்களது வேட்புமனு ஏற்கப்பட்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்கள்? - இந்த தர்க்கத்தைப் புரிந்தாலே உங்கள் நம்பிக்கை பிழை என்பது தெரிந்துவிடும். மேலும் இலங்கை அரசியல் யாப்பின்படி இலங்கையில் தேர்தல்களில் போட்டியிடவோ. பதவிகள் பெறவோ மதம் ஒரு தடையல்ல.

ஆனால் 9ம் சரத்தின் படி சில நடைமுறைச்சிக்கல்கள் வரலாம், அதாவது அரசாங்கம் புத்தசாசனத்திற்கு எதிராக, முரணாக செயற்பட முடியாதவாறு இச்சரத்து கட்டுப்படுத்துவதாகவும் கொள்ளலாம், ஏனெனில் அவ்வாறு செய்யும் போது அரசாங்கம் புத்தசாசனத்தைக் காக்கும், வளர்க்கும் கடமையிலிருந்து தவறுகிறது என வாதிடலாம். இது தொடர்பில் மேலும் விளக்க புத்தசாசனம் தொடர்பான ஆழ்ந்த அறிவு தேவை.

மேலும் இந்தச் சரத்துக்களைப் படித்தக்கொண்டிருக்கும் போது எனக்கு இன்னொரு விடயமும் தென்பட்டது. அதாவது 9ம் சரத்தின் மூலம் பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியல் யாப்பு, அதே சரத்தில், அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் 10 மற்றும் 14(1)(e) சரத்துக்கள் மூலமே மற்ற மதச் சுதந்திரத்தை அங்கீகரிக்கிறது. ஆனால் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில், 15வது சரத்தின் 7வது உபபிரிவானது பின்வருமாறு குறிப்பிடுகிறது.


Restrictions on fundamental Rights.
15.
(7) The exercise and operation of all the fundamental rights declared and recognized by Articles 12, 13(1), 13(2) and 14 shall be subject to such restrictions as may be prescribed by law in the interests of national security, public order and the protection of public health or morality, or for the purpose of securing due recognition and respect for the rights and freedoms of others, or of meeting the just requirements of the general welfare of a democratic society. For the purposes of this paragraph " law " includes regulations made under the law for the time being relating to public security.


அதாவது சுருக்கமாக, தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொதுச் சுகாதாரம் மற்றும் விழுமியங்கள் தொடர்பில் 14ம்  சரத்தை நடைமுறைப்படுத்துவதை சட்டரீதியாகக் கட்டுப்படுத்தலாம் என்கிறது. ஆக வெளிப்படையாக மேற்கூறிய காரணங்களைக் காட்டி 14ம் சரத்தின் 1ம் உபசரத்தின் e ப்பிரிவினால் தரப்பட்ட மதத்தைப் பின்பற்றும், போதிக்கும், நடைமுறைப்படுத்தும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தலாம்.


**********************************************************************
Reference

The Constitution of the Democratic Socialist Republic of SriLanka (1978) - 


மேலே தரப்பட்ட அரசியல் அமைப்பின் தமிழ் விளக்கமும், கருத்துக்களும் எனது தனிப்பட்ட தெளிவின் அடிப்படையிலான, தனிப்பட்ட அபிப்ராயமாகும். இது அரசியல் அமைப்பின் மிகச் சரியான தமிழாக்கமோ, விளக்கமோ அல்ல. அரசியலமைப்பிற்கும், சட்டங்களுக்கும் வியாக்கியானம் கொடுக்கும் அதிகாரம் நீதிமன்றுக்கே உண்டு.

Jun 22, 2010

இலங்கைத் தமிழரிடையே பிரதேசவாதம் மீண்டும் தலைதூக்குகிறதா?

