Jun 29, 2010

சொற்சமர்க் கால ஞாபகங்கள்! - (03) எதிரிகளும், வைரிகளும்...

இது ஒரு தொடர்ப்பதிவு
இதன் முன்னை அங்கத்தைப் படிக்க : சொற்சமர்க் கால ஞாபகங்கள்! - (02) கூர் தீட்டப்படுகிறோம்...


சமர் என்று வந்துவிட்டால் எதிரிகள் இல்லாமல் முடியுமா? சொற்சமரான விவாதத்தைப் பொருத்த வரையில் எதிரணிகள் தான் எங்கள் எதிரிகள். ஆம் விவாதம் தொடங்கி முடியும் வரை அந்த உணர்வோடுதான் வாதிடுவோம், வெற்றிக்கனி பறிக்கும் வரை அந்தச்சூடு உடலில் தணியாது. விவாதத்திற்கு முன்னும், பின்னும் நண்பர்களாக இருப்போம், விவாதச் சமரின் போது எங்கள் எதிரிகளாகவே பாவிப்போம், காரணம் அப்போதுதான் அந்த உணர்வு விவாதத்திற்கு இன்னும் உயிரூட்டுவதாக இருக்கும். 

எதிரிகள் என்றால் அதில் நிறைய வகையுண்டு. றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணியைப் பொருத்த வரையில் எங்களது பாரம்பரிய வைரிகள் பரி தோமாவின் கல்லூரி அணிதான். றோயல்-தோமிய பாரம்பரியம் இங்கும் தொடர்கிறது. கடந்த 16வருடங்களாக தொடர்ந்த றோயல் தோமிய தமிழ் விவாதச் சமர் வருடாவருடம் நடைபெற்று வருகிறது, எந்தவொரு வேத்தியனுக்கும் இந்தப் போட்டியில் பங்கெடுப்பது என்பது மிகவும் மதிப்பான, பெருமையான ஒரு விடயம், நான் 3 முறை இப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றியும் பெற்றிருக்கிறேன். அதில் 2 முறை அணியின் தலைவனாக வெற்றிபெற்ற மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. றோயல்-தோமிய விவாதங்களில் கடைசியான பரி தோமாவின் கல்லூரி அணி வெற்றி பெற்றது 2002ம் ஆண்டில் அதன் பின் தொடர்ந்து 7 வருடங்கள் எமது அணியே வெற்றிபெற்று வருகிறது. பரி தோமாவின் கல்லூரி அணி கடந்த சில வருடங்களாக சிறப்பான நிலைமையில் இல்லை என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும் ஆனால் கடைசியாக நடைபெற்ற 16வது றோயல்-தோமிய தமிழ் விவாதச்சமாரில் தோமிய அணி கடுமையான சவால் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது, கிட்டத்தட்ட 5 வருடங்களின் பின் மிகச்சிறப்பான தோமிய அணியாக அது காணப்பட்டது, ஆக வருங்காலங்களில் தோமிய அணி இன்னும் வலுவானதாக வரும் என்று எதிர்பார்க்கலாம். றோயல்-தோமிய பாரம்பரிய தமிழ் விவாதச் சமர் பற்றி மேலுமறிய இங்கே சொடுக்கவும்.

றோயல்-தோமிய விவாதத்திற்கு அடுத்தபடியாக நாங்கள் சவாலான போட்டியாகக் கருதுவது றோயல்-பம்பலப்பிட்டி இந்து விவாதப் போட்டிகளைத்தான். றோயல்-தோமிய பாரம்பரியம் போல ஏதுமில்லாவிட்டாலும், தமிழ் விவாதத்தைப் பொருத்தவரை பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி எங்களுக்குச் சவாலான ஒரு அணிதான். அண்மைக்கால (கடந்த 5 வருடங்கள்) தமிழ் விவாதப் போட்டிகளின் முடிவுகளை பார்த்தீர்களேயானால் பெரும்பான்மையான விவாதச் சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் றோயல்-பம்பலப்பிட்டி இந்து போட்டிகளாகவே அமைந்திருக்கிறது. சில வருடங்களில் நாமும், சில வருடங்களில் அவர்களும் வென்றிருக்கிறார்கள். பருவகாலத்திற்கும், அணிகளின் நிலைக்கும் ஏற்ப இது மாறுபடும். நாங்கள் முக்கியமாக மோதும் போட்டிகளில் முதன்மையானது கல்வி அமைச்சு நடத்தும் தமிழ்த்தினப்போட்டிகள் 2006ம் ஆண்டு றோயல் கல்லூரி அணி முதலாம் சுற்றுடன் வெளியேறிவிட, வலைய மட்டத்தில் பம்பலப்பிட்டி இந்து வெற்றிபெற்றது. 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் தொடர்ந்து இரு முறையும் றோயல் கல்லூரியே வலையமட்டத்தில் வெற்றிபெற்று பின்னர் அகில இலங்கை மட்டம் வரை சென்றது, இதில் 2008ல் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது, அந்த இரண்டு ஆண்டுகளும் அணியைத் தலைமைதாங்கியவன் என்ற விதத்தில் எனக்கு மகிழ்ச்சியான தருணங்கள் அவை. (இதற்கு முன்னர் 2004ல் நிஷாந்தன் அண்ணாவின் தலைமையில் றோயல் கல்லூரி அணி தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது)! இதோ 2009ம் ஆண்டுப் போட்டியில் சில பம்பலப்பிட்டி இந்து வென்றிருக்கிறது. பம்பலப்பிட்டி இந்து அணி சவாலான அணி, அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப்பொருத்துத்தான் விவாதத்தில் வெற்றி தோல்வி நிர்ணயமாகிறது. என்து கணிப்பின்படி அவர்களது பலம் பெரும்பாலும் மொழியாற்றலும், உறுதியான கருத்துரைப்பும் எமது பலம் பயிற்சி அனுபவமும், சமயோசிதமும், இது இரண்டிற்குமிடையேயான யுத்தத்தை நீங்கள் காண விரும்பினால் கட்டாயம் ஒரு றோயல்-பம்பலப்பிட்டி இந்து விவாதப் போட்டியைப் பாருங்கள்! 

