Nov 7, 2009

மாளிகையைச் சிதைத்து மண்வீடு கட்டியவன்!



ஆயிரமாண்டுகள் பழமைவாய்ந்த
அபூர்வ மாளிகையின் சொந்தக்காரன்!
ஆனால்
நேற்று முளைத்த மண்வீட்டினை
நேர்த்தியான அழகென்று எண்ணி
நேசித்த மாளிகையை மண்வீடு போல
மாற்ற விளைந்தான்...

கோபுரங்கள் சிதைக்கப்பட்டு
ஓட்டுக் கூரையாக ஆக்கப்பட்டது...
முற்றங்கள் சிதைக்கப்பட்டு
வெற்று நிலங்கள் ஆக்கப்பட்டது...
உயர் மாடங்கள் சிதைக்கப்பட்டு
வெறும் மண்வீடாய் மாற்றப்பட்டது...

கலைநயம் மிக்க ஓவியங்கள்
எரிக்கப்பட்டன...
அற்புதச் சிற்பங்களும் எல்லாம்
நொறுக்கப்பட்டன...
உணவிட்ட தோட்டங்களெல்லாம்
கைவிடப்பட்டன...

அந்த அற்புத மாளிகை மண்வீடானது...
வளங்கள் எல்லாம் ஒழிந்து
செழிப்பெல்லாம் மடிந்து
புதுமையென எண்ணி
மூடன் அவன் செய்த செயலால்
அந்த அற்புத மாளிகை கல்வீடானது...

ஆனாலும் அது புரியவில்லை அவனுக்கு...
புதுமையின் படைப்பில் புலங்காகிதம்
அடைவதாக உணர்ந்தான்...
தனது மாளிகையைவிட மண்வீடே
உயர்ந்தது என நினைத்தான்...
இப்போது தான் மண்வீட்டுக்காரனும்
தானும் சமம் என எண்ணிப்
பூரிப்படைந்தான்...

பாவம் அவன் முன்னோர்...
உதிரம் சிந்திக்கட்டிக்காத்த
மாளிகை சிதைந்து போனது...
ஆனால் துயர் விடுத்து
அதைச் சாதைனையாக எண்ணி
சந்தோஷிக்கின்றான் இவன்...

தமிழ் எனும் மாளிகை
நேற்று வந்த மண்வீட்டிற்கு
நிகராய் மாற்றப்படும்
ஈனம் கண்டீரோ?

அழகு சிதைக்கப்பட்டு
கீர்த்தி கெடுக்கப்பட்டு
மண்வீட்டின் பண்பினைப்
புகுத்தும் கொடூரம் கண்டீரோ?

மாளிகையில் வசிப்பது அகௌரவம்
என்றெண்ணி
மண்வீட்டிற்கு மாறும்
அறிவீனம் கண்டீரோ?
தமிழா...
அறிவீனம் கண்டீரோ?



இக்கவிதை இன்று றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றத்தின் கலைவிழாவில் வெளியிடப்பட்ட தமிழ்நயம் 2009 நூலில் இடம்பெற்றது.