Jun 29, 2010

சொற்சமர்க் கால ஞாபகங்கள்! - (03) எதிரிகளும், வைரிகளும்...

இது ஒரு தொடர்ப்பதிவு
இதன் முன்னை அங்கத்தைப் படிக்க : சொற்சமர்க் கால ஞாபகங்கள்! - (02) கூர் தீட்டப்படுகிறோம்...


சமர் என்று வந்துவிட்டால் எதிரிகள் இல்லாமல் முடியுமா? சொற்சமரான விவாதத்தைப் பொருத்த வரையில் எதிரணிகள் தான் எங்கள் எதிரிகள். ஆம் விவாதம் தொடங்கி முடியும் வரை அந்த உணர்வோடுதான் வாதிடுவோம், வெற்றிக்கனி பறிக்கும் வரை அந்தச்சூடு உடலில் தணியாது. விவாதத்திற்கு முன்னும், பின்னும் நண்பர்களாக இருப்போம், விவாதச் சமரின் போது எங்கள் எதிரிகளாகவே பாவிப்போம், காரணம் அப்போதுதான் அந்த உணர்வு விவாதத்திற்கு இன்னும் உயிரூட்டுவதாக இருக்கும். 

எதிரிகள் என்றால் அதில் நிறைய வகையுண்டு. றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணியைப் பொருத்த வரையில் எங்களது பாரம்பரிய வைரிகள் பரி தோமாவின் கல்லூரி அணிதான். றோயல்-தோமிய பாரம்பரியம் இங்கும் தொடர்கிறது. கடந்த 16வருடங்களாக தொடர்ந்த றோயல் தோமிய தமிழ் விவாதச் சமர் வருடாவருடம் நடைபெற்று வருகிறது, எந்தவொரு வேத்தியனுக்கும் இந்தப் போட்டியில் பங்கெடுப்பது என்பது மிகவும் மதிப்பான, பெருமையான ஒரு விடயம், நான் 3 முறை இப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றியும் பெற்றிருக்கிறேன். அதில் 2 முறை அணியின் தலைவனாக வெற்றிபெற்ற மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. றோயல்-தோமிய விவாதங்களில் கடைசியான பரி தோமாவின் கல்லூரி அணி வெற்றி பெற்றது 2002ம் ஆண்டில் அதன் பின் தொடர்ந்து 7 வருடங்கள் எமது அணியே வெற்றிபெற்று வருகிறது. பரி தோமாவின் கல்லூரி அணி கடந்த சில வருடங்களாக சிறப்பான நிலைமையில் இல்லை என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும் ஆனால் கடைசியாக நடைபெற்ற 16வது றோயல்-தோமிய தமிழ் விவாதச்சமாரில் தோமிய அணி கடுமையான சவால் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது, கிட்டத்தட்ட 5 வருடங்களின் பின் மிகச்சிறப்பான தோமிய அணியாக அது காணப்பட்டது, ஆக வருங்காலங்களில் தோமிய அணி இன்னும் வலுவானதாக வரும் என்று எதிர்பார்க்கலாம். றோயல்-தோமிய பாரம்பரிய தமிழ் விவாதச் சமர் பற்றி மேலுமறிய இங்கே சொடுக்கவும்.

