Dec 28, 2009

2010 ஜனவரி 26ம் அடுத்த இலங்கை ஜனாதிபதியும் - பகுதி 02

சரத் ஃபொன்சேகா


இலங்கை இராணவ வரலாற்றின் முதலாவது நான்கு நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற ஜென்றள் தர அதிகாரி. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றிக்குக் முக்கிய காரணகர்த்தா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே “முன்பு” புகழப்பட்டவர். இன்று அரசாங்கத்துடனான கசப்புணர்வுகளால் தனது பாதுகாப்புப் படைகளின் தலைமையதிகாரி என்ற பதவியிலிருந்து ஓய்வு பெற்று இன்று ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி கூட்டின் பிரதான எதிர்த்தரப்பு ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிக்கிறார் ஆனால் ஐ.தே.க வின் யானைச் சின்னத்திலோ ஜே.வி.பி யின் மணிச் சின்னத்திலோ தேர்தல் களம் புகாது புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் அன்னச் சின்னத்தில் தேர்தல் களம் புகுந்திருக்கிறார்.



சரத் ஃபொன்சேகா என்றதும் விடுதலைப்புலிகளக்கெதிரான யுத்த வெற்றிதான் மக்கள் கண் முன் நிற்கின்றது. என்னதான் “மன்னன்” அந்தஸ்திலிருந்து யுத்தத்தை நடாத்தியது மஹிந்த ராஜபக்ஷவாக இருந்தாலும் களத்திலிருந்து படைகளை வழிநடாத்தி வெற்றியைத் தேடிக்கொடுத்ததில் பெருமளவு பங்கு ஃபொன்சேகாவைச் சார்ந்தது - இதனை “முன்பு” அரசாங்கமும், ஜனாதிபதியும் கூட நேரடியாகவும் மறைமுகமாகவும் புகழ்ந்திருந்தார்கள். இப்படியாக ஜனாதிபதியின் “வெற்றி” முழக்கத்தின் முக்கிய காரணகர்த்தாவாக முன்பு இருந்தாலும் எங்கு இவர்களிடையெ முரண்பாடு தோன்றியது என்பதில் இன்றுவரை தெளிவாக விடைகாண இயலவில்லை. அண்மையில் ஃபொன்சேகா வழங்கிய செவ்விகளிலிருந்தும் வெளியிட்ட அறிக்கைகளிலிருந்தும் சில, பல கருத்துக்கள் வெளிவந்திருந்தாலும் எதுவும் அந்த வினா முடிச்சை முற்றாக அவிழ்க்கவில்லை. மேலும் சரத் .பொன்சேகா வெளியிட்ட பெரும்பாலான கருத்தக்களிலிருந்து அவருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான பிரச்சினையைவிட அவருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் (கோத்தாபய ராஜபக்ஷ) இடையிலான கருத்துமுரண்பாடுகளும், புரிந்துணர்வின்மையுமே இந்தப் பிரிவுக்குக் காரணமாக இருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. குறிப்பாக கடந்த 24ம் திகதி இரவு சிரச தொலைக்காட்சியில் ஃபொன்சேகா வழங்கிய செவ்வியில் அவர் பாதுகாப்பச் செயலாளரைப் பெருமளவு தாக்கியிருந்தார், “15 வருடங்கள் நான் யுத்த களத்தில் போரிட்டுக்கொண்டிருந்த போது அமெரிக்காவில் கணணியில் தட்டிக்கொண்டிருந்தவர், பிறகு இங்கு வந்து விட்டு என்னைப் பற்றி அவதூறு கூறவும், எனது இராணுவ அனுபவம் பற்றிப் பேசவும் அவருக்கு லாயக்கில்லை” என ஃபொன்சேகா அந்தச் செவ்வியில் கூறியிருந்தார்.