இதைவிட குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எதிர் அணிகள் இன்னும் ஒன்றிரண்டுண்டு. வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரி (சைவ மங்கையர் கழகம்) அணி, பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி அணி என்பன குறிப்பிடத்தக்கது. 2007ம் ஆண்டு என்று நினைக்கிறேன், கொழும்பு மகளிர் கல்லூரியினால் நடத்தப்பட்ட தமிழ் விவாதப் போட்டிகளின் அரை இறுதிச்சுற்றில் பலமான இந்து மகளிர் கல்லூரி அணியைச் சந்திக்க நேர்ந்தது. தலைப்பு - சகோதர பாசத்தில் சிறந்தவர்கள் இராம இலக்குமணரே என்று நாங்களும் பஞ்ச பாண்டவரே என்று அவர்களும். விவாதம் நடந்தது - மிக்க சூடாகவும் கொதிப்புடனும். அவர்கள் அணியில் எல்லோரும் எம்மை விட வயதில் மூத்தவர்கள் ஆக எம்மிடம் தோற்கக்கூடாது என்று வைராக்கியத்துடன் சூடாகவே வாதிட்டனர். எனது விவாதப் பயணத்தில் நான் கண்ட மிகச் சூடான வாதங்களுள் இதுவும் ஒன்று. விவாதத்தின் சூட்டில் விவாதம் மிகப்பெரும் எல்லைகளையெல்லாம் தொட்டது, கடைசியில் நாம் வெற்றி பெற்றோம், அந்த விவாதம் பற்றி எழுதவேண்டுமானால் தனிப்பதிவு ஒன்றே எழுதலாம். விவாதத்தில் நாம் வென்று இறுதிப் போட்டிக்குச் சென்று இந்துவை வீழ்த்தி வெற்றிகண்டோம், அந்தப் போட்டித் தொடரை அடுத்த வருடமும் வெற்றிகொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்த 2007 மற்றும் 2008 இரு பருவகாலங்களிலும் நாம் இந்துவிடம் தோற்றது 4 முறைதான், 2 முறை பெனடிக்ட் கல்லூரி அணி நடத்திய போட்டிகளில்  மற்ற ஒன்று இரத்மலானை இந்துக் கல்லூரி நடத்திய போட்டியிலும், அடுத்தது உவெஸ்லிக் கல்லூரி அணி நடத்திய போட்டியிலுமாகும். இரத்மலானை இந்து போட்டியில் நாம் இந்துவிடம் தோற்றது கற்பு பற்றிய சர்ச்சையிலாகும், கற்பிற் சிறந்தவள் கண்ணகி என்று நாங்களும், சீதை என்று அவர்களும் வாதிட்டார்கள் - கற்பு என்ற சர்சையில் தோல்வி. அடுத்தது உவெஸ்லிக் கல்லூரி போட்டியில் தோற்றமைக்கு அலட்சிம் தான் முக்கிய காரணம், நான் அதை மமதை, அதீத நம்பிக்கை என்று கூடச்சொல்வேன். வாழ்க்கை எமக்கு சில நல்ல படிப்பினைகளை சில கசப்பான அனுபவங்கள் ஊடாகத் தருவதுண்டு, அது போன்றவொரு நிகழ்வுதான் இது. அது வரை பெற்ற வெற்றிகள் கொடுத்த போதை அலட்சியமான வாதத்திற்கு வழிகாட்டியது, ஆனால் அந்தத் தோல்வி எம்மைத் தட்டியெழுப்பி, மீண்டும் கால்களை நிலத்திற் படச்செய்தது என்று சொன்னால் மிகையில்லை. அதன் பின்தான் சந்தித்த இடத்திலெல்லாம் வெற்றிகளை தக்கவைக்கத் தொடங்கினோம் தொடங்கினோம். இந்து ஒன்றும் சளைத்த அணி என்று எண்ணிவிட வேண்டாம், அருமையான விவாதிகளைக் கொண்ட பலமான அணியாகவே இருந்தது. இதன் பின்பே கொழும்புப் பல்கலைக்கழக சட்டபீடம் நடாத்திய பாராளுமன்ற முறையிலான தமிழ் விவாதப் போட்டிகளில் 2008. 2009ல் நாம் வெற்றி பெற்றோம். 

என்னதான் விவாதம் சார்ந்த விடயங்களில் நாம் வைரிகளாக இருந்தாலும், அதற்கு வெளியில் நட்புணர்வுடன் தான் பழகினோம். என்னுடைய காலத்தில் விவாதித்த வைரி அணி விவாதிகளுள் என்னைக் கவர்ந்த விவாதிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்துக் கல்லூரி அணியின் தலைவராக இருந்த விதூஷன் ஒரு மிகத்தரமான விவாதி, கருத்துக்களை உணர்ச்சியுடன் கூறுவதில் சிறந்தவர், அனல் பறக்க விவாதிப்பது அவர் பாணி. இந்துக் கல்லூரியின் 4ம் விவாதியாக இருந்த சஞ்சீவனையும் குறிப்பிட வேண்டும், நக்கல் விவாதத்திற்கும், நகைச்சுவைக் கருத்துகளுக்கும் ஆள் பெயர்போனவர். இதைவிட இந்துக் கல்லூரிக்கு பின்னர் தலைமைதாங்கிய சிவாம்சன், தற்போது தலைமைதாங்கும் கஜானன் ஆகியோர் சிறப்பான தமிழ் பேசும் நல்ல விவாதிகள். அந்த 2007 மகளிர் கல்லூரி அணியில் பங்குபற்றிய இந்து மகளிர் கல்லூரி அணி நான் பார்த்த மிகச் சிறந்த அணிகளில் ஒன்று, அண்மையில் கொழும்பச் சட்ட பீட பாராளுமன்ற விவாதப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்ற அழைக்கப்பட்டிருந்தேன், அதன் போது வந்த இந்து மகளிர் அணியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன், அவ்வளவு தமிழ்க்கொலை, எப்படியிருந்த அணி இப்படி ஆயிட்டே என்று வருத்தம் தான். விவாதத்தில் எந்த முரண்பட்ட கருத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால் தமிழ்க்கொலையை ஏற்றுக்கொள்ளவே முடியாது, தமிழைச் சரியாகப் பேச முடியாதவர்கள், அதைப் பயின்றபின் மேடையேறவேண்டும் என்பது எனது அபிப்ராயம். அண்மையில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி, சிறப்படைந்து வரும் தோமிய விவாத அணியின் விஜய் அபிநந்தன் சிறப்பாக வாதிக்கிறார், கடந்த றோயல்-தோமிய விவாதத்தில் சிறப்புமிக்க சிறந்தவிவாதிக்கான விருதையும் வென்றவர் இவர்.