றோயல்-தோமிய விவாதத்திற்கு அடுத்தபடியாக நாங்கள் சவாலான போட்டியாகக் கருதுவது றோயல்-பம்பலப்பிட்டி இந்து விவாதப் போட்டிகளைத்தான். றோயல்-தோமிய பாரம்பரியம் போல ஏதுமில்லாவிட்டாலும், தமிழ் விவாதத்தைப் பொருத்தவரை பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி எங்களுக்குச் சவாலான ஒரு அணிதான். அண்மைக்கால (கடந்த 5 வருடங்கள்) தமிழ் விவாதப் போட்டிகளின் முடிவுகளை பார்த்தீர்களேயானால் பெரும்பான்மையான விவாதச் சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் றோயல்-பம்பலப்பிட்டி இந்து போட்டிகளாகவே அமைந்திருக்கிறது. சில வருடங்களில் நாமும், சில வருடங்களில் அவர்களும் வென்றிருக்கிறார்கள். பருவகாலத்திற்கும், அணிகளின் நிலைக்கும் ஏற்ப இது மாறுபடும். நாங்கள் முக்கியமாக மோதும் போட்டிகளில் முதன்மையானது கல்வி அமைச்சு நடத்தும் தமிழ்த்தினப்போட்டிகள் 2006ம் ஆண்டு றோயல் கல்லூரி அணி முதலாம் சுற்றுடன் வெளியேறிவிட, வலைய மட்டத்தில் பம்பலப்பிட்டி இந்து வெற்றிபெற்றது. 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் தொடர்ந்து இரு முறையும் றோயல் கல்லூரியே வலையமட்டத்தில் வெற்றிபெற்று பின்னர் அகில இலங்கை மட்டம் வரை சென்றது, இதில் 2008ல் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது, அந்த இரண்டு ஆண்டுகளும் அணியைத் தலைமைதாங்கியவன் என்ற விதத்தில் எனக்கு மகிழ்ச்சியான தருணங்கள் அவை. (இதற்கு முன்னர் 2004ல் நிஷாந்தன் அண்ணாவின் தலைமையில் றோயல் கல்லூரி அணி தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது)! இதோ 2009ம் ஆண்டுப் போட்டியில் சில பம்பலப்பிட்டி இந்து வென்றிருக்கிறது. பம்பலப்பிட்டி இந்து அணி சவாலான அணி, அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப்பொருத்துத்தான் விவாதத்தில் வெற்றி தோல்வி நிர்ணயமாகிறது. என்து கணிப்பின்படி அவர்களது பலம் பெரும்பாலும் மொழியாற்றலும், உறுதியான கருத்துரைப்பும் எமது பலம் பயிற்சி அனுபவமும், சமயோசிதமும், இது இரண்டிற்குமிடையேயான யுத்தத்தை நீங்கள் காண விரும்பினால் கட்டாயம் ஒரு றோயல்-பம்பலப்பிட்டி இந்து விவாதப் போட்டியைப் பாருங்கள்! 

