Jun 16, 2011

இனி இலங்கைக்கு என்ன நடக்கும்? (சனல் 4 அண்மையில் வெளியிட்ட யுத்தக்குற்ற ஆதாரங்களின் தொகுப்புக் காணொளியின் பின்...)

உலகே அதிர்ந்து போனது.... காணொளியைப் பார்க்க முடியாது வேதனையில் எழுந்து சென்று விட்டவர்கள் பலர், காணொளியைக் கண்டபின்னர் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் பலர்,காணொளியைக் காணும் போதே தம்மையறியாமலேயே கண்ணீர் சிந்தியவர்கள் பலர். இது போலெல்லாம் உலகில் நடக்குமா? என்று யோசித்திருந்தவர்கள், இலங்கையிலே அதுவும் நமது இனமக்களுக்கு நடந்த இந்தக் கொடூரத்தைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். பல காணொளிகள் முன்பே வெளிவந்திருந்தாலும், இந்த தொகுப்பைக் காணும் போது நெஞ்சு கனக்கிறது... மனது “நீதி வேண்டும்” என்று கொதிக்கிறது. 

செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில் பிரித்தானியாவின் சனல் 4 ஒளிபரப்பிய “இலங்கை - கொலைக்களம்” எனத் தலைப்பிடப்பட்ட காணொளி இலங்கை யுத்தத்தின் இறுதி நாட்களின் மறுபக்கத்தை, பொதுமக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டதை, சரணடைந்த போராளிகள் சர்வதேச சட்டத்திற்கெதிராக கொல்லப்பட்டதை, பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதை, காணொளி மூலமும், நேரச் சாட்சிகளின் வாக்குமூலமாகவும் உலகத்திற்கு முன்னர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ( காணொளியை இங்கு காணலாம் - http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od ) 

உலகமே அதிர்ந்து போயுள்ள நிலையில் இன்று உலக நாடுகள் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றிற்காக இலங்கையை வலியுறுத்தி வருகிறது - இலங்கை அரசாங்கமும் வழமைபோல குற்றச்சாட்டுக்களை மறுத்தும், பரிசீலிப்போம் என்று சாக்குப் போக்குச் சொல்லி காலதாமதப்படுத்தியவண்ணம் இருக்கிறது. காணொளியைக் கண்டு அதிர்ச்சியுற்ற பிரித்தானிய வெளிவிவாகர அமைச்சர் அலிஸ்ரெயார் பேட் பின்வருமாறு தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். 

‎'“I was shocked by the horrific scenes I saw in the documentary that was broadcast on 14 June. ..... The recent UN Panel of Experts’ report, this documentary and previously authenticated Channel 4 footage, constitutes convincing evidence of violations of international humanitarian and human rights law. The whole of the international community will expect the Sri Lankans to give a serious and full response to this evidence.' - British Foreign Minister Alistair Burt. 

(முழுமையான அறிக்கையை இங்கு காண்க - http://ukinsudan.fco.gov.uk/en/news/?view=News&id=615115382 )

இதனைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் மீதான சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு நடவடிக்கையொன்றை எடுக்காததன் காரணமாக இந்தியா வெளிப்படையான ஆதரவை இலங்கைக்கு வழங்காது மௌனம் சாதிக்கிறது, மேலும் தமிழக சட்ட மன்றத்தில் இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம், நடைமுறையில் பயனேதுமில்லாவிட்டாலும், அரசியல் ரீதியில் ஒரு அழுத்தமாகவே காணப்படுகிறது. இவற்றைவிட ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு ஐரோப்பிய பாராளுமன்றம் தெரிவித்திருந்த ஆதரவும், அமெரிக்கா தெரிவித்த ஆதரவும் இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. சனல் 4ன் காணொளி ஒளிபரப்பானது இன்னும் இந்த அழுத்தத்தை அதிகரிக்கும். 

இவ்வேளையில் சனல் 4ன் காணொளி தொடர்பான இலங்கை அரசின் பதிலளிப்புக்களில் பல முரண்பாடுகளைக் காணலாம். இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலங்கை அரசாங்கமானது தனது தடவியல் நிபுணர்களைக் கொண்டு குறித்த காணொளியை மீண்டும் பரீசீலிக்கும் என்று கூறியிருந்தார். 

பின்னர் அல்-ஜஸீராவில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் ஆலோசகரும், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவ விஜேசிங்ஹ, யுத்தக் குற்றம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்காது, இக்காணொளிகள் போலியென்றும், இவை புலிகளினால் நடிக்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று முழு யானையை மண்பானைக்குள் மறைக்க முயற்சிக்கும் தனது படித்த முட்டாள்தனத்தை உலகிற்கு மீண்டுமொருமுறை பறைசாற்றியிருந்தார். (குறித்த காணொளியை இங்கு காண்க - http://www.youtube.com/watch?v=sdrCR-X4iH0 )

இது தவிர இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், மஹிந்த ராஜபக்ஷவின் தம்பியுமான கோட்டாபய, சனல் 4 தொலைக்காட்சிக்கு புலி ஆதரவு சக்திகள் இலஞ்சம் ஊட்டி இலங்கையினது, இலங்கையினது இராணுவத்தினதும் பெயரைக் கெடுக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினார். 