இலங்கை உள்நாட்டு யுத்தம் அரச படைகளால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு வருடகாலம் ஆயிட்டு. இன்னும் அகதி முகாம்களில் மக்கள் அல்லற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள், மீள்குடியேற்றப்பட்டோர் என்பவர்கள் எல்லாம் வெற்றுக் குடில் அமைத்து உயிருடன் இருந்துகொண்டிருக்கிறார்கள், வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியவில்லை, வாழ்வாங்கு வாழ்ந்த மக்கள், இன்று உயிரோடு அலைந்துகொண்டிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் என்ற பதமே ஒரு காலத்தில் பிரச்சினைக்குரிய பதமாகவே இருந்தது. இலங்கைத் தமிழர்கள் என்றால் யார்? ஒவ்வொருவரும் தங்களைச் சார்ந்து வரைவிலக்கணப் படுத்திக்கொண்டாலும், அரசின் உத்தியோகபூர்வ பிரிப்பின் படி இந்தியத் தமிழர், முஸ்லிம் அல்லாத தமிழர்களே இலங்கைத் தமிழர்களாகக் கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பிரிப்பினைக்கும் காரணம் இலங்கைத் தமிழர்கள் அக்காலத்தில் தம்மை இந்தியாவிலிருந்து தோட்ட வேலைகளுக்காக இங்கு வந்த இந்தியத் தமிழர்களிடமிருந்து வேறுபடுத்தி இம்மண்ணின் வம்சாவழிக்குடிகளாக அடையாளப்படுத்த எண்ணியதும், இஸ்லாம் மார்க்கத்தையுடைய தமிழ் பேசுவோர் தங்களை தமிழர்களாக அன்றி முஸ்லிம்களாகவே அடையாளப்படுத்தியதும் ஆகும். பிற்காலத்தில் தமிழ்-முஸ்லிம் இனத்தவர் இணைந்து சிலவேளைகளில் தமிழ்பேசும் இனத்தவர் என்றும் அடையாளப்படுத்தியதைக் காணலாம்.

ஒவ்வொரு பிரிவினைக்கும் ஏதோ ஒரு சுயநலமே காரணமாக இருக்கிறது. நான், எனது குடும்பம், எனது உறவுகள், எனது நண்பர்கள், எனது சுற்றும், எனது இனம், எனது கிராமம், எனது பிரதேசம், எனது மாவட்டம், எனது மாகாணம், எனது தேசம் என்று ஒரு படிமுறை உலகில் அனைத்து மனிதர்களிடமும் உண்டு. இதில் சிலது மற்றையதை விட முக்கியம் பெறுகிறது. இந்த முக்கியத்துவம் மனிதனிலிருந்து மனிதனுக்கு வேறுபடும். ஜின்னா எனது இனம் என்று சிந்தித்தார், கஸ்ட்ரோ எனது நாடு என்று சிந்தித்தார், திரு.எக்ஸ் எனது குடும்பம் என்று சிந்திக்கலாம்! இவ்வாறாக இலங்கையிலுள்ள தமிழ்பேசும் மக்கள், இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவழித் தமிழர், முஸ்லிம்கள் எனப்பிரிவடைந்தனர். இலங்கைத் தமிழரிடையே யாழ்ப்பாணத் தமிழர், வன்னித் தமிழர், கொழும்புத் தமிழர், மட்டக்களப்புத்தமிழர், திருகோணமலைத் தமிழர், மன்னார்த் தமிழர், தீவுத் தமிழர் என்று பல பிரிவினைகளைக் காணலாம். இவற்றைச் சுருக்கி மேலோட்டமாக வடக்குத் தமிழர், கிழக்குத் தமிழர், கொழும்புத் தமிழர் எனப்பிரிக்கலாம். இதைவிட அந்தந்தத் தமிழரிடையே சாதிப்பிரிவினைகளையும் காணலாம். யாழ்ப்பாணத்திலுள்ள சாதிப்பிரிவுகளைப் பார்த்தோமேயானால், கலாநிதி.எச்.டபிள்யு. தம்பையாவின் 'The Laws and Customs of The Tamils of Jaffna' என்ற நூலின் படி பிராமணர், வேளாளர் (வெள்ளாளர்), மடைப்பள்ளி, கரையார், சிவியார், குசவர், வண்ணார், அம்பட்டர், கோவியர், தனகாரர், நளவர், பள்ளர், பறையர், துரும்பர் என வகைப்படுத்தப்படுகிறது, இவை செய்தொழில் வேற்றுமையால் ஏற்படுத்தப்பட்ட பிரிவினைகள் பின்பு வம்சாவழி ரீதியாகக் கருதப்பட்டன. இது போன்ற சாதிப்பிரிவினைகளை ஏனைய தமிழர்களிடமும் காணலாம். இப்படியாக இலங்கைத் தமிழர்கள் பிரதேச ரீதியாக, சாதி ரீதியாக பெருமளவு பிரிந்தேயிருந்தனர். இலங்கையில் காணப்படும் பாரம்பரியச் சட்டங்களிலில் யாழ்ப்பாணத்தமிழரின் தேசவழமைச் சட்டமும், மட்டக்களப்புத்தமிழரின் முக்குவச் சட்டமும் குறிப்பிடத்தக்கது, இதில் முக்குவர்ச் சட்டம் காலப்போக்கில் வழக்கிழந்துவிட இன்று வரை எழுதப்பட்ட சட்டமாகிய தேசவழமை தொடர்கிறது. இலங்கைத் தமிழர்களது அரசியலைப் பார்த்தோமேயானால் யாழ்ப்பாண, வன்னி இராச்சியங்களின் பின் ஐரோப்பிய ஆதிக்க காலத்தில் எல்லாம் வேளாளர் (வெள்ளாளர்) இனத்தவரின் ஆதிக்கத்தைக் காணலாம். பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அவர்கள் எழுதிய “இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல்” என்ற ஆய்வில் அவர் கூறுவதாவது -