இப்படியாக அவர்கள் இருவருக்கிடையிலான முறுகல் நிலையே ஃபொன்சேகாவின் ஓய்வு பெறுகைக்கும் அரசியல் களப் பிரவேசத்திற்கும் காரணம் என்பது தெளிவான நிலையில் ஒரு ஜனாதிபதி வேட்பாளராக வந்திருக்கும் ஃபொன்சேகாவின் கொள்கைகள் பற்றியம். அவரது திட்டங்கள் பற்றியும் மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள். என்னதான் சொன்னதைச் சொன்னவாறு செய்து முடிப்பவர் எனும் நன்மதிப்பு ஃபொன்சேகாவுக்கு மக்கள் மத்தியில் இருந்தாலும் அவர் என்ன மாற்றத்தைச் செய்யப்போகிறார் என்பது பலர் மத்தியில் கேள்விக்குறியாகத் தொக்கு நிற்கிறது. அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் ரணில் விக்ரமசிங்ஹ போட்டியிட்டிருந்தால் கூட இவ்வளவு யோசிக்காமல் தங்கள் வாக்குகளை இவ்வேளை தீர்மானித்திருப்பார்கள் ஆனால் சரத் ஃபொன்சேகா என்றதும், அதுவும் முன்னாள் இராணுவத் தளபதி - யத்தத்தை வென்றவர் - தமிழரின் இரத்தம் சிதறடிக்கப்பட்ட யத்தத்தை நடாத்தியவர் என்றதும் மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள். பலர் ஜனாதிபதியாகட்டும், ஃபொன்சேகாவாகட்டும் இருவரும் ஒன்றுதான் என்ற மனப்பான்மை கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஃபொன்சேகாவின் வாக்கு வங்கியைப் பொறுத்தவரையில் இளைஞர்கள் பலரும் ஃபொன்சேகாவின் பக்கத்தில் நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சமூக வலைப்பின்னல்களில் ஏனைய வேட்பாளர்களுக்குள்ள ஆதரவை விட சரத் ஃபொன்சேகாவிற்கு அதிக ஆதரவு உள்ளதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மேலும் கொழும்பைப்பொறுத்த வரையில் அது ஐ.தே.க வின் தொகுதி அத்துடன் ஏனைய கட்சி சார்ந்தவர்களிடம் கூட ஃபொன்சேகாவுக்கு ஆதரவு இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. கொழும்பில் ஃபொன்சேகாவுக்கிற்கிருக்கம் அதிக ஆதரவுக்குப் பிரதான காரணம் மக்கள் ஒர மாற்றத்தை வேண்டுவதாகும். பொருளாதார நிலை தொடர்பில் இந்த அரசாங்கத்தின் மேல் மக்கள் கொண்டுள்ள அதிருப்தி முதலாவது காரணம். பொருளாதார மாற்றங்கள் இலங்கையின் வேறு எப்பகுதியையும் தாக்குவதை விட கொழும்பைத்தான் உடனடியாக, அதிகமாகப் பாதிக்கிறது. மேலும் கொழும்பில் அதிகரித்த பாதுகாப்புக் கெடுபிடிகளும், அடிக்கடி பாதைகள் மூடப்படுதலும் கூட மக்களுக்கு அதிருப்தியை மட்டுமல்லாது எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் யுத்தம் முடிந்தபின்னும் அங்குமிங்குமாகப் பாதுகாப்புச் சாவடிகள் இருப்பதும் அதே பாதுகாப்புக் கெடுபிடிகள் தொடர்பதும் மக்களை மிகவும் எரிச்சலடையச் செய்துள்ளது. கொழும்பின் நிலை இப்படியிருக்க வெளிமாவட்டங்களைப் பொறுத்தவரையில் இவை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை ஆனால் அம்மாவட்டஙக்ளின் கட்சி வாக்கு வங்கிகளின் படி வேட்பாளர்களிடையே வாக்குகள் பிரிவடையும் என்பதே எனது கருத்து.



இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் சரத் ஃபொன்சேகாவின் பிரதான பலம் மக்களும் இளைஞர்களும் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் அவரது “ஹீரோ” அந்தஸ்து. ஃபொன்சேகா நியாயமானவர், கறைபடியாதவர் என மக்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அத்தோடு ஃபொன்சேகாவுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க மற்றும் 3வது பெரிய கட்சி ஜே.வி.பி. மங்கள் சமரவீர, மனோகணேசன், ரவுஃப் ஹக்கிம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் ஆதரவு இருப்பது பெரும்பலம். ஒரு வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தங்கள் ஆதரவுக்கரத்தை வழங்கினால் சரத் ஃபொன்சேகாவினால் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பலமான போட்டியை வழங்க முடியும். இந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வளவு ஆதரவு இருந்த போதும் பிரச்சாரம், விளம்பரங்கள் என்று பார்த்தால் சரத் ஃபொன்சேகாவின் தரப்பு இந்நாள் வரை பலம் குறைந்துதான் காணப்படுகிறது.



சரத் ஃபொன்சேகாவின் விளம்பரங்களும். பிரச்சாரங்களும் ஜனாதிபதியின் பிரச்சாரம் அளவுக்கு இன்னும் சூடுபிடிக்கவில்லை என்பதே பலரது கருத்து - அது ஏன் என்பது இன்னும் சிதம்பரசக்கரமாகவே இருக்கிறது. அத்துடன் மறுபக்கத்தில் ஃபொன்சேகாவுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் அவர் வெளியிட்ட சச்சரவுமிக்க கருத்துக்கள் (குறிப்பாக யுத்தகால மனித உரிமை மீறல் தொடர்பானவை) இன்று சகல ஊடகங்களிலும் அவருக்கெதிரான பிரச்சாரத்தை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளதைக் காணலாம். அதிலும் குறிப்பாக இலங்கை முழுக்க வீச்சுள்ள அரச இலத்திரனியல் ஊடகங்கள் பெருமளவு ஜனாதிபதிக்கு ஆதரவான கருத்தக்களைக் கொண்டுசெல்வதால் அதற்குச் சமமான மாற்றுப் பிரச்சாரத்தை ஃபொன்சேகா செய்ய வேண்டியிருக்கிறது. என்ன தான் சுவரொட்டி நிபுணர்களான ஜே.வி.பி.யினர் ஃபொன்சேகாவுடன் இருந்தாலும் ஒப்பீட்டளவில் அவைகூட மிகக் குறைவாகத்தான் கண்களில் படுகிறது.


சரி, அடுத்த ஜனாதிபதியாக ஃபொன்சேகாவால் வர முடியுமா? அவரது கொள்கை என்ன? தமிழர்கள் அவரை நம்பலாமா? சிறுபான்மையினர் தொடர்பான அவரது நிலைப்பாடு என்ன? ஒரு வேளை சிறுபான்மையினர் ஃபொன்சேகாவை ஆதரிப்பது இஞ்சி கொடுத்த மிளகாய் வாங்கிய கதையாகுமா? போன்ற கேள்விகள் பலர் மனதில் உள்ளன என்பதை என்னால் ஊகிக்கமுடியகிறது. இவற்றுக்கான பதில்களுடன் அடுத்த பகுதியில் தொடர்கின்றேன்.


பகுதி 03ல் அலசல் தொடரும்....