Dec 29, 2010

2010ன் எனது தெரிவுகள்!


எம்மைக் கடந்து போகிறது இன்னொரு வருடம்! 2010 தனிப்பட்ட வகையில் எனக்கு பாரிய மாற்றத்தை, ஏமாற்றத்தை தந்த வருடம் ஆனால் அதுவும் கடந்து போகிறது. இந்த வருடத்திலிருந்து எனது தெரிவுகள் -

********************************************************

வருடத்தின் சோகம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாரிய பாராளுமன்றத் தேர்தல் வெற்றிதான் என்னைப் பொருத்தவரை இந்த வருடத்தின் சோகம். இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளும், எடுத்துக்கொண்டிருக்கும் நடவடிக்கைகளும் இந்த அழகிய தேசத்தை சீரழித்துக்கொண்டிருக்கிறது என்பதில் ஐயமேயில்லை. பொருளாதார ரீதியில் அதளபாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மத்திய வங்கி வீதங்களில் வளர்ச்சியைக்காட்டலாம் ஆனால் பணவீக்கத்தின் விளைவுகளைச் சாதாரண பொதுமக்களே வெளிப்படையாக உணரும் நிலை வந்துவிட்டது. தேங்காயை இறக்குமதிசெய்யுமளவுக்கு பயிர்ச்செய்கை பின்னிலையடைந்துவிட்டது. முட்டைகளும், கோழிக்குஞ்சுகளும் இறக்குமதி செய்யவேண்டிய அளவுக்கு கால்நடை வளர்ப்பு பின்னிலையடைந்துவிட்டது. வெளிநாட்டு உறவுகளில் பாரிய விரிசல்களும், தொய்வும், தோல்வியும் ஏற்பட்டிருக்கிறது. 

மொத்தத்தில் இந்த அரசாங்கம் தேசத்தை வீழ்ச்சிப்பாதையில் இட்டுச்செல்கிறது என்பதில் ஐயமில்லை. பணவீக்கத்தினையும், உற்பத்தி வீழ்ச்சியினையும், துறைமுகம், பாதைகள் அமைத்து சரிப்படுத்திவிடலாம் என்று யாராவது நினைத்தால், அவர்களது அறியாமைக்காக நான் வருத்தப்படப் போவதில்லை. மேலும் ஐஃபா போன்ற தனியார் நிகழ்வகளுக்காக அரச பணத்தை வீணடித்தமை, அதற்கு சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்று சப்பைக்கட்டு கட்டியமை, கடைசியல் நிகழ்வு படு தோல்வியடைய ஜனாதிபதி கூட நிகழ்வில் கலந்துகொள்ளாமல் விட்டமை. இனங்களுக்கிடையில் சமரசம், ஒற்றுமை ஏற்படுத்த வேண்டிய காலகட்டத்தில் தேசிய கீதத்தின் தமிழ்ப்பதிப்பை நீக்க முயன்றமை, யாழில் மாணவர்களைக் கட்டாயப்படுத்திச் சிங்களத்தில் தேசிய கீதத்தைப் பாடச்செய்தமை என்று இந்த அரசு ஆடும் தகிடுதத்தங்கள் தேசத்தை முன்னேற்றப்பாதையிலா இட்டுச் செல்கிறது?

********************************************************

வருடத்தின் மகிழ்ச்சி



தனியார் பல்கலைக்கழகங்களை இலங்கையில் ஆரம்பிக்க உயர்கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கதும் மகிழ்ச்சிகரமானதுமாகும். உயர்தரம் சித்தியடையும் ஏறத்தாழ 200 000 பேரில் வெறும் 20 000 பேருக்கே அரச பல்கலைக்கழகங்களில் இடம் இருக்கிறது மீதியுள்ள 90 வீத மாணவர்களின் நிலை என்ன என்பது பற்றிப் பலர் சிந்திப்பதில்லை. எல்லா மாணவர்களுக்கும் இலவச உயர் கல்வியளிக்க அரசாங்கத்தால் இயலாது என்பது யதார்த்தமானது ஆகையில் தனியார் பல்கலைக்கழகங்களின் தேவை என்பது மறுக்கப்பட முடியாது. நீண்ட காலமாக இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் பலவித போராட்டங்களால் அவை தடுக்கப்பட்டது, இம்முறை இவற்றையெல்லாம் தாண்டி இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது பாராட்டுக்குரியது. கோடிக்கணக்கான பணத்தை கல்விக்காக நாம் வருடாவருடம் ஐக்கிய ராஜ்ஜியம், இந்தியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு வழங்கி வருகிறோம் ஆக இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டால் அது பொருளாதார ரீதியிலும் பண வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் என்பதுடன் அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல இயலாத பெரும்பான்மையளவு மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பையும் இலகுப்படுத்தும். இந்த விடயம் தொடர்பில் உறுதியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பாராட்டுக்குரியவர்.

