Dec 11, 2010

நீக்கப்படவிருக்கும் இலங்கையின் தமிழ்த்தேசிய கீதமும், அமைச்சரவையின் அப்பட்டமான பொய்களும்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள தேசிய கீதத்தின் தமிழ்ப் பதிப்பை நீக்குவதற்கு அமைச்சரவை முடிவெடுத்திருப்பதாக Sunday Times செய்தி வெளியிட்டிருக்கிறது. 


மேற்படி செய்தியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேறு ஒரு தேசத்திலும் 2 மொழிகளில் தேசிய கீதம் இல்லை என்று அமைச்சரவையில் தெரிவித்ததாகவும், அதனை ஆதரித்த விமல் வீரவன்ச, 300ற்கும் மேற்பட்ட மொழிகளுடைய இந்தியாவில் கூட ஹிந்தியில்தான் தேசிய கீதம் இருப்பதாகக் கூறியதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது. அமைச்சரவையில் வாசுதேவ நாணயக்கார, றாஜித சேனாரத்ன ஆகிய அமைச்சர்கள் இருவர் மட்டுமே தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை நீக்கும் முன்மொழிவுக்கு மறுப்பாகக் கருத்துத் தெரிவித்ததாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது.

இந்தப் பதிவை நான் எழுதக்காரணம் அமைச்சரவையின் முடிவைக்கண்டிப்பதற்கு மட்டுமல்ல மாறாக, பொய்யான கருத்துக்களைக்கூறி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், விமல் வீரசின்ஹவும் மக்களை ஏமாற்ற விளைந்ததைச் சுட்டிக்காட்டவுமேயாகும்.

முதலாவதாக ஜனாதிபதி, உலகில் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் வேறு தேசமெதிலும் இல்லை என்று கூறிய கருத்து, அப்பட்டமான பொய். கனடாவின் தேசிய கீதம் 3 மொழிகளில் காணப்படுகிறது. ஆங்கிலம், ஃபிரெஞ்ச் மற்றும் இனுக்டிடுட் ஆகிய மொழிகளில் கனேடிய தேசிய கீதம் பாடப்படுகிறது. சுவிற்சலாந்துத் தேசிய கீதம் சுவிற்சலாந்தின் நான்கு உத்தியோகபூர்வமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜேர்மன் மொழியில் முதலில் எழுதப்பட்டிருந்தாலும், சுவிஸ்ஸின் ஏனைய உத்தியோகபூர்வ மொழிகளான ஃபிரெஞ்ச், இத்தாலியன் மற்றும் றொமான்ஷ் ஆகிய மொழிகளில் சுவிஸ் தேசிய கீதம் மொழிபெயர்க்கப்பட்டு பாடப்படுகிறது. இதை விட தென்னாபிரிக்க தேசிய கீதத்தில் ஒரே கீதமாக இருப்பினும் அது தென்னாபிரிக்காவில் பேசப்படும் 5 மொழிகளை கொண்டு எழுதப்பட்டுள்ளது. தென்னாபரிக்கத் தேசிய கீதம் ஸோசா (முதற் பந்தியின் முதலிரு வரிகள்), செசோதோ (முதற்பந்தியின் கடைசி இரண்டு வரிகள்), சுலு(இரண்டாம் பந்தி), அஃப்ரிகான்ஸ் (மூன்றாம் பந்தி) மற்றும் ஆங்கிலம் (நான்காம் பந்தி) ஆகிய ஐந்து மொழிகள் சேர்த்து எழுதப்பட்டது.

அடுத்ததாக விமல் வீரவன்ச சொன்ன கருத்து - “இந்தியத் தேசிய கீதம் ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது” - அடுத்த அப்பட்டமான பொய், இதை இவர் சொன்னதற்குக் காரணம், இந்தியாவில் பெரும்பான்மையானோரின் மொழி ஹிந்தி, ஆகவே பெரும்பான்மையானோரின் மொழியிலேயே தேசியகீதம் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட இந்தியாவின் தேசிய கீதம் ஹிந்தியில் தான் இருக்கிறது என்ற அப்பட்டமான பொய்யைச் சொல்லியிருக்கிறார். இந்தியத் தேசிய கீதம் பெங்காலியில் (சமஸ்கிருதப்படுத்தப்பட்ட பெங்காலி) நோபெல் பரிசு பெற்ற கவிஞர் ரபீந்திரநாத் தாகூரினால் எழுதப்பட்டது. ஆக பெரும்பான்மை இந்தியர் பேசும் மொழியில் அல்ல இந்தியாவின் தேசிய கீதம் பாடப்படுகிறது. இவ்வளவு ஏன், சீனர்கள் பெரும்பான்மையாகவுள்ள சிங்கப்பூர் தேசிய கீதம் மலேயிலேயே எழுதப்பட்டது, அதற்கு சீன, தமிழ் மற்றும் ஆங்கில உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்புக்கள் உண்டு எனினும் அது மலேயிலேயே பாடப்படுகிறது. ஆகவே பெரும்பான்மையோரின் மொழியிலேயே தேசிய கீதம் அமையவேண்டும் என்ற அவசியம் இல்லை.

அமைச்சர்களாக இருப்பவர்கள் மக்களை முட்டாள்கள் என்று நினைத்தக்கொண்டிருக்கக்கூடாது. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்ற நம்ப நாங்கள் படிப்பறிவில்லாதவர்கள் அல்ல.

இலங்கைத் தேசிய கீதத்தின் தமிழ்ப்பதிப்பை நீக்கியதன் மூலம், அரசாங்கம் தனது தமிழின விரோத நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிக்காட்டியுள்ளது. யுத்தத்தின் பின்னரான மீளிணக்கப்பாட்டுச் செயற்பாடுகளில் இது பாரிய பின்னடைவாகும், அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கிச் செயற்படச்சம்மதித்து ஒரு நாள் கூட ஆகமுன் இத்தகைய முடிவானது தமிழ் மக்களை அதிருப்திக்குள்ளாக்கும் என்பதை அரசாங்கம் மறந்துவிட்டது போலும்.

இனவாத அரசியலை இலங்கைத் தலைவர்கள் கைவிடும் வரை இலங்கையின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.

"Racism is man's gravest threat to man - the maximum of hatred for a minimum of reason."  ~Abraham Joshua Heschel

**************************************************************************

அமைச்சரவை நீக்குவதற்கு முடிவெடுத்த இலங்கைத் தேசிய கீததத்தின் தமிழ்ப்பதிப்பு (இனி சுவடியாகப் பாதுகாக்கப்படவேண்டியதுதானா?!)

ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்காநமோ நமோ நமோ நமோ தாயே

நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே