Dec 28, 2009

2010 ஜனவரி 26ம் அடுத்த இலங்கை ஜனாதிபதியும் - பகுதி 02

சரத் ஃபொன்சேகா


இலங்கை இராணவ வரலாற்றின் முதலாவது நான்கு நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற ஜென்றள் தர அதிகாரி. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றிக்குக் முக்கிய காரணகர்த்தா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே “முன்பு” புகழப்பட்டவர். இன்று அரசாங்கத்துடனான கசப்புணர்வுகளால் தனது பாதுகாப்புப் படைகளின் தலைமையதிகாரி என்ற பதவியிலிருந்து ஓய்வு பெற்று இன்று ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி கூட்டின் பிரதான எதிர்த்தரப்பு ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிக்கிறார் ஆனால் ஐ.தே.க வின் யானைச் சின்னத்திலோ ஜே.வி.பி யின் மணிச் சின்னத்திலோ தேர்தல் களம் புகாது புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் அன்னச் சின்னத்தில் தேர்தல் களம் புகுந்திருக்கிறார்.



சரத் ஃபொன்சேகா என்றதும் விடுதலைப்புலிகளக்கெதிரான யுத்த வெற்றிதான் மக்கள் கண் முன் நிற்கின்றது. என்னதான் “மன்னன்” அந்தஸ்திலிருந்து யுத்தத்தை நடாத்தியது மஹிந்த ராஜபக்ஷவாக இருந்தாலும் களத்திலிருந்து படைகளை வழிநடாத்தி வெற்றியைத் தேடிக்கொடுத்ததில் பெருமளவு பங்கு ஃபொன்சேகாவைச் சார்ந்தது - இதனை “முன்பு” அரசாங்கமும், ஜனாதிபதியும் கூட நேரடியாகவும் மறைமுகமாகவும் புகழ்ந்திருந்தார்கள். இப்படியாக ஜனாதிபதியின் “வெற்றி” முழக்கத்தின் முக்கிய காரணகர்த்தாவாக முன்பு இருந்தாலும் எங்கு இவர்களிடையெ முரண்பாடு தோன்றியது என்பதில் இன்றுவரை தெளிவாக விடைகாண இயலவில்லை. அண்மையில் ஃபொன்சேகா வழங்கிய செவ்விகளிலிருந்தும் வெளியிட்ட அறிக்கைகளிலிருந்தும் சில, பல கருத்துக்கள் வெளிவந்திருந்தாலும் எதுவும் அந்த வினா முடிச்சை முற்றாக அவிழ்க்கவில்லை. மேலும் சரத் .பொன்சேகா வெளியிட்ட பெரும்பாலான கருத்தக்களிலிருந்து அவருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான பிரச்சினையைவிட அவருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் (கோத்தாபய ராஜபக்ஷ) இடையிலான கருத்துமுரண்பாடுகளும், புரிந்துணர்வின்மையுமே இந்தப் பிரிவுக்குக் காரணமாக இருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. குறிப்பாக கடந்த 24ம் திகதி இரவு சிரச தொலைக்காட்சியில் ஃபொன்சேகா வழங்கிய செவ்வியில் அவர் பாதுகாப்பச் செயலாளரைப் பெருமளவு தாக்கியிருந்தார், “15 வருடங்கள் நான் யுத்த களத்தில் போரிட்டுக்கொண்டிருந்த போது அமெரிக்காவில் கணணியில் தட்டிக்கொண்டிருந்தவர், பிறகு இங்கு வந்து விட்டு என்னைப் பற்றி அவதூறு கூறவும், எனது இராணுவ அனுபவம் பற்றிப் பேசவும் அவருக்கு லாயக்கில்லை” என ஃபொன்சேகா அந்தச் செவ்வியில் கூறியிருந்தார்.



இப்படியாக அவர்கள் இருவருக்கிடையிலான முறுகல் நிலையே ஃபொன்சேகாவின் ஓய்வு பெறுகைக்கும் அரசியல் களப் பிரவேசத்திற்கும் காரணம் என்பது தெளிவான நிலையில் ஒரு ஜனாதிபதி வேட்பாளராக வந்திருக்கும் ஃபொன்சேகாவின் கொள்கைகள் பற்றியம். அவரது திட்டங்கள் பற்றியும் மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள். என்னதான் சொன்னதைச் சொன்னவாறு செய்து முடிப்பவர் எனும் நன்மதிப்பு ஃபொன்சேகாவுக்கு மக்கள் மத்தியில் இருந்தாலும் அவர் என்ன மாற்றத்தைச் செய்யப்போகிறார் என்பது பலர் மத்தியில் கேள்விக்குறியாகத் தொக்கு நிற்கிறது. அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் ரணில் விக்ரமசிங்ஹ போட்டியிட்டிருந்தால் கூட இவ்வளவு யோசிக்காமல் தங்கள் வாக்குகளை இவ்வேளை தீர்மானித்திருப்பார்கள் ஆனால் சரத் ஃபொன்சேகா என்றதும், அதுவும் முன்னாள் இராணுவத் தளபதி - யத்தத்தை வென்றவர் - தமிழரின் இரத்தம் சிதறடிக்கப்பட்ட யத்தத்தை நடாத்தியவர் என்றதும் மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள். பலர் ஜனாதிபதியாகட்டும், ஃபொன்சேகாவாகட்டும் இருவரும் ஒன்றுதான் என்ற மனப்பான்மை கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஃபொன்சேகாவின் வாக்கு வங்கியைப் பொறுத்தவரையில் இளைஞர்கள் பலரும் ஃபொன்சேகாவின் பக்கத்தில் நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சமூக வலைப்பின்னல்களில் ஏனைய வேட்பாளர்களுக்குள்ள ஆதரவை விட சரத் ஃபொன்சேகாவிற்கு அதிக ஆதரவு உள்ளதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மேலும் கொழும்பைப்பொறுத்த வரையில் அது ஐ.தே.க வின் தொகுதி அத்துடன் ஏனைய கட்சி சார்ந்தவர்களிடம் கூட ஃபொன்சேகாவுக்கு ஆதரவு இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. கொழும்பில் ஃபொன்சேகாவுக்கிற்கிருக்கம் அதிக ஆதரவுக்குப் பிரதான காரணம் மக்கள் ஒர மாற்றத்தை வேண்டுவதாகும். பொருளாதார நிலை தொடர்பில் இந்த அரசாங்கத்தின் மேல் மக்கள் கொண்டுள்ள அதிருப்தி முதலாவது காரணம். பொருளாதார மாற்றங்கள் இலங்கையின் வேறு எப்பகுதியையும் தாக்குவதை விட கொழும்பைத்தான் உடனடியாக, அதிகமாகப் பாதிக்கிறது. மேலும் கொழும்பில் அதிகரித்த பாதுகாப்புக் கெடுபிடிகளும், அடிக்கடி பாதைகள் மூடப்படுதலும் கூட மக்களுக்கு அதிருப்தியை மட்டுமல்லாது எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் யுத்தம் முடிந்தபின்னும் அங்குமிங்குமாகப் பாதுகாப்புச் சாவடிகள் இருப்பதும் அதே பாதுகாப்புக் கெடுபிடிகள் தொடர்பதும் மக்களை மிகவும் எரிச்சலடையச் செய்துள்ளது. கொழும்பின் நிலை இப்படியிருக்க வெளிமாவட்டங்களைப் பொறுத்தவரையில் இவை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை ஆனால் அம்மாவட்டஙக்ளின் கட்சி வாக்கு வங்கிகளின் படி வேட்பாளர்களிடையே வாக்குகள் பிரிவடையும் என்பதே எனது கருத்து.



இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் சரத் ஃபொன்சேகாவின் பிரதான பலம் மக்களும் இளைஞர்களும் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் அவரது “ஹீரோ” அந்தஸ்து. ஃபொன்சேகா நியாயமானவர், கறைபடியாதவர் என மக்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அத்தோடு ஃபொன்சேகாவுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க மற்றும் 3வது பெரிய கட்சி ஜே.வி.பி. மங்கள் சமரவீர, மனோகணேசன், ரவுஃப் ஹக்கிம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் ஆதரவு இருப்பது பெரும்பலம். ஒரு வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தங்கள் ஆதரவுக்கரத்தை வழங்கினால் சரத் ஃபொன்சேகாவினால் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பலமான போட்டியை வழங்க முடியும். இந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வளவு ஆதரவு இருந்த போதும் பிரச்சாரம், விளம்பரங்கள் என்று பார்த்தால் சரத் ஃபொன்சேகாவின் தரப்பு இந்நாள் வரை பலம் குறைந்துதான் காணப்படுகிறது.



சரத் ஃபொன்சேகாவின் விளம்பரங்களும். பிரச்சாரங்களும் ஜனாதிபதியின் பிரச்சாரம் அளவுக்கு இன்னும் சூடுபிடிக்கவில்லை என்பதே பலரது கருத்து - அது ஏன் என்பது இன்னும் சிதம்பரசக்கரமாகவே இருக்கிறது. அத்துடன் மறுபக்கத்தில் ஃபொன்சேகாவுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் அவர் வெளியிட்ட சச்சரவுமிக்க கருத்துக்கள் (குறிப்பாக யுத்தகால மனித உரிமை மீறல் தொடர்பானவை) இன்று சகல ஊடகங்களிலும் அவருக்கெதிரான பிரச்சாரத்தை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளதைக் காணலாம். அதிலும் குறிப்பாக இலங்கை முழுக்க வீச்சுள்ள அரச இலத்திரனியல் ஊடகங்கள் பெருமளவு ஜனாதிபதிக்கு ஆதரவான கருத்தக்களைக் கொண்டுசெல்வதால் அதற்குச் சமமான மாற்றுப் பிரச்சாரத்தை ஃபொன்சேகா செய்ய வேண்டியிருக்கிறது. என்ன தான் சுவரொட்டி நிபுணர்களான ஜே.வி.பி.யினர் ஃபொன்சேகாவுடன் இருந்தாலும் ஒப்பீட்டளவில் அவைகூட மிகக் குறைவாகத்தான் கண்களில் படுகிறது.


சரி, அடுத்த ஜனாதிபதியாக ஃபொன்சேகாவால் வர முடியுமா? அவரது கொள்கை என்ன? தமிழர்கள் அவரை நம்பலாமா? சிறுபான்மையினர் தொடர்பான அவரது நிலைப்பாடு என்ன? ஒரு வேளை சிறுபான்மையினர் ஃபொன்சேகாவை ஆதரிப்பது இஞ்சி கொடுத்த மிளகாய் வாங்கிய கதையாகுமா? போன்ற கேள்விகள் பலர் மனதில் உள்ளன என்பதை என்னால் ஊகிக்கமுடியகிறது. இவற்றுக்கான பதில்களுடன் அடுத்த பகுதியில் தொடர்கின்றேன்.


பகுதி 03ல் அலசல் தொடரும்....

Dec 27, 2009

2010 ஜனவரி 26ம் அடுத்த இலங்கை ஜனாதிபதியும் - பகுதி 01

 ஜனவரி 26! இலங்கையின் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திகதி. 22 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் போவது யார் என்ற கேள்வி இன்று அனைத்து இலங்கையர் மனத்திலும் இருந்துகொண்டிருக்கிறது. இம்றை 22பேர் போட்டியிட்டாலும் 2 பேரின் பெயர்தான் பரபரப்பாக அடிபடுகிறது, அவை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், பிரதான எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளா் ஜென்றள்.சரத் ஃபொன்சேகாவினதும் ஆகும். ஆனால் தமிழர் மத்தியில் , இடதுசாரி முன்னணியின் வேட்பாளர் விக்ரமபாகு கருணாரத்ணவும், சுயேட்சைத் தமிழ் வேட்பாளர் சிவாஜிலிங்கமும் கூடக் கருதப்படுகிறார்கள். இந்தச் சந்தியில் அடுத்த ஜனாதிபதியாக யார் வரப் போகின்றார்? (யாருக்கு எந்தளவு வாய்ப்பு இருக்கிறது), பிரதான வேட்பாளர்களின் குறை நிறைகள் பற்றிய கொள்கைகள் பற்றிய அலசலாக இந்தப் பதிவு அமையும்.

மஹிந்த ராஜபக்ஷ




தற்போதைய ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தவணைக்காக தனது முதற்தவணைப் பதவிக்காலம் நிறைவடைய 2 வருடக காலம் முன்பாகவே ஜனாதிபதித்தேர்தலை நடாத்துகிறார். இவருக்கு மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிக ஆதரவு காணப்படுவதாகத் தெரிகிறது இதற்கு மிகப்பிரதானமான காரணம் விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியேயாகும். இவற்றைவிட நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களில் இடம்பெற்ற சமூக, பொருளாதாரக் கீழ்க் கட்டுமானப் பணிகளும் அதிலும் குறிப்பாக தென் மாகாணத்தில் செய்த அபிவிருத்திப் பணிகளும் மக்கள் மத்தியில் இவருக்கான நன்மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. இதை நான் எழுமாற்றாக எழுதவில்லை - இந்நாட்டில் பல பகுதிகளிலுமுள்ள வேறுபட்ட மக்களிடையே பேசி அவர்களது கருத்துக்களின் அடிப்படையில் தான் நான் இந்தப் பதிவை வரைகின்றேன். இப்படியாக தற்போதைய ஜனாதிபதி மீது மக்களுக்கு (குறிப்பாகச் சிங்கள மக்களுக்கு) நன்மதிப்பு இருந்தாலும் அவற்றை மீறி பல அதிருப்திகளும் இருக்கத்தான் செய்கிறது. அடிப்படையில் பொருளாதார ரீதியில் மக்கள் ஏதோ ஒரு குறையை உணர்ந்த வண்ணம் தான் இருக்கிறார்கள். விலையேற்றம் பாரிய பிரச்சினையாக மக்கள் மத்தியில் உலாவிக்கொண்டிருந்தாலும் “யுத்த வெற்றி” என்ற மாயத்திரை அதை மறைத்துக்கொண்டு தான் இருக்கிறது. 



இதை விட இன்னும் பல அதிருப்திகள் மக்கள் மத்தியில் இருக்கிறது. குறிப்பாக இலங்கையின் மெகா அமைச்சரவை தொடர்பிலும், அமைச்சர்களின் நியமனம் தொடர்பிலும் இலங்கையின் பலதரப்பட்ட மக்களும் அதிருப்தியுற்றே இருக்கின்றார்கள். கட்சி தாவியவர்களுக்கெல்லாம் அமைச்சர் பதவி பரிசளிக்கப்படுவதும், “தகுதி” அற்றவர்கள் எல்லாம் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதும், ஒரே துறைக்கு பல அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் மக்கள் இதை ஒரு கேலிக்கூத்தாகவே பார்க்கும் படி செய்திருக்கிறது. இந்த அமைச்சர்களுக்கான வீண் செலவுகள் தொடர்பிலும் இலங்கையின் புத்திஜீவிக் குழாம் கவலை தெரிவித்திருக்கிறது - இதை பொதுநிதியின் வீணாக்கலாகவே பலர் கருதுகிறார்கள். மேலும் குடும்ப ஆட்சி தொடர்பிலும் பலர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.  அதிலும் குறிப்பாக சரத் .ஃபொன்சேகா பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை பெரும்பாலான ஆட்சிக்கேடுகளுக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டியிருப்பது கவனிக்கத்தக்கது. 



இவற்றுக்கும் மேலாக யுத்த வெற்றி என்பதையே ஜனாதிபதி பிரதான பிரச்சார ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். ஆனால் அது “தமிழ்ச் சமூகத்தைப்” பெரிதும் ஆர்வங்கொள்ள வைக்கும் ஒன்றாக இருக்கவில்லை. தமிழர் விடுதலைப் போரின் தோல்வி என்பதற்கப்பால் (அதை ஒரு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையாக நியாயப்படுத்தினாலும் கூட) அகதி முகாம்களில் தமிழர்கள் அகதிகளாகச் சிக்கிச் சின்னாபின்னமாகிச் சீரழிந்ததும், மேலும் யுத்தத்தின் இறுதிக்காலகட்டத்தில் இடம்பெற்ற மனித அவலங்கள் தொடர்பிலான பல்வேறுபட்ட கருத்துக்களும் தமிழர்களை இந்த அரசாங்கத்தின் மீது பெருமளவு நம்பிக்கை இழக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. 