ஒவ்வொரு விவாத அணிக்கும் ஒரு பலம் இருக்கிறது, பலவீனமும் இருக்கிறது. நான் அறிந்த பல அணிகள் எமது வேத்திய அணியுடன் இலக்கிய விவாதங்களில் ஈடுபடுவதை விரும்புவதில்லை, அது போலவே ஒவ்வொரு அணிக்கும் பலம், பலவீனம் இருக்கிறது, இவற்றைச் சரியாகக் கணித்தால் வெற்றியை அதன் பாதையில் செப்பனிட முடியும். இந்த வருடத்தில் நடைபெற்ற சில போட்டிகளில் பம்பலப்பிட்டி இந்து பெற்ற வெற்றிகளுக்குக் காரணம் அவை வேத்திய அணியில் காணப்பட்ட சில தொய்வு நிலைகளை அடையாளங் கண்டுகொண்டதாக இருக்கலாம் என்பது எனது கணிப்பு.


இது தொடர்பிலான சில வெற்றியின் இரகசியங்கள், சாதித்தவர்கள், அனுபவஸ்தர் கூற்றுக்களாக -

உன் எதிரி உன்னை அச்சம் கொள்ளச் செய்யும் முயற்சிகளை அவதானிப்பதன் மூலம் அவன் எதற்கெல்லாம் அச்சப்படுகிறான் என்று அறிந்திட முடியும் - எரிக் ஹொஃபர்.

உன் எதிரி பிழைவிட்டுக்கொண்டிருக்கும் போது இடையூறு செய்யாதே - நெப்போலியன் போனபார்ட்

எங்கள் எதிரிகளிடமிருந்தும் நாங்கள் நிறையக் கற்றுக்கொள்ளலாம் - ஓவிட்

பாம்பைப் பிடிப்பதற்கு உன்எதிரியின் கரத்தைப் பயன்படுத்து - பாரசீகப் பழமொழி

இவையெல்லாம் விவாதத்தில் பயன்படுத்தக்கூடிய உத்திகள்! பலமான எதிரணிகள் இருந்தால் தான் விவாதம் சூடுபிடிக்கும், அந்த வகையில் நான் எங்களைச் சவாலுக்குட்படுத்திய இந்த அணிகளை பெருமிதத்துடன்தான் பார்க்கிறேன்! எனது விவாதப் பயணத்தில் மறக்கமுடியாத தருணங்களைத்தந்ததற்கு அவர்களுக்கு நன்றி.... மறக்கமுடியாத மட்டுமல்ல மறக்க நினைக்கும் சில தருணங்களும் உண்டு... அவை பற்றி அடுத்த பதிவில்....


(தொடரும்)

Jun 28, 2010

இலங்கை அரசியல் யாப்பும், பௌத்த மதமும்.

உலகிலுள்ள பௌத்த நாடுகளுள் முதன்மையாகக் கருதக்கூடிய தேசமாக இலங்கை காணப்படுகிறது. இலங்கையில் 70 சதவீதமளவிற்கு தேரவாத பௌத்தமே பின்பற்றப்படுகிறது. மேலும் இலங்கையில் நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின் பிரகாரம், பௌத்த மதத்திற்கு முதன்மை இடமும், புத்தசாசனத்தைக் காப்பதும், வளர்ப்பதும் அரசின் கடமையாக்கப்பட்டிருக்கிறது. பௌத்தம் என்ற தலைப்பிலேயே இலங்கை அரசியல் யாப்பின் இரண்டாவது அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

1978ம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 1978ம் ஆண்டு யாப்பின், இரண்டாம் அத்தியாயம் (9வது சரத்து) பின்வருமாறு குறிப்பிடுகிறது.


Buddhism.
9. The Republic of Sri Lanka shall give to Buddhism the foremost place and accordingly it shall be the duty of the State to protect and foster the Buddha Sasana, while assuring to all religions the rights granted by Articles 10 and 14(1)(e).


அதாவது, இலங்கைக் குடியரசானது, பௌத்தத்திற்கு முதன்மை இடத்தை வழங்குவதுடன்,  புத்தசாசனத்தைக் காப்பதும், வளர்ப்பதும் அதன் கடைமையாகும் அதேவேளை ஏனைய 10 மற்றும் 14(1)(e) சரத்துக்கள் மூலம் ஏனைய மதங்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தல் வேண்டும் என இலங்கை அரசியல் யாப்பின் 2ம் அத்தியாயம் (9வது சரத்து) குறிப்பிடுகிறது.

10ம் சரத்தானது, மூன்றாவது அத்தியாயமான அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் இடம்பெறுகிறது, அது பின்வருமாறு குறிப்பிடுகிறது,


Freedom of thought, conscience and religion.
10. Every person is entitled to freedom of thought, conscience and religion, including the freedom to have or to adopt a religion or belief of his choice.


அதாவது, சிந்திப்பதற்கான சுதந்திரம், மனச்சாட்சி சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தச் சரத்தானது, ஒவ்வொரு மனிதனுக்கும், சிந்தனை, மனச்சாட்சி, மதச் சுதந்திரத்தை வழங்குவதுடன், அவரது தெரிவான நம்பிக்கையை, மதத்தைச் சார்ந்திருக்கும், பின்பற்றும் சுதந்திரத்தை வழங்குகிறது.