********************************************************

வருடத்தின் அதிர்ச்சி



சந்தேகமேயில்லாமல் விக்கி லீக்ஸின் கேபிள்கேட்! விக்கி லீக்ஸ் தொடர்பில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு. அதைப் பதிவு செய்வதற்கான களம் இதுவல்ல ஆனால் நிச்சயமாக உலகையும், உலக நாடுகளின் அரசியலையும், அரசியல்வாதிகளையும் கேபிள் கேட் ஆட்டிய ஆட்டம் பயங்கரமானது என்பதில் ஐயமில்லை.


********************************************************

வருடத்தின் சிறந்த விளையாட்டுப் போட்டித் தருணம்


என்னைப் பொருத்த வரையில் 2010ன் சிறந்த விளையாட்டுப் போட்டித் தருணம் மார்ச் மாதத்தில் செல்ஸி காற்பந்தாட்டக் கழகம் 3 வருடங்களின் பின் பெற்ற இங்லிஷ் ப்ரீமியர் லீக் வெற்றியும், கழகத்தின் 105 வருட வரலாற்றில் பெற்ற முதல் ப்ரீமியர் லீக் மற்றும் எஃப்.ஏ.கோப்பை டபிள் வெற்றியும் ஆகும்! செல்ஸி கழக ஆதரவாளனான எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்த தருணம் இது! 


********************************************************

வருடத்தின் சோகமான விளையாட்டுப் போட்டித் தருணம்


என்னைப் பொருத்தவரை கடந்த ஆண்டின் சோகமான விளையாட்டுப் போட்டித் தருணம் காற்பந்து உலகக்கிண்ணப் போட்டியிலிருந்து இங்கிலாந்து வெளியேறிய தருணம். இங்கிலாந்து தேசிய காற்பந்தாட்ட அணியின் உலகக்கோப்பை வரலாற்றில் மிக மோசமான தோல்வியை (4-1) பலமான ஜேர்மனிக்கெதிராக அடைந்து மோசமான முறையில் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது இங்கிலாந்து அணி. உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றக்கூடிய அணிகளுள் ஒன்றாக போட்டிகள் ஆரம்பமாக முன் கணிக்கப்பட்ட அணி பரிதாபமாக வெளியேறியது ஒவ்வொரு இங்கிலாந்துக் காற்பந்தாட்ட ரசிகனுக்கும் பாரிய சோகத்தை ஏற்படுத்திய தருணமாகும்.


********************************************************

வருடத்தின் சிறந்த திரைப்படம்




என்னைப் பொருத்தவரையில் 2010ன் சிறந்த திரைப்படமாக 2 படங்களைக் குறிப்பிடுவேன். முதலாவது, விண்ணைத் தாண்டி வருவாயா?. இரண்டாவது, அங்காடித் தெரு. பொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்னை உணர்வு ரீதியாகப் பாதிப்பது மிகக் குறைவு ஆனால் இந்த இரண்டு படங்களும் என்னை உணர்வு ரீதியாக மிகப் பாதித்தது. இந்த வருடத்தில் நான் பார்த்த திரைப்படங்களுள் இந்த இரண்டு படங்களும் சிறப்பானவை. 


