Jul 5, 2010

ஒரு அருமையான இசை அனுபவம்!

இசை காதுகளினூடு பயணித்து இந்த உடலையும், மனத்தையும் தன்வசப்படுத்திய ஒரு இனிய அனுபவம் இது. 

பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்! என்னை மயக்கும் இசை அவருடையது. அண்மையில் அவர் இசையில் வந்த ஒரு பாடலை, வித்தியாசமான முறையில் அனுபவிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது, அந்த அனுபவம் அமைதியையும், மனத்திற்குப் புத்துணர்ச்சியையும் தருவதாக இருந்தது. இசை மூலம் ஒரு தவம் என்றும் இதைச் சொல்லலாம், அந்த சில நிமிடங்கள், அந்த மயக்கும் இசையில் மூழ்கி எழுகையில் மனம் தெளிவுபெறும் விந்தையை நான் உணர்ந்தேன்.

ஒரு மாலைப்பொழுது - இல்லை - அந்தி சாய்ந்து இருள் கவ்வத்தொடங்கும் வேளை.... அமைதியான தனி அறை... குறைவான வெளிச்சத்தில், குளிர்மையான தென்றல் யன்னலூடு பயணித்து உடலை வருடிச்செல்லும் பொழுது... எனது “சோனி - வோக்மன் எம்பி3 ப்ளெயரில்” முழுமையான சப்தத்தில் ஒலிக்கிறது அந்தப் பாடல்.... கண்ணை மூடி, ஒரு தவம் போல என்னை மறக்கிறேன்.... காற்றில் பறப்பது போல ஒரு அனுபவம்.... இதுதான் முதல்முறை!

அந்தப் பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜோதா-அக்பர் திரைப்படத்தில் இடம்பெற்ற “க்வாஜா எந்தன் க்வாஜா” என்ற பாடல். அந்த அனுபவத்திற்குப் பிறகு அந்தப் பாடலின் இசை பற்றித் தேடியறிந்தேன். அந்தப் பாடல் சூஃபி இசை வடிவத்தினடிப்படையில் உருவானது, படத்தில் பாடல் இடம்பெறும் சந்தர்ப்பமும் அதையொத்ததுதான். நான் கேட்ட முதலாவது சூஃபி இசைப் பாடலும் இதுதான் என்று நினைக்கிறேன்... இந்தப் பாடலை இதற்கு முதல் பலமுறை கேட்டிருக்கின்றேன், என்னைக் கவர்ந்தும் இருக்கிறது, ஆனால் தனியாக, அமைதியான நிலையில், கண்ணைமூடி இரசிக்கும் போது மெய்சிலிர்க்கும் அனுபவத்தை இது தந்தது! 


இதை நீங்களும் அமைதியான சூழலில் நீங்களும் கேட்டுப்பாருங்கள், உங்கள் அனுபவத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். வரிகள் உங்கள் கவனத்தைச் சிதைக்கிறது என உணர்ந்தால், இதே பாடலின் ஹிந்திப் பதிப்பைக் கேளுங்கள்! வரிகளை விட, இங்கு இசையின் அனுபவம் தான் இனிமையானது!