Jan 25, 2010

2010 ஜனவரி 26ம் அடுத்த இலங்கை ஜனாதிபதியும் - பகுதி 04

நாளை இலங்கையின் தலையெழுத்தை மட்டுமல்ல மக்களின் நிலையையும் தீர்மானிக்கவிருக்கும் முக்கியமான தேர்தல். எத்தனையோ தேர்தல்களைக் கண்டிரக்கின்றேன், தேர்தல் காலப் பிரச்சாரப் பணிகளில் கூட ஈடுபட்டிருக்கின்றேன், தேர்தல் அரசியலின் உள்ளும் புறமும் பற்றி குறிப்பிட்டளவு தெரிந்து வைத்திருக்கின்றேன் ஆனால் இந்தத் தேர்தல் போன்ற படு மோசமான, கேவலமான தேர்தல் காலத் “தந்திரங்கள்” நிறைந்த தேர்தலை நான் கண்டதேயில்லை. அத்தளை தூரத்திற்கு குறிப்பாக அரசாங்கம் வளங்களைத் துஷ்பிரயோகம் செய்து பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுவருகிறது இதன் உச்சகட்டமாக இந்த நாட்டின் தேர்தல்கள் ஆணையாளர் அழாத குறையாக இப்படிநடந்துகொள்ளவேண்டாம் என்று வேண்டிக்கொண்டதும், இறுதியில் இவர்களின் நடத்தையைக் கட்டுப்படுத்தமுடியாது இதுவே தனது இறுதித் தேர்தல் என்றும் தேர்தலின் பின் தான் பதிவி விலகுவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவிக்குமளவிற்கு படு கேவலமான அரசியல் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

சிந்தித்துப பாருங்கள் - தேர்தல்கள் ஆணையாளரே இப்படி விரக்தியடையும் நிலையில் தேர்தல் நடக்கிறதென்றால் அது எத்தனை தூரம் நியாயமான தேர்தலாக அமையும்? மறுகையில் தேர்தல் நாடகங்கள் பல மேடையேறிய வண்ணமுள்ளது அதுவும் குறிப்பாக மக்களை ஏமாற்றும் அல்லது தவறாக வழிகாட்டும் முகமாக கையேடுகளும், போலித் தேர்தல் வாக்குச்சீட்டுக்களும் எல்லாவற்றிற்கும் உச்சமாக இலங்கையின் தலைசிற்ந்த தமிழ் தினசரிகள் போன்று போலித் தினசரிப் பத்திரிகைகளையே அச்சிட்டு வெளியிடுமளவுக்கு ஈனத்தனமாக நடந்துகொள்கிறார்கள். குறிப்பாக தினக்குரல், வீரகேசரி ஆகிய பத்திரிகைகள் போலப் போலிப் பத்திரிகைகள் அச்சிட்டு தமக்குச் சார்பான செய்திகளை வெளியிட்டு தமது கேவலத்தை நிரூபித்திருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க மலையகத்தில் போலி வாக்குச் சீட்டுக்களை கட்டவிழ்த்து விட்டு அந்த அப்பாவி மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சரத் ஃபொன்சேகா அன்னமல்ல தாராச்சின்னம் என மிகக்குழறுபடியான மக்களைக் குழப்பும் முகமான தேர்தல் சிட்டைகளை விநியோகித்திருக்கிறார்கள் - இந்த வதந்தி இணையத்திலும் பெருமளவில் பரப்பப்பட்டது (அதை நானும் நம்பியது - மிகவும் வருத்தம் தருகிறது).

இப்படியாக நாகரீகமற்ற முறையில் தேர்தல் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் அரச ஊடகங்கள் தாம் “பொது ஊடகம்” என்பதை மறந்து ஆட்சியாளரின் ஊடகமாக மாறி பொய்களையும் கட்டுக்கதைகளையும் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. இவற்றையும் விட தொலைபேசிகள், குறுஞ்செய்திகள் ஊடாகவும் போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இவையனைத்தும் பதிவியிலுள்ள ஜனாதிபதிக்குச் சார்பான தகவல்களாகவே இருக்கிறது.