இவர்கள் எல்லோருடைய பதில்களிலுமிருந்து நாம் அறிய முடிவுது, இலங்கை அரசாங்கம் அதிர்ந்து போய் இருக்கிறது, செய்வதறியாது திகைத்துப் போயிருக்கிறது. அநேகமான காணொளி ஆதாரங்கள் இராணுவ வீரர்களினால் அவர்களது கைத்தொலைபேசியின் மூலம் எடுக்கப்பட்டவையே என சனல் 4 தெரிவிக்கிறது. ஆகவே யுத்தத்தை வென்றபோது (?! - முடிவுக்குக் கொண்டுவந்தபோது!) இலங்கை அரசாங்கமோ, ராஜபக்ஷவோ இப்பொழுது எழுந்திருக்கும் இந்த நிலையைப் பற்றி யோசித்தே இருக்க மாட்டார்கள், யுத்தக்குற்றம் பற்றி கொஞ்சமேனும் தெளிவிருந்திருந்தால் ஒருவேளை கைத்தொலைபேசிக் கமராக்கள் கடைசெய்யப்பட்டிருந்திருக்கும். 

குறித்த காணொளி போலியானது. இது இலங்கையின் பெயரைக் கெடுக்கும் நடவடிக்கை என மீண்டும் மீண்டும் புலம்பும் அரசாங்கம், நீங்கள் அவ்வளவு சுத்தமானவர்கள் என்றால் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு முன்வராதது ஏன் என்ற கேள்விக்குப் பதிலில்லை. சில மேதாவித்தனமான அரசியல்வாதிகள் சர்வதேச விசாரணை என்பது இலங்கையின் இறைமைக்கு எதிரானது என விதண்டாவாதம் புரிவார்கள். இறைமை என்பதே மக்களுடையது, அந்த மக்களே அநியாயமாக, அநீதியான முறையில் கொல்லப்பட்ட, சித்திரவதைசெய்யப்பட்ட, கற்பழிக்கப்பட்ட போது இறைமை என்பது யாரைப் பாதுகாக்கத் தேவைப்படுகிறது?

இன்னும் சில அதிமேதாவிகள், 30 ஆண்டு யுத்தத்தில் நடக்காத யுத்தக்குற்றமா இப்போது நடந்து விட்டது என வியாக்கியானம் பேசுகிறார்கள். இவர்களது முட்டாள்தனத்தக்கு விளக்கமளிப்பது வீண்வேலை. அவர்களிடம் ஒரே கேள்வி, சித்திரவதைசெய்யப்பட்டது, கற்பழிக்கப்பட்டது, கொல்லப்பட்டது உங்கள் சகோதரன் என்றால்? உங்கள் தாயார் என்றால்? உங்கள் சகோதரி என்றால்? உங்கள் மனைவி என்றால்? உங்கள் பிள்ளைகள் என்றால்? இவ்வளவு ஏன் உங்கள் இனம் என்றால் - இதே போன்ற அலட்சியமான கேள்விகளை எழுப்பவீர்களா?



இன்னும் சிலர் புலிகளை (தீவிரவாதிகளைக்) கொன்றது ஒரு குற்றமா என்று கேட்கிறார்கள். இங்கே பிரச்சினை தீவிரவாதிகளைக் கொன்றதல்ல. சர்வதேசச் சட்டங்களுக்கும், மனிதஉரிமைச் சாசனங்களுக்கும் எதிராக நடந்து கொண்டது தான். சிவிலியன்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது, வைத்தியசாலைகள் அறிந்தே தாக்கப்பட்டது, மனித உரிமைகளை மதிக்காது அரசாங்கம் செயற்பட்டது, சரணடைந்த போராளிகள் நீதிமுன் நிறுத்தப்படாது கற்பழிக்கப்பட்டது, கொல்லப்பட்டது ஆகிய குற்றச்சாட்டுக்களை சனல் 4 காணொளியும், ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையும் முன்வைக்கின்றன - இவை தான் பிரச்சினை. இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய காடியன் பத்திரிகையின் ஆசிரியம் எழுதியிருந்த ஒரு விடயம் முக்கியம் பெறுகிறது - 

That the LTTE assassinated presidents and invented the suicide belt, that the Tigers used civilians as human shields, is no defence from the charge that Sri Lankan soldiers summarily executed prisoners in their custody. Sri Lanka is trying to pretend these events are history, as the economy and tourism pick up. They are not. This evidence has to be faced. - The Guardian Editorial. 