********************************************************

வருடத்தின் இனிய பாடல்





நிறைய பாடல்களை இந்த 2010ல் கேட்டுவிட்டேன். ஆங்கிலத்தில் புதிதாக முளைத்திருக்கும் இளம் பாடகனான ஜஸ்டின் பீபரின் பாடல்கள் என்னைக் கவர்ந்து வருகிறது இதை விட ஜி.வி.பிரகாஷ் குமாரின் பூக்கள் பூக்கும் தருணம், கதைகள் பேசும் விழியருகே, உன் பேரைச் சொல்லும் போதே ஆகிய பாடல்களும், விஜய் அண்டனியின் அவள் அப்படியொன்றும் அழகில்லை பாடலும், ஏ.ஆர்.ரஹ்மானின், ஹோசனா, மன்னிப்பாயா, அன்பில் அவன், ஆரோமலே, உசிரே போகுதே, கள்வரே கள்வரே, வீரா வீரா, இரும்பிலே ஒரு இதயம் முளைக்கிதோ, காதல் அணுக்கள், கிளிமஞ்சாரோ ஆகிய பாடல்கள் இந்த வருடத்தில் நான் கேட்டவற்றுள் எனக்குப் பிடித்தவை. இவற்றுள் இந்த வருடத்தின் இனிய பாடலாக “மன்னிப்பாயா...” பாடலைச் சொல்வேன், அந்த இசையும், ஷ்ரேயா கோஷல் மற்றும் ரஹ்மானின் குரலும் அது தரும் உணர்வும் அலாதியானது!


********************************************************

வருடத்தின் சிறந்த பத்திரிகை

சந்தேகமில்லாமல் த சண்டே லீடரைச் சொல்வேன். இலங்கையிலுள்ள ஏனைய பத்திரிகைகள் ஏறெடுத்துப் பார்க்கக்கூடப் பயப்படும் உண்மைகளை துகிலுரித்துக் காட்டுவதில் லீடர் சிறப்பாகச் செயற்படுகிறது. லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட முன் இருந்த லீடருக்கும் இப்போது இருக்கும் லீடருக்கும் தரத்தில் வேறுபாடிருந்தாலும், இலங்கையிலுள்ள பத்திரிகைகள் மத்தியில் தைரியமாகச் செயற்படும் பத்திரிகையாக லீடரைச் சொல்லலாம். பல ஊழல்களை, முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவதில் சன்டே லீடரின் பங்கு சிறப்பாக இருந்திருக்கிறது.


********************************************************

வருடத்தின் கேவலம்



ஒரு ஜனநாயக தேசத்தில், தனது பிள்ளைக்கு சுகயீனம் என்பதால் விடுப்பு எடுத்த சமுர்த்தி அதிகாரி ஒருவரை அமைச்சர் ஒருவர் மரத்தில் கட்டித் தண்டித்த கேவலம் இலங்கையில் மட்டும் தான் நடக்கும். மேர்வின் சில்வா இது ஜனநாயக தேசம் என்பதை மறந்து தன்னை மன்னராட்சியின் மந்திரி என்று நினைத்து(?!) ஒரு அரச ஊழியரை மரத்தில் கட்டி தண்டித்தானது அந்த ஊழியரின் தனிமனித உரிமையை மீறிய செயல் மட்டுமல்ல ஜனநாயகம், நீதித்துறை, சுதந்திரம் போன்றவற்றிற்கெதிரான சவாலும் கூட. இது போன்ற எத்தனை கேவலங்களை இலங்கை சந்திக்கப் போகிறதோ? இதற்குப் பிறகும் மக்கள் விவகார மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் - கொடுமை!


********************************************************

வருடத்தின் சிறந்த நாடகம்




விமல் வீரவன்சவின் ஐ.நா.வுக்கெதிரான உண்ணாவிரதமும், விமலின் மகள் தந்தை வீட்டுக்கு வராவிட்டால் சாப்பிடமாட்டேன் என்று அடம்பிடித்ததால் ஜனாதிபதி விமலை நேரில் உண்ணாவிரதம் இடம்பெற்ற ஸ்தலத்திற்குச் சென்று நீர் அருந்தச் செய்து உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்தது தான் இந்த ஆண்டின் மிகச் சிறந்த (கேவலமான) நாடகம்! இவ்வளவற்றுக்கும் விமல் சேலைன் ஏற்றியபடி தான் உண்ணாவிரதமிருந்தார். நான் விடுதலைப் புலிகளையோ ஆயுதப் போராட்டத்தையோ என்றும் ஆதரித்ததில்லை ஆனால் விமல் போன்றவர்களெல்லாம் உண்ணாவிரதம் என்றால் என்ன என்பதை திலீபனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆயுதம் ஏந்திப் போராடுவதை விட உண்ணாவிரதமிருந்து போராடத் தான் அதிக மனஉறுதியும், பலமும் தேவை, விமலின் சேலைன் ஏற்றிய உண்ணாவிரதமெல்லாம் படிப்பறிவில்லாத மக்களை ஏமாற்றும் செயலே தவிர வேறொன்றுமில்லை.