என்னதான் கோடி கோடியாகக் கொட்டி விளம்பரங்களும், பிரச்சாரங்களும் செய்தாலும் மக்களின் மனதில் இருக்கும் வடுக்களுக்கு மருந்து கொடுக்காத வரை அவர்களது நிகழ்காலப் பிரச்சினைகளுக்கே தீர்வினைப் பெற்றுக் கொடுக்காத வரை “வளமான எதிர்காலம்” பற்றி மக்கள் சிந்திக்கவே மாட்டார்கள். இன்று காயத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பவனுக்கு நாளைக்குக் கிடைக்கப்போகும் மாடமாளிகை பற்றிக் கவலையில்லை அவனது கவலையும் தேவையுமெல்லாம் இரத்தம் ஒழுகிக்கொண்டிருக்கும் காயத்திற்கான மருந்தும் தீர்வும்தான். 



இவற்றைவிட யுத்தவெற்றிக்குப் பெரிதும் பங்களித்த சரத் ஃபொன்சேகா (தற்போதைய பிரதான எதிர்த்தரப்பு ஜனாதிபதி வேட்பாளர்) தற்போது ஜனாதிபதி பற்றியும் அரசாங்கம் பற்றியும் வெளிப்படுத்தியிருக்கும் அதிருப்திகளும், குற்றச்சாட்டுகளும் குறிப்பிட்டளவு தாக்கத்தை ஜனாதிபதியின் வாக்கு வங்கி மீது ஏற்படுத்தியிருக்கிறது என்பது நிதர்சனம். பதவிக்காலம் நிறைவடைய 2 வருடங்கள் முன்பே ஜனாதிபதித் தேர்தலை நடாத்தக் கோரியதன் காரணம் வெற்றியின் மீது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கிருக்கும் உறுதியான நம்பிக்கையாகும் ஆனால் இன்று அரச ஊடகங்களின் மூலம் நடாத்தப்படும் அதீத பிரச்சாரங்களும், பிரதான எதிர்த்தரப்பு வேட்பாளர் மீதான வசைத் தாக்குதல்களும் அவரது வெற்றியின் மீதான உறுதியான நம்பிக்கை சரத் ஃபொன்சேகாவின் அரசியற் பிரவேசத்தால் அசைக்கப்பட்டிருக்கிறது என்பதையே பறை சாற்றுகிறது. எதிரிகள் தானாக உருவாவதில்லை - நாமாகத்தான் உருவாக்கிக் கொள்கின்றோம் என்பது பிரபலமான கூற்று அதுபோல மீதம் 20 வேட்பாளர்கள் இருக்க ஒரு வேட்பாளர் மீது வசை பாடத் தொடங்கியதனூடாக அவரையே தனது பிரதான எதிர்த்தரப்பாக அடையாளப்படுத்தியுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கிறது.



இந்நிலையில் இத்தேர்தலில் ஜனாதிபதியின் அதீத வெற்றியின் நம்பிக்கை குறைந்து போய்த்தான் இருக்கிறது. ஆனால் வெற்றிபெற மாட்டார் என்று அறுதியாகக் கூறிவிட முடியாது. நிகருக்கு நிகராகப் போட்டியிருந்தாலும் அமைச்சர்கள், அரசியல் தலைவா்கள் பலரின் ஆதரவும் விளம்பரம், பிரச்சாரங்கள் என்பனவற்றுக்காகச் செலவழிக்கப்படும் பல கோடி ரூபாய்களும் அதிலும் இம்முறை புதுமையாக இணையவழி விளம்பரங்கள் அதிகளவில் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சமூக வலைப்பின்னல்களிலும், செய்தி, விளையாட்டு மற்றும் இலங்கையர்கள் சொடுக்கும் முக்கிய தளங்களிலெல்லாம் “வளமான எதிர்காலம்” தேர்தல் பிரச்சார விளம்பரங்களும் அந்த மிக நெருங்கிய போட்டியை மீறி மயிரிழையில் வெற்றியை ஜனாதிபதிக்குத் தரவாய்ப்பிருக்கிறது. மேலும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் பதவியிலிருந்த ஜனாதிபதி 2ம் முறை தேர்தலில் போட்டியிட்டுத் இதுவரை தோல்வி கண்டதில்லை. எது எவ்வாறு இருப்பினும் இம்முறை தேர்தல் மிக விறுவிறுப்பானதாக அமையும் என்பது மட்டும் உறுதி.


பகுதி 02ல் அலசல் தொடரும்....


அடுத்தடுத்த பகுதிகளில் ஏனைய முக்கிய வேட்பாளர்கள் தொடர்பாக அலசப்படுவதுடன், வெற்றிவாய்ப்புக்கள், தேர்தல் கால நிகழ்வுகள் பற்றியும் ஆராயப்படும்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் - ஒரு அறிமுகம்.


இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றியும், வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் தீாமானிக்கப்படும் முறைபற்றியும் விளக்கம் தருவதாக இப்பதிவு அமையும்.

இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசின் 1978ம் ஆண்டு முதல் நடைமுறையிலிருக்கும் அரசியல் யாப்பின் 94வது சரத்தும் அதன் உப பிரிவுகளும் நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியொருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பற்றி விபரிக்கின்றது.

//

Election of the President.

94. (1) At the election of the President every voter while casting his vote for any candidate may-
(a)  where there are three candidates for election, specify his second preference ; and
(b)  where there are more than three candidates for election, specify his second and third preferences.
(2) The candidate, if any, who receives more than one-half of the valid votes cast shall be declared elected as President
(3) Where no candidate is declared elected under paragraph (2) of this Article, the candidate or candidates, other than the candidates who received the highest and second highest number of such votes, shall be eliminated from the contest, and -
(a) the second preference of each voter whose vote had been for a candidate eliminated from the contest, shall, if it is for one or the other of the remaining two candidates, be counted as a vote for such candidate and be added to the votes counted in his favour under paragraph (2), and
(b) the third preference of each voter referred to in sub-paragraph (a) whose second preference is not counted under that sub-paragraph shall, if it is for one or the other of the remaining two candidates, be counted as a vote for such candidate and be added to the votes counted in his favour under sub-paragraph (a) and paragraph (2),
and the candidate who receives the majority of the votes so counted shall be declared elected as President.
(4) Where an equality is found to exist between the votes received by two or more candidates and the addition of one vote would determine-
(a) which candidate is to be declared elected under this Article ; or 
(b) which candidate is not to be eliminated under this Article, then the determination of the candidate to whom such additional vote shall be deemed to have been given for the purpose of such determination shall be made by lot.

//
The above extract from the 1978 Constitution of the Democratic Socialist Republic of SriLanka is taken from The Official Website of the Government of SriLanka. (http://www.priu.gov.lk/Cons/1978Constitution/Chapter_14_Amd.html)

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஒற்றைமாற்று (தனிமாற்று) வாக்கு முறைப்படி நடாத்தப்படும். இதன் பிரகாரம் வாக்காளர்கள் 3 வேட்பாளர்களுக்குக் குறைவாகப் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் தமது முதலாவது மற்றும் இரண்டாவது விருப்பத்தெரிவுகளைக் குறித்து வாக்களிக்கலாம், 3ற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுமிடத்து 3வது விருப்பத்தெரிவையும் சேர்த்து வாக்களிக்கலாம். உதாரணமாக அ,ஆ,இ என 3 நபர்கள் போட்டியிடுமிடத்து வாக்காளர்கள் தாம் விரும்பியவர்களுக்கு முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்புவாக்குகளை விருப்ப வரிசையில் அளிக்கலாம்.