இதைவிட குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எதிர் அணிகள் இன்னும் ஒன்றிரண்டுண்டு. வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரி (சைவ மங்கையர் கழகம்) அணி, பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி அணி என்பன குறிப்பிடத்தக்கது. 2007ம் ஆண்டு என்று நினைக்கிறேன், கொழும்பு மகளிர் கல்லூரியினால் நடத்தப்பட்ட தமிழ் விவாதப் போட்டிகளின் அரை இறுதிச்சுற்றில் பலமான இந்து மகளிர் கல்லூரி அணியைச் சந்திக்க நேர்ந்தது. தலைப்பு - சகோதர பாசத்தில் சிறந்தவர்கள் இராம இலக்குமணரே என்று நாங்களும் பஞ்ச பாண்டவரே என்று அவர்களும். விவாதம் நடந்தது - மிக்க சூடாகவும் கொதிப்புடனும். அவர்கள் அணியில் எல்லோரும் எம்மை விட வயதில் மூத்தவர்கள் ஆக எம்மிடம் தோற்கக்கூடாது என்று வைராக்கியத்துடன் சூடாகவே வாதிட்டனர். எனது விவாதப் பயணத்தில் நான் கண்ட மிகச் சூடான வாதங்களுள் இதுவும் ஒன்று. விவாதத்தின் சூட்டில் விவாதம் மிகப்பெரும் எல்லைகளையெல்லாம் தொட்டது, கடைசியில் நாம் வெற்றி பெற்றோம், அந்த விவாதம் பற்றி எழுதவேண்டுமானால் தனிப்பதிவு ஒன்றே எழுதலாம். விவாதத்தில் நாம் வென்று இறுதிப் போட்டிக்குச் சென்று இந்துவை வீழ்த்தி வெற்றிகண்டோம், அந்தப் போட்டித் தொடரை அடுத்த வருடமும் வெற்றிகொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்த 2007 மற்றும் 2008 இரு பருவகாலங்களிலும் நாம் இந்துவிடம் தோற்றது 4 முறைதான், 2 முறை பெனடிக்ட் கல்லூரி அணி நடத்திய போட்டிகளில்  மற்ற ஒன்று இரத்மலானை இந்துக் கல்லூரி நடத்திய போட்டியிலும், அடுத்தது உவெஸ்லிக் கல்லூரி அணி நடத்திய போட்டியிலுமாகும். இரத்மலானை இந்து போட்டியில் நாம் இந்துவிடம் தோற்றது கற்பு பற்றிய சர்ச்சையிலாகும், கற்பிற் சிறந்தவள் கண்ணகி என்று நாங்களும், சீதை என்று அவர்களும் வாதிட்டார்கள் - கற்பு என்ற சர்சையில் தோல்வி. அடுத்தது உவெஸ்லிக் கல்லூரி போட்டியில் தோற்றமைக்கு அலட்சிம் தான் முக்கிய காரணம், நான் அதை மமதை, அதீத நம்பிக்கை என்று கூடச்சொல்வேன். வாழ்க்கை எமக்கு சில நல்ல படிப்பினைகளை சில கசப்பான அனுபவங்கள் ஊடாகத் தருவதுண்டு, அது போன்றவொரு நிகழ்வுதான் இது. அது வரை பெற்ற வெற்றிகள் கொடுத்த போதை அலட்சியமான வாதத்திற்கு வழிகாட்டியது, ஆனால் அந்தத் தோல்வி எம்மைத் தட்டியெழுப்பி, மீண்டும் கால்களை நிலத்திற் படச்செய்தது என்று சொன்னால் மிகையில்லை. அதன் பின்தான் சந்தித்த இடத்திலெல்லாம் வெற்றிகளை தக்கவைக்கத் தொடங்கினோம் தொடங்கினோம். இந்து ஒன்றும் சளைத்த அணி என்று எண்ணிவிட வேண்டாம், அருமையான விவாதிகளைக் கொண்ட பலமான அணியாகவே இருந்தது. இதன் பின்பே கொழும்புப் பல்கலைக்கழக சட்டபீடம் நடாத்திய பாராளுமன்ற முறையிலான தமிழ் விவாதப் போட்டிகளில் 2008. 2009ல் நாம் வெற்றி பெற்றோம். 

என்னதான் விவாதம் சார்ந்த விடயங்களில் நாம் வைரிகளாக இருந்தாலும், அதற்கு வெளியில் நட்புணர்வுடன் தான் பழகினோம். என்னுடைய காலத்தில் விவாதித்த வைரி அணி விவாதிகளுள் என்னைக் கவர்ந்த விவாதிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்துக் கல்லூரி அணியின் தலைவராக இருந்த விதூஷன் ஒரு மிகத்தரமான விவாதி, கருத்துக்களை உணர்ச்சியுடன் கூறுவதில் சிறந்தவர், அனல் பறக்க விவாதிப்பது அவர் பாணி. இந்துக் கல்லூரியின் 4ம் விவாதியாக இருந்த சஞ்சீவனையும் குறிப்பிட வேண்டும், நக்கல் விவாதத்திற்கும், நகைச்சுவைக் கருத்துகளுக்கும் ஆள் பெயர்போனவர். இதைவிட இந்துக் கல்லூரிக்கு பின்னர் தலைமைதாங்கிய சிவாம்சன், தற்போது தலைமைதாங்கும் கஜானன் ஆகியோர் சிறப்பான தமிழ் பேசும் நல்ல விவாதிகள். அந்த 2007 மகளிர் கல்லூரி அணியில் பங்குபற்றிய இந்து மகளிர் கல்லூரி அணி நான் பார்த்த மிகச் சிறந்த அணிகளில் ஒன்று, அண்மையில் கொழும்பச் சட்ட பீட பாராளுமன்ற விவாதப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்ற அழைக்கப்பட்டிருந்தேன், அதன் போது வந்த இந்து மகளிர் அணியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன், அவ்வளவு தமிழ்க்கொலை, எப்படியிருந்த அணி இப்படி ஆயிட்டே என்று வருத்தம் தான். விவாதத்தில் எந்த முரண்பட்ட கருத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால் தமிழ்க்கொலையை ஏற்றுக்கொள்ளவே முடியாது, தமிழைச் சரியாகப் பேச முடியாதவர்கள், அதைப் பயின்றபின் மேடையேறவேண்டும் என்பது எனது அபிப்ராயம். அண்மையில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி, சிறப்படைந்து வரும் தோமிய விவாத அணியின் விஜய் அபிநந்தன் சிறப்பாக வாதிக்கிறார், கடந்த றோயல்-தோமிய விவாதத்தில் சிறப்புமிக்க சிறந்தவிவாதிக்கான விருதையும் வென்றவர் இவர்.