இவ்வளவு தூரம் அசிங்கமான வேலைகளில் ஈடுபட்டுத்தான் தேர்தலை வெல்லவேண்டுமென்றால் தனது பதவிக்காலம் முடிவதற்கு 2 வருடகாலம் முன்பே ஜனாதிபதித்தேர்தலை நடத்த மஹிந்த ராஜபக்ஷ முடிவெடுத்தது ஏன்? உண்மையிலே இந்தத் தேர்தல் இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று அவர் கனவிலும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார். யுத்த வெற்றி என்ற பிரம்மாஸ்திரத்தை வைத்துக்கொண்டே தேர்தலிலும் வெற்றிபெற்று விடலாம் என்பது தான் அவர் கணிப்பாக இருந்தது. ஆனால் சரத் ஃபொன்சேகா போட்டிக்கு வந்தபோது கூட மஹிந்த பெரிதாகக் கலங்கியிருக்கமாட்டார் ஆனால் சரத் யுத்த வெற்றி என்ற மஹிந்தவின் பிரம்மாஸ்திரத்தைப் பங்குபோட்டதோடில்லாமல், இலஞ்சம், ஊழல், இனப்பிரச்சினை, அகதிகள் என மஹிந்தவிற்கு எதிரான அஸ்திரங்களை ஏவத்தொடங்கியபோதுதான் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்தத் தேர்தலின் ஆழம் புரிந்தது. அதுவும் உள்ளுக்குள் விரக்தியால் புழுங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு சரத் நம்பிக்கை ஒளியாக வந்ததும் தான் மஹிந்த விழித்தக்கொண்டார் - அதன் பின் ஆரம்பமான அதிஅதிஅதிதீவிரப் பிரச்சார நடவடிக்கைகள் மூலம் எப்படியாவது, என்னசெய்தாவது பதிவியைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடுகிறார் - அதற்காக அசிங்கமான - நாகரீகமற்ற கருத்துக்களை விளம்பரமாகவும், பிரச்சாரக்கூட்டங்களிலும் சொல்வது அபத்தமானது. இன்று மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான அஸ்திரமாக மாறியிருப்பது சரத்-சம்பந்தன் ஒப்பந்தம் - அதை ஏதோ தமிழீழப் பிரிவினையொப்பந்தம் போல வர்ணித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் உண்மையில் அப்படி ஒப்பந்தமேதும் இல்லை என மறுதரப்பு உறுதியாகக் கூறுகிறது. மேலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என அரசு வர்ணிக்கிறது. விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களை அமைச்சர்களாக வைத்துக்கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு கூட்டமைப்பைப் பற்றி இவ்வாறு கூற என்ன அருகதையிருக்கிறது? ஒருவேளை கூட்டமைப்பு மஹிந்தவை ஆதரித்திருந்தால் அவர்கள் நல்லவர்களாக, செல்லக்குழந்தைகளதக இருந்திரு்பபார்கள் மாறாக சரத்தை ஆதரித்ததனால் விடுதலைப்புலிகளுக்கு மறுவாழ்வளிப்பவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

தமிழ் மக்கள் இன்று முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள் - காரணம் அங்கொன்றும், இங்கொன்றுமாக வரும் முரண்பட்ட கருத்துக்கள். குறிப்பாக புலம்(ன்) பெயர்ந்த தமிழர்கள் எனக் கூறிக்கொள்வோர் சிலர் தேசப்பற்று பற்றியும், அரசாங்கத்திற்கு ஆதரவு பற்றியும் அறிக்கை விடுகிறார்கள். என்னடா இது இப்படி நடக்கிறார்களே என்று தேடித்துருவிப்பார்த்ததில் உண்மை புரிந்தது. அதாவது அப்படிச் சொல்வோரில் பலர் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்த்தில் இருப்பவாகள் ஒரு வேளை நாடு சுமுகமான நிலைக்குத்திரும்பினால் அவர்களுக்கு மீண்டும் இலங்கைக்குத் திரும்பிவர நேரிடும், ஆக தமிழருக்கு இலங்கையில் பாதுகாப்பான சூழல் இல்லை என்று காட்டும் வரைதான் அவர்கள் அங்கே பிழைக்கமுடியும். இது தான் அப்பட்டமான உண்மை. ஆக இலங்கை ஒரு அமைதியான, சுபீட்சமான தேசமாக மாறுவதில் அவர்களுக்குக் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது. அந்த ஒருசிலருக்காக இந்த நாட்டில் இருந்து சிரமப்படும் மக்களெல்லாம் அவல வாழ்க்கையைத் தொடர வேண்டுமா? - யோசியுங்கள். (நான் எல்லாப் புலம் பெயர்ந்த தமிழர்களையும் குறிப்பிடவில்லை ஆனால் இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்துப் பிழைத்தக்கொண்டிருப்போரையே குறிப்பிடுகிறேன்)

