Apr 30, 2010

முகப்புத்தகத்தில் இராமாயணம்!

FUN Message களை எனக்கு தினந்தோரும் அனுப்பிவைக்கும் குழுமத்திலிருந்து இன்று வந்த மின்னஞ்சல் ஒன்றில் இந்த அருமையான கற்பனை இடம்பெற்றிருந்தது. இராமாயணம் முகப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்பதை அழகாக உருவாக்கிருக்கிறார்கள். உருவாக்கியது யார் என்று தெரியவில்லை. உங்களை அனைவரோடும் இதைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்! 


கற்பனை என்பது ஒரு அரிய கலை, அது யாவருக்கும் சிறப்பாக வாய்ப்பதில்லை. இந்த வித்தியாசமான கற்பனைக்குச் சொந்தக்காரருக்கு எனது பாராட்டுக்கள்!

Apr 29, 2010

சொற்சமர்க் கால ஞாபகங்கள்! - (01) ஒரு பயணம் தொடங்குகிறது...

றோயல் கல்லூரி - என் வாழ்வின் முக்கியமான அத்தியாயாம், அது எனக்குத் தந்த இனிமையான விடயங்களில் முதன்மையான அனுபவம் - விவாதம்! நான் றோயல் கல்லூரி விவாதக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டது தரம் 9ல். அது வரை பேச்சுப்போட்டிகளில் மட்டுமே நான் பங்குபற்றி வந்தேன். தரம் 9ல் நான் விவாதக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், தரம் 10ன் இறுதிக்காலத்தில் தான் விவாத அணியில் உதிரியாக இடம் கிடைத்தது. றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணி 55 வருட பாரம்பரியமும், தனித்துவமும் கொண்டது, அத்தகைய பெருமையான அணியில் இலகுவில் இடம்பெற்றுவிட முடியாது என்பது வேத்தியர்கள் அனைவரும் அறிந்த உண்மை. சில வேளை கழகத்தில் இணைந்து 2-3 ஆண்டுகள் கழிந்துங்கூட அணியில் இடம்கிடைப்பது நிச்சயமானது அல்ல. தனிப்பட்ட திறமைகளுக்கப்பால், குழுரீதியான ஒருமித்த செயற்பாடுகளே அணித்தெரிவில் முக்கியமாகக் கருதப்படுகிறது - பேச்சுப் போட்டிக்கும், விவாதப் போட்டிக்கும் இடையேயான அடிப்படை வித்தியாசமே அதுதான்.

என்னுடன் ஆரம்பத்தில் என்னுடைய தரத்திலிருந்து (batch) 6 பேர் விவாதக் கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார்கள். முதலில் சிவசங்கரனும், நானும், ராகவனும் தெரிவுசெய்யப்பட்டோம். அடுத்த பிரிவில் விசாகனும், முகுந்தராஜீம், ராகுலனும் தெரிவு செய்யப்பட்டார்கள். எங்களுக்கு அடுத்த தரத்திலிருந்து (next batch) கபிலனும், உமாசங்கரனும், அர்ஜீனரும் தெரிவுசெய்யப்பட்டார்கள். ஒவ்வொரு புதன்கிழமையும் 2 மணி முதல் 5 மணி வரை பயிற்சி விவாதங்கள் இடம்பெறும் - ஆனால் அப்போதெல்லாம் அதில் பங்கு கொள்வதில் எனக்கு அவ்வளவு ஆர்வமிருக்கவில்லை, காரணம் மிக எளிமையானது, அங்கு எமக்கு விவாதிக்க வாய்ப்புக் கிடைப்பதே அரிது. எமக்கு முன்னைய தரத்திலிருந்து விவாதக் கழகத்திற்கு யாரும் தெரிவு செய்யப்படாவிட்டாலும், அதற்கு முன்னைய தரத்திலிருந்து விவாதக் கழகத்திலும், அணியிலுமாக மொத்தம் 6 பேரும், அவர்களுக்கு முன்னைய தரத்திலிருந்து ஒருவரும், அதற்கும் முன்னைய தரத்திலிருந்து மூவரும் அணியிலிருந்தனர். ஆகவே அவர்களது பயிற்சி விவாதங்களைப் பார்ப்பதே எங்களின் ஆரம்பகட்டப் பயிற்சி. அன்றைக்கு என்னவோ அதன் அருமையும் அவசியப்பாடும் எனக்குத் தெரியவில்லை - ஒவ்வொரு பயிற்சி நாள் வரும் போதும் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லிவிட்டு பாடசாலைவிட்டது வீட்டுக்குப்போய்விடுவேன். இது தரம் 9ன் இறுதிக்காலம் முதல் தரம் 10ன் இடைக்காலம் வரை நடந்தது. 