14ம் சரத்தும் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திலேயே இடம்பெறுகிறது. பேச்சு, ஒன்றுகூடல், கூட்டம் நடத்தல் போன்ற சுதந்திரங்களை உறுதிப்படுத்தும் அச்சரத்தின் 1ம் உபசரத்தின் e பிரிவு பின்வருமாறு குறிப்பிடுகிறது.

14. (1) Every citizen is entitled to -
(e) the freedom, either by himself or in association with others, and either in public or in private, to manifest his religion or belief in worship, observance, practice or teaching;

அதாவது, ஒவ்வொரு குடிமகனும், தான் அல்லது தன்னுடன் இணைந்துகொண்ட மற்றவர்களுடன் கூடி, பொதுவாக அல்லது தனியாக தனது மதத்தைப் அல்லது தனது வழிபடும் நம்பிக்கையைப் பிரகடனம் செய்யவும், அதைப் பின்பற்றவும், அதை நடைமுறைப்படுத்தவும், அதைப் போதிக்கவும்  உரித்துடையவராகிறான்.

இந்த அடிப்படையில் வைத்து நோக்கும் போது, இலங்கையில் அரச மதமாக பௌத்தம் ஆகிறது, ஏனைய மதங்களைப் பின்பற்றும் உரிமை வழங்கப்பட்டாலும், அரசியல் அமைப்பின் படி அவை தொடர்பில் அரசிற்கேதும் கடப்பாடோ, கடமையோ நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் பௌத்தமதத்தைப் (புத்த சாசனத்தைப்) பாதுகாப்பதும், வளர்ப்பதும் அரசின் கடமையாகிறது.

இந்தச் சரத்தை இலகுவாக நீக்கவோ திருத்தவோ முடியாத படி அரசியலமைப்பு பாதுகாப்பையும் வழங்குகிறது. அதாவது இந்த 9வது சரத்தை மாற்ற, நீக்க வேண்டுமென்றால் வெறுமனே பாராளுமன்றில் 3ல் 2 பெரும்பான்மை மட்டும் போதாது, அத்துடன் சர்வசன வாக்களிப்பு ஒன்றின் மூலம் பெரும்பான்மை பெறப்பட்டு அதைச் சனாதிபதி 80ம் சரத்தின் படி சான்றளிக்கும் பட்சத்திலேயே இச்சரத்தை மாற்றவோ, நீக்கவோ முடியும்.

இது இவ்வாறாக இருக்க, பலபேருக்கு இலங்கையில் பௌத்தத்தின் நிலை பற்றி பல சந்தேகங்களுண்டு அதில் குறிப்பாக பலருக்கு எழும் சந்தேகம் இலங்கையில் பௌத்தரல்லாதவர் சனாதிபதியாக முடியுமா என்பதாகும். நிச்சயமாக பௌத்தரல்லாத ஒருவர் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் சனாதிபதியாக முடியும், அது தொடர்பில் எந்தக் கட்டுப்பாடுமில்லை. இதுவரை நடந்த சனாதிபதித் தேர்தல்களில் திரு.குமார் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம் ஆகிய தமிழர்கள் போட்டியிட்டிருக்கிறார்கள், இதில் குமார் பொன்னம்பலம் கணிசமானளவு வாக்குகள் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதைவிட முஸ்லிம்களும் போட்டியிட்டிருக்கிறார்கள், ஆக அரசியலமைப்பில் நீங்கள் எண்ணுவதுபோன்ற ஒரு தடையிருந்தால் எவ்வாறு இவர்களது வேட்புமனு ஏற்கப்பட்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்கள்? - இந்த தர்க்கத்தைப் புரிந்தாலே உங்கள் நம்பிக்கை பிழை என்பது தெரிந்துவிடும். மேலும் இலங்கை அரசியல் யாப்பின்படி இலங்கையில் தேர்தல்களில் போட்டியிடவோ. பதவிகள் பெறவோ மதம் ஒரு தடையல்ல.

ஆனால் 9ம் சரத்தின் படி சில நடைமுறைச்சிக்கல்கள் வரலாம், அதாவது அரசாங்கம் புத்தசாசனத்திற்கு எதிராக, முரணாக செயற்பட முடியாதவாறு இச்சரத்து கட்டுப்படுத்துவதாகவும் கொள்ளலாம், ஏனெனில் அவ்வாறு செய்யும் போது அரசாங்கம் புத்தசாசனத்தைக் காக்கும், வளர்க்கும் கடமையிலிருந்து தவறுகிறது என வாதிடலாம். இது தொடர்பில் மேலும் விளக்க புத்தசாசனம் தொடர்பான ஆழ்ந்த அறிவு தேவை.

மேலும் இந்தச் சரத்துக்களைப் படித்தக்கொண்டிருக்கும் போது எனக்கு இன்னொரு விடயமும் தென்பட்டது. அதாவது 9ம் சரத்தின் மூலம் பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியல் யாப்பு, அதே சரத்தில், அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் 10 மற்றும் 14(1)(e) சரத்துக்கள் மூலமே மற்ற மதச் சுதந்திரத்தை அங்கீகரிக்கிறது. ஆனால் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில், 15வது சரத்தின் 7வது உபபிரிவானது பின்வருமாறு குறிப்பிடுகிறது.


Restrictions on fundamental Rights.
15.
(7) The exercise and operation of all the fundamental rights declared and recognized by Articles 12, 13(1), 13(2) and 14 shall be subject to such restrictions as may be prescribed by law in the interests of national security, public order and the protection of public health or morality, or for the purpose of securing due recognition and respect for the rights and freedoms of others, or of meeting the just requirements of the general welfare of a democratic society. For the purposes of this paragraph " law " includes regulations made under the law for the time being relating to public security.