********************************************************

வருடத்தின் சிறந்த மனிதன்



சி.என்.என். இன் வருடத்தின் முதற் பத்து ஹீரோக்களுள் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்ட நாராயணன் கிருஷ்ணன் தான் என்னைப் பொருத்தவரை இந்த ஆண்டின் சிறந்த மனிதன். மனநிலைகுன்றியவர்களுக்கும், வீடில்லாதவர்களுக்கும் கிருஷ்ணன் செய்யும் உதவி அளப்பரியது. தினமும் அவர்களுக்கு அன்னமிட்டு, அவர்களைச் சுத்தம் செய்து அவர்களை வாழவைக்கும் புனித செயலை கிருஷ்ணனும் அவரது நண்பர்களும் செய்கிறார்கள். கிருஷ்ணனுக்கும் அவரது குழுவுக்கும் தலைவணங்குகிறேன்!

********************************************************

Dec 11, 2010

நீக்கப்படவிருக்கும் இலங்கையின் தமிழ்த்தேசிய கீதமும், அமைச்சரவையின் அப்பட்டமான பொய்களும்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள தேசிய கீதத்தின் தமிழ்ப் பதிப்பை நீக்குவதற்கு அமைச்சரவை முடிவெடுத்திருப்பதாக Sunday Times செய்தி வெளியிட்டிருக்கிறது. 


மேற்படி செய்தியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேறு ஒரு தேசத்திலும் 2 மொழிகளில் தேசிய கீதம் இல்லை என்று அமைச்சரவையில் தெரிவித்ததாகவும், அதனை ஆதரித்த விமல் வீரவன்ச, 300ற்கும் மேற்பட்ட மொழிகளுடைய இந்தியாவில் கூட ஹிந்தியில்தான் தேசிய கீதம் இருப்பதாகக் கூறியதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது. அமைச்சரவையில் வாசுதேவ நாணயக்கார, றாஜித சேனாரத்ன ஆகிய அமைச்சர்கள் இருவர் மட்டுமே தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை நீக்கும் முன்மொழிவுக்கு மறுப்பாகக் கருத்துத் தெரிவித்ததாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது.

இந்தப் பதிவை நான் எழுதக்காரணம் அமைச்சரவையின் முடிவைக்கண்டிப்பதற்கு மட்டுமல்ல மாறாக, பொய்யான கருத்துக்களைக்கூறி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், விமல் வீரசின்ஹவும் மக்களை ஏமாற்ற விளைந்ததைச் சுட்டிக்காட்டவுமேயாகும்.

முதலாவதாக ஜனாதிபதி, உலகில் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் வேறு தேசமெதிலும் இல்லை என்று கூறிய கருத்து, அப்பட்டமான பொய். கனடாவின் தேசிய கீதம் 3 மொழிகளில் காணப்படுகிறது. ஆங்கிலம், ஃபிரெஞ்ச் மற்றும் இனுக்டிடுட் ஆகிய மொழிகளில் கனேடிய தேசிய கீதம் பாடப்படுகிறது. சுவிற்சலாந்துத் தேசிய கீதம் சுவிற்சலாந்தின் நான்கு உத்தியோகபூர்வமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜேர்மன் மொழியில் முதலில் எழுதப்பட்டிருந்தாலும், சுவிஸ்ஸின் ஏனைய உத்தியோகபூர்வ மொழிகளான ஃபிரெஞ்ச், இத்தாலியன் மற்றும் றொமான்ஷ் ஆகிய மொழிகளில் சுவிஸ் தேசிய கீதம் மொழிபெயர்க்கப்பட்டு பாடப்படுகிறது. இதை விட தென்னாபிரிக்க தேசிய கீதத்தில் ஒரே கீதமாக இருப்பினும் அது தென்னாபிரிக்காவில் பேசப்படும் 5 மொழிகளை கொண்டு எழுதப்பட்டுள்ளது. தென்னாபரிக்கத் தேசிய கீதம் ஸோசா (முதற் பந்தியின் முதலிரு வரிகள்), செசோதோ (முதற்பந்தியின் கடைசி இரண்டு வரிகள்), சுலு(இரண்டாம் பந்தி), அஃப்ரிகான்ஸ் (மூன்றாம் பந்தி) மற்றும் ஆங்கிலம் (நான்காம் பந்தி) ஆகிய ஐந்து மொழிகள் சேர்த்து எழுதப்பட்டது.