........இலங்கைத் தமிழர்களின் அரசியல் யாழ்ப்பாண இராச்சியக் காலத்திலிருந்து குறிப்பிட்ட குழுவினரால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்துள்ளதெனக் காண்கிறோம். அதாவது சாதியில் உயர்ந்த வேளாளர்களே அரசியல் ரீதியில் பிரதானமான பதவிகளை வகித்து வந்துள்ளார்கள். இந்நிலை போர்த்துக்கேயர், டச்சுக்காரர் ஆட்சிக்காலப் பகுதிகளிலும் தொடர்ந்தது. பிரித்தானியர் ஆட்சியின்போது இது மிகவும் தெளிவாகியது. இலங்கைத் தமிழர்களுக்குள்ளேயும் யாழ்ப்பாணத் தமிழர்களும் அவர்களிலும் வேளாளர் சாதியமைப்பை சேர்ந்த, நிலவுடைமை, ஆங்கிலக் கல்வி என்பவற்றைப் பெற்றுக்கொண்டவர்களே அரசியலிலும் ஆக்கிரமிப்புச் செலுத்த முடிந்தது........ மிகவும் அண்மைக்காலம் வரை அதாவது தமிழ்த் தீவிரவாதக் குழுக்கள் இலங்கைத் தமிழர் அரசியலைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும்வரை வேளாள உயர்ந்தோர் குழாமே இலங்கைத் தமிழர்களின், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின் அரசியலை ஆக்கிரமித்து வந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால், கிழக்கு மாகாணத் தமிழர்களின் அரசியலை முக்குவர் ஆக்கிரமித்ததற்கான சான்றுகள் இல்லை.

ஆகவே இலங்கைத் தமிழர் அரசியலை யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தியதைக் காணலாம். இந்நிலை ஆயுதக்குழுக்களின் வருகை வரை தொடர்ந்தது. ஆயுதக் குழுக்களின் வருகையின் பின் சாதி, பிரதேசவாதப் பிரிவுகளில் நிறைய மாற்றம் வந்தது. எல்லாப் பிரதேசத்தைச் சேர்ந்து, எல்லாச்சாதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் ஆயுதம் தூக்கியதன் விளைவு இலங்கைத் தமிழரிடையே இருந்த பிரிவினைகள் மறக்கப்பட்டு தனித் தமிழீழக் கொள்கை உருவானது. வடக்கு - கிழக்குப் பிரிவினைகள் மூட்டை கட்டப்பட்டு இணைந்த வடகிழக்கையுடைய தமிழீழக் கனவினை இவ்வாயுதக்குழுக்கள், அதிலும் குறிப்பாக பிற்காலத்தில் பலம்பொருந்திய தனி அமைப்பாக விளங்கிய விடுதலைப்புலிகள் அறிமுகஞ்செய்தனர். வடக்குக் கிழக்கில் ஆயுதக்குழுக்களின் அரசியல் ஆக்கிரமிப்பால் ஏனைய கட்சிகள் பலம் இழந்தன, அழிந்தன அல்லது ஆயுதக்குழுவின் கொள்கையை ஆதரித்தன. ஆயுதக் குழுக்கள் பலம்பெற்றிருந்த காலகட்டத்தில் இலங்கைத் தமிழர்களிடையே கொள்கையளவிலாவது பிரிவினை இல்லாதிருந்தது. இலங்கைத் தமிழரை ஒன்றுபடுத்தி அவர்களின் ஒருமித்த கருத்தாக தமிழீழக் கோரிக்கையைக் காட்டவே ஆயுதக்குழுக்களும் அவை சார்ந்த அரசியல் கட்சிகளும் முயன்றன. 2002-2004 காலப்பகுதியில் மலையத் தலைமைகளையும் அதே குடையின் கீழ் இணைக்கவே முயற்சித்தன. கொள்கையளவிலாவது ஒன்றுபட்டிருந்தது இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு பலமாகவே இருந்தது. இதற்கு பெருஞ்சூத்திரமெல்லாம் அவசிமில்லை நாம் சிறுவயதில் படித்த ஒற்றுமையே பலம் கதையே போதும், இது மனிதவளம், எண்ணிக்கை சார்ந்த பலமாக இருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணாவின் பிரிவினை வரை இந்த கொள்கையளவு ஒற்றுமை ஆயுதக்குழுக்களினால் காப்பாற்றப்பட்டே வந்தது, கருணாவின் வெளியேற்றமும், அதனைத் தொடர்ந்து கருணாவின் கிழக்குத் தமிழர் மைய அரசியலும் மீண்டும் ஒரு வடக்குக்-கிழக்குத் தமிழர் பிரிவினையை உண்டாக்க வித்திட்டது, அதன் தொடர்ச்சிதான் இன்று பிள்ளையானின் கிழக்குமாகாண அரசியல். ஆனால் அவர்களுக்கு மக்கள் கொடுத்ததோ பேரதிர்ச்சி. அண்மையில் நடந்த பொதுத்தேர்தலில் வடக்கு-கிழக்கு இரண்டிலுமே பிள்ளையானின் படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