அதாவது சுருக்கமாக, தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொதுச் சுகாதாரம் மற்றும் விழுமியங்கள் தொடர்பில் 14ம்  சரத்தை நடைமுறைப்படுத்துவதை சட்டரீதியாகக் கட்டுப்படுத்தலாம் என்கிறது. ஆக வெளிப்படையாக மேற்கூறிய காரணங்களைக் காட்டி 14ம் சரத்தின் 1ம் உபசரத்தின் e ப்பிரிவினால் தரப்பட்ட மதத்தைப் பின்பற்றும், போதிக்கும், நடைமுறைப்படுத்தும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தலாம்.


**********************************************************************
Reference

The Constitution of the Democratic Socialist Republic of SriLanka (1978) - 


மேலே தரப்பட்ட அரசியல் அமைப்பின் தமிழ் விளக்கமும், கருத்துக்களும் எனது தனிப்பட்ட தெளிவின் அடிப்படையிலான, தனிப்பட்ட அபிப்ராயமாகும். இது அரசியல் அமைப்பின் மிகச் சரியான தமிழாக்கமோ, விளக்கமோ அல்ல. அரசியலமைப்பிற்கும், சட்டங்களுக்கும் வியாக்கியானம் கொடுக்கும் அதிகாரம் நீதிமன்றுக்கே உண்டு.

Jun 22, 2010

இலங்கைத் தமிழரிடையே பிரதேசவாதம் மீண்டும் தலைதூக்குகிறதா?

இலங்கை உள்நாட்டு யுத்தம் அரச படைகளால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு வருடகாலம் ஆயிட்டு. இன்னும் அகதி முகாம்களில் மக்கள் அல்லற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள், மீள்குடியேற்றப்பட்டோர் என்பவர்கள் எல்லாம் வெற்றுக் குடில் அமைத்து உயிருடன் இருந்துகொண்டிருக்கிறார்கள், வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியவில்லை, வாழ்வாங்கு வாழ்ந்த மக்கள், இன்று உயிரோடு அலைந்துகொண்டிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் என்ற பதமே ஒரு காலத்தில் பிரச்சினைக்குரிய பதமாகவே இருந்தது. இலங்கைத் தமிழர்கள் என்றால் யார்? ஒவ்வொருவரும் தங்களைச் சார்ந்து வரைவிலக்கணப் படுத்திக்கொண்டாலும், அரசின் உத்தியோகபூர்வ பிரிப்பின் படி இந்தியத் தமிழர், முஸ்லிம் அல்லாத தமிழர்களே இலங்கைத் தமிழர்களாகக் கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பிரிப்பினைக்கும் காரணம் இலங்கைத் தமிழர்கள் அக்காலத்தில் தம்மை இந்தியாவிலிருந்து தோட்ட வேலைகளுக்காக இங்கு வந்த இந்தியத் தமிழர்களிடமிருந்து வேறுபடுத்தி இம்மண்ணின் வம்சாவழிக்குடிகளாக அடையாளப்படுத்த எண்ணியதும், இஸ்லாம் மார்க்கத்தையுடைய தமிழ் பேசுவோர் தங்களை தமிழர்களாக அன்றி முஸ்லிம்களாகவே அடையாளப்படுத்தியதும் ஆகும். பிற்காலத்தில் தமிழ்-முஸ்லிம் இனத்தவர் இணைந்து சிலவேளைகளில் தமிழ்பேசும் இனத்தவர் என்றும் அடையாளப்படுத்தியதைக் காணலாம்.

ஒவ்வொரு பிரிவினைக்கும் ஏதோ ஒரு சுயநலமே காரணமாக இருக்கிறது. நான், எனது குடும்பம், எனது உறவுகள், எனது நண்பர்கள், எனது சுற்றும், எனது இனம், எனது கிராமம், எனது பிரதேசம், எனது மாவட்டம், எனது மாகாணம், எனது தேசம் என்று ஒரு படிமுறை உலகில் அனைத்து மனிதர்களிடமும் உண்டு. இதில் சிலது மற்றையதை விட முக்கியம் பெறுகிறது. இந்த முக்கியத்துவம் மனிதனிலிருந்து மனிதனுக்கு வேறுபடும். ஜின்னா எனது இனம் என்று சிந்தித்தார், கஸ்ட்ரோ எனது நாடு என்று சிந்தித்தார், திரு.எக்ஸ் எனது குடும்பம் என்று சிந்திக்கலாம்! இவ்வாறாக இலங்கையிலுள்ள தமிழ்பேசும் மக்கள், இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவழித் தமிழர், முஸ்லிம்கள் எனப்பிரிவடைந்தனர். இலங்கைத் தமிழரிடையே யாழ்ப்பாணத் தமிழர், வன்னித் தமிழர், கொழும்புத் தமிழர், மட்டக்களப்புத்தமிழர், திருகோணமலைத் தமிழர், மன்னார்த் தமிழர், தீவுத் தமிழர் என்று பல பிரிவினைகளைக் காணலாம். இவற்றைச் சுருக்கி மேலோட்டமாக வடக்குத் தமிழர், கிழக்குத் தமிழர், கொழும்புத் தமிழர் எனப்பிரிக்கலாம். இதைவிட அந்தந்தத் தமிழரிடையே சாதிப்பிரிவினைகளையும் காணலாம். யாழ்ப்பாணத்திலுள்ள சாதிப்பிரிவுகளைப் பார்த்தோமேயானால், கலாநிதி.எச்.டபிள்யு. தம்பையாவின் 'The Laws and Customs of The Tamils of Jaffna' என்ற நூலின் படி பிராமணர், வேளாளர் (வெள்ளாளர்), மடைப்பள்ளி, கரையார், சிவியார், குசவர், வண்ணார், அம்பட்டர், கோவியர், தனகாரர், நளவர், பள்ளர், பறையர், துரும்பர் என வகைப்படுத்தப்படுகிறது, இவை செய்தொழில் வேற்றுமையால் ஏற்படுத்தப்பட்ட பிரிவினைகள் பின்பு வம்சாவழி ரீதியாகக் கருதப்பட்டன. இது போன்ற சாதிப்பிரிவினைகளை ஏனைய தமிழர்களிடமும் காணலாம். இப்படியாக இலங்கைத் தமிழர்கள் பிரதேச ரீதியாக, சாதி ரீதியாக பெருமளவு பிரிந்தேயிருந்தனர். இலங்கையில் காணப்படும் பாரம்பரியச் சட்டங்களிலில் யாழ்ப்பாணத்தமிழரின் தேசவழமைச் சட்டமும், மட்டக்களப்புத்தமிழரின் முக்குவச் சட்டமும் குறிப்பிடத்தக்கது, இதில் முக்குவர்ச் சட்டம் காலப்போக்கில் வழக்கிழந்துவிட இன்று வரை எழுதப்பட்ட சட்டமாகிய தேசவழமை தொடர்கிறது. இலங்கைத் தமிழர்களது அரசியலைப் பார்த்தோமேயானால் யாழ்ப்பாண, வன்னி இராச்சியங்களின் பின் ஐரோப்பிய ஆதிக்க காலத்தில் எல்லாம் வேளாளர் (வெள்ளாளர்) இனத்தவரின் ஆதிக்கத்தைக் காணலாம். பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அவர்கள் எழுதிய “இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல்” என்ற ஆய்வில் அவர் கூறுவதாவது -