அடுத்ததாக விமல் வீரவன்ச சொன்ன கருத்து - “இந்தியத் தேசிய கீதம் ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது” - அடுத்த அப்பட்டமான பொய், இதை இவர் சொன்னதற்குக் காரணம், இந்தியாவில் பெரும்பான்மையானோரின் மொழி ஹிந்தி, ஆகவே பெரும்பான்மையானோரின் மொழியிலேயே தேசியகீதம் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட இந்தியாவின் தேசிய கீதம் ஹிந்தியில் தான் இருக்கிறது என்ற அப்பட்டமான பொய்யைச் சொல்லியிருக்கிறார். இந்தியத் தேசிய கீதம் பெங்காலியில் (சமஸ்கிருதப்படுத்தப்பட்ட பெங்காலி) நோபெல் பரிசு பெற்ற கவிஞர் ரபீந்திரநாத் தாகூரினால் எழுதப்பட்டது. ஆக பெரும்பான்மை இந்தியர் பேசும் மொழியில் அல்ல இந்தியாவின் தேசிய கீதம் பாடப்படுகிறது. இவ்வளவு ஏன், சீனர்கள் பெரும்பான்மையாகவுள்ள சிங்கப்பூர் தேசிய கீதம் மலேயிலேயே எழுதப்பட்டது, அதற்கு சீன, தமிழ் மற்றும் ஆங்கில உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்புக்கள் உண்டு எனினும் அது மலேயிலேயே பாடப்படுகிறது. ஆகவே பெரும்பான்மையோரின் மொழியிலேயே தேசிய கீதம் அமையவேண்டும் என்ற அவசியம் இல்லை.

அமைச்சர்களாக இருப்பவர்கள் மக்களை முட்டாள்கள் என்று நினைத்தக்கொண்டிருக்கக்கூடாது. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்ற நம்ப நாங்கள் படிப்பறிவில்லாதவர்கள் அல்ல.

இலங்கைத் தேசிய கீதத்தின் தமிழ்ப்பதிப்பை நீக்கியதன் மூலம், அரசாங்கம் தனது தமிழின விரோத நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிக்காட்டியுள்ளது. யுத்தத்தின் பின்னரான மீளிணக்கப்பாட்டுச் செயற்பாடுகளில் இது பாரிய பின்னடைவாகும், அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கிச் செயற்படச்சம்மதித்து ஒரு நாள் கூட ஆகமுன் இத்தகைய முடிவானது தமிழ் மக்களை அதிருப்திக்குள்ளாக்கும் என்பதை அரசாங்கம் மறந்துவிட்டது போலும்.

இனவாத அரசியலை இலங்கைத் தலைவர்கள் கைவிடும் வரை இலங்கையின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.

"Racism is man's gravest threat to man - the maximum of hatred for a minimum of reason."  ~Abraham Joshua Heschel

**************************************************************************

அமைச்சரவை நீக்குவதற்கு முடிவெடுத்த இலங்கைத் தேசிய கீததத்தின் தமிழ்ப்பதிப்பு (இனி சுவடியாகப் பாதுகாக்கப்படவேண்டியதுதானா?!)

ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்காநமோ நமோ நமோ நமோ தாயே

நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே



Dec 5, 2010

யுத்தக் குற்றம் என்றால் என்ன?





அண்மைக்காலங்களாக தமிழர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் சொற்களில் /  விடயங்களில் ஒன்று யுத்தக் குற்றம் (war crime). இது யுத்தக் குற்றம் என்றால் என்ன என்பது பற்றிய ஒரு சுருக்கமான பார்வை.


யுத்தக் குற்றம் என்பதை சுருக்கமாக பின்வருமாறு வரையறுக்கலாம் :

யுத்தக் குற்றம் என்பது யுத்தவிதிகளை மீறும் தனிநபர்கள், ராணுவம், சிவிலியன்கள் என்பவருக்குரிய சர்வதேசச் சட்டங்களின் கீழான தண்டனைக்குரிய குற்றமாகும்.

யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு 20ம் நூற்றாண்டிலேயே தொடங்கியது அதிலும் குறிப்பாக 2ம் உலக யுத்தத்தின் பின்னரே யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு வலுப்பெறத்தொடங்கியது எனலாம். 2ம் உலப் போரின் போது நாட்ஸிப் படைகள் யூதர்களை (பொதுமக்களை) கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தது (இன அழிப்பு), ஜப்பானியப் படைகள் சிவிலியன்களையும், அரசியற்கைதிகளையும் இழிவான விதத்தில் நடத்தின, கொன்று குவித்தன. 2ம் உலக யுத்தம் நேசநாடுகளால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் நேச நாடுகள் மேற்கூறிய யுத்தக் குற்றங்களை இழைத்ததாக நம்பப்படும் ஜேர்மனியப் படைத்தளபதிகளையும், ஜப்பானியப் படைத்தளபதிகளையும் கைது செய்து, சட்டப்படி மரண தண்டனை நிறைவேற்றின. 1945 மற்றும் 1946ல் இடம்பெற்ற “நுரெம்பேர்க் விசாரணைகளின்” பின்னர் 12 நாட்ஸித் தளபதிகளுக்கு யுத்தக் குற்றம் இழைத்தமைக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதே போன்று 1948 ஜப்பானின் டோக்கியோவில் யுத்தக் குற்றம் இழைத்த 7 தளபதிகளுக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது (நேச நாடுகள் ஜப்பானின் சக்கரவர்த்தி ஹிரோஹிட்டோவுக்கெதிராக எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை). இவை தான் யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு வலுப்பெற்றதற்கான முன்னோடிகளாகும்.

இதை விட தனியாக அரசாங்கங்களும் யுத்தக்குற்றம் இழைத்தவர்களைத் தண்டித்திருக்கிறது. உதாரணமாக 1960ல் ஆர்ஜன்ரீனாவில் வைத்து இஸ்ரேலிய முகவர்களால் பிடிக்கப்பட்டு இஸ்ரேலுக்குக் கடத்தப்பட்டு அங்கு சட்டப்படி மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ஜெர்மனிய நாட்ஸிப் படையைச் சேர்ந்த, “த ஹொலொகோஸ்ட்” (பேரழிவு) இல் பங்குபற்றி ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்த அடல்ஃப் எய்ஷ்மன்-ஐக் குறிப்பிடலாம். இதே போல 1987ல் க்ளோஸ் பார்பி என்ற நாட்ஸிப் படை முக்கியஸ்தர் பொலிவியாவில் கைது செய்யப்பட்டு ஃபிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டு அங்கு யுத்தக் குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கருவானது, குறித்த தேசம் அல்லது அதன் .இராணுவ வீரர்கள் இழைத்த குற்றங்களுக்கு (யுத்த விதி/தர்ம மீறல்களுக்கு) தனி நபர் ஒருவரைப் பொறுப்பாளியாக்க முடியும் என்கிறது. அதாவது இராணுவ வீரர்கள் இழைத்த குற்றத்திற்கு அவர்களுக்கு மேலான தளபதிகள், தலைமைத் தளபதிகளைப் பொறுப்பாக்க முடியும்.

இன அழிப்பு, சிவிலியன்களை இழிவான / முறையற்ற விதத்தில் நடத்துதல், போர்க்கைதிகளை முறையற்ற விதத்தில் நடத்துதல் போன்றன் குறிப்பிடத்தக்க யுத்தக் குற்றங்களாகும். அதிலும் இன அழிப்பு என்பது பாரிய யுத்தக் குற்றமாகக் கருதப்படுகிறது.

யுத்தக் குற்றங்களை வரையறுக்கும் சட்ட அதிகாரங்களாக ஜெனீவா மரபுகள் (Geneva Conventions) மற்றும் பழமையான யுத்த தர்மச் சட்டங்களும் காணப்படுகிறது. 4வது ஜெனீவா மரபின் 147வது சரத்து பின்வருமாறு யுத்தக்குற்றத்தை வரையறுக்கிறது :

"Wilful killing, torture or inhuman treatment, including... wilfully causing great suffering or serious injury to body or health, unlawful deportation or transfer or unlawful confinement of a protected person, compelling a protected person to serve in the forces of a hostile power, or wilfully depriving a protected person of the rights of fair and regular trial, ...taking of hostages and extensive destruction and appropriation of property, not justified by military necessity and carried out unlawfully and wantonly." 