இன்று யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பிரதேசவாத விஷமப் பிரச்சாரங்கள் சுயநல-அரசியல் தரப்புக்களால் கட்டவிழ்த்து விடப்படுகிறது. மீண்டும் தமிழர்களிடையே பிரதேச வாதப் பிரிவினைகளை உருவாக்கி அதில் தமது சொந்த இலாபங்களைச் சேர்த்துக்கொள்ள சில அரசியல் விஷமிகள் இந்தப் பிரிவனையைத் தூண்டுகின்றன. பழைய அரசியல் கதைகளை மீண்டும் எழுதி குழம்பித் தெளிந்த குட்டையை மீண்டும் குழப்ப விளைகிறார்கள். இவர்களிடம் சில கேள்வி கேட்க என் மனம் விளைகிறது. நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும் (ஒரு பேச்சுக்கு!) இதைச் சொல்வதன் மூலம் நீங்கள் அடைய நினைப்பது என்ன? மீண்டும் பிரதேச வாதப் பிரிவினையால் தமிழர்கள் சாதிக்கப்போவது என்ன? தமிழர்கள் ஒரு குடையின் கீழ் ஒன்று பட முடியாதா? பழையன கழிதலும், புதியன புகுதலும் வேண்டும். பழைய கதைகளை மீண்டும் ஓதி, குரோதத்தை வளர்த்து, பேராதிக்க சக்திகளின் பிரித்தாழும் தந்திரத்திற்கு இரையாகலாமா? 

இன்று பிரதேசரீதியாகப் பிரிவோம், மீண்டும் சாதிகள் ரீதியாகப் பிரிவோம், ஏற்கனவே சிறு பான்மையினம், இனிக் குறுஞ் சிறு பான்மை இனங்களாகப் பிரிந்துபோவோமா? இலங்கைத் தமிழ்மக்கள் பிரிவினைகளைக் களைந்து இன்னும் உறுதியாக ஒன்றுபட வேண்டிய காலம் இது.


****************************************************
References / உசாத்துணை

Tambiah H.W. Dr. 'The Laws and Customs of The Tamils of Jaffna', Women's Education & Research Center Publication 2004.

அம்பலவாணர் சிவராஜா, 'இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல் ', கொழும்புத் தமிழ்ச் சங்கம், 2003.

Jun 12, 2010

இலங்கையில் இறக்குமதி வரிக்குறைப்பு - ஒரு பார்வை!

அண்மையில் இலங்கை அரசாங்கம் வாகனங்கள் மற்றும் இலத்திரனியற்பொருட்கள் மீதான இறுக்குமதி வரிகளை கணிசமான அளவு குறைத்துள்ளது. சராசரியாக 50வீதமளவிற்கு இறக்குமதி வரிக்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. பற்றாக்குறை வரவுசெலவையுடைய தேசத்தில் திடீரென அரசாங்கம் 50வீதளமளவிற்கு இறக்குமதி வரியைக் குறைப்பதன் நோக்கமென்ன? இறக்குமதிகள் அதிகரித்தால் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்காது, ஆக அதனைக் கட்டுப்படுத்தவும், வருமானம் பெறவுமே அரசாங்கம் இறக்குமாதிகளுக்கு வரிவிதிக்கிறது ஆனால் இலங்கையரசாங்கத்தின் இந்தத் திடீர்முடிவுக்குக் காரணமென்ன?