வாக்குகளின் எண்ணிக்கையில் முதலாவதாக முதன்மை விருப்பு வாக்குகள் மட்டுமே எண்ணப்படும். அதில் செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50வீதத்திற்கும் அதிகமாக யார் வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவார். இலங்கையில் இதுவரை நடந்த சகல ஜனாதிபதித் தேர்தல்களிலும் முதல்விருப்பெண்ணிக்கையிலேயே செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50வீதத்திற்குமதிகமாக வாக்குகளைப்பெற்றே ஜனாதிபதிகள் தெரிவானார்கள்.

ஒருவேளை எந்த வேட்பாளரும் செல்லுபடியான மொத்தவாக்குகளில்  50வீதம் அல்லது அதற்கு மேல் பெறாதவிடத்து, முதல் விருப்பு எண்ணிக்கையில் அதிக தொகை வாக்குகள் பெற்ற முதல் இருவர் தவிர்த்த ஏனையோர் போட்டியிலிருந்த நீக்கப்படுவர். இதன் பின்னர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பெற்ற முதல் விருப்பு வாக்குச்சீட்டுக்களிலிருந்து போட்டியிலுள்ள இருவரில் எவர்க்காவது 2ம் விருப்பு வாக்கு இருந்தால் அது அவர்களது வாக்குகளுடன் சேர்க்கப்பட்டு எண்ணப்படும், மேலும் அதன் பின்னும் எஞ்சியுள்ள போட்டியிலிருந்து விலக்கப்பட்டவர்களின் வாக்குகளில் போட்டியிலுள்ள இருவரில் எவர்க்காவது 3ம் விருப்பு வாக்கு இருந்தால் அவையும் அவர்களது வாக்குகளுடன் சேர்த்து எண்ணப்பட்டு பெரும்பான்மை (சாதாரண பெரும்பான்மை) வாக்குகள் பெறுபவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இம்முறையின் பின்னும் இருவரும் சம அளவான வாக்குகள் பெற்றிருந்தால் இருவரில் ஒருவருக்கு மேலதிக வாக்கு ஒன்று வழங்கப்படும் - அந்த வாக்கு யாருக்கு வழங்கப்படும் என்பதை ஒரு லொத்தர் (திருவுளச்சீட்டு) மூலம் தீர்மானிப்பார்கள். அந்த ஒரு வாக்கைப் பெற்றவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.

இது தான் 1978லிருந்து இலங்கையில் நடைமுறையிலிருக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 2ம் குடியரசு அரசியலமைப்பின் படியிலான ஜனாதிபதித் தேர்தல் முறை.

வரும் தேர்தல் தொடர்பான அலசல் பதிவு ஒன்றை தயார் செய்து வருகிறேன். விரைவில் பகுதி பகுதியாக பிரசுரிக்கப்படும்.

இவ்விடத்தே அனைவரிடமும் அன்பான வேண்டுகோள் ஒன்றை வைக்கவிரும்புகின்றேன். வாக்கு என்பது நவீன ஜனநாயகத்தின் முக்கிய கருவி. ஜனநாயகத்தின் முதுகெலும்பும் கூட ஆகவே அதை சரியாகப் பயன்படுத்துதல் எமது அனைவரினதும் கடமை. வாக்களிக்காமல் விடுதலோ, வாக்குகளை செல்லுபடியற்றதாக்கலோ எமது பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வாகாது. ஆகவே பொறுப்பான குடிமக்களாகச் செயற்படுவோம் - எமது ஜனநாயகக் கடமையைச் சரியாகச் செய்வோம்.

Dec 23, 2009

இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்!

அமைதியின் தூதனாய் இயேசு கிறிஸ்து உதித்த இனிய நத்தார் தினம் - அனைவருக்கும் சாந்தியையும், சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் தரட்டும்!




அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்!!!

Nov 13, 2009

ஜென்றள்.சரத் ஃபொன்சேகாவின் ஓய்வு பெறுகையும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலும்.

ஜென்றள். சரத் ஃபொன்சேகாவின் ஓய்வு பெறுகையே இவ்வாரத்தின் மிக முக்கிய நிகழ்வாக இலங்கையில் கொள்ளப்படுகிறது. அதுவும் அவரது ஓய்வு பெறுகைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 16 காரணங்களும் அவரது அடுத்த இலக்கைக் கட்டியங்கூறுவதாக அமைகிறது. இதுநாள் வரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து யார் போட்டியிடப்போகின்றார்கள் என்பது தொடர்பில் நிலவி வந்த ஐயப்பாட்டையும் 90 வீதம் அந்தக் கடிதம் தெளிவாக்கியிருக்கிறது.


இலங்கை வரலாற்றில் 4 நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற ஒரே ஜென்றள் சரத் ஃபொன்சேகா மட்டுந்தான் - யுத்த வெற்றியின் காரணமாக அவருக்கு அந்த தரவுயர்வு வழங்கப்பட்டது ஆனாலும் இருவாரங்களுக்குள்ளாகவே இராணுவத் தளபதிப் பதிவியிலிருந்து அவர் நீக்கப்பட்டு படைகளின் தலைமையதிகாரி என்ற உயர் பதவி வழங்கப்பட்டது. ”மக்களுக்கு அது ஓர் உயர்பதவி போல காட்டப்பட்டாலும் அதில் எனக்கு அதிகாரங்கள் இருக்கவில்லை” என சரத் ஃபொன்சேகா தனது ஓய்வ பெறுகைக் கடிதத்தில் காரணப்படுத்தியிருக்கின்றார் மேலும் தன்னைத் தேசத்துரோகி போல ஊடகங்களில் மறைமுகமாக பிரச்சாரம் செய்வதாகவும் தனக்கு இது மிகுந்த வேதனையையும் மன உளைச்சலையும் தருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார் - இவையெல்லாம் தனிப்பட்ட ரீதியில் அவர் பாதிக்கப்பட்ட காரணங்கள். ஆனால் அடுத்த சில காரணங்கள் இங்கு உற்று நோக்கப்பட வேண்டியவை. அரச படைகளிடையே விசுவாச வேறுபாட்டைத் திணிப்பதாகவும், இந்தியாவை உள்நாட்டு விவகாரங்களிலும் பாதுகாப்பிலும் தலையிட விடுவதாகவும், அகதி முகாமிலுள்ள மக்களை விடுதலை செய்ய முறைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனவும் அரசாங்கத்தின் மீது குற்றஞ் சுமத்தியுள்ளார் - இது தனிப்பட்ட காரணங்களுக்கப்பால் அவரது அரசியல் பிரவேசத்தை உறுதியாகக் கூறக்கூடிய வகையில் பொதுமக்கள், நாடு சம்பந்தமான குறைகளை அவர் இங்கு சுட்டிக்காட்டியிருப்பதை நோக்கலாம்.

அதிலும் குறிப்பாக அகதிகள் பிரச்சினை, தமிழர்கள் பற்றிய விடயங்கள் தொடர்பான கருத்து தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு நற்பெயரையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் விடயமாகக் கூட அமையும். தனது ஓய்வு பெறுகைக் கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்கப்பால் அரசாங்கத்தை விமர்சித்திருப்பதானது இன்றைய அரசாங்கத்தில் அவருக்கு இருக்கும் திருப்தியின்மையையும், தான் மாற்றத்தை விரும்புவதையும் பறை சாற்றுகிறது.


