Dec 5, 2010

யுத்தக் குற்றம் என்றால் என்ன?





அண்மைக்காலங்களாக தமிழர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் சொற்களில் /  விடயங்களில் ஒன்று யுத்தக் குற்றம் (war crime). இது யுத்தக் குற்றம் என்றால் என்ன என்பது பற்றிய ஒரு சுருக்கமான பார்வை.


யுத்தக் குற்றம் என்பதை சுருக்கமாக பின்வருமாறு வரையறுக்கலாம் :

யுத்தக் குற்றம் என்பது யுத்தவிதிகளை மீறும் தனிநபர்கள், ராணுவம், சிவிலியன்கள் என்பவருக்குரிய சர்வதேசச் சட்டங்களின் கீழான தண்டனைக்குரிய குற்றமாகும்.

யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு 20ம் நூற்றாண்டிலேயே தொடங்கியது அதிலும் குறிப்பாக 2ம் உலக யுத்தத்தின் பின்னரே யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு வலுப்பெறத்தொடங்கியது எனலாம். 2ம் உலப் போரின் போது நாட்ஸிப் படைகள் யூதர்களை (பொதுமக்களை) கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தது (இன அழிப்பு), ஜப்பானியப் படைகள் சிவிலியன்களையும், அரசியற்கைதிகளையும் இழிவான விதத்தில் நடத்தின, கொன்று குவித்தன. 2ம் உலக யுத்தம் நேசநாடுகளால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் நேச நாடுகள் மேற்கூறிய யுத்தக் குற்றங்களை இழைத்ததாக நம்பப்படும் ஜேர்மனியப் படைத்தளபதிகளையும், ஜப்பானியப் படைத்தளபதிகளையும் கைது செய்து, சட்டப்படி மரண தண்டனை நிறைவேற்றின. 1945 மற்றும் 1946ல் இடம்பெற்ற “நுரெம்பேர்க் விசாரணைகளின்” பின்னர் 12 நாட்ஸித் தளபதிகளுக்கு யுத்தக் குற்றம் இழைத்தமைக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதே போன்று 1948 ஜப்பானின் டோக்கியோவில் யுத்தக் குற்றம் இழைத்த 7 தளபதிகளுக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது (நேச நாடுகள் ஜப்பானின் சக்கரவர்த்தி ஹிரோஹிட்டோவுக்கெதிராக எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை). இவை தான் யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு வலுப்பெற்றதற்கான முன்னோடிகளாகும்.

இதை விட தனியாக அரசாங்கங்களும் யுத்தக்குற்றம் இழைத்தவர்களைத் தண்டித்திருக்கிறது. உதாரணமாக 1960ல் ஆர்ஜன்ரீனாவில் வைத்து இஸ்ரேலிய முகவர்களால் பிடிக்கப்பட்டு இஸ்ரேலுக்குக் கடத்தப்பட்டு அங்கு சட்டப்படி மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ஜெர்மனிய நாட்ஸிப் படையைச் சேர்ந்த, “த ஹொலொகோஸ்ட்” (பேரழிவு) இல் பங்குபற்றி ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்த அடல்ஃப் எய்ஷ்மன்-ஐக் குறிப்பிடலாம். இதே போல 1987ல் க்ளோஸ் பார்பி என்ற நாட்ஸிப் படை முக்கியஸ்தர் பொலிவியாவில் கைது செய்யப்பட்டு ஃபிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டு அங்கு யுத்தக் குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கருவானது, குறித்த தேசம் அல்லது அதன் .இராணுவ வீரர்கள் இழைத்த குற்றங்களுக்கு (யுத்த விதி/தர்ம மீறல்களுக்கு) தனி நபர் ஒருவரைப் பொறுப்பாளியாக்க முடியும் என்கிறது. அதாவது இராணுவ வீரர்கள் இழைத்த குற்றத்திற்கு அவர்களுக்கு மேலான தளபதிகள், தலைமைத் தளபதிகளைப் பொறுப்பாக்க முடியும்.

இன அழிப்பு, சிவிலியன்களை இழிவான / முறையற்ற விதத்தில் நடத்துதல், போர்க்கைதிகளை முறையற்ற விதத்தில் நடத்துதல் போன்றன் குறிப்பிடத்தக்க யுத்தக் குற்றங்களாகும். அதிலும் இன அழிப்பு என்பது பாரிய யுத்தக் குற்றமாகக் கருதப்படுகிறது.