30 வருட யுத்தம் முடிந்து இப்பொழுதுதான் சுமுகமான சூழல் நிலவுவாதாகக் கூறும் அரசாங்கம், இச்சூழலைப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதைவிடுத்து இறக்குமதியை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதேன்? இதில் ஏதும் உட்-காரணங்கள் ஒளிந்திருக்குமா? போன்ற சந்தேகங்கள் எழவே செய்கிறது.

சாதாரணமாக கொழும்பில் வசிக்கும், நல்ல வேலையில் இருக்கும், இளைஞர்கள் இந்த வரிக்குறைப்பை ஆவலுடன் வரவேற்கிறார்கள். ஏனெனில் இதுவரை விலைகூடவாக இருந்த வாகனங்களைக்கூட இனி கணிசமானளவு குறைந்தவிலைக்கு வாங்கலாம். உதாரணமாக வரிக்கு முன்னைய பெறுமதி 500000 உடைய 1000cc க்கு குறைந்த இயந்திரவலுவுடைய பெற்றோல் காரொன்று முன்பு வரியின் பின் 1435000 ஆகக் காணப்பட்டது, இப்போது வரிக்குறைப்பின் பின் அதன் விலை 950000 ஆகக்குறைந்துள்ளது. வாகனங்கள் போலவே இலத்திரனியற்பொருட்களின் மீதான இறக்குமதி வரியும் கணிசமானளவு குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக வளிச்சீராக்கி இயந்திரங்கள் (Air Conditioning Machines) மீதான இறக்குமதி வரி 94வீதம் குறைக்கப்பட்டுள்ளது. இனி கொழுத்தும் வெயில்காலத்தில் அநேகமான நடுத்தர வீடுகளும் குளிரூட்டப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இப்படியான விலைக்குறைப்பு நல்லதுதானே என சாதாரண பொதுமகன் சொல்வது கேட்கிறது. என்ன செய்ய இந்தச் சாதாரண பொதுமகன்கள் தானே இந்த அரசாங்கத்தை அரியணையில் இருத்தியவர்கள்! அவர்களுக்குச் சந்தோஷம் ஆனால் அந்த சந்தோஷ மிகுதியில் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் கூறிய கருத்து ஒன்றும் கூட காற்றோடு காற்றாய் அலட்சியம் செய்யப்பட்டுப் போய்விட்டது. இந்த வரிக்குறைப்பு செய்யப்பட்ட மறுதினம் ரணில் விக்கிரமசிங்ஹ ஒரு கேள்வியெழுப்பியிருந்தார். “பென்ஸ் காரின் விலையைக் குறைத்த அரசால், ரின் மீன் விலையைக்குறைக்க முடியாதா?” என்று அவர் கேட்டிருந்தார். வழமையாகவே ரணிலின் பேச்சை யாரும் பொருட்படுத்தவில்லை ஆனாலும் அதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், சிறுபிள்ளைகளுக்குக் கொடுக்கும் பால்மாவிலிருந்து, தினம் உண்ணும் அரிசி முதல் முக்கிய உணவுப்பொருள் இறக்குமதிக்கெல்லாம் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அரிசி, சீனி, பருப்பு விலைகளெல்லாம் உச்சஸ்தாயியில் ஏறிக்கொண்டிருக்கிறது ஆனால் இதைக்குறைக்க வேண்டும் என்று எண்ணாத அரசு வாகனங்கள், இலத்திரனியல் பொருட்கள் என்பவற்றின் மீதான வரியினைக் குறைத்ததன் சூட்சுமம் என்ன?கார் மற்றும் ஏனைய சொகுசு வாகனங்களின் மீதான இறக்குமதிவரிகளைக் குறைத்த அரசாங்கம், நடுத்தரப் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள் மீதான இற்குமதி வரியைக் குறைக்காதது ஏன்? இதை யோசிக்கத் தெரிந்தவர்கள் இத்தேசத்தில் பெரும்பான்மையளவில் இருந்திருந்தால் இந்த அரசாங்கமே அரியணையேறியிருக்காது. 