இந்தத் தொடரை முடிக்கமுன் இறுதியாக ஒன்று - இதுவரை நான் இவ்வளவு வெளிப்படையாக எழுதியதில்லை - இன்று எழுதலாம் என்னும் சுதந்திர உணர்வும் நம்பிக்கையும் துளிர்விட்டிருக்கிறது - நாளை மறுதினமே அந்த நம்பிக்கை கொழுந்திலேயே கிள்ளியெறியப்படலாம் அல்லது இன்னும் வளர்ச்சிக்கான ஒளிபிறக்கலாம் எல்லாம் தேர்தல் முடிவுகளில் தங்கியிருக்கிறது. சிலபேர் அமெரிக்கா, சீனா அது, இது என்றெல்லாம் அதிகம் யோசிக்கிறார்கள் என்னைப் பொருத்தவரை ஒரு மனித குலத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான உரிமைகளும், சுதந்திரங்களும் இருந்தாலே போதும் அந்த மனிதக் கூட்டம் விரைவில் வளர்ச்சியடைந்துவிடும். உரிமைகள் மட்டுறுத்தப்பட்ட, சுதந்திரம் எல்லைப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்வது கடினம் என்பது யாவருக்கும் புரிந்ததே ஆகையில் இந்நிலை தொடரவேண்டுமா இல்லை மாற்றம் வேண்டுமா என்று நாம் தான் முடிவெடுக்கவேண்டும்.

நான் சரத் ஃபொன்சேகா ஆதரவாளனா? இல்லை நிச்சயமாக இல்லை. நான் யாருக்கும் ஆதரவாளன் அல்ல ஆனால் கொள்கைகளின் ஆதரவாளன். ஏமாற்றுக்கள், போலிப்பித்தலாட்டங்களற்ற கொள்கைகளை மதிப்பவன். இம்முறை நான் சரத் ஃபொன்சேகாவின் தரப்பில் நியாயத்தைக் காண்கிறேன் - நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறையை ஒழித்தல், பாராளுமன்றத்தை மையப்படுத்திய அரசை உருவாக்குதல் ஆகியவற்றை விரும்புகிறேன். சரத் ஃபொன்சேகாகூட பல பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு பற்றி தனது விஞ்ஞாபனத்தில் குறிப்பிடவில்லை ஆனால் அதற்குள் மறைந்துள்ள .ராஜதந்திரத்தை உணர்கின்றேன். உள்ளதுக்குள்ள வள்ளிசாய் சரத் ஃபொன்சேகாவைத் தெரிகிறேன் அவ்வளவே.

ஒருவேளை 27ம் திகதி பித்தலாட்டங்களும், ஏமாற்றுவேலைகளும் வெற்றிபெற்றுவிட்டால் - என் (எனது மட்டுமல்ல யாவருடையதும்) சுதந்திரம் மீண்டும் உறங்கிவிடும்..... அடுத்தத் தேர்தல் திகதி வரை (8 வருடங்கள்) நம்பிக்கை கூட கோமா நிலைக்குச் சென்றுவிடும் ஆனால் உயிருடன் இருக்கும் ஏனென்றால் நம்பிக்கைகள் மீது எனக்கு அளவற்ற நம்பிக்கை இருக்கிறது.

முற்றும். (ஆனால் தொடரும்....)




பி.கு. இதை எழுதும் போது நான் இருந்த மனநிலை கொஞ்சம் குழப்பகரமானது. ஒரு மனிதனுக்கு எது பறிபோனாலும் பரவாயில்லை ஆனால் சுதந்திரமும், உரிமைகளும் பறிபோய்விடுமோ என்ற பயம் வந்துவிட்டால் மனம் துடிக்கும் வேதனை சொல்வதற்கரியது. அந்த பயம் மனத்தினைக் குழைத்துச் சரித்தாலும் நம்பிக்கை என்னும் விதை வேர்கொண்டிருக்கிறது.... அந்த நம்பிக்கையுடன் இருக்கின்றேன்...