Nov 5, 2009

புதிய காளமேளகத்திலிருந்து சில வரிகள்...

நான் முன்பு “புதிய காளமேளம்” எனும் வலைப்பதிவில் எழுதிய வரிகளில் தெரிந்தெடுத்தவற்றை மீண்டும் இங்கு பதிகின்றேன். இப்போது கூட அந்த வலைப்பதிவைத் தொடரலாம் எனும் எண்ணம் இருக்கிறது - ஏனென்றால் நேரடியாகச் சில உண்மைகளைக் கூறக் கடினமென்றாலும் இது போன்ற கவிதைத் தன்மையான வரிகளினூடாகச் சொல்வது சுலபம்!

****************************************************************

மூஞ்சிப்புத்தக மோகம்!

மூஞ்சியே தெரியாதவரோடெல்லாம்
மூச்சுமுட்டப் பேசவைக்கிறது
மூஞ்சிப்புத்தகம் - வெள்ளையன் மொழியில்
பேஸ்புக்.....

பொன்னான நேரமெல்லாம்
போகிறதே மண்ணாய்....
மூஞ்சிப் புத்தகத்தின் முகத்தெழிலில்
முகங்குனிந்த பேதைபோல - எம்மவரெல்லாம்
அடிமைப்பட்டு காலங்களி(ழி)க்கிறார்கள்....

இன்னும் இன்னும் கோடிமாக்களும்
வேலைவெட்டியின்றி - மோகத்தின்
பிடிப்பால் மூஞ்சிப்புத்தகத்தின் காலடியில்
தவழ்ந்து திளைக்கின்றனர்.....

தொடர்பு என்பது தேவைதான்...
தொடர்பெனும் இழையால் பின்னப்பட்ட
வலை தானே வாழ்க்கை...?
ஆனால் தொடர்பே வாழ்க்கையானால்???

கேள்விகள் எழுகிறது என்னுள்தான்....
மூஞ்சிப் புத்தகளத்தில் நான் செலவழித்த
நேரத்தை....
பாடப்புத்தகத்தில் செலவழித்திருந்தால்....

ம்..ம்...
காலங்கடந்த ஞானம்......
கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்....

************************************************

திரு.போலி!


அரிசிக் கடை முதல் அரசியற்களம் வரை
பஞ்சமேயில்லை போலிகளுக்கு - எம் தேசமிதில்!
புழுப்பிடித்த அரிசியும் புழுத்துப்போன அரசியலும்
அலுத்துப்போய்விட்டது நம்மவருக்கு....

அரிஸ்டோட்டிலும், பிளேட்டோவும் முத்தெடுத்த
அரசியலை தத்தெடுத்த வீணரிவர் வீணாக்கினரே!
செம்மறிக்கூட்டமொன்றுமிப் போலிகளை நம்பி
செம்மையறியாது பின் செல்கின்றனவே!

அன்பிலும் போலி - இவர் பண்பிலும் போலி
யாதொன்றும் உண்மையாய்ச் செய்யாரே!
இவர் பேச்சுமோர்பொருட்டென சில மூடரும்
கைதட்டி மெய்சிலிர்த்து மகிழ்ந்தனரே!

************************************************

இவனும் அரசியல்வாதி!


இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

முதலிரண்டு பொத்தான்கள் திறந்த ஷேர்ட்...
நன்றாக அழுத்திய காற்சட்டைகள்...
புத்தம் புதுசாய் ஜொலிக்கும் சப்பாத்துகள்...
14 பவுணில் கழுத்தில் ஒரு சங்கிலி...
அது தெரிவதற்குத் தானோவந்த பொத்தான் திறப்பு?!

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

தனியே வந்தால் பந்தா இல்லையென்று....
கூட்டத்துடனேயே வருவானிவன்...
காந்தியுந்தான் வந்தார் கூட்டத்துடன்...
ஆனால் இவனுடன் வருவது
ரெளடிகளும், சண்டியர்களும்....

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

சின்னச் சின்ன விடயங்களிற்குக் கூட
ஆண்மை பொங்கும் இவனுக்கு!
ஏனோ தெரியவில்லை பிறரைப் பழிக்காவிடின்
உறக்கமேயில்லை இவனுக்கு!

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

வாயில் எச்சில் ஊறும் எமக்கு....
வாயில் துர்பேச்சு ஊறும் இவனுக்கு...
பதிலுக்கு பதில் பேசுவான் - எவரையும்
எதிர்க்கும் ஆண்மகனென தன் புகழ் பாடுவான்!

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி....

இவனும் சரியில்லை, இவன் மகனும் சரியில்லை...
மக்களிலும் பிழையில்லை - காரணம் அவர்கள்
இவனுக்கு வாக்களிக்கவேயில்லை....
அப்போ இவன் எப்படி அமைச்சரானான்???

இவன் பெயர் புதியதல்ல எவர்க்கும்...
இவனும் ஒரு அரசியல்வாதி...

********************************************
இலக்கியம் படைக்கும் மாமேதைகள்!


சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த இப்பாரதனில்
இன்று இலக்கியம் படைக்கும் மாமேதைகள்....
உண்மை மேதைகளுக்கு விலக்குண்டாயினும்
பொய்மைப் புகழ் விரும்பிகளும் இலக்கியவாதிகளாய்
இனங்காட்டும் ஈனம் அவர்க்கு மட்டுமல்ல தமிழுக்கும்
இழிவாமே ஏனறியார் இம்மூடர்....


இலக்கணமும் இறந்தாச்சு - சங்க
இலக்கியமும் மறந்தாச்சு - அற்பப்
புகழ் விரும்பும் பேய்களின் கையில்
தமிழ் மணமும் நாறிப்போயாச்சு....


அர்த்தமில்லா கதைகளெல்லாம்
காவியமென போற்றப்படுதலாச்சு
கேடுகெட்ட வசனமெல்லாம்
கவிதை என புகழும் பெற்றாச்சு....


கட்டுக்கட்டாய் புத்தகங்கள் - குறை விலையில்
அச்சுப் பதிச்சாச்சு... - வேலையற்ற மாக்களுடன் கூடி
வெளியீட்டு விழாவும் நடத்தியாச்சு....

சங்கமாவது கிங்கமாவது - யார் எமைக்கேட்பார் ?
காசிருந்தால் கண்டதும் எழுதும் 'பண்டிதரும்'
இனி இலக்கிய மேதை தான்!

********************************************