இரண்டாவதாக வாகன இறக்குமதியை ஊக்குவிக்கும் முகமாக வரிகளைக் குறைத்த அரசாங்கம் வாகனம் பயணிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கும் திட்டங்களை தொடங்கியிருக்கிறதா? இந்த வரிக்குறைப்பினால் நாட்டுக்குள் வரும் இலட்சோப இலட்சம் வாகனங்களும் இதே வீதிகளிலேயே பயணித்தால் போக்குவரத்து நெரிசல் இன்னும் பலமடங்காகும், அப்படி உருவாகும் நெரிசலை இரும்பு மேம்பாலங்களை 3மாத காலத்துக்குள் போட்டுக்கூடக் கட்டுப்படுத்த முடியாது. இன்று காலைவேளைகிலும், மாலை அலுவலகம் முடியும் நேரங்களிலும் கொழும்பு வீதிகளில் பயணிப்பது என்பது சவலான காரியம், இன்னும் வாகனங்கள் இதே வீதியில் இறக்கப்பட்டால் போக்குவரத்தின் நிலையென்ன? இதற்கான மாற்றுத்திட்டங்களை அரசாங்கம் வகுத்திருக்கிறதா? அப்படி வகுத்தாலும் பாதைகள் பெருப்பிக்கப்பட்ட பின் தான் இந்த வரிக்குறைப்பு நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும், அது நீண்டகாலத்திட்டமாக அமுல்ப்படுத்தப்பட்டிருக்கவேண்டும் மாறாக இரவோடு இரவாக வரியைக்குறைப்பது என்பது பொருந்தாத செயல்.

அடுத்ததாக இந்த விலைகுறைந்த காலத்தில் வாகனங்களை வாங்குபவர்கள் யோசிக்க வேண்டிய சில விடயங்கள் இருக்கிறது. முதலாவதாக எரிபொருள் விலை. இன்று வாகன வரிகளைக் குறைத்த அரசாங்கம் சில மாதம் கழித்து கணிணசமான வாகனங்கள் இறக்குமதிசெய்யப்பட்ட பின் எரிபொருள் விலைகளை அதிகரித்தால் என்ன செய்வது என்பதைத் திட்டமிட வேண்டும். அண்மை வருடங்களில் ஒரு லீற்றர் பெற்றோல் 180ரூபாய்கள் வரை கூடியிருந்ததைக் கருத்திற்கொள்ளவேண்டும். ஆக விலை இன்று குறைவு என்பதற்காக வாகனங்களை அவசரப்பட்டு ஆராயாமால் வாங்கிவிட முடியாது. அடுத்ததாக இரண்டாம் சந்தைவிலை. அண்மை வாரங்களில் இரண்டாஞ்சந்தை விலைகள் இந்த வரிக்குறைப்புக் காரணமாக ஓரளவு தளம்பலடையத் தொடங்கியுள்ளன. ஆக இரண்டாஞ்சந்தையில் வாகனம் வாங்க எண்ணியிருப்பவர்கள் இன்னும் சிலவாரங்கள் பொருத்திருக்கலாம். ஆனால் இன்று புதிதாக வாகனங்களை குறைந்த விலையில் இறக்குமதி செய்பவர்கள், எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள் கூடினால் வாகனங்களின் இரண்டாஞ்சந்தைவிலைகள் குறையும் என்பதையும் யோசிக்கவேண்டும். மேலும் அதிக விலையுள்ள சொகுசு ரக வாகனங்களை வாங்க எண்ணியுள்ளவர்கள், இறக்குமதி வரிமட்டுமே குறைக்கப்பட்டுள்ளது, வருடாவருடம் கட்ட வேண்டிய சொகுசு வாகனங்களுக்கான சொகுசுவரிகள் குறைக்கப்படவில்லை என்பதைக் கருத்தற்கொள்க.

நல்ல குளிர் காலத்தில் குளிர்களி விற்பதைப்போல அரசாங்கமும் வேண்டாத நேரத்தில், வேண்டப்படாத சலுகையை அறிவித்துள்ளது. நாளை இதன் மூலம் அரசாங்கம் இழக்கும் வருவாயை உணவுப்பொருட்கள், உடைகள் மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகள் மீது இன்னும் அதிக வரி விதிப்பதன் மூலம் மீட்டுக்கொண்டாலும் வியப்பதற்கில்லை.

குறைக்கப்பட்ட இறக்குமதி வரி விபரங்கள் :

May 25, 2010

சொற்சமர்க் கால ஞாபகங்கள்! - (02) கூர் தீட்டப்படுகிறோம்...

இது ஒரு தொடர் பதிவு

இதற்கு முன்னைய அங்கத்தைப் படிக்க : சொற்சமர்க் கால ஞாபகங்கள்! - (01) ஒரு பயணம் தொடங்குகிறது...