அப்படியானால் சரத் ஃபொன்சேகா அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகின்றாரா? இதுவரை அது தொடர்பில் நேரடியான கருத்தினை அவர் தெரிவிக்கவில்லை ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதுடன் அது ஏறத்தாழ 90வீதம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இது வரை தனது அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரை அறிவிக்கவில்லை. சாதாரணமாக தேர்தல் நெருங்குவதற்கு 1 வருடம் முன்பே நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது பிரதான கட்சிகள் தங்கள் அபேட்சகர்களை அடையாளப்படுத்துவது வழக்கம். மேலும் இம்முறை ரணில் விக்ரமசிங்ஹ போட்டியிட மாட்டார் என்பதும் உறுதியாகத் தெரிகிறது அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்தத் தாமதம் தற்போதைய ஜனாதிபதியை எதிர்த்து வெற்றி கொள்ளக் கூடிய அல்லது வெற்றியின் விளிம்பையாவது எட்டக்கூடிய ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்துகிறது. இதேவேளை ஜே.வி.பி. பகிரங்கமாகவே சரத் ஃபொன்சேகாவை ஆதரித்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சியிடமும் சரத் ஃபொன்சகாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தக் கோரியமையுமு் குறிப்பிடத்தக்கது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை பதிலளிக்காவிட்டாலும் வெளிநாட்டில் ரணில் விக்ரமசிங்ஹவும், சரத் ஃபொன்சேகாவும் சந்தித்துப் பேசிக்கொண்டதாக செய்திகள் வெளிவந்திருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியிக் கூட்டணியிலுள்ள கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஜே.வி.பி. கோரிக்கை வைத்த போது அதை தாம் எதிர்ப்பதாக அறிவித்திருந்த போதும், பின்னர் தனது கேள்விகளுக்கு தகுந்த பதிலும், உத்தரவாதமும் சரத் ஃபொன்சேகாவால் தரப்பட்டால் ஆதரிப்போம் எனக் கூறினார். இவற்றைத் தொடர்ந்து சரத் ஃபொன்சேகாவின் ஓய்வு பெறுகையும் நடைபெற்றது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் ஃபொன்சேகா நிற்பார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஒரு வேளை சரத் ஃபொன்சேகா தேர்தலில் நின்றால் கூட என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகின்றது என்பது பலரது கேள்வி. ஏனெனில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் இடம்பெற்ற தேர்தல்களில் ஜனாதிபதியாக இருந்து கொண்டு இரண்டாம் முறை போட்டியிட்டவர்கள் தோற்றதில்லை - மேலும் இன்றைய நிலைமையில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிப்பது அவ்வளவு சுலபமல்ல - போரிட்டது ஃபொன்சேகாவாக இருந்தாலும் பல அழுத்தங்களுக்கு மத்தியில் போரை நடத்தி வெற்றியைத் தந்தவர் ஜனாதிபதி தான் என்ற நம்பிக்கை பெரும்பான்மை மக்களிடையே இருக்கிறது மேலும் தற்போது இருக்கும் மகா அமைச்சரவையின் அமைச்சர்களின் ஆதரவும், பலதரப்பட்ட பெரிய சிறிய கட்சிகளின் மற்றும் அழுத்தக் குழுக்களின் ஆதரவும் குறிப்பாக பல பெரிய சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவும் இருப்பதால் அது கட்டாயமாக 51வீதம் வாக்குகளுக்கு அதிகமாகப் பெற்றுக்கொடுக்கும் - ஆகவே தற்போதைய ஜனாதிபதியின் அடுத்த வெற்றி என்பது நிச்சயம்.


மேலும் சிறுபான்மையினர் நிலமையிலிருந்து பார்த்தாலும் சரத் ஃபொன்சேகாவிற்கான ஆதரவு தொடர்பில் தமிழர்கள் இருமுறை சிந்திக்க வேண்டிய நிலமையிலேயே இருக்கின்றார்கள். இன்று இவர் தமிழர் நலம் பற்றிப் பேசலாம் ஆனால் ஒரு வேளை ஜனாதிபதியான பின்பு என்ன நடக்கும்? ஏற்கனவே இந்த அனுபவம் தமிழ் மக்களுக்குண்டு. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தலில் போட்டியிட்ட போது தமிழ மக்கள் மட்டுமல்ல அனைத்துச் சிறுபான்மையினர்களும் அவர் சமாதானம் பெற்றுத் தருவேன் என்று கூறியதை நம்பி வாக்களித்து வெற்றியை வழங்கி கடைசியில் அல்லல்பட்டது ஞாபகம் இருக்கும். அது தான் மீண்டும் நடக்கும் என்பது நிச்சயமல்ல ஏனெனில் சந்திரிக்கா குமாரதுங்கவும், சரத் ஃபொன்சேகாவும் இரு வேறு நபர்கள். ஆனாலும் அந்த பழைய கசப்பான அனுபவம் இன்னும் தமிழர்கள் மனதைவிட்டுப் போவதாக இல்லை.

எது எவ்வாறு நடந்தாலும் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்ந்தால் இவர்கள் எல்லாம் வார்த்தைகளால் வர்ணிக்கும் சுபீட்சம் என்பதை இலங்கைத் தேசம் இனிக் காணவே முடியாது. இப்போது இலங்கைக்குத் தேவை “நல்ல மாற்றம்” அதை யார் வழங்கினாலும் ஆதரிக்கலாம்.

Nov 7, 2009

மாளிகையைச் சிதைத்து மண்வீடு கட்டியவன்!



ஆயிரமாண்டுகள் பழமைவாய்ந்த
அபூர்வ மாளிகையின் சொந்தக்காரன்!
ஆனால்
நேற்று முளைத்த மண்வீட்டினை
நேர்த்தியான அழகென்று எண்ணி
நேசித்த மாளிகையை மண்வீடு போல
மாற்ற விளைந்தான்...

கோபுரங்கள் சிதைக்கப்பட்டு
ஓட்டுக் கூரையாக ஆக்கப்பட்டது...
முற்றங்கள் சிதைக்கப்பட்டு
வெற்று நிலங்கள் ஆக்கப்பட்டது...
உயர் மாடங்கள் சிதைக்கப்பட்டு
வெறும் மண்வீடாய் மாற்றப்பட்டது...

கலைநயம் மிக்க ஓவியங்கள்
எரிக்கப்பட்டன...
அற்புதச் சிற்பங்களும் எல்லாம்
நொறுக்கப்பட்டன...
உணவிட்ட தோட்டங்களெல்லாம்
கைவிடப்பட்டன...

அந்த அற்புத மாளிகை மண்வீடானது...
வளங்கள் எல்லாம் ஒழிந்து
செழிப்பெல்லாம் மடிந்து
புதுமையென எண்ணி
மூடன் அவன் செய்த செயலால்
அந்த அற்புத மாளிகை கல்வீடானது...

ஆனாலும் அது புரியவில்லை அவனுக்கு...
புதுமையின் படைப்பில் புலங்காகிதம்
அடைவதாக உணர்ந்தான்...
தனது மாளிகையைவிட மண்வீடே
உயர்ந்தது என நினைத்தான்...
இப்போது தான் மண்வீட்டுக்காரனும்
தானும் சமம் என எண்ணிப்
பூரிப்படைந்தான்...

பாவம் அவன் முன்னோர்...
உதிரம் சிந்திக்கட்டிக்காத்த
மாளிகை சிதைந்து போனது...
ஆனால் துயர் விடுத்து
அதைச் சாதைனையாக எண்ணி
சந்தோஷிக்கின்றான் இவன்...

தமிழ் எனும் மாளிகை
நேற்று வந்த மண்வீட்டிற்கு
நிகராய் மாற்றப்படும்
ஈனம் கண்டீரோ?

அழகு சிதைக்கப்பட்டு
கீர்த்தி கெடுக்கப்பட்டு
மண்வீட்டின் பண்பினைப்
புகுத்தும் கொடூரம் கண்டீரோ?

மாளிகையில் வசிப்பது அகௌரவம்
என்றெண்ணி
மண்வீட்டிற்கு மாறும்
அறிவீனம் கண்டீரோ?
தமிழா...
அறிவீனம் கண்டீரோ?



இக்கவிதை இன்று றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றத்தின் கலைவிழாவில் வெளியிடப்பட்ட தமிழ்நயம் 2009 நூலில் இடம்பெற்றது.

Nov 5, 2009

புதிய காளமேளகத்திலிருந்து சில வரிகள்...

நான் முன்பு “புதிய காளமேளம்” எனும் வலைப்பதிவில் எழுதிய வரிகளில் தெரிந்தெடுத்தவற்றை மீண்டும் இங்கு பதிகின்றேன். இப்போது கூட அந்த வலைப்பதிவைத் தொடரலாம் எனும் எண்ணம் இருக்கிறது - ஏனென்றால் நேரடியாகச் சில உண்மைகளைக் கூறக் கடினமென்றாலும் இது போன்ற கவிதைத் தன்மையான வரிகளினூடாகச் சொல்வது சுலபம்!