அதாவது மனவுறுதியுடன் உடல்ரீதியான அல்லது ஆரோக்கிய ரீதியான தீவிரமான காயங்களை அல்லது துன்பங்களை விளைத்தல், சட்டத்திற்குப் புறம்பான வலுக்கட்டாயமான நாடுகடத்தல் (இடம் பெயர்த்தல்) அல்லது சட்டத்துக்கெதிரான வகையில் நபரொருவரை தடுத்துவைத்தல் அல்லது சிறைப்படுத்தல், நபரொருவரை வலுக்கட்டாயமாக எதிர்ப்புணர்வுமிக்க படைகளில் சேவையாற்றச் செய்தல், மனவுறுதியுடன் நபரொருவரது நியாயமான விசாரணைக்கான உரிமையை இல்லாது செய்தல், பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்திருத்தல், பாரிய அழிப்புக்கள் மற்றும் சொத்துக்களை சட்டவிரோதகமாக அபகரித்தல் உள்ளிட்ட சட்டவிரோதமானதும், நியாயமான இராணுவத் தேவை என நிரூபிக்கமுடியாததுமான கொலை, சித்திரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற நடத்துமுறைகள் யுத்தக்குற்றமாகும் என்று 4வது ஜெனீவா மரபின் 147வது சரத்துக் கூறுகிறது.

இதைத் தாண்டியும் யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு கூர்ப்படைந்து வருகிறது. யுகோஸ்லாவியா தொடர்பான சர்வதேச ஹேக் ட்ரபியுனல் யுத்தக்குற்றங்களை வரையறுப்பதில் முக்கியம் பெறுகிறது. ஆயுதப் போராட்டங்களின் போது மக்களுக்கு (சிவிலியன்களுக்கு) எதிராக நடத்தப்படும் சட்டவிரோதமான கொலை, குழுரீதியான அழிப்பு, அடிமைப்படுத்தல், வலுக்கட்டாயமான நாடுகடத்தல், இடப்பெயர்த்தல், கைதுகள், சித்திரவதை, கற்பழிப்பு, இன, மத, அரசியல் காரணங்களுக்கான கொலைகள் என்பன பிரதான யுத்தக்குற்றங்கள் என்கிறது. இங்கும் பிரதான குற்றமான இன அழிப்பு கருதப்படுகிறது.

2002ல் உரோம சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றச் சட்டம் என்ற சர்வதேச ஒப்பந்தத்தின் படி சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ஹேக் ட்ரிபியுனல்) அதன் அங்கத்தவ நாடுகளின் யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. ஒப்டோபர் 2010 வரை 114 நாடுகள் இதில் இணைந்துள்ளன. 114வதாக இணைந்த நாடு மோல்டோவா. அமெரிக்காவும், ரஷ்யாவும் உரோம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள போதும் அதை நிறைவேற்றவில்லை. அமெரிக்கா இன்னும் பார்வையாராகவே கலந்து கொள்கிறது. சீனாவும், இந்தியாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இலங்கையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் தொடர்பிலேயே சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகள் மேற்கொள்ள முடியும் ஆனால் ஐ.நா. உறுப்பு நாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபை பரிந்துரைக்கும் சந்தர்ப்பத்திலும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணை நடத்தும் நீதியதிகாரமுண்டு.

பேரிழிவிற்குரிய யுத்தமானாலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியம் பெறுகிறது இந்த யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு, ஆனால் மனித உரிமைகள், ஜனநாயம் பற்றிய விழிப்புணர்வு, அறிவு இல்லாதவர்களுக்கு யுத்தக் குற்றத்தின் தார்ப்பரியத்தை புரிய வைப்பது இயலாது.

**********************************************************************
இந்தக் கட்டுரை 12-12-2010 ஞாயிறு தினக்குரலில் 11ம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. (நன்றி - யாழ்தேவி மற்றும் தினக்குரல்)