முடியாத ஒரு சுற்றுப்போட்டியுடன் எனது றோயல்கல்லூரி விவாத அணிப்பயணம் ஆரம்பமானது. புனித பேதுரு கல்லூரி நடாத்திய அந்த விவாதச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு றோயல் கல்லூரி அணி தெரிவாகியிருந்தது, இறுதிப் போட்டியைப் பின்னொருநாள் நடத்துவோம் என்று கூறியவர்கள் அதன் பின் இன்றுவரை 6 வருடங்களாகியும் இன்னும் நடத்தவேயில்லை. சிலர் தமது விவாத பயணத்தை ஆரம்பிக்கும் முதல் போட்டியின் முடிவை sentimental ஆக நினைப்பது வழக்கம். முதல் போட்டியில் வென்றிருந்தால் நன்று, தோற்றிருந்தால் கவலை ஆனால் எனக்கு எல்லாம் கலந்த ஒரு sentimental உணர்வு!

ஒருவாறு விவாதக் கழகத்திலிருந்து அணிக்குத் தெரிவாகிவிட்டாச்சு இனி ராஜா போல இருக்கலாம் என்று நான் அந்த பதினைந்தாம் வயதில் கட்டிய மனக்கோட்டை உடைய சில நாட்களே தேவைப்பட்டது. அடுத்த பயிற்சி நாளில் எங்களுக்கான பயிற்சிகள் இன்னும் அதிகமாக்கப்பட்டது. முன்னமே குறிப்பிட்டது போல றோயல் கல்லூரி விவாத அணியில் இடம்பெறுவது என்பது இன்னொரு பாடத்தை மேலதிகமாப்க படிப்பதற்குச்சமமானது, அந்த பயிற்சி வகுப்பில் நாம் படிக்கவேண்டிய புத்தகங்கள், எமக்குத் தெரிந்திருக்க வேண்டிய விடயப்பரப்புக்கள், மனப்பாடம் செய்ய வேண்டிய பாடல்கள் என பட்டியல் பட்டியலாக எமக்கு வீட்டு வேலை தரப்பட்டது. அதுவும் இலக்கியத்தில் இன்பம் காணும் senior ஒருத்தர் எங்களுக்கு தந்த இலக்கியப் புத்தகங்களின் பட்டியலைக் கண்டால் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்பவருக்குக்கூட வயிற்றைக்கலக்கும். மிகைப்படுத்திச் சொல்லவில்லை ஆனால் அதுதான் உண்மை. சங்க இலக்கியம் முதல் இன்றைய நவீன இலக்கியங்கள் வரை ஓரளவாவது அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, திருக்குறள், நாலடியார், கம்பராமாயணம், மகாபாரதம், பாரதியார் கவிதைகள், கண்ணதாசன் கவிதைகள், வைரமுத்து கவிதைகள், சினிமாப் பாடல்கள், புதுக்கவிதைகள், புரட்சிக்கவிதைகள் என்று கட்டுக்கட்டாய் இன்னும் பல (நான் இப்போது ஞாபகப்படுத்த விரும்பாத) இலக்கிய வீட்டுவேலைகள் ஒருபுறம், மறுபுறம் அரசியல் சமூகஞ் சார்ந்த விடயங்கள் பற்றிய வாசிப்புக்களைச் செய்யவேண்டும், அத்தோடு தினமும் பத்திரிகைகள் வாசித்து, அதிலும் குறிப்பாக ஞாயிறு வாரப் பத்திரிகைகள் வாசித்து அவற்றில் வரும் அரசியல், இலக்கியக் கட்டுரைகள் என்பனவற்றில் முக்கியமானவற்றை தொகுக்கவும் வேண்டும். இவ்வளவும் எங்களுக்குத் தரப்பட்டது நாங்கள் தரம் 10 படிக்கும் போது. அன்றைக்கு நாங்கள் எங்களுக்குள் எங்கள் seniors ஐ திட்டடியது போல இதற்கு முன்பு யாரும் திட்டியிருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இத்தனை ஆக்கங்களைப் படிக்க வேண்டியிருந்தாலும் இவற்றில் பலதை நான் விருப்புடன் படித்தேன், அதிலும் குறிப்பாக கம்பராமாயணத்தை மிகவும் ஆர்வத்தோடு படித்தேன், கம்பனுக்குப் பிறகு எனக்கு மிகப்பிடித்தது பாரதியார் கவிதைகள். சங்கப் பாடல்களில் புறநானூற்றுப் பாடல்களிலும் எனக்கொரு காதல் பிறந்தது. அரசியல் சமூக விடயங்களைப் படிப்பதில் எனக்கு அவ்வளவு பிரச்சினை இருக்கவில்லை ஏனெனில் ஏற்கனவே நான் அதைப் படித்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனாலும் நாம் எல்லோரும் எல்லாவற்றையும் படித்தோம் என்று சொல்வதற்கில்லை.அப்படியே seniors அதிகம் கண்டிப்போடு கேட்டால் கூட O/L exam வருது என்று சாக்குச் சொல்லி escape ஆகிவிடுவோம்! ஆனாலும் அந்தக் கண்டிப்பு எங்கள் அறிவிற்கு நிறைய ஊட்டத்தை வழங்கியது என்பது மறுப்பதற்கில்லை.