யுத்தக் குற்றங்களை வரையறுக்கும் சட்ட அதிகாரங்களாக ஜெனீவா மரபுகள் (Geneva Conventions) மற்றும் பழமையான யுத்த தர்மச் சட்டங்களும் காணப்படுகிறது. 4வது ஜெனீவா மரபின் 147வது சரத்து பின்வருமாறு யுத்தக்குற்றத்தை வரையறுக்கிறது :

"Wilful killing, torture or inhuman treatment, including... wilfully causing great suffering or serious injury to body or health, unlawful deportation or transfer or unlawful confinement of a protected person, compelling a protected person to serve in the forces of a hostile power, or wilfully depriving a protected person of the rights of fair and regular trial, ...taking of hostages and extensive destruction and appropriation of property, not justified by military necessity and carried out unlawfully and wantonly." 

அதாவது மனவுறுதியுடன் உடல்ரீதியான அல்லது ஆரோக்கிய ரீதியான தீவிரமான காயங்களை அல்லது துன்பங்களை விளைத்தல், சட்டத்திற்குப் புறம்பான வலுக்கட்டாயமான நாடுகடத்தல் (இடம் பெயர்த்தல்) அல்லது சட்டத்துக்கெதிரான வகையில் நபரொருவரை தடுத்துவைத்தல் அல்லது சிறைப்படுத்தல், நபரொருவரை வலுக்கட்டாயமாக எதிர்ப்புணர்வுமிக்க படைகளில் சேவையாற்றச் செய்தல், மனவுறுதியுடன் நபரொருவரது நியாயமான விசாரணைக்கான உரிமையை இல்லாது செய்தல், பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்திருத்தல், பாரிய அழிப்புக்கள் மற்றும் சொத்துக்களை சட்டவிரோதகமாக அபகரித்தல் உள்ளிட்ட சட்டவிரோதமானதும், நியாயமான இராணுவத் தேவை என நிரூபிக்கமுடியாததுமான கொலை, சித்திரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற நடத்துமுறைகள் யுத்தக்குற்றமாகும் என்று 4வது ஜெனீவா மரபின் 147வது சரத்துக் கூறுகிறது.

இதைத் தாண்டியும் யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு கூர்ப்படைந்து வருகிறது. யுகோஸ்லாவியா தொடர்பான சர்வதேச ஹேக் ட்ரபியுனல் யுத்தக்குற்றங்களை வரையறுப்பதில் முக்கியம் பெறுகிறது. ஆயுதப் போராட்டங்களின் போது மக்களுக்கு (சிவிலியன்களுக்கு) எதிராக நடத்தப்படும் சட்டவிரோதமான கொலை, குழுரீதியான அழிப்பு, அடிமைப்படுத்தல், வலுக்கட்டாயமான நாடுகடத்தல், இடப்பெயர்த்தல், கைதுகள், சித்திரவதை, கற்பழிப்பு, இன, மத, அரசியல் காரணங்களுக்கான கொலைகள் என்பன பிரதான யுத்தக்குற்றங்கள் என்கிறது. இங்கும் பிரதான குற்றமான இன அழிப்பு கருதப்படுகிறது.

2002ல் உரோம சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றச் சட்டம் என்ற சர்வதேச ஒப்பந்தத்தின் படி சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ஹேக் ட்ரிபியுனல்) அதன் அங்கத்தவ நாடுகளின் யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. ஒப்டோபர் 2010 வரை 114 நாடுகள் இதில் இணைந்துள்ளன. 114வதாக இணைந்த நாடு மோல்டோவா. அமெரிக்காவும், ரஷ்யாவும் உரோம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள போதும் அதை நிறைவேற்றவில்லை. அமெரிக்கா இன்னும் பார்வையாராகவே கலந்து கொள்கிறது. சீனாவும், இந்தியாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இலங்கையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் தொடர்பிலேயே சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகள் மேற்கொள்ள முடியும் ஆனால் ஐ.நா. உறுப்பு நாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபை பரிந்துரைக்கும் சந்தர்ப்பத்திலும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணை நடத்தும் நீதியதிகாரமுண்டு.

பேரிழிவிற்குரிய யுத்தமானாலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியம் பெறுகிறது இந்த யுத்தக் குற்றம் என்ற எண்ணக்கரு, ஆனால் மனித உரிமைகள், ஜனநாயம் பற்றிய விழிப்புணர்வு, அறிவு இல்லாதவர்களுக்கு யுத்தக் குற்றத்தின் தார்ப்பரியத்தை புரிய வைப்பது இயலாது.

**********************************************************************
இந்தக் கட்டுரை 12-12-2010 ஞாயிறு தினக்குரலில் 11ம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. (நன்றி - யாழ்தேவி மற்றும் தினக்குரல்)