........இலங்கைத் தமிழர்களின் அரசியல் யாழ்ப்பாண இராச்சியக் காலத்திலிருந்து குறிப்பிட்ட குழுவினரால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்துள்ளதெனக் காண்கிறோம். அதாவது சாதியில் உயர்ந்த வேளாளர்களே அரசியல் ரீதியில் பிரதானமான பதவிகளை வகித்து வந்துள்ளார்கள். இந்நிலை போர்த்துக்கேயர், டச்சுக்காரர் ஆட்சிக்காலப் பகுதிகளிலும் தொடர்ந்தது. பிரித்தானியர் ஆட்சியின்போது இது மிகவும் தெளிவாகியது. இலங்கைத் தமிழர்களுக்குள்ளேயும் யாழ்ப்பாணத் தமிழர்களும் அவர்களிலும் வேளாளர் சாதியமைப்பை சேர்ந்த, நிலவுடைமை, ஆங்கிலக் கல்வி என்பவற்றைப் பெற்றுக்கொண்டவர்களே அரசியலிலும் ஆக்கிரமிப்புச் செலுத்த முடிந்தது........ மிகவும் அண்மைக்காலம் வரை அதாவது தமிழ்த் தீவிரவாதக் குழுக்கள் இலங்கைத் தமிழர் அரசியலைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும்வரை வேளாள உயர்ந்தோர் குழாமே இலங்கைத் தமிழர்களின், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின் அரசியலை ஆக்கிரமித்து வந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால், கிழக்கு மாகாணத் தமிழர்களின் அரசியலை முக்குவர் ஆக்கிரமித்ததற்கான சான்றுகள் இல்லை.

ஆகவே இலங்கைத் தமிழர் அரசியலை யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தியதைக் காணலாம். இந்நிலை ஆயுதக்குழுக்களின் வருகை வரை தொடர்ந்தது. ஆயுதக் குழுக்களின் வருகையின் பின் சாதி, பிரதேசவாதப் பிரிவுகளில் நிறைய மாற்றம் வந்தது. எல்லாப் பிரதேசத்தைச் சேர்ந்து, எல்லாச்சாதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் ஆயுதம் தூக்கியதன் விளைவு இலங்கைத் தமிழரிடையே இருந்த பிரிவினைகள் மறக்கப்பட்டு தனித் தமிழீழக் கொள்கை உருவானது. வடக்கு - கிழக்குப் பிரிவினைகள் மூட்டை கட்டப்பட்டு இணைந்த வடகிழக்கையுடைய தமிழீழக் கனவினை இவ்வாயுதக்குழுக்கள், அதிலும் குறிப்பாக பிற்காலத்தில் பலம்பொருந்திய தனி அமைப்பாக விளங்கிய விடுதலைப்புலிகள் அறிமுகஞ்செய்தனர். வடக்குக் கிழக்கில் ஆயுதக்குழுக்களின் அரசியல் ஆக்கிரமிப்பால் ஏனைய கட்சிகள் பலம் இழந்தன, அழிந்தன அல்லது ஆயுதக்குழுவின் கொள்கையை ஆதரித்தன. ஆயுதக் குழுக்கள் பலம்பெற்றிருந்த காலகட்டத்தில் இலங்கைத் தமிழர்களிடையே கொள்கையளவிலாவது பிரிவினை இல்லாதிருந்தது. இலங்கைத் தமிழரை ஒன்றுபடுத்தி அவர்களின் ஒருமித்த கருத்தாக தமிழீழக் கோரிக்கையைக் காட்டவே ஆயுதக்குழுக்களும் அவை சார்ந்த அரசியல் கட்சிகளும் முயன்றன. 2002-2004 காலப்பகுதியில் மலையத் தலைமைகளையும் அதே குடையின் கீழ் இணைக்கவே முயற்சித்தன. கொள்கையளவிலாவது ஒன்றுபட்டிருந்தது இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு பலமாகவே இருந்தது. இதற்கு பெருஞ்சூத்திரமெல்லாம் அவசிமில்லை நாம் சிறுவயதில் படித்த ஒற்றுமையே பலம் கதையே போதும், இது மனிதவளம், எண்ணிக்கை சார்ந்த பலமாக இருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணாவின் பிரிவினை வரை இந்த கொள்கையளவு ஒற்றுமை ஆயுதக்குழுக்களினால் காப்பாற்றப்பட்டே வந்தது, கருணாவின் வெளியேற்றமும், அதனைத் தொடர்ந்து கருணாவின் கிழக்குத் தமிழர் மைய அரசியலும் மீண்டும் ஒரு வடக்குக்-கிழக்குத் தமிழர் பிரிவினையை உண்டாக்க வித்திட்டது, அதன் தொடர்ச்சிதான் இன்று பிள்ளையானின் கிழக்குமாகாண அரசியல். ஆனால் அவர்களுக்கு மக்கள் கொடுத்ததோ பேரதிர்ச்சி. அண்மையில் நடந்த பொதுத்தேர்தலில் வடக்கு-கிழக்கு இரண்டிலுமே பிள்ளையானின் படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