இதை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் எனது தம்பி அடுத்த மேசையிலிருந்து 10 பாரதியார் கவிதைகளை மனனஞ்செய்து கொண்டிருந்தான், அதுவும் சும்மா அல்ல, இடைவெளிக்கிடைவெளி அந்த வீட்டுவேலையைத் தந்த senior ஐ நன்கு திட்டியபடி. அதைப் பார்த்ததும் எனக்கு ஒரு சின்ன புன்முறுவல் பூத்தது.  அடடா நாங்கள் அன்று செய்தததைத் தான் இன்று வருபவர்களும் செய்கிறார்கள்,  நாங்கள் எங்கள் seniors ஐத் இந்த கண்டிப்புக்காக மனதுக்குள் திட்டினோம், நாங்கள் seniors ஆன போது எங்களையும் சிலர் திட்டித்தானே இருப்பார்கள்! “வாழ்க்கை ஒரு வட்டமடா”! - என்தம்பிக்கும் ஒருநாள் புரியும் இந்த வீட்டுவேலைகளின் அருமை! (எனக்கும் ஒரு நாள் புரிந்தது போல....)

இத்தனை இலக்கியங்கள் படிப்பது மட்டுமல்ல அதை அடுத்த பயிற்சி நாளில் விவாதத்தில் பயன்படுத்தவும் செய்தோம். Theory மட்டுமல்ல Practicals ம் எங்கள் பயிற்சியில் முக்கியம் பெற்றது. அண்மையில் வெற்றியின் சூத்திரம் பற்றிய ஆங்கில நூல் ஒன்றை்ப படிக்கும் போது அதில் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம், உங்களிடம் எவ்வளவு வளம் இருக்கிறதென்பது பிரச்சினையல்ல, அதை திறமையாகப் பயன்படுத்தும் திறன் உங்களிடம் இருக்கிறதா? என்பதே முக்கியமானது. வெறுமனே புத்தகங்களை வாசித்துவிட்டால் போதாது அந்த அறிவைச் சரியாகப் பயன்படுத்தும் திறன் தான் வெற்றியின் திறவுகோல். நாங்கள் இரண்டையும் இங்கு படித்தக்கொண்டோம்! 

இன்றைய கல்வித்திட்டத்தில் இணைப்-பாடவிதானச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், காரணம், நாம் பெறும் ஏட்டுக்கல்வியைப் பிரயோகப் படுத்த அதுவே சந்தர்ப்பமாக அமைகிறது. ஆனால் பல மாணவர்கள் இணைப்-பாடவிதானச் செயற்பாடுகளில் அதிகம் அக்கறைகாட்டாமல் இருப்பது மிகக்கவலையளிக்கிறது. படிப்பதைவிட்டு விட்டு ஏனைய செயற்பாடுகளில் ஈடபடவேண்டும் என்ற தேவையில்லை ஆனால் வெறும் புத்தகங்களும் பரீட்சைகளும், உயர்புள்ளிகளும் மட்டும் வாழ்க்கைக்குத் தேவையானதைத் தந்து விடாது. இந்த உண்மையை நான் உணர்ந்து கொண்டது இந்த அணியில் சேர்ந்ததன் பின்புதான். எனக்கு நல்ல நண்பர்களைத் தந்ததும், தோல்வியைக் கண்டால் துவண்டுவிடும் எனக்கு, அந்தத் தோல்வியையே தோற்கடித்துவிடும் மனத்திடத்தை உண்டாக்கியதும், மனிதர்களைப் படிக்கும் அனுபவத்தைத் தந்ததும் இந்த விவாத அணிதான் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லுவேன்..... வெற்றி தோல்வி நிறைந்த ஒரு பயணத்தின் ஆரம்பத்திற்கு அருமையான பயிற்சியை விவாத அணி எனக்கு வழங்கியது.....

தேடிச் சோறு நித‌ந்தின்று   
பல‌ சின்னஞ் சிறு கதைகள் பேசி 
மனம் வாடித் துன்பம் மிக உழ‌ன்று  
பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவமெய்திக்  
கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும்  
பல வேடிக்கை மனிதரைப் போல் 

இவனும் வீழ்வானென நினைத்தாயோ....

- மகாகவி சுப்ரமணிய பாரதி