Nov 1, 2009

“யாழ்தேவி” திரட்டியின் இவ்வார நட்சத்திரப் பதிவர்!


“யாழ்தேவி” திரட்டியினர் இவ்வாரத்திற்கான (02-11-2009 முதல் 08-11-2009) நட்சத்திரப் பதிவராக என்னை தெரிவு செய்திருக்கிறார்கள். நீண்டகாலத்திற்குப் பின் அண்மையில் தான் ஒரு பதிவினை இடுவதற்கு நேரம் கிடைத்திருந்தது இந்த வேளையில் இந்த கௌரவம் எனக்களிக்கப்பட்டிருப்பதனால் எப்படியாவது இவ்வாரம் முழுவதும் ஆகக் குறைந்தது நாளுக்கொரு பதிவாவது எழுத வேண்டிய தார்மீகக் கடமைப்பாடும் என்மீது சுமத்தப்பட்டிருக்கிறது - களைப்பிலும் களிப்பு!

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இணைந்த நாள் முதல் நான் நானாக இல்லை என்பதை உணர்கின்றேன். சூழல் மாற்றம் என்னை வெகுவாகப் பாதித்திருக்கிறது. வாரம் இரண்டரை நாட்கள் கொழும்பில் இருக்கும் நாட்களே என்னை கொஞ்சம் குதூகலமாக வைத்திருக்கிறது - மற்றப்படி பேராதனை வாழ்க்கை எனக்கு வெறுப்பையும் கசப்பையுமே ஊட்டிக்கொண்டிருக்கிறது. காரணங்கள் பல. முதலாவது பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு நான் போகத் தொடங்கிய நாள் முதலே வகுப்புப் பகீஷ்கரிப்புப் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது - நான் பகிடிவதைக்கு எதிரான குழாமில் இருந்தாலும் பகிடிவதைக் குழாமிலுள்ளோர் வகுப்புக்கைளப் பகிஷ்கரிக்கும் போது நாம் ஒருவர் இருவர் வகுப்புக்குச் செல்வதில் பயனில்லை ஆக வாரமொருமுறையாவது இந்த வகுப்புப் பகிஷ்கரிப்புக்கள் இடம்பெறுவதால் மனம் அந்தச் சூழலில் சுமுகமடைய மறுக்கிறது.

மேலும் பகிடிவதைக் குழாம் - பகிடிவதைக்கெதிரானோர் குழாம் என பிரிவினைகள் உள்ளதால் எனது பிரிவில் உள்ள மற்ற மாணவர்களோடு கூட சகஜமாகப் பழக முடியாத நிலையும் இருக்கிறது. இவற்றோடு காலைவேளையிலே பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையும் போது வாசலில் வரவேற்கும் கறுப்புக் கொடிகளும் தோரணங்களும் - எதிர்ப்புப் பதாகைகளும் படிக்கும் மனநிலையைக் குலைத்துவிடுகிறது. அடிப்படையிலே கம்யுனிச-இடதுசாரித்துவ மறுப்பாளனான எனக்கு இந்தச் சூழல் இயல்பான நிலையைத் தரவில்லை.

இவ்வாறாக எனது பல்கலைக்கழக நிலைமை இருக்க, திடீர் வாழ்க்கை முறை மாற்றம் என்னைக் கொஞ்சம் ஆட்டிப்போட்டுவிட்டது. கண்டியில் பொதுவாக பின்னேரம் 6-7 மணிக்கே கடைகள் எல்லாம் மூடி வீதிகளெல்லாம் வெறுமையாகிவிடும். பொதுவாக 7-8 மணிக்கெல்லாம் எல்லாரும் இராப்போசனம் உண்டு உறங்கிவிடுவார்கள். இரவு 10-11 மணிக்கு இராப்போசனத்தை உண்டு 12-1 மணிக்கு படுத்துப் பழகிய எனக்கு இந்த மாற்றம் கொஞ்சம் அவதியாகத்தான் இருக்கிறது. இவற்றைவிடப் பெரிய மனக்குறை “தனிமை” - தனிமையில் புத்தகங்கள் படிப்பது ஒரு நல்ல விடயமாக இருந்தாலும் நண்பர் சுற்றத்துடன் வாழ்ந்து பழகிய பின் இம்முறைக்கு பரிச்சயமாக மனம் இழுத்தப்பறித்துக் கொண்டு நிற்கிறது.அடுத்த முக்கிய பிரச்சினை உணவு... இங்கிருக்கும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையை விட எமது பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை ஆயிரம் மடங்கு மேல். சரி பக்கத்திலாவது நல்ல சாப்பாட்டுக் கடைகள் இருக்குமென்றால் இங்கே சாப்பாட்டுக் கடையைத் தேடிப்பிடிக்கிறதே பெரிய கஷ்டமாக இருக்கிறது. இப்படியாக மனநிலையில் அமைதி குன்றிய காலப்பகுதியில் போராடிக்கொண்டிருக்கின்றேன் - ஆனால் இந்தச் சவால்களும் ஒருவகையில் சுவையாகத் தான் இருக்கிறது.


இக்காலகட்டத்தில் பதிவுகள் எழுத நேரமும் மனமும் என்னைச் சவாலுக்குட்படுத்தினாலும் இந்தக் கௌரவத்தை எனக்குத்தந்த “யாழ்தேவி” திரட்டியினருக்கு நன்றிகளைப் பகிர்ந்து இவ்வாரம் முழுவதும் பதிவெழுதத் துணிகின்றேன்.

இவ்வேளையில் தமிழ்ப் பதிவுலகத்தில் எனக்கு அங்கீகாரம் அளித்து உற்சாகப்படுத்தும் அனைத்து வாசகர்களுக்கும், அபிமானிகளுக்கும், நண்பர்களுக்கும் அன்பு நன்றிகள்!