****************************************************************

மூஞ்சிப்புத்தக மோகம்!

மூஞ்சியே தெரியாதவரோடெல்லாம்
மூச்சுமுட்டப் பேசவைக்கிறது
மூஞ்சிப்புத்தகம் - வெள்ளையன் மொழியில்
பேஸ்புக்.....

பொன்னான நேரமெல்லாம்
போகிறதே மண்ணாய்....
மூஞ்சிப் புத்தகத்தின் முகத்தெழிலில்
முகங்குனிந்த பேதைபோல - எம்மவரெல்லாம்
அடிமைப்பட்டு காலங்களி(ழி)க்கிறார்கள்....

இன்னும் இன்னும் கோடிமாக்களும்
வேலைவெட்டியின்றி - மோகத்தின்
பிடிப்பால் மூஞ்சிப்புத்தகத்தின் காலடியில்
தவழ்ந்து திளைக்கின்றனர்.....

தொடர்பு என்பது தேவைதான்...
தொடர்பெனும் இழையால் பின்னப்பட்ட
வலை தானே வாழ்க்கை...?
ஆனால் தொடர்பே வாழ்க்கையானால்???

கேள்விகள் எழுகிறது என்னுள்தான்....
மூஞ்சிப் புத்தகளத்தில் நான் செலவழித்த
நேரத்தை....
பாடப்புத்தகத்தில் செலவழித்திருந்தால்....

ம்..ம்...
காலங்கடந்த ஞானம்......
கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்....

************************************************

திரு.போலி!


அரிசிக் கடை முதல் அரசியற்களம் வரை
பஞ்சமேயில்லை போலிகளுக்கு - எம் தேசமிதில்!
புழுப்பிடித்த அரிசியும் புழுத்துப்போன அரசியலும்
அலுத்துப்போய்விட்டது நம்மவருக்கு....

அரிஸ்டோட்டிலும், பிளேட்டோவும் முத்தெடுத்த
அரசியலை தத்தெடுத்த வீணரிவர் வீணாக்கினரே!
செம்மறிக்கூட்டமொன்றுமிப் போலிகளை நம்பி
செம்மையறியாது பின் செல்கின்றனவே!

அன்பிலும் போலி - இவர் பண்பிலும் போலி
யாதொன்றும் உண்மையாய்ச் செய்யாரே!
இவர் பேச்சுமோர்பொருட்டென சில மூடரும்
கைதட்டி மெய்சிலிர்த்து மகிழ்ந்தனரே!

************************************************

இவனும் அரசியல்வாதி!


இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

முதலிரண்டு பொத்தான்கள் திறந்த ஷேர்ட்...
நன்றாக அழுத்திய காற்சட்டைகள்...
புத்தம் புதுசாய் ஜொலிக்கும் சப்பாத்துகள்...
14 பவுணில் கழுத்தில் ஒரு சங்கிலி...
அது தெரிவதற்குத் தானோவந்த பொத்தான் திறப்பு?!

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

தனியே வந்தால் பந்தா இல்லையென்று....
கூட்டத்துடனேயே வருவானிவன்...
காந்தியுந்தான் வந்தார் கூட்டத்துடன்...
ஆனால் இவனுடன் வருவது
ரெளடிகளும், சண்டியர்களும்....

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

சின்னச் சின்ன விடயங்களிற்குக் கூட
ஆண்மை பொங்கும் இவனுக்கு!
ஏனோ தெரியவில்லை பிறரைப் பழிக்காவிடின்
உறக்கமேயில்லை இவனுக்கு!

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

வாயில் எச்சில் ஊறும் எமக்கு....
வாயில் துர்பேச்சு ஊறும் இவனுக்கு...
பதிலுக்கு பதில் பேசுவான் - எவரையும்
எதிர்க்கும் ஆண்மகனென தன் புகழ் பாடுவான்!

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

இவனும் சரியில்லை, இவன் மகனும் சரியில்லை...
மக்களிலும் பிழையில்லை - காரணம் அவர்கள்
இவனுக்கு வாக்களிக்கவேயில்லை....
அப்போ இவன் எப்படி அமைச்சரானான்???

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி...

********************************************
இலக்கியம் படைக்கும் மாமேதைகள்!


சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த இப்பாரதனில்
இன்று இலக்கியம் படைக்கும் மாமேதைகள்....
உண்மை மேதைகளுக்கு விலக்குண்டாயினும்
பொய்மைப் புகழ் விரும்பிகளும் இலக்கியவாதிகளாய்
இனங்காட்டும் ஈனம் அவர்க்கு மட்டுமல்ல தமிழுக்கும்
இழிவாமே ஏனறியார் இம்மூடர்....


இலக்கணமும் இறந்தாச்சு - சங்க
இலக்கியமும் மறந்தாச்சு - அற்பப்
புகழ் விரும்பும் பேய்களின் கையில்
தமிழ் மணமும் நாறிப்போயாச்சு....


அர்த்தமில்லா கதைகளெல்லாம்
காவியமென போற்றப்படுதலாச்சு
கேடுகெட்ட வசனமெல்லாம்
கவிதை என புகழும் பெற்றாச்சு....


கட்டுக்கட்டாய் புத்தகங்கள் - குறை விலையில்
அச்சுப் பதிச்சாச்சு... - வேலையற்ற மாக்களுடன் கூடி
வெளியீட்டு விழாவும் நடத்தியாச்சு....

சங்கமாவது கிங்கமாவது - யார் எமைக்கேட்பார் ?
காசிருந்தால் கண்டதும் எழுதும் 'பண்டிதரும்'
இனி இலக்கிய மேதை தான்!

********************************************

Nov 3, 2009

இலங்கையில் தமிழ் சினிமா இல்லாதது கவலைக்குரியது...

இலங்கையின் திரைப்படத்துறை வரலாற்றில் இதுவரை ஏறத்தாழ 50 தமிழ்த் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் பின்னர் தமிழ்த்திரைப்படத்துறை முடங்கிவிட்டது. ஆயினும் திரைப்படங்கள் எடுக்கப்பட்ட காலத்தில் மிகத் தரமான திரைப்படங்கள் எம்மவர்களால் படைக்கப்பட்டிருக்கிறது. வாடைக்காற்று, குத்துவிளக்கு போன்ற கதையம்சம் பொருந்திய படங்களும், நான் உங்கள் தோழன் போன்ற எம்.ஜி.ஆர் படங்களை ஒத்த திரைப்படங்களும், கோமாளிகள் - நகைச்சுவைத் திரைப்படமும் என வகை வகையான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன - பல வெற்றியும் பெற்றன.

இலங்கையில் தமிழ் சினிமாவின் அவசியம் என்ன என்று பலர் வினவலாம். இன்று தமிழர்களுடைய அடையாளமாகவே தமிழக சினிமா மாறிவிட்டது. எந்த விசேஷமானாலும் சினிமாவும் அதில் ஒரு அங்கமாக மாறிவிட்டது - நவீன இலக்கிய வடிவமாக சினிமாவைக் கொள்ளமுடியும் - அந்தளவுக்கு சினிமாவின் ஆதிக்கம் தமிழரிடையே ஊறிவிட்டது. இன்று தமிழ்ப் பாடல் ஒன்று பாடும் படித் தமிழ்ச் சிறுவனிடமோ, இளைஞனிடமோ கேட்டால் நிச்சயமாக அவன் பாடுவது சினிமாப்பாடலாகவே இருக்கும். இவ்வளவு ஏன் இன்று தமிழ் ஊடகங்களின் உயிர்நாடியே சினிமாதான். இப்படியாக தென்னிந்திய சினிமாவே உலகத் தமிழரின் அடையாளமாக மாறிவிட்டது.