இன்று யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பிரதேசவாத விஷமப் பிரச்சாரங்கள் சுயநல-அரசியல் தரப்புக்களால் கட்டவிழ்த்து விடப்படுகிறது. மீண்டும் தமிழர்களிடையே பிரதேச வாதப் பிரிவினைகளை உருவாக்கி அதில் தமது சொந்த இலாபங்களைச் சேர்த்துக்கொள்ள சில அரசியல் விஷமிகள் இந்தப் பிரிவனையைத் தூண்டுகின்றன. பழைய அரசியல் கதைகளை மீண்டும் எழுதி குழம்பித் தெளிந்த குட்டையை மீண்டும் குழப்ப விளைகிறார்கள். இவர்களிடம் சில கேள்வி கேட்க என் மனம் விளைகிறது. நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும் (ஒரு பேச்சுக்கு!) இதைச் சொல்வதன் மூலம் நீங்கள் அடைய நினைப்பது என்ன? மீண்டும் பிரதேச வாதப் பிரிவினையால் தமிழர்கள் சாதிக்கப்போவது என்ன? தமிழர்கள் ஒரு குடையின் கீழ் ஒன்று பட முடியாதா? பழையன கழிதலும், புதியன புகுதலும் வேண்டும். பழைய கதைகளை மீண்டும் ஓதி, குரோதத்தை வளர்த்து, பேராதிக்க சக்திகளின் பிரித்தாழும் தந்திரத்திற்கு இரையாகலாமா? 

இன்று பிரதேசரீதியாகப் பிரிவோம், மீண்டும் சாதிகள் ரீதியாகப் பிரிவோம், ஏற்கனவே சிறு பான்மையினம், இனிக் குறுஞ் சிறு பான்மை இனங்களாகப் பிரிந்துபோவோமா? இலங்கைத் தமிழ்மக்கள் பிரிவினைகளைக் களைந்து இன்னும் உறுதியாக ஒன்றுபட வேண்டிய காலம் இது.


****************************************************
References / உசாத்துணை

Tambiah H.W. Dr. 'The Laws and Customs of The Tamils of Jaffna', Women's Education & Research Center Publication 2004.

அம்பலவாணர் சிவராஜா, 'இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல் ', கொழும்புத் தமிழ்ச் சங்கம், 2003.

Jun 12, 2010

இலங்கையில் இறக்குமதி வரிக்குறைப்பு - ஒரு பார்வை!

அண்மையில் இலங்கை அரசாங்கம் வாகனங்கள் மற்றும் இலத்திரனியற்பொருட்கள் மீதான இறுக்குமதி வரிகளை கணிசமான அளவு குறைத்துள்ளது. சராசரியாக 50வீதமளவிற்கு இறக்குமதி வரிக்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. பற்றாக்குறை வரவுசெலவையுடைய தேசத்தில் திடீரென அரசாங்கம் 50வீதளமளவிற்கு இறக்குமதி வரியைக் குறைப்பதன் நோக்கமென்ன? இறக்குமதிகள் அதிகரித்தால் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்காது, ஆக அதனைக் கட்டுப்படுத்தவும், வருமானம் பெறவுமே அரசாங்கம் இறக்குமாதிகளுக்கு வரிவிதிக்கிறது ஆனால் இலங்கையரசாங்கத்தின் இந்தத் திடீர்முடிவுக்குக் காரணமென்ன?

30 வருட யுத்தம் முடிந்து இப்பொழுதுதான் சுமுகமான சூழல் நிலவுவாதாகக் கூறும் அரசாங்கம், இச்சூழலைப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதைவிடுத்து இறக்குமதியை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதேன்? இதில் ஏதும் உட்-காரணங்கள் ஒளிந்திருக்குமா? போன்ற சந்தேகங்கள் எழவே செய்கிறது.

சாதாரணமாக கொழும்பில் வசிக்கும், நல்ல வேலையில் இருக்கும், இளைஞர்கள் இந்த வரிக்குறைப்பை ஆவலுடன் வரவேற்கிறார்கள். ஏனெனில் இதுவரை விலைகூடவாக இருந்த வாகனங்களைக்கூட இனி கணிசமானளவு குறைந்தவிலைக்கு வாங்கலாம். உதாரணமாக வரிக்கு முன்னைய பெறுமதி 500000 உடைய 1000cc க்கு குறைந்த இயந்திரவலுவுடைய பெற்றோல் காரொன்று முன்பு வரியின் பின் 1435000 ஆகக் காணப்பட்டது, இப்போது வரிக்குறைப்பின் பின் அதன் விலை 950000 ஆகக்குறைந்துள்ளது. வாகனங்கள் போலவே இலத்திரனியற்பொருட்களின் மீதான இறக்குமதி வரியும் கணிசமானளவு குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக வளிச்சீராக்கி இயந்திரங்கள் (Air Conditioning Machines) மீதான இறக்குமதி வரி 94வீதம் குறைக்கப்பட்டுள்ளது. இனி கொழுத்தும் வெயில்காலத்தில் அநேகமான நடுத்தர வீடுகளும் குளிரூட்டப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இப்படியான விலைக்குறைப்பு நல்லதுதானே என சாதாரண பொதுமகன் சொல்வது கேட்கிறது. என்ன செய்ய இந்தச் சாதாரண பொதுமகன்கள் தானே இந்த அரசாங்கத்தை அரியணையில் இருத்தியவர்கள்! அவர்களுக்குச் சந்தோஷம் ஆனால் அந்த சந்தோஷ மிகுதியில் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் கூறிய கருத்து ஒன்றும் கூட காற்றோடு காற்றாய் அலட்சியம் செய்யப்பட்டுப் போய்விட்டது. இந்த வரிக்குறைப்பு செய்யப்பட்ட மறுதினம் ரணில் விக்கிரமசிங்ஹ ஒரு கேள்வியெழுப்பியிருந்தார். “பென்ஸ் காரின் விலையைக் குறைத்த அரசால், ரின் மீன் விலையைக்குறைக்க முடியாதா?” என்று அவர் கேட்டிருந்தார். வழமையாகவே ரணிலின் பேச்சை யாரும் பொருட்படுத்தவில்லை ஆனாலும் அதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், சிறுபிள்ளைகளுக்குக் கொடுக்கும் பால்மாவிலிருந்து, தினம் உண்ணும் அரிசி முதல் முக்கிய உணவுப்பொருள் இறக்குமதிக்கெல்லாம் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அரிசி, சீனி, பருப்பு விலைகளெல்லாம் உச்சஸ்தாயியில் ஏறிக்கொண்டிருக்கிறது ஆனால் இதைக்குறைக்க வேண்டும் என்று எண்ணாத அரசு வாகனங்கள், இலத்திரனியல் பொருட்கள் என்பவற்றின் மீதான வரியினைக் குறைத்ததன் சூட்சுமம் என்ன?கார் மற்றும் ஏனைய சொகுசு வாகனங்களின் மீதான இறக்குமதிவரிகளைக் குறைத்த அரசாங்கம், நடுத்தரப் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள் மீதான இற்குமதி வரியைக் குறைக்காதது ஏன்? இதை யோசிக்கத் தெரிந்தவர்கள் இத்தேசத்தில் பெரும்பான்மையளவில் இருந்திருந்தால் இந்த அரசாங்கமே அரியணையேறியிருக்காது. 