(காடியன் ஆசிரியம் முழுமையான வடிவத்தை இங்கு காண்க - http://www.guardian.co.uk/commentisfree/2011/jun/15/sri-lanka-evidence-that-wont-be-buried ) 


இவை இவ்வாறு இருக்க பலபேர் இன்று கேட்கும் கேள்வி “இனி இலங்கைக்கு என்ன நடக்கும்?” இது தொடர்பில் ஐ.நா. சபையின் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசேர்க்கி இலங்கைவிவகாரம் தொடர்பிலான நடவடிக்கை பற்றி ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் கூறிய விடயம் முக்கியமானது. “இலங்கை அரசாங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அல்லது பாதுகாப்புச் சபை அல்லது மனித உரிமைகள் சபை அல்லது பொதுச்சபை ஆணையிடும் பட்டசத்தில் மட்டுமே பான் கீ மூனினால் நிபுணர் குழுவின் சிபாரிசின் படி சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றினை முன்னெடுக்க முடியும்” என அவர் தெரிவித்திருந்தார்.

இது தான் நிதர்சனம். இலங்கை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தைத் தோற்றுவித்த ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை ஆகவே நேரடியாக இலங்கையை யுத்தக்குற்றம் தொடர்பில் விசாரிக்கும் அதிகாரம் ஹேக்கிற்குக் கிடையாது. (இது பற்றி என்னுடைய முந்திய பதிவில் குறிப்பிட்டிருந்தேன் - http://nkashokbharan.blogspot.com/2010/12/blog-post.html ) ஆகவே ஐ.நா.வின் பாதுகாப்புச்சபை அல்லது மனித உரிமைகள் சபை அல்லது பொதுச்சபை ஆணையிடும் பட்சத்தில் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் இங்கு தான் சிக்கலே. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன ஆதரவளித்தாலும், இவ்வளவு ஏன் பெரும்பான்மை எண்ணிக்கையிலான நாடுகள் ஆதரவளித்தாலும் சீனா, ரஷ்யா என்ற 2 நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு இருப்பது இலங்கை அரசாங்கத்திற்குச் சாதகமானது. வீட்டோ அதிகாரம் உடைய இந்த 2 நாடுகளும் இலங்கைக்கு ஆதரவளிப்பதால் குறித்த சபைகளில் இலங்கைக்கெதிராக பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும் அவற்றை வீட்டோ செய்யும் அதிகாரம் இவற்றிடம் உண்டு. இதுதான் இலங்கையரசாங்கத்திற்கிருக்கும் ஒரேயொரு நம்பிக்கை. தற்போது மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருக்கிறார். அங்கு நடைபெறும் சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்குபெறச் சென்றிருக்கும் அவர் அங்கு ரஷ்ய மற்றும் சீனத் தேசத் தலைவர்களைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது, நிச்சயமாக யுத்தக் குற்றம் தொடர்பிலான ஆதரவு தேடலாகவே இந்தச் சந்திப்பு இருக்கும் என்பது வெள்ளிடைமலை. 

இஸ்ரேல் இலங்கைக்குக் ஆதரவு தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. உண்மையிலேயே அதை இலங்கைக்கான ஆதரவாக என்னால் பார்க்கமுடியவில்லை. பலஸ்தீன விடுதலையை உலகறிய ஆதரித்த, இஸ்ரேலை எதிர்த்த மஹிந்த ராஜபக்ஷவினுடைய அரசாங்கத்திற்கு அவர்கள் ஆதரவளித்தார்கள் என்பது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. உண்மையிலேயே இலங்கை மீதான நிபுணர் குழு அறிக்கையை ஆதரிப்பது பின்னர் தனக்கே ஆபத்தாக முடியும் என்ற இஸ்ரேலின் பயம்தான் இஸ்ரேலின் இந்த நிலைப்பாட்டிற்குக்காரணம் என்பது எனது கணிப்பு.

அநியாயத்திற்கு தலைவர்கள் துணைபோகலாம், நாடுகள் துணைபோகலாம், ஏன் வீட்டோ அதிகாரம் கூட துணைபோகலாம் ஆனால் அவற்றால் நியாயத்தையும், நீதியையும், சத்தியத்தையும் மறைக்கவோ, அழிக்கவோ முடியாது. அவை நியாயத்தை, நீதியை, சத்தியத்தைத் தோற்கடிப்பது தற்காலிகமானதே நிரந்தரமல்ல. 

ஒருவேளை இலங்கையில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டால், புதிய அரசாங்கம் யுத்தக் குற்றம் தொடர்பான சுதந்திர சர்வதேச விசாரணைக்கு அனுமதியளித்தால் நிச்சயம் நீதி பிறக்கும். இந்த நிலை வரவேண்டுமென்றால் இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுப்பது அவசியம், அந்த அழுத்தம் தொடரவேண்டும். குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் முகங்கொடுத்தே ஆகவேண்டும், பதிலளிக்கும் கடப்பாடுடைய ஒரு ஜனநாயக அரசாங்கம் அதிலிருந்து மாறுபட்டு பின்வாசலால் தப்பிக்கும் முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஜனநாயக தேசம் - தன்னுடைய நாட்டு மக்களின் பாதுகாப்பையே சவாலுக்குட்படுத்தும் ஒரு தேசத்திற்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுப்பதில் தவறேதுமில்லை. 

உங்கள் கை சுத்தமானது என்றால் அதை நிரூபிக்க நீங்கள் தயங்குவது ஏன்?


“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்”