சங்ககாலம் முதல் 18ம், 19ம் நூற்றாண்டு காலம் வரை நாங்கள் இலக்கிய வரலாற்றை உற்றுநோக்கினால் - தென்னிந்தியாவில் தமிழ் இலக்கியம் வளர்ச்சிபெற்ற அளவுக்கு இலங்கையிலும் தனித்துவத்துடன் தமிழ் இலக்கியம் வளர்ந்திருக்கிறது. பிற்பட்ட காலங்களில் தமிழக இலக்கியங்கள் அழகியல் ரீதியானவற்றில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த போது ஈழத் தமிழ் இலக்கியங்கள் வைத்தியம், சோதிடம் போன்ற விஞ்ஞானபூர்வமான இலக்கியப்படைப்பிலும் ஈடுபட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழருக்கென தனித்துவமான இலக்கியப் படைப்புக்களும், பண்புகளும் காணப்பட்டன. காலப்போக்கில் இனப்பிரச்சினையும், புலம்பெயர்வுகளும், இவற்றைவிட இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சியும் இலங்கைத் தமிழரது தனித்துவமான இலக்கியப் படைப்புக்களுக்கு சிறுது சிறிதாய் முற்றுப்புள்ளி வைக்கத்தொடங்கின. சினிமா எனும் நவீன இலக்கிய வடிவத்தைக் கைக்கொண்டு இலங்கையில் தமிழ்த் திரைப்படங்கள் வந்திருந்தாலும் பிற்பாடு அவற்றின் தயாரிப்பு நின்ற பிறகு நாமும் எனது ஊடகங்களும் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கி இன்று அதிலேயே ஊறிவிட்டோம். விளைவு எனது தனித்துவமான மொழி, கலாசாரம், பண்பாடுகள் எம் கண் முன்னேயே கொஞ்சம் கொஞ்சமாக அருகி வருவதை கண்டும் காணாதது போல இருந்துகொண்டிருக்கின்றோம்.

அப்படி என்னடா பெரிய கலாசார பேதம் என நீங்கள் வினவலாம். நான் நேரிடையாகக் கண்ட ஒரு சின்ன உதாரணம் சொல்கின்றேன். எமது இலங்கைத் தமிழர் கலாசாரத்தில் தாய் தந்தையரை, பெரியோர்களை “நீ” என விளிக்கும் பண்பாடு இல்லை மாறாக மரியாதை நிமித்தம் நாம் “நீங்கள்” என்று தான் விளிப்போம் ஆனால் தென்னிந்திய முறையில் “நீ” என்று விளிப்பது அவர்கள் அளவில் தவறல்ல. இதனால் என்ன என்று கேட்பவர்களுக்கு ஒன்று - கலாசார, பண்பாடு பேதங்களில் ஒன்றைச் சரி அல்லது தவறு என கூறமுடியாது ஆனால் எமது கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டிய தார்மீகக் கடமை எம்மிடம் இருக்கிறது - இந்தியத் தமிழோ அவர்களது கலாசாரமோ தவறல்ல ஆனால் எமது கலாசாரத்தை நாமே கெடுக்கக்கூடாது அல்லது கைவிடக்கூடாது ஏனென்றால் அது தான் எமது தனித்துவத்தின் அடையாளம் - நாம் யார் என்பதன் அடையாளம் அதுதான்.

எனக்கேற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்று உண்டு. இத்தாலியில் உலகப் பாடசாலைகள் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்தேன். மூன்றாம் நாள் நிகழ்வாக அவரவர் தமது கலாசார நிகழ்வொன்றை நடத்த வேண்டும். இலங்கையிலிருந்து நானும் 2 சிங்களத் தம்பிமார்களும் சென்றிருந்தோம் - நாம் மூவரும் ஒரு கலாசார நடனமும், பாடலும் பாடுவதாக இருந்தது. நாட்டியத்தில் அவர்கள் சிங்கள முறை நாட்டியத்தை ஆட நான் காவடியை வைத்துக்கொண்டு கால்களை அங்குமிங்கும் அசைத்துக்கொண்டிருந்தேன் (அட நடனமாடியதாக எடுத்துக் கொண்டால் சரி) அடுத்து பாடல் பாடப் புறப்பட்ட போது தான் எனக்குப் பொறி தட்டியது. தம்பிமார் ஒரு சிங்களப் பாடலும் நான் ஒரு தமிழ்ப் பாடலும் பாடுவதாக இருந்தது. ஆனால் நான் தயாராகிக்கொண்டு போனது “ஒவ்வொரு பூக்களுமே” பாடல் - ஆனால் எதிரே இந்தியாவில் இருந்து வருகை தந்த பாடசாலை தென்னிந்தியாவின் பிரபல பாடசாலை- வந்திருந்தவர்கள் அனைவரும் தமிழர்கள். நான் இந்தப்பாடலைப் பாட இது உங்களுடைய பாடல் அல்ல இந்தியாவின் பாடல் என உரிமை கொண்டாடிவிட்டால் அது அவமானமாயிற்றே என்று எண்ணி சுதாகரித்துக்கொண்டு பெரியதம்பிப் புலவரின் கவிதை ஒன்றை கவிதைத் தொனியில் கூறி அதன் ஆங்கில அர்த்தத்தையும் கூறி கைதட்டு வாங்கி விட்டு மேடையிலிருந்து இறங்கினேன் - ஆனால் அந்த சில நிமிடங்கள் என் மனத்தில் ஆறாத வடுவாகப் படிந்துவிட்டது - இலங்கைத் தமிழருக்கென ஏன் தரமான பாடல்களோ, இலக்கியங்களோ இன்றில்லை அல்லது இருந்தும் ஊடகங்களின் அலட்சியப்போக்கால் அவை உயர்வடையவில்லையோ என்ற ஏக்கம் என்னிடம் இன்றுவரை இருக்கிறது.

இலங்கையில் எமக்கென ஒருவேளை தமிழ் சினிமாத் துறை இருந்திருந்தால் அந்த வலிமையான ஊடகம் எமது தனித்துவ அடையாளத்தைக் காக்கவும் எம்முடையது என உரிமையுடன் சொல்லக்கூடிய படைப்புக்களைத் தந்திருக்கும் ஆனால் எமது துரதிர்ஷ்டம் இலங்கையில் தமிழ் சினிமாத்துறை இல்லை என்பது அதனால் இன்றும் எமது ஊடகங்கள் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களிலும் பாடல்களிலும், நாடகங்களிலும், நிகழ்ச்சிகளிலுமே தங்கியிருக்கிறது.

நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது....

Nov 2, 2009

சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டமைப்பு சாத்தியமா?


அண்மையில் இலங்கையிலுள்ள சிறுபான்மைக் கட்சிகள் சில தமக்குள் கூட்டமைப்பு உருவாக்கும் நோக்கில் பிரபல ஹொட்டேல் ஒன்றில் சந்திப்பொன்றை நடத்தியதாக அறியக்கிடைத்தது. ஊடகங்களில் அதிகம் இது பெரியளவில் பேசப்படாவிட்டாலும் இது ஒரு முக்கிய திருப்புமுனையாகும். இலங்கையில் இந்தச் சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டணி என்பது சாத்தியமா? என்ற கேள்வி என்னுள் எழுகிறது - இது உங்களில் பலருள்ளும் எழும் என்று நினைக்கின்றேன்.

இலங்கையின் சிறுபான்மையினரிடையே இருக்கின்ற மிகப்பெரிய அரசியல் பலவீனம் கட்சிப் பிளவுகள் தான். ஆளாளுக்கு சிறுபான்மைக் கட்சிகளை அமைத்துக்கொண்டு போவதால் வாக்குகள் சிதறி சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் இல்லாமல் அல்லது குறைந்து போகிறது. ஏற்கனவே ஒப்பீட்டளவில் சிறுபான்மையினராக இருந்த கொண்டு அதிலும் அதிக கட்சிப் பிளவுகள் ஏற்பட்டால் இம்மக்களின் நிலை என்ன?

அண்மையில் பிரபலத் தமிழ்நாட்டு அரசியல் வாதியொருவர் இலங்கைத் தமிழ்க்கட்சிகளிடையே ஒற்றுமையில்லை. தொண்டமான் ஒருபக்கம், சந்திரசேகரன் ஒருபக்கம், தமிழ்க்கூட்டமைப்பு ஒருபக்கம், டக்ளஸ் தேவானந்தா ஒரு பக்கம், சந்திரகாந்தன் ஒருபக்கம், மனோகணேசன் ஒருபக்கம் என்று இப்படியாகத் தமிழர்களே பிரிந்து நின்றால் எப்படி? எனக் கேட்டிருந்தார். திமுக ஒருபக்கம், அதிமுக ஒருபக்கம், மதிமுக ஒருபக்கம், பாமக ஒருபக்கம், விடுதலைச் சிறுத்தைகள் ஒருபக்கம், காங்கிரஸ் ஒருபக்கம், பாஜக ஒருபக்கம், கம்யுனிஸ்ற் ஒருபக்கம், நெடுமாறன் ஒருபக்கம், விஜயகாந்த் ஒருபக்கம், சரத்குமார் ஒருபக்கம், எனத் தமிழர்கள் பிரிந்து நிற்கும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு எங்களைக் கேட்க அவருக்குத் தகுதியிருக்கிறதா என்பது கேள்விக்குரியது எனினும் அவர் சொன்ன கருத்தில் பிழையில்லையே? எமக்குள்ளேயே ஒற்றுமையில்லையே.... எத்தனை பயனற்ற கட்சிப்பிளவுகள்?!

சரி இந்தக் கட்சிப் பிளவுகளில் பயன்தான் ஏதும் இருக்கிறதா? பல கட்சிகள் இருந்தாலும் அவற்றுக்கிடையில் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலாவது அந்த கட்சிப் பிளவுகளை நியாயப்படுத்தலாம் ஆனால் அவ்வாறு ஒன்றுமில்லாமல் ஆளாளுக்கு கட்சியை அமைத்துத் தலைவராகும் கலாசாரம் தான் இன்று சிறுபான்மையினரைத் திக்கற்றவர்களாக நிறுத்தியிருக்கிறது. நல்லகாலம் சில காலம் முன்பதாக வட-கிழக்குத் தமிழ்க் கட்சிகள் சில இந்தப் பிளவகளின் பிரதிகூலங்களையும் பயனற்ற நிலையையும் உணர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமைத்து அதை வட-கிழக்கில் ஒரு பலமாக சக்தியாக நிறுவினார்கள் (அதன் இன்றைய நிலை???!). இந்தப் பிரிவனைகள் வட-கிழக்குத் தமிழ்க் கட்சிகளிடையே மட்டுமல்ல மலையகக் கட்சிகளிடையேயும், முஸ்லிம் கட்சிகளிடையேயும் இருக்கிறது - இது சிறுபான்மையினருக்கும் பலம் அல்ல - பலவீனமே.


உதாரணத்திற்கு மலையகத்தை எடுத்தால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸற்கும், மலையக மக்கள் முன்னணிக்கும் வெளிப்படையாகக் கொள்கையில் வேறுபாடு தெரியவில்லை - இருவரும் அரசாங்கக் கொள்கையை ஆதரித்து அரசாங்கத்துடன் தான் இருக்கிறார்கள். இப்படியிரக்கையிலே அவை ஏன் இரு வேறு கட்சிகளாக இருக்க வேண்டும்?

இதற்கு முஸ்லிம் கட்சிகளும் பல வட-கிழக்குத் தமிழ் கட்சிகளும் விதிவிலக்கல்ல. கொள்கைகளும் நோக்கும் ஒன்றானாலும் வேறு வேறாகப் பிரிந்து நிற்கின்றனர்.

இந்நிலையில் இன்று தோன்றியிருக்கும் சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டமைப்பு என்ற எண்ணம் சிறப்பானது என்ற பூரிப்பிற்கப்பால் இது சாத்தியமா என்ற ஐயமே விஞ்சி நிற்கிறது. இலங்கை வரலாற்றில் இது போன்ற முயற்சியில் இதுவே முதலாவது இல்லை அப்படி இருக்கவும் முடியாது ஆனால் கூட்டமைப்பு என வரும் போது பல கட்சிகளும் விட்டுக் கொடுப்புக்ளையும் தியாகங்களையும் செய்ய வேண்டியிருக்கும். சுயநலங்களைக் கடந்து இதனை இன்றைய சிறுபான்மைக் கட்சிகள் செய்யுமா என்பது அது நடக்கும் வரை நிச்சயமற்றது. மேலும் அவர்கள் வார்த்தைகளால் பூசி மெழுகினாலும் தமிழ்-முஸ்லிம் கசப்புணர்வுகளும் காழ்ப்புணர்வுகளும் இந்தக் கட்சிகளினால் களையப்பட்டு ஒற்றுமையான அணி ஏற்படுத்தப்படுமா என்பதும் ஐயமே.


இவற்றைவிட இந்தக் கூட்டமைப்பு வெறும் எதிர்க்கட்சியிலுள்ள சிறுபான்மைக் கட்சியின் கூட்டமைப்பாக மட்டுமே அமையுமானால் அதனால் பெரும் பயன் ஏற்படுமா என்பதும் கேள்விக்குரியது. ஏனெனில் இன்று தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை வட-கிழக்கில் கூட்டமைப்பிற்கு அடுத்தபடியாக செல்வாக்கில் இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், மலையகத்தின் இருபெரும் சக்திகளான தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸீம், சந்திரசேகரனின் மலையக மக்கள் முன்னணியும், பேரியல் அஷ்ரப்பின் நுவாவும், ஏனைய சில முஸ்லிம் கட்சிகளும் அரசாங்கத்துடனேயே இருக்கின்றன. இவற்றை விடுத்து வெறும் எதிர்க்கட்சியிலுள்ள சிறுபான்மைக்கட்சிகளின் கூட்டமைப்பு என்பது பெரிதாக எதையும் சாதித்து விடாது.



மறுகரையில் இந்த எதிர்க்கட்சியிலிருக்கும் சிறுபான்மைக் கட்சிகளில் சில பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளாக இருக்கின்றன. அவற்றின் வாக்கு வங்கிகள் கூட ஐக்கிய தேசியக் கட்சியில் தங்கியதாக இருக்கும் வேளையில் சுதந்திரமான சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டமைப்பாக அவை இயங்கும் சாத்தியம் இல்லை.

இவற்றை விட யதார்த்தத்தில் பார்க்கும் போது தலைமைத்துவப் போட்டிகளும் ஆசனங்களுக்கான போட்டிகளும் பின்னர் அமைச்சர்களாவதற்கான போட்டிகளும், குழறுபடிகளும் தவிர்க்கமுடியாத படி எழும் - இவற்றை இக் கட்சிகள் விட்டுக்கொடுக்கும் மனப்பானமையுடன் அணுகுமா? ஒரே பொதுக் கொள்கையில் நிலைத்திருக்குமா? தனித்தீர்மானங்களின்றி கூட்டுத்தீர்மானங்களின் படி இயங்குமா? தேர்தலின் பின்னும் பிரியாது ஒன்றித்தே இயங்குமா? அல்லது தேர்தல்காலக் கூட்டமைப்பாக மட்டுமே இயங்குமா போன்ற பல கேள்விகள் இன்னும் தொக்கு நிற்கிறது.

இவற்றுக்கெல்லாம் சாத்தியமான தீர்வுகளை இந்தத் தலைவர்கள் தூய்மையாக எடுக்கும் வரை இது வெறும் “ஏழையின் கனவாக”த்தான் இருக்கும். உண்மையில் இப்படி ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டால் - சகல சிறுபான்மைக் கட்சிகளும் பேதமின்றி ஒன்றிணைந்தால் நாளை சிறுபான்மையினருக்கு அது சாதகமான நிலையை இத்தேசத்தில் உண்டு பண்ணும். அமரர்.ஜீ.ஜீ.பொன்னம்பலம் கோரியது போல 50:50 தீர்வு கூட எதிர்காலத்தில் சாத்தியமாகலாம் ஆனால் இவை நடக்குமா? இன்றைய தலைவர்கள் இதைச் சாத்தியமாக்குவார்களா? - மனம் முழுவதும் சந்தேகமான கேள்விகள் மட்டுமே விடைகளாக இருக்கிறது.

நாளை நமதே! - எங்கள் கனவு!