இரண்டாவதாக வாகன இறக்குமதியை ஊக்குவிக்கும் முகமாக வரிகளைக் குறைத்த அரசாங்கம் வாகனம் பயணிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கும் திட்டங்களை தொடங்கியிருக்கிறதா? இந்த வரிக்குறைப்பினால் நாட்டுக்குள் வரும் இலட்சோப இலட்சம் வாகனங்களும் இதே வீதிகளிலேயே பயணித்தால் போக்குவரத்து நெரிசல் இன்னும் பலமடங்காகும், அப்படி உருவாகும் நெரிசலை இரும்பு மேம்பாலங்களை 3மாத காலத்துக்குள் போட்டுக்கூடக் கட்டுப்படுத்த முடியாது. இன்று காலைவேளைகிலும், மாலை அலுவலகம் முடியும் நேரங்களிலும் கொழும்பு வீதிகளில் பயணிப்பது என்பது சவலான காரியம், இன்னும் வாகனங்கள் இதே வீதியில் இறக்கப்பட்டால் போக்குவரத்தின் நிலையென்ன? இதற்கான மாற்றுத்திட்டங்களை அரசாங்கம் வகுத்திருக்கிறதா? அப்படி வகுத்தாலும் பாதைகள் பெருப்பிக்கப்பட்ட பின் தான் இந்த வரிக்குறைப்பு நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும், அது நீண்டகாலத்திட்டமாக அமுல்ப்படுத்தப்பட்டிருக்கவேண்டும் மாறாக இரவோடு இரவாக வரியைக்குறைப்பது என்பது பொருந்தாத செயல்.

அடுத்ததாக இந்த விலைகுறைந்த காலத்தில் வாகனங்களை வாங்குபவர்கள் யோசிக்க வேண்டிய சில விடயங்கள் இருக்கிறது. முதலாவதாக எரிபொருள் விலை. இன்று வாகன வரிகளைக் குறைத்த அரசாங்கம் சில மாதம் கழித்து கணிணசமான வாகனங்கள் இறக்குமதிசெய்யப்பட்ட பின் எரிபொருள் விலைகளை அதிகரித்தால் என்ன செய்வது என்பதைத் திட்டமிட வேண்டும். அண்மை வருடங்களில் ஒரு லீற்றர் பெற்றோல் 180ரூபாய்கள் வரை கூடியிருந்ததைக் கருத்திற்கொள்ளவேண்டும். ஆக விலை இன்று குறைவு என்பதற்காக வாகனங்களை அவசரப்பட்டு ஆராயாமால் வாங்கிவிட முடியாது. அடுத்ததாக இரண்டாம் சந்தைவிலை. அண்மை வாரங்களில் இரண்டாஞ்சந்தை விலைகள் இந்த வரிக்குறைப்புக் காரணமாக ஓரளவு தளம்பலடையத் தொடங்கியுள்ளன. ஆக இரண்டாஞ்சந்தையில் வாகனம் வாங்க எண்ணியிருப்பவர்கள் இன்னும் சிலவாரங்கள் பொருத்திருக்கலாம். ஆனால் இன்று புதிதாக வாகனங்களை குறைந்த விலையில் இறக்குமதி செய்பவர்கள், எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள் கூடினால் வாகனங்களின் இரண்டாஞ்சந்தைவிலைகள் குறையும் என்பதையும் யோசிக்கவேண்டும். மேலும் அதிக விலையுள்ள சொகுசு ரக வாகனங்களை வாங்க எண்ணியுள்ளவர்கள், இறக்குமதி வரிமட்டுமே குறைக்கப்பட்டுள்ளது, வருடாவருடம் கட்ட வேண்டிய சொகுசு வாகனங்களுக்கான சொகுசுவரிகள் குறைக்கப்படவில்லை என்பதைக் கருத்தற்கொள்க.

நல்ல குளிர் காலத்தில் குளிர்களி விற்பதைப்போல அரசாங்கமும் வேண்டாத நேரத்தில், வேண்டப்படாத சலுகையை அறிவித்துள்ளது. நாளை இதன் மூலம் அரசாங்கம் இழக்கும் வருவாயை உணவுப்பொருட்கள், உடைகள் மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகள் மீது இன்னும் அதிக வரி விதிப்பதன் மூலம் மீட்டுக்கொண்டாலும் வியப்பதற்கில்லை.

குறைக்கப்பட்ட இறக்குமதி வரி விபரங்கள் :