இப்படியே அடிக்கடி பயிற்சிக்கு கட் அடித்துக்கொண்டே இருந்தேன் அதற்காக அன்று எனக்குள் நான் உருவாக்கிக்கொண்ட நியாயம் - சும்மா விவாதங்களில் மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதால் பயனில்லை - எங்களைப் பேச விட்டால்கூடப் பரவாயில்லை. ஆனால் பின்பு மற்றவர்களின் விவாதங்களைப் பார்க்கக்கிடைக்காதா என்று நான் எண்ணி வருந்திய காலங்கள் நிறைய வந்தது (அவை பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் பின்னர் எழுதுகிறேன்). இவ்வாறே அடிக்கடி கட் அடித்துக்கொண்டிருந்த எனக்கு ஒரு முறை ஒரு பயிற்சி விவாதத்திற்குப் போனபோது தான் புதிய ஒரு செய்தி கிடைத்தது, அதாவது எங்களுடைய தரத்திலிருந்து சிறப்பாகச் செயற்படும் விவாதிகள் விரைவில் விவாத அணியில் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதே அது. எனக்கோ எப்படியாவது நான் அணியில் இடம்பிடித்துவிட வேண்டும் என்கிற ஆர்வம், ஆனால் என்னுடைய தரத்திலிருந்தே போட்டிக்கு 5 பேர் இருந்தார்கள். இந்த ஐவரில் நான் மிகக்கடினமான போட்டியாகக் கருதியது சிவசங்கரனையும், விசாகனையும் தான். சிவசங்கரன் கடுமையான விவாதியல்ல ஆனால் குளிர்மைகவே தான் சொல்லவந்ததைச் சொல்லிவிடக்கூடிய திறமைசாலி. விசாகன் இன்னும் வித்தியாசமானவன், நகைச்சுவை, நக்கல் மற்றும் கவித்துவமான வரிகள் என விவாதத்தை ஜனரஞ்சகப்படுத்துவதில் வல்லவன், இன்று வரை நான் கண்டு வியக்கும் விவாதிகளில் ஒருவனும் கூட, அவன் என்னுடைய இனிய நண்பன் என்பதில் மகிழ்ச்சி ஆனால் அந்த நெருங்கிய நட்புக்கு அத்திவாரமிட்டது இந்த விவாத அணிதான். இவர்கள் இருவரும் கடுமையான போட்டியாக இருக்க, உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நான் கொஞ்சம் பயந்துதான் போனேன், இவ்விருவரை விட எனக்கு இருந்த ஒரே advantage நான் அதிகளவில் பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றியிருந்ததுதான். ஆனால் ஒன்று அந்த அறிவிப்பு வந்த நாள் முதல் எனது புதன்கிழமைகள் விவாதத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டன.

நான் பல விவாத அணிகளைப் பின்னைய நாட்களில் அதிகமாகக் கண்டிருக்கின்றேன். அவற்றிற்கும் றோயல்கல்லூரி விவாத அணிக்குமான வித்தியாசத்தைத் தேடிப்பார்க்கையிலே தான் சில அடிப்படை வேறுபாடுகள் எனக்குத் தெட்டத்தெளிவாகத் தென்பட்டன. அநேகமான பாடசாலைகள் சனிக்கிழமை விவாதப் போட்டியென்றால், வெள்ளிக்கிழமைதான் தமது அணிகளைத் தெரிவுசெய்கின்றன. ஆனால் எம்மைப் பொறுத்தவரை அந்தக் கட்டகம் வித்தியாசமானது, தெரிவுச்சுற்றுகள் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்டு, சிறப்பானவர்கள் கழகத்திற்குத் தெரியப்பட்டு, அதிலிருந்து பயிற்சிக்காலத்தில் சிறப்பாகச் செயற்படுபவர்கள் அணிக்குத் தெரிவுசெய்யப்படுகிறார்கள், இதனால் எங்கள் அணியில் ஒரு consistency இருப்பதைக் காணமுடியும். சில பாடசாலைகள், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பான, மிகச் சிறப்பான அணிகளைக் கொண்டிருந்தன ஆனால் அந்த அணியிலே இருந்தவர்கள் பாடசாலைக்காலம் முடிந்து போய்விட்டதும் அந்த அணியும் மறைந்துவிடும். கடந்த 5 ஆண்டுகளும் அப்படி மறைந்து போன அணி என்றால் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி அணியைக் குறிப்பிடலாம், 2004-06 காலப்பகுதியில் விவாதப் போட்டிகளில் இருக்கும் மிகச்சவாலான அணியாக அது காணப்பட்டது, ஆனால் பின்பு அவ்வணி போட்டிகளில் பங்கேற்பதே அரிது. இதுபோலவே புனித சூசையப்பர் கல்லூரி அணியும். அன்று விவாதப் போட்டிகள் மீது இருந்த craze இப்போது குறைந்துவிட்டதோ என்றே தோன்றுகிறது....

றோயல் கல்லூரி விவாதக் கழகத்தில் இணைவது இன்னொரு extra பாடம் ஒன்று படிப்பது போன்றது. பயிற்சியின் ஆழம் அதற்காகப் படிக்கவேண்டிய விடயங்கள் என பிழிந்து எடுத்துவிடுவார்கள் seniors. மிகக்குறுகிய காலத்துள் தமிழ் இலக்கியம், அரசியல் என நிறைப் புத்தகங்களைப் படிக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம் (அதன் நன்மை பின்புதான் எமக்குப் புரிந்தது). நான் கம்பராமாயணத்தைப் படிக்கத் தொடங்கியதும் இப்படித்தான், சங்க இலக்கியங்களை நயக்கத் தொடங்கியதும் இப்படித்தான். எங்கள் காலகட்டத்தில் இலக்கிய விவாதங்களில் சிறந்த அணியாக நாங்கள் விளங்கினோம் என்பதை நான் பெருமையோடு சொல்வேன், அதற்கான அடித்தளம் எங்கள் பயிற்சிக் காலத்தில் தான் இடப்பட்டது.

சரி, அணித்தெரிவுப் போட்டிக்குப் போவோம் - உண்மையில் அது போட்டியேயல்ல, எங்களிடையே போட்டியை ஏற்படுத்துவது எங்கள் seniors ன் நோக்கமுமல்ல, அவர்கள் சும்மா கொடுத்த அந்த hint ஐ நான் தான் போட்டியாகக் கருதிவிட்டேனோ என்று எனக்குத் தோன்றியது. எது எப்படியோ, அதன் பின் ஒவ்வொரு புதனும் விவாதப்பயிற்சிகளுக்குச் சென்றேன், இடையில் ஒரு முறை எமக்கும் விவாதிக்கும் வாய்ப்புக் கிடைத்தது, ஆனால் அந்தத் திடுக்கிடும் அதிர்ச்சியை நாம் யாரும் எதிர்பார்க்கவில்லை என்னுடைய அதிர்ஷ்ட நேரம் தலைப்போ அரசியல் சம்பந்தமானது, அதுவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் சம்பந்தமானது, பிய்த்த உதறிவிட்டேன் என்று நம்புகிறேன். தொடர்ந்தும் அடிக்கடி எமக்குப் பயிற்சி விவாதங்களில் ஈடுபட வாய்ப்புக்கள் மலரத் தொடங்கியது கூடவே எனக்கு விவாதத்தின் மீதான அதீத பற்றும் மலரத்தொடங்கியது.

தரம் 10ன் இறுதிக்காலம் என்று நினைக்கின்றேன், புனித பேதுருக் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றத்தினால் நடத்தப்பட்ட விவாதப் போட்டியில் எனது அணியில் 6வது விவாதியாக (உதிரி விவாதி) அறிமுகம் பெற்றேன். அந்தத் தொடரில் வாதிடும் வாய்ப்பு எனக்குக்கிடைக்கவில்லை. அந்தத் தொடரின் இறுதிப்போட்டிக்கு எமது அணி தகுதி பெற்றது ஆனால் இறுதிப் போட்டியை வேறொருநாள் நடத்துவதாகக் கூறியவர்கள் இன்று வரை நடத்தவேயில்லை. ஆக முடியாத ஒரு விவாதச் சுற்றுப்போட்டியுடன் எனது விவாத அணிப்பயணம் தொடங்கியது......

பலருக்குக் காதலைப் பற்றி எழுதும் போது மகிழ்ச்சி பிறக்கிறது, எனக்கு நான் காதலித்த விவாதத்தைப் பற்றி, அந்த இனிய ஞாபகங்களை மீட்டுவதில் ஒரு மகிழ்ச்சி!

Apr 13, 2010

இனிய தமிழ்-சிங்களப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

அனைவருக்கும் இன்பம் பொங்கும் விகிர்தி வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்!!