ஒவ்வொரு விவாத அணிக்கும் ஒரு பலம் இருக்கிறது, பலவீனமும் இருக்கிறது. நான் அறிந்த பல அணிகள் எமது வேத்திய அணியுடன் இலக்கிய விவாதங்களில் ஈடுபடுவதை விரும்புவதில்லை, அது போலவே ஒவ்வொரு அணிக்கும் பலம், பலவீனம் இருக்கிறது, இவற்றைச் சரியாகக் கணித்தால் வெற்றியை அதன் பாதையில் செப்பனிட முடியும். இந்த வருடத்தில் நடைபெற்ற சில போட்டிகளில் பம்பலப்பிட்டி இந்து பெற்ற வெற்றிகளுக்குக் காரணம் அவை வேத்திய அணியில் காணப்பட்ட சில தொய்வு நிலைகளை அடையாளங் கண்டுகொண்டதாக இருக்கலாம் என்பது எனது கணிப்பு.


இது தொடர்பிலான சில வெற்றியின் இரகசியங்கள், சாதித்தவர்கள், அனுபவஸ்தர் கூற்றுக்களாக -

உன் எதிரி உன்னை அச்சம் கொள்ளச் செய்யும் முயற்சிகளை அவதானிப்பதன் மூலம் அவன் எதற்கெல்லாம் அச்சப்படுகிறான் என்று அறிந்திட முடியும் - எரிக் ஹொஃபர்.

உன் எதிரி பிழைவிட்டுக்கொண்டிருக்கும் போது இடையூறு செய்யாதே - நெப்போலியன் போனபார்ட்

எங்கள் எதிரிகளிடமிருந்தும் நாங்கள் நிறையக் கற்றுக்கொள்ளலாம் - ஓவிட்

பாம்பைப் பிடிப்பதற்கு உன்எதிரியின் கரத்தைப் பயன்படுத்து - பாரசீகப் பழமொழி

இவையெல்லாம் விவாதத்தில் பயன்படுத்தக்கூடிய உத்திகள்! பலமான எதிரணிகள் இருந்தால் தான் விவாதம் சூடுபிடிக்கும், அந்த வகையில் நான் எங்களைச் சவாலுக்குட்படுத்திய இந்த அணிகளை பெருமிதத்துடன்தான் பார்க்கிறேன்! எனது விவாதப் பயணத்தில் மறக்கமுடியாத தருணங்களைத்தந்ததற்கு அவர்களுக்கு நன்றி.... மறக்கமுடியாத மட்டுமல்ல மறக்க நினைக்கும் சில தருணங்களும் உண்டு... அவை பற்றி அடுத்த பதிவில்....


